இலங்கையில் யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் நிறைவு: சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை என்ன? (காணொளி)

இலங்கையில் யுத்தம் முடிந்து 14 ஆண்டுகள் நிறைவு: சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை என்ன? (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையில் யுத்தம் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடக்கவுள்ள நிலையில், யுத்தத்தின் பாதிப்புகள் இன்றும் காணப்படுகின்றன. அவ்வாறான பாதிப்புகளை எதிர்நோக்கியவர்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் மற்றும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளும் அடங்குவார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு வழங்கியவர்கள் மற்றும் அந்த அமைப்புடன் இணைந்து செயல்பட்டவர்கள் என்ற குற்றச்சாட்டுகளின் கீழ் இன்றும் பலர் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள்.இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு வழங்கியதாகக் கூறப்பட்டு, 15 வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த செல்லையா சதீஸ்குமார் என்ற தமிழ் அரசியல் கைதி ஒருவர் அண்மையில், ஜனாதிபதி பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டார்.

இலங்கை அரசாங்கத்திற்குச் சொந்தமான கிளிநொச்சி மாவட்ட மருத்துவமனையின் அம்புலன்ஸ் சாரதியாக (ஓட்டுநராக) இவர் கடமையாற்றியுள்ளார்.இந்த நிலையில், கிளிநொச்சி மருத்துவமனைக்கு அவசரமாக மருந்துகளை எடுத்து வருவதற்காக, மருத்துவமனைக்குச் சொந்தமான வாகனமொன்றை எடுத்துக்கொண்டு செல்லையா சதீஸ்குமார் கொழும்பு நோக்கிப் பயணித்துள்ளார்.

எனினும், அவர் பயணித்த மருத்துவமனை வாகனத்தை வவுனியா பகுதியில் சோதனையிட்ட பாதுகாப்பு பிரிவு, அந்த வாகனத்திலிருந்து வெடிப் பொருட்களை எடுத்தது.இதையடுத்து, செல்லையா சதீஸ்குமார் மீது விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவு வழங்கியமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, அவரைக் கைது செய்திருந்தார்கள்.

இவ்வாறான நிலையில், அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட சதீஸ்குமார் பிபிசி தமிழிடம் தனது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: