You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாட்டில் குறைந்த நேரத்தில் அதிக மழை பெய்ய காரணம் என்ன?
தமிழ்நாட்டில் குறைந்த நேர இடைவெளியில் அதிக மழை பதிவாவதை கடந்த சில நாட்களில் காணமுடிந்தது. இதற்கான காரணம் என்ன?
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நேற்று (ஆகஸ்ட் 4) பரவலாக மழை பெய்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாடு, புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்திருந்தது.
இதனை அடுத்து குறிப்பாக சென்னையில் தாம்பரம், பெருங்களத்தூர், குரோம்பேட்டை, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், வடபழனி, கிண்டி பல்வேறு பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. கோவை மாவட்டத்திலும் நேற்று சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்துள்ளது.
கோவையில் பெய்த கனமழையால் எம்.ஜி.ஆர் மார்க்கெட் பகுதியில் மழைநீர் தேங்கி, வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
விற்பனைக்காக கொண்டு வரப்படும் காய்கறிகள் மழை நீரில் மூழ்கி வீணாவதாகவும், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.
முழு வீச்சில் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்த மாநகராட்சி, அடுத்த முறை மழை வந்தால் வெள்ளநீர் தேங்காத அளவிற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.
நீலகிரி, கோவைக்கு ரெட் அலர்ட்
இதற்கிடையில் இன்று (ஆகஸ்ட் 5) நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். இதனால் 20 செ.மீ அளவிற்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நீலகிரியில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் இன்று ஒருநாள் மூடப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் மழை பாதிப்பு குறித்து புகார் அளிக்க உதவி எண்களையும் அறிவித்துள்ளது.
தொலைபேசி: 1077 | 0423 - 2450034/35
வாட்ஸ்ஆப்: 9488700588
கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கோவை குற்றாலம் அருவியிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
கூடுதலாக திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, சேலம், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் ஆகிய 7 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகளில் பாதிப்பு எப்படி இருக்கும்?
இன்று தென்தமிழக கடேலாரப் பகுதிகள், மன்னார் வைளகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள லெமூர் பீச்சில் கடும் கடல் சீற்றம் ஏற்பட்டது. அலைகள் கரையை கடந்து கடைகள் மற்றும் அருகே உள்ள கோவிலையும் சூழ்ந்தன. கடல் சீற்றம் அதிகம் காணப்படுவதால் மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் யாரும் இந்த கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காரணம் என்ன?
குறைந்த நேர இடைவெளியில் அதிக மழை பதிவாவதை சமீப காலங்களில் அதிகமாக காணமுடிகிறது. இதுகுறித்து தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜானிடம் கேட்டபோது, பொதுவாக குறைந்த நேர இடைவெளியில் அதிக மழை பதிவாவதற்கு மேகங்கள்தான் (Thunderstorms) காரணம் என்கிறார்.
"இவை எங்கெல்லாம் நகர்கிறதோ, அந்தந்த இடங்களில் மழை பொழிவு இருக்கும். இதில் 3 நிலைகள் உள்ளது. தொடக்கம் (Starting stage), முதிர்ச்சியடைதல் (Maturing Stage), வலுவிழப்பது (Weakening Stage) எனப்படும். சில சமயங்களில் காற்றின் வேகம் குறைவாக இருப்பதால், இந்த மேகங்கள் நகராமல் ஒரே இடத்தில் நின்றுவிடும். அதுதான் ஒரே இடத்தில் அதிக மழையை பெய்விக்கிறது" என விளக்கினார்.
"உதாரணமாக 2 நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் 140 மி.மீ மழையும், தாம்பரத்தில் நேற்று முன்தினம் 75 மி.மீ மழையும், புதுச்சேரியில் நேற்று 100 மி.மீ மழையும் பெய்ததற்கு இதுவே காரணம்" என்றார் பிரதீப் ஜான்.
இதுபோன்ற மேகங்கள் பெரும்பாலும் பரவலான இடங்களில் இருக்காது எனக்கூறும் இவர், ''இது மிகவும் சாதாரணமான நிகழ்வுதான். மாதத்திற்கு இருமுறை இதுபோல் நடக்கிறது'' எனத் தெரிவித்தார்.
"இது பெரும்பாலும் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நிகழும். இந்த மழையால் குறிப்பிட்ட நேரத்திற்கு தண்ணீர் தேங்கி நிற்குமே தவிர இது வெள்ளமாக மாறாது" எனக் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு