You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சேலத்தில் 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை – தந்தையின் நண்பர் கைது
சேலத்தில் 13 வயது சிறுமி 5 மாதம் கர்ப்பம் ஆனதையடுத்து மாணவியுடைய தந்தையின் நண்பர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
சேலம் குரங்கு சாவடி பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளியின் மகளுக்கு 13 வயதாகிறது. இந்த மாணவி அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த மாணவிக்கு நேற்று முன்தினம் திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் பெற்றோர் மாணவியை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் மாணவியைப் பரிசோதனை செய்து பார்த்தபோது மாணவி ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், இந்த சம்பவம் குறித்து சேலம் சூரமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் சுப்புலட்சுமியும் போலீசாரும் மாணவியிடம் விசாரித்தனர். அப்போது தந்தையின் நண்பர் ஞானமூர்த்தி என்பவர் தன்னிடம் பாலியல் தொல்லை செய்ததாக சிறுமி தெரிவித்தார்.
இதையடுத்து ஞானமூர்த்தியை போலீசார் அழைத்து விசாரித்தனர். அப்போது தான் கட்டிட வேலைக்குச் செல்வதாகவும் மாணவியின் தந்தை தனக்கு நண்பர் என்றும் கூறிய ஞானமூர்த்தி அவ்வப்போது மாணவியின் வீட்டிற்கு வந்து சென்றதாகவும் அந்தநேரத்தில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து ஞானமூர்த்தி கடந்த 6ஆம் தேதி இரவு, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். மேலும், அன்றிரவே ஞான மூர்த்தி சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்