இந்துத்துவா பற்றி சர்ச்சை கருத்து: கன்னட நடிகர் சேத்தன் குமாரை கைது செய்த போலீஸ்

சேத்தன் குமார் கைது
பிரசுரிக்கப்பட்டது

இந்துத்துவா குறித்து ஆட்சேபனைக்குரிய கருத்துக்களை பதிவிட்டதாக நடிகர் சேத்தன் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை 14 நாட்களில் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

கர்நாடகா மாநிலத்தின் சேஷாத்திரிபுரம் போலீசார் சேத்தன் குமாரை கைது செய்து நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 295A (மத உணர்வைத் தூண்டுதல்), 505B (பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சேத்தனின் பதிவு குறித்து இந்து ஆதரவு அமைப்பைச் சேர்ந்தவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

நடிகர் சேத்தன் சமூக ஊடகங்களில் எப்போதும் வெளிப்படையாக கருத்துக்களை பதிவிடுபவராக அறியப்படுகிறார். அதனாலேயே அவர் பல நேரங்களில் சர்ச்சைகளில் சிக்குவது உண்டு.

என்ன பதிவிட்டார் சேத்தன்?

"இந்து மதம் பொய்களில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதை உண்மையால் வீழ்த்த முடியும். சாவர்க்கர் சொன்னது: ராமர் ராவணனை வீழ்த்திய பிறகு அயோத்திய திரும்பியதும் இந்தியா பிறந்தது - இது பொய்; 1992: பாபர் மசூதி இருந்த இடம் ராமர் பிறந்த இடம் - இது பொய்; 2023: திப்புவை கொன்றது ஊரி கெளடா - நஞ்சேகெளடா - இது பொய்; என்று நடிகர் சேத்தன் பதிவிட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் சிவக்குமார் என்பவர் சேத்தன் மீது புகார் அளித்திருந்தார்.

சர்ச்சை கருத்துகளால் சேத்தன் குமார் சட்ட நடவடிக்கை எதிர்கொள்வது இது முதல் முறை அல்ல.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

கடந்த ஆண்டு நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் ட்வீட் செய்ததற்காக சேஷாத்திரிபுரம் போலீசார் சேத்தன் குமாரை கைது செய்தனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டப்பிரிவுகள் 505 (2), 504 இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்த நடிகருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.

திரையுலக அடையாளத்தை கடந்து தன்னை ஒரு சமூக ஆர்வலராக காட்டிக் கொள்ளும் சேத்தன், உலகில் நடக்கும் சம்பவங்களுக்கு தனக்கே உரிய பாணியில் பதிலளிப்பதை வழக்கமாகக் கொண்டிருப்பவர். இதனால் அவரது கருத்துகள் பலமுறை சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: