You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாலியல் வன்கொடுமை புகாரை பதிவு செய்யாமல் பெண்ணை 24 நாள்களாக அலைக்கழித்த காவல்துறை
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவரின் புகாரை பதிவு செய்யாமல் பல காவல் நிலையங்கள் அலைய வைத்தது தொடர்பாக முழு விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் புகார் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு, சுமார் 24 நாட்களாக அவர் ஒவ்வொரு காவல் நிலையங்களிலும் புகார் பதிவு செய்யப்படாமல் அலைக்கழிக்கப்பட்டுள்ளார்,
தொடர்புடைய காவல் துணை கண்காணிப்பாளர் எல்லா கோணங்களிலும் இந்த வழக்கை விசாரித்து. 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென கடந்த நவம்பர் 15ஆம் தேதி நீதிபதிகள் எம்எஸ் ரமேஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அடங்கிய அமர்வு ஆணையிட்டது.
பாதிக்கப்பட்டவரின் சகோதரியின் ஆட்கொணர்வு மனுவை நீதிமன்றம் விசாரித்தது. பாதிக்கப்பட்டவர் அளித்த புகாருக்கு பின்பு அரசு நடத்தும் மகளிர் இல்லத்தில் வைக்கப்பட்டுளார் என்றும், அவரது குடும்ப உறுப்பினர்கள் கூட அவரை பார்க்க அதிகாரிகள் அனுமதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முந்தைய விசாரணையில், பாதிக்கப்பட்டவரை நீதிமன்றத்தில் ஆஜராக்க உத்தரவிட்டிருந்த நீதிபதி வெங்கடேஷ், பின்பு பாதிக்கப்பட்டவரின் சகோதரியோடு வீட்டுக்கு செல்ல அனுமதி அளித்திருந்தார்.
ஆனால், புகார் பதிவு செய்வதற்கு அவர் அலைக்கழிக்கப்பட்டதை கேள்விப்பட்ட நீதிபதி, ஆட்கொணர்வு மனு வழக்கை விரிவாக்கி, அவரது புகார் ஏற்கப்படாமல் அலைக்கழிக்க செய்யப்பட்டதை விசாரிக்க நீதிபதி சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்டவர் யாரை முதலில் அணுகினார், கடைசியில் புகார் எவ்வாறு பதிவு செய்யப்பட்டது என்று விரிவாக அந்த அறிக்கை இருக்கவும் கேட்டுக்கொண்டார்.
அக்டோபர் 5ஆம் தேதி நடைபெற்ற சம்பவத்துக்குப் பின்பு, பாதிக்கப்பட்டவர் சத்திரப்பட்டி காவல் நிலையத்தை அணுகியதாகவும், ஆனால், தன்னுடைய மூத்த அதிகாரி வரும் வரை காத்திருக்க ஓர் அதிகாரி சொன்னதாகவும் வழக்கு தாக்கல் செய்தவரின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரம் காத்திருந்த பின்பு, பாதிக்கப்பட்டவர் அவ்விடத்தை விட்டு சென்றுள்ளார்.
அடுத்த நாள் அதே காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்டவர் சென்றபோது, நத்தம் காவல் நிலையத்துக்கு அனுப்பட்டுள்ளார். நத்தம் நிலையத்தில் இருந்து சாணார்பட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளார். கடைசியில், துணை தலைமை காவல் ஆய்வாளரிடம் பாதிக்கப்பட்டவர் செல்ல, புகாரை பதிவு செய்ய அவர் மூத்த ஆய்வாளரிடம் அறிவுறுத்த, புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நடந்தவற்றை தொடர்பான விசாரணை ஏற்கெனவே தொடங்கியுள்ளதாக காவல்துறையினர் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்