இந்திய நிறுவனத்துடன் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தமா? விமர்சனங்களுக்கு தமிழக அரசு தரப்பு பதில்

தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்ப்பது யார்?

பட மூலாதாரம், TN GOVT

    • எழுதியவர், சாரதா வி
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்நாட்டில் பெரியளவில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் எந்த ஆட்சி சிறப்பானது என்ற விவாதம் அவ்வப்போது முன்னுக்கு வருகிறது. முதலமைச்சர் விஜயின் லண்டன் பயணத்தைத் தொடர்ந்து அந்த விவாதம் மீண்டும் தமிழக அரசியல் களத்தை ஆக்கிரமித்துள்ளது. அத்துடன் இந்திய நிறுவனத்துடன் லண்டனில் வைத்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

விஜயின் இங்கிலாந்து பயணத்தின் விளைவாக இதுவரை சுமார் ரூ.12,300 கோடி முதலீட்டுக்கான உறுதிமொழிகள் கிடைத்திருப்பதாகவும், 9,400-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் எதிர்பார்க்கப்படுவதாகவும் மாநில அரசு கூறுகிறது.

  • வாகன உதிரிபாக தயாரிப்பு நிறுவனமான சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து குறிப்பிடத்தக்க அறிவிப்பு வந்துள்ளது. தமிழ்நாடு அரசின் முதலீட்டு வழிகாட்டி அமைப்பான 'வழிகாட்டுதல் தமிழ்நாடு' (Guidance Tamil Nadu) உடன் கையெழுத்திட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.11,000 கோடி முதலீடு செய்ய நிறுவனம் உறுதியளித்துள்ளது. இதில் வடிவமைப்பு, பொறியியல், உற்பத்தி, அசெம்பிளி மற்றும் தளவாட வசதிகள் அடங்கும். இதன் மூலம் சுமார் 7,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • மற்றொரு ஒப்பந்தத்தில் ஈ.ஒய் (EY) நிறுவனம் ஒரு வாடிக்கையாளருக்கான உலகளாவிய திறன் மையத்தை அமைத்து நிர்வகிப்பதற்காக ரூ.1,000 கோடி முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. இதன் மூலம் 2,000-க்கும் மேற்பட்ட உயர் மதிப்புள்ள வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. இதன் மூலம் 400 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • ஸ்வீடனைச் சேர்ந்த சிக்மா டெக்னாலஜி குரூப், எம்பெடட் சிஸ்டம்ஸ், மின்மயமாக்கல் மற்றும் தொழில்துறை டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், திருச்சி மற்றும் சென்னையில் தனது உலகளாவிய திறன் மையங்களை இந்திய நிறுவனமான ஸ்ரியா சொல்யூஷன்ஸ் மூலம் விரிவுபடுத்துவதற்கு உறுதியளித்துள்ளது.

முதலமைச்சரின் முதல் வெளிநாட்டுப் பயணம் முதலீடுகளை விட ஊடக வெளிச்சத்தை அதிகம் ஈர்த்துள்ளது என்று விமர்சிப்பவர்களுக்கு, இந்த அறிவிப்புகள் அரசுத் தரப்பில் முன்வைக்கப்படும் பதிலாக இருக்கின்றன.

ஆனால் முக்கியமான கேள்வி வேறு ஒன்று: இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான பிறகு என்ன நடக்கும்? எப்போது இந்த முதலீட்டு உறுதிமொழிகள் தொழில் திட்டங்களாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாறும்?

முதல்வர் லண்டனுக்குப் புறப்படுவதற்கு முன்பே முதலீட்டை ஈர்ப்பது விஜய் அரசின் முக்கிய மைல்கல்லாக முன்வைக்கப்பட்டதால் இந்தக் கேள்வி கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்ப்பது யார்?

பட மூலாதாரம், TN GOVT

"ரூ.1 லட்சம் கோடி முதலீடு"

ஆகஸ்ட் 13 அன்று, தமிழக வெற்றிக் கழக அரசு 'வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு' என்ற தனது முதல் பெரிய முதலீட்டாளர் மாநாட்டை சென்னையில் நடத்தியது.

அதில் 97 நிறுவனங்களுடன் ரூ.67,452 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதாகவும், இதன் மூலம் 1,06,998 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசு தெரிவித்தது.

இதற்கு முன்னர் கையெழுத்தான ஒப்பந்தங்களையும் சேர்த்து, தவெக அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில் ரூ.1,02,514 கோடி மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகள் கிடைத்துள்ளதாகவும், இவற்றின் மூலம் 1,21,788 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்கள் அவற்றின் அளவு காரணமாக மட்டுமல்லாமல், அந்த முதலீடுகள் செல்லும் துறைகள் காரணமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளன.

முன்மொழியப்பட்ட முதலீடுகளில் தரவு மையங்கள் முக்கியப் பங்கு வகித்தன. அதைத் தொடர்ந்து ஆட்டோமொபைல்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பிற பொறியியல் துறைகளும் இடம்பெற்றன.

தமிழகத்தின் பொருளாதாரம் எந்தத் திசையில் செல்லவிருக்கிறது என்பதை இந்த விவரங்கள் காட்டுவதால், முதலீட்டுத் தரவுகள் சாதாரண மக்களுக்கும் முக்கியமானதாகின்றன.

இந்தியாவின் முக்கிய உற்பத்தி மாநிலங்களில் ஒன்றாகத் திகழும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, எத்தனை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன என்பதை விட, அவற்றில் எத்தனை தொழிற்சாலைகளாகவும் வேலைவாய்ப்புகளாகவும் மாறுகின்றன என்பதுதான் உண்மையான சோதனை.

தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்ப்பது யார்?

பட மூலாதாரம், TN GOVT

முதலீட்டு அரசியல்

தொழில் முதலீடு குறித்த தவெக அரசின் கூற்றுகளை திமுக ஏற்கெனவே விமர்சிக்கத் தொடங்கியுள்ளது.

'முரசொலி' இதழின் தலையங்கத்தில், தவெக அரசு ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு பெற்றுள்ளதாகக் கூறுவது குறித்து திமுக கேள்வி எழுப்பியது.

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டைக் குறிப்பிட்டு, அந்த நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி தரப்படவில்லை என்று குறிப்பிட்டு அது கேள்வி எழுப்பியது. இந்த எண்ணிக்கைகளுக்குப் பின்னால் உள்ள திட்டங்கள் குறித்து அரசாங்கம் அதிக வெளிப்படைத்தன்மையை வழங்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டியது.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முழுமையாக செயல் வடிவம் பெறுமா?

ஒரு நிறுவனம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யும் என்று அரசு அறிவிப்பது, அந்த முதலீடு உடனடியாக நடைமுறைக்கு வந்துவிட்டது என்று அர்த்தமல்ல. தமிழ்நாடு அரசின் 2023-24 தொழில்துறை கொள்கைக் குறிப்பில் இதற்கான ஒரு உதாரணம் உள்ளது.

2019-ஆம் ஆண்டு முதல் கையெழுத்தான 519 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 72 சதவீதத் திட்டங்கள் "முன்னேறிய செயலாக்க நிலையில்" இருந்ததாக அரசு தெரிவித்திருந்தது. இதில், ஒற்றைச் சாளர இணையதளத்தில் (Single Window Portal) திட்டத்துக்கான அனுமதிகளுக்கு விண்ணப்பித்திருப்பது, நிலத்தைப் பெற்றிருப்பது, கட்டுமானத்தைத் தொடங்கியிருப்பது அல்லது பகுதி அல்லது முழு உற்பத்தியைத் தொடங்கியிருப்பது போன்ற நிலைகள் அடங்கும்.

'இந்திய நிறுவனத்துடன் லண்டனில் கையெழுத்தா?' - அதிமுக கேள்வி

அதிமுகவின் தேசிய செய்தித் தொடர்பாளரான கோவை சத்யன், தமிழக முதலமைச்சர் விஜயின் வெளிநாட்டுப் பயணத்தை விமர்சித்துள்ளார். முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனம் பற்றி குறிப்பிட்ட அவர், அந்த நிறுவனத்தின் தலைமையகம் இந்தியாவில் நொய்டாவில் இருக்கும்போது, அந்த ஒப்பந்தத்தை கையெழுத்திடுவதற்காக லண்டன் சென்றிருப்பது வரிப் பணத்தை வீணாக்கும் செயல் என்று கூறியுள்ளார்.

தமிழக அரசு தரப்பு பதில்

வாட்ஸ்அப் விளம்பரம் - ஐ புறக்கணித்துவிட்டு தொடர்ந்து படிக்கவும்
வாட்ஸ்ஆப்பில்

பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம்

பின்தொடர கிளிக் செய்யவும்

வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு

'வழிகாட்டுதல் தமிழ்நாடு' தனது எக்ஸ் கணக்கில், "மதர்சன் இந்தியாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் நிறுவனம் என்றாலும், முன்மொழியப்பட்டுள்ள முதலீடு அந்நிறுவனத்தின் சர்வதேச கூட்டு முதலீடு" முன்னெடுப்புகளை உள்ளடக்கியது என்று பதிவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் தொழில்துறை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், "புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) என்பது ஒரு திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆரம்ப கட்டங்களில் ஒன்றாகும். இதில் நிறுவனம் மேற்கொள்ள உள்ள முதலீடு, திட்டத்தின் தன்மை, எதிர்பார்க்கப்படும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறலாம். ஆனால் ஒவ்வொரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் உள்ளடக்கமும் திட்டத்தின் தன்மைக்கு ஏற்ப மாறுபடும். தமிழ்நாடு அரசின் முதலீட்டு வழிகாட்டி அமைப்பான 'வழிகாட்டுதல் தமிழ்நாடு', முதலீட்டாளர்களுக்கு திட்டத்தின் தொடக்க நிலையில் இருந்து உதவுகிறது. இடத்தைத் தேர்வு செய்வது, அரசின் பல்வேறு துறைகளிடம் இருந்து தேவையான அனுமதிகளைப் பெறுவது, திட்டத்தைச் செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கட்டங்களில் இந்த அமைப்பு முதலீட்டாளர்களுக்கு வழிகாட்டுகிறது. தமிழ்நாடு அரசு முதலீட்டாளர்களுக்கான ஒற்றை சாளர இணையதள வசதியையும் வழங்குகிறது. தொழில் தொடங்குவதற்குத் தேவையான பல்வேறு உரிமங்கள், அனுமதிகள், ஒப்புதல்கள் மற்றும் தடையில்லாச் சான்றிதழ்களைப் பெறுவதற்கான சேவைகள் இதில் வழங்கப்படுகின்றன" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு