இஸ்ரேலை மன்னிப்பு கேட்க வைத்த டிரம்ப் - புதிய 'காஸா அமைதித் திட்டம்' நிறைவேறுவதில் என்ன சிக்கல்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், டாம் பேட்மேன்
- பதவி, வெள்ளை மாளிகை வெளியுறவுத்துறை செய்தியாளர்
- பிரசுரிக்கப்பட்டது
- வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஸா போரை முடிவுக்கு கொண்டுவரும் தனது திட்டம் "மனிதகுல வரலாற்றின் சிறந்த நாட்களில் ஒன்றாகவும், மத்திய கிழக்கில் நிலையான அமைதியைத் தரக்கூடியதாகவும்" இருக்கும் என்று கூறினார்.
இப்படி மிகைப்படுத்திப் பேசுவது டிரம்பின் வழக்கமான பாணிதான்.
ஆனால், திங்கள்கிழமை வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தபோது அவர் வெளியிட்ட 20 அம்சங்களைக் கொண்ட இந்தத் திட்டம், அவரது சொற்களுக்கு இணையாக இல்லாவிட்டாலும், ராஜ்ஜீய ரீதியாக ஒரு முக்கியத் தருணமாகவே உள்ளது.
இந்தத் திட்டம், போருக்குப் பிறகு காஸாவின் எதிர்காலம் குறித்த டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு இதுவரை அமெரிக்கா நெதன்யாகுவுக்கு கொடுத்ததை விட அதிகமாக அழுத்தம் கொடுத்து, அவரை ஒரு ஒப்பந்தத்தை ஏற்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது.
வரும் வாரங்களில் இது நடைமுறைப்படுத்தப்படுமா என்பது, நெதன்யாகுவும் ஹமாஸ் தலைமையும் போரைத் தொடர்வதை விட அதை முடிப்பதிலேயே அதிக பலன் இருக்கிறது என்று உணருகிறார்களா என்பதைப் பொறுத்து இது அமையும்.
இந்நிலையில், ஹமாஸ் தரப்பிலிருந்து இதுவரை தெளிவான பதில் எதுவும் வரவில்லை. பிபிசியிடம் பேசிய ஹமாஸ் பிரமுகர் ஒருவர், இந்த திட்டம் பாலத்தீன மக்களின் நலன்களை பாதுகாக்கவில்லை என்றும், காஸாவிலிருந்து இஸ்ரேல் முழுமையாக விலகுவதை உறுதி செய்யாத எந்தத் திட்டத்தையும் ஹமாஸ் ஏற்காது என்றும் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபரின் அருகில் நின்ற நெதன்யாகு, இஸ்ரேல் டிரம்பின் 20 அம்சங்களை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். ஆனால், அவரது கூட்டணியில் உள்ள சில தீவிர வலதுசாரி தலைவர்கள், அதன் சில அம்சங்களை ஏற்கனவே நிராகரித்திருந்தனர்.
ஆனால், டிரம்ப் முன்வைத்த கொள்கைகளை ஏற்றுக்கொள்வதை மட்டும், போரை முடிவுக்குக் கொண்டு வரும் அடையாளமாகக் கருத முடியாது. நெதன்யாகு பின்வரும் குற்றச்சாட்டை மறுத்தாலும், அவரது அரசியல் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்கக் கூடிய சூழலை உருவாக்கும் ஒப்பந்தங்களை முறியடிக்கும் பழக்கம் உடையவர் என்று இஸ்ரேலில் உள்ள அவரது எதிர் தரப்பு கூறுகிறது.
இந்த நிலையில், டிரம்ப் விரும்பும் முடிவைப் பெற இந்த திட்டம் மட்டுமே போதுமானதாக இருக்காது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் அரசியல் தரப்புகளுக்குள் இன்னும் பல தடைகள் உள்ளன. அவை இறுதியில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதைத் தடுக்கக் கூடும்.
இந்தத் திட்டம் குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்பதால், இரு தரப்பினரும் அதை ஏற்றுக்கொள்வது போல காட்டலாம். அதே நேரத்தில், பேச்சுவார்த்தைகளின் போக்கைப் பயன்படுத்தி திட்டத்தை குலைக்கவும், தோல்விக்கு மற்றொரு தரப்பை குறை கூறவும் வாய்ப்புள்ளது.

பட மூலாதாரம், Getty Images
இந்த வழக்கமான முறை தான் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளிலும் காணப்பட்டது. அப்படி நடந்தால், டிரம்ப் நிர்வாகம் இஸ்ரேலின் பக்கம் நிற்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஹமாஸ் திட்டத்தை ஏற்கவில்லை என்றால், "நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய அமெரிக்காவின் முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கும்" என்று டிரம்ப் திங்களன்று நெதன்யாகுவிடம் கூறி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.
டொனால்ட் டிரம்ப் இதை ஒரு முழுமையான அமைதி ஒப்பந்தமாகக் கூறினாலும், உண்மையில் இது பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஒரு அடிப்படைக் கட்டமைப்பாகவே உள்ளது. அவர் இதை "கொள்கைகளின் தொகுப்பு" என ஒரு கட்டத்தில் விவரித்திருந்தார்.
காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர தேவையான விரிவான திட்டமாக இது இன்னும் உருவாகவில்லை.
இது, மே 2024-ல் முன்னாள் அதிபர் ஜோ பைடன் அறிவித்த "நெறிமுறை" போன்று காணப்படுகிறது. ஒவ்வொரு கட்டமாக போர்நிறுத்தம் செய்து, மோதலை முடிவுக்குக் கொண்டுவர அத்திட்டம் முயன்றது. ஆனால், இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்தமும் கைதிகள் பரிமாற்றமும் செய்துகொள்ள எட்டு மாதங்கள் எடுத்தன.
டிரம்ப் ஒரு "முழுமையான" அமைதி ஒப்பந்தத்தை எதிர்பார்த்தார்.
அது, இஸ்ரேல் படைகள் எங்கு, எப்போது வெளியேற வேண்டும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான விவரம், விடுவிக்கப்படும் பாலத்தீன கைதிகளின் பெயர்கள், போருக்குப் பிந்தைய ஆட்சி முறை போன்ற பல முக்கிய விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.
ஆனால், அவரது 20 அம்சத் திட்டத்தில் இவை எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் அமைதி ஒப்பந்தத்தைத் தடுக்கும் அளவுக்கு பெரிய பிரச்னைகளை உருவாக்கலாம்.
இந்தத் திட்டம், ஜூலை மாதத்தில் வெளியான சௌதி-பிரெஞ்சு திட்டம் மற்றும் முன்னாள் பிரிட்டன் பிரதமர் சர் டோனி பிளேர் செய்த சமீபத்திய முயற்சிகளிலிருந்து சில கூறுகளை எடுத்துக்கொண்டது.
சர் டோனி பிளேர், டிரம்ப் தலைமையில் இயங்கும் "அமைதி வாரியத்தில்" உறுப்பினராக இருப்பார். இந்த வாரியம், இந்தத் திட்டத்தின் கீழ் காஸாவின் நிர்வாகத்தை தற்காலிகமாக கண்காணிக்கும்.

பட மூலாதாரம், Getty Images
டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர், இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள், கத்தார், எகிப்து போன்ற அரபு நாடுகளுடன் பேசிய பிறகு இந்தத் திட்டத்தை உருவாக்கினர்.
சண்டையை நிறுத்த வேண்டும், இஸ்ரேல் படைகள் சில இடங்களில் வெளியேற வேண்டும், ஹமாஸ் மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும், பின்னர் இஸ்ரேல் நூற்றுக்கணக்கான பாலத்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் போன்றவை, இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.
போருக்குப் பிறகு, காஸாவில் அன்றாட நிர்வாகத்தை கையாள ஒரு உள்ளூர் நிர்வாகம் அமைக்கப்படும். இதை எகிப்தை தளமாகக் கொண்ட "அமைதி வாரியம்" மேற்பார்வையிடும்.
"அமைதியாக வாழ" உறுதி கொடுத்து ஆயுதங்களை கைவிடும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு மன்னிப்பு கிடைக்கும். மற்றவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். அமெரிக்காவும் அரபு நாடுகளும் இணைந்து உருவாக்கும் "படை" காஸாவின் பாதுகாப்பை கவனிக்கும். இது பாலத்தீன ஆயுதக் குழுக்களின் ராணுவமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவரும்.
பாலத்தீன அரசு குறித்து இந்தத் திட்டம் மேலோட்டமாக மட்டுமே பேசுகிறது. ரமல்லாவில் உள்ள பாலத்தீன ஆணையம் மாற்றப்பட்டால், "பாலத்தீனர்களுக்கு சுயநிர்ணய உரிமையும் தனிநாடு அந்தஸ்தும் கிடைக்க ஒரு நல்ல பாதை உருவாகலாம்" என்று இத்திட்டம் கூறுகிறது.
அரபு நாடுகள் இந்தத் திட்டத்தை ஒரு பெரிய முன்னேற்றமாகக் காண்கின்றன. காரணம், இது டிரம்பின் பிப்ரவரி மாத காஸா "ரிவியரா" திட்டத்தை நிராகரித்துவிட்டது. அந்தத் திட்டம் பாலத்தீனர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யும் ஒன்றாக இருந்தது.
பாலத்தீனம் தனிநாடு பற்றி உறுதியான வாக்குறுதி இல்லாவிட்டாலும், அதைப் பற்றி ஒரு சிறிய குறிப்பாவது இருப்பது அவர்களுக்கு முக்கியமாக உள்ளது.
அமெரிக்கத் திட்டம், "இஸ்ரேல் காஸாவை ஆக்கிரமிக்காது அல்லது இணைக்காது" என்று கூறுகிறது. ஆனால், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு இப்படியொரு உறுதி அளிக்கப்படவில்லை. ஆனாலும், இது அரபு நாடுகளுக்கு மிக முக்கியமான விஷயம்.
இஸ்ரேல் தரப்பில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது நோக்கங்களுடன் இந்தத் திட்டம் ஒத்துப்போவதாகச் சொல்கிறார் நெதன்யாகு. அதாவது, ஹமாஸ் ஆயுதங்களை கைவிட வேண்டும், காஸா ஆயுதமற்ற பகுதியாக வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் பாலத்தீன நாடு உருவாகக் கூடாது.
ஆனால், ஆயுதக் குறைப்பு மற்றும் பாலத்தீன நாடு பற்றிய விதிகளை அவரது அரசில் இடம் பெற்றுள்ளவர்கள் ஏற்பார்களா அல்லது நெதன்யாகு அழுத்தம் கொடுத்து விதிகளில் "மாற்றங்கள்" செய்வாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

பட மூலாதாரம், Getty Images
இப்போது ஹமாஸின் பதிலைப் பொறுத்து மற்ற விஷயங்கள் அமையும்.
எனது சக செய்தியாளர் ருஷ்டி அபு அலூஃப் முன்பு எழுதியது போல், இது ஒரு குழப்பமான தருணமாக இருக்கலாம். அதாவது, ஹமாஸ் திட்டத்தை ஏற்பது போல் காட்டி, அதே நேரத்தில் மாற்றங்கள் வேண்டும் என கேட்கலாம். எனவே, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முந்தைய "திட்டங்கள்" மற்றும் "கொள்கைகளை" போலவே, இந்தத் திட்டமும் வெள்ளை மாளிகைக்கு பெரிய சவாலாக இருக்கலாம்.
அதேபோல் மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்வும் அமைந்தது. கூட்டு அறிவிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, டிரம்ப் நெதன்யாகுவை கத்தாரிடம் மன்னிப்பு கேட்க வைத்தார்.
இந்த மாதத் தொடக்கத்தில் தோஹாவில் ஹமாஸ் தலைமைக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கோரியிருந்தது. தற்போது, கத்தார் மீண்டும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மத்தியஸ்தராக செயல்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.
டிரம்ப்-நெதன்யாகு சந்திப்புக்கு சில மணி நேரத்திற்கு முன்பு, காஸா நகரில் இஸ்ரேலின் ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் அதிகமாயின. அங்கு இஸ்ரேலிய ராணுவம் தனது மூன்றாவது கவசப் பிரிவை அனுப்பியுள்ளது. இஸ்ரேலின் பரந்த தாக்குதல், ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதி. ஆனால், இது பொதுமக்களுக்கு மேலும் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பெரும்பாலான நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளன. இதே நேரத்தில், காஸாவில் உள்ள ஹமாஸ் தளபதி எஸ் அல்-தின் அல்-ஹதாத், "இறுதி முடிவுக்கான போர்" என ஹமாஸ் களத் தளபதி ஒருவர் பிபிசியிடம் விவரித்த போருக்கு தயாராகி வருகிறார்.
பிரான்ஸ், சௌதி அரேபியா தலைமையில் ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகள், கோடை காலத்தில் ராஜ்ஜீய வழியை மீண்டும் உருவாக்க முயற்சித்தன. இஸ்ரேலின் களச் செயல்பாடுகள் அவர்களை அதிர்ச்சியடையச் செய்தன. இது இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படுவதை மேலும் அதிகரித்தது. காஸா போர்க்குற்றங்களுக்காக நெதன்யாகு இன்னும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது வாரண்டின் கீழ் உள்ளார்.
மோதல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரிப்பதை ஐரோப்பியர்கள் கண்டனர். அவர்கள், இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இரு நாடுகள் தீர்வு இருப்பதாக நம்பினர். இதற்காக, இன்னும் உள்ள மிதவாத தலைவர்களிடம் முறையிடலாம் என்று அவர்கள் நம்பினர்.
இந்தத் திட்டத்தில் இரு நாடுகள் தீர்வு வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், காஸாவுக்கான முன்மொழிவுடன் டிரம்பை இணைத்துக்கொள்வது முக்கியம் என அவர்கள் கருதினர்.
இந்த அமெரிக்கத் திட்டம், பேச்சுவார்த்தையின் வேகத்தை மீண்டும் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டிரம்ப் கூறுவது போல போருக்கான முழுமையான முடிவைப் பெறவும், அதைச் செயல்படுத்தவும் பல வாரங்களோ அல்லது மாதங்களோ கடினமான முயற்சிகளும் நுட்பமான பணிகளும் மேற்கொள்ள வேண்டும்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



















