You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த சிறுவனின் குடும்பம் கூறுவது என்ன?
நாங்கள் கடைசியாக பால் மற்றும் பிஸ்கட் சாப்பிட்டு பத்து மாதங்கள் ஆகிவிட்டன. இனி எங்களால் அவற்றைச் சாப்பிட முடியாது.
இப்படி அழுதுகொண்டே வாழ்ந்து வருகிறோம். அவன் இல்லாமல் எங்களால் வாழ முடியவில்லை.
என் கண்முன்னே இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும்போது, நான் எப்படி அந்த இடத்திற்குச் செல்ல முடியும்? என்னால் இப்போது அங்கு செல்ல முடியாது.
நான் இப்போது ஆமதாபாத்தில் விமான விபத்து நடந்த இடத்தில் இருக்கிறேன். இதே மதிய வேளை ஜூன் 12, 2025 அன்று ஏர் இந்தியா விமானம் இங்கு விபத்துக்குள்ளானது. எனக்குப் பின்னால், நீங்கள் இப்போது பார்க்கும் இந்த இடத்தில் முன்பு ஒரு தேநீர்க் கடை இருந்தது. சீதாபென் அங்கு தேநீர் விற்றுக்கொண்டிருந்தார். இதே நேரத்தில்தான், அவரது பதினைந்து வயது மகன் ஆகாஷ் அவருக்கு மதிய உணவுடன் வந்திருந்தார். சீதாபென் தன் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். சரியாக அந்தத் தருணத்தில், சாலைக்கு அப்பால் தெரியும் உடைந்த சுவருக்கு அருகில் இருந்த கட்டிலில் ஆகாஷ் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது விமானம் விபத்துக்குள்ளானது.
விமானத்தின் ஒரு இறக்கை இங்கு விழுந்தது. உடனே தீப்பிடித்தது, ஆகாஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், தனக்குப் பின்னால் தீ கொழுந்துவிட்டு எரியும்போது ஒரு பெண் உதவி கேட்டு அலறும் வீடியோவை நாம் பார்த்தோம். அங்கிருந்து ஓடிய அந்தப் பெண் சீதாபென் தான். அவர் உதவி கோரினார். ஆனால் அந்த விபத்து மிக பயங்கரமானதாக இருந்ததால், அவருக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை.
15 வயதான ஆகாஷ் உயிரிழந்தபோது, விபத்தில் காயமடைந்த அவரது தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சீதாபென் கடுமையான தீக்காயங்களுக்கு ஆளாகி இருந்தார். இன்றும் கூட, அந்தச் சம்பவத்தை நினைவுகூரும்போது அவர் மிகுந்த உணர்ச்சிவயப்படுகிறார்.
நாங்கள் இப்படி அழுதுகொண்டே வாழ்கிறோம். அவனில்லாமல் எங்களால் வாழ முடியவில்லை. நாம் எப்படி வாழ்வோம்? காலத்தை எப்படி கழிப்போம் என தொடர்ந்து யோசித்துக்கொண்டிருக்கிறோம். இந்த எண்ணங்கள் என்னை வாட்டுகின்றன. அவனில்லாமல் எல்லாம் வெறுமையாகத் தெரிகிறது. என்னை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது, ஆகாஷின் வீடியோவையும் புகைப்படத்தையும் காட்டுமாறு கேட்டேன். அவனது உடல்நிலை குறித்து விசாரித்தேன். குடும்பத்தினர் எனக்கு தொடர்ந்து ஆறுதல் கூறினார்கள். ஆகாஷின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், வார்டுக்குள் செல்ல முடியாது என்று என்னிடம் கூறினார்கள். இனி ஒருபோதும் அவன் முகத்தை பார்க்க முடியாது என்ற உண்மையை 21 நாட்களுக்கு பிறகுதான் தெரிந்துகொண்டேன். இதை எப்படி மறக்க முடியும்? என் மகனை என்னால் மறக்கவே முடியாது. அவனுக்கு பதிலாக என் உயிர் போயிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவன் உயிரோடு இருந்திருக்கலாம். எங்களால் இதை கடந்து செல்ல முடியவில்லை.
குடும்பத்தின் இளைய நபரான ஆகாஷ் இறந்து ஓராண்டு கடந்துவிட்டாலும், இந்தக் குடும்பம் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை.
நாங்கள் அவனை நினைத்து அழுகிறோம்; அவன் போட்டோவை பார்த்து அழுகிறோம். அவனது தந்தையால் அவனை பிரிந்து வாழ முடியவில்லை. அவன் பகல் முழுவதும் என்னுடனும், இரவு நேரத்தில் தந்தையுடனும் இருப்பான். அவனுக்கு என்ன சாப்பிட வேண்டுமோ அதை தந்தையிடம் சொல்வான். அவரும் ரிக்ஷாவில் அழைத்துச் சென்று அதை வாங்கிக் கொடுப்பார். இப்போது அவன் உணவு கேட்பதே இல்லை. கடவுள் அவனை எங்களிடமிருந்து பறித்துக்கொண்டார். எங்கள் துயரத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. எதிரியின் வீட்டில் கூட இப்படிப்பட்ட சம்பவம் நடக்கக்கூடாது என கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
அந்த சம்பவத்திற்குப் பிறகு, இவர் விபத்து நடந்த இடத்திற்கு ஒருபோதும் சென்றதில்லை.
என் கண்முன்னே அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கும்போது, நான் எப்படி அந்த இடத்திற்குச் செல்ல முடியும்? என்னால் இப்போது அங்கு செல்ல முடியாது. அந்த சாலை வழியாக கூட நான் செல்வதில்லை.
அந்த சம்பவத்திற்குப் பிறகு, சீதாபென் பல நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது கைகள், கால்கள், முதுகு மற்றும் முகம் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.
என் தம்பியை நான் மிஸ் பண்றேன். என் திருமணத்தின்போது அவன் ஆடினான், குதித்தான், மிகவும் மகிழ்ச்சியாகச் சிரித்தான். கடந்த 12 மாதங்களாக நாங்கள் அவனை பார்க்கவில்லை. நான் ஆட்டோ ஓட்டும்போதுகூட என் சகோதரனை பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறேன். சில சமயங்களில், ஆட்டோ ஓட்டுவதை பற்றி கூட நான் நினைப்பதில்லை.
ஆகாஷின் தந்தை ஆட்டோ ஓட்டுநர். அந்த சம்பவம் நடந்தபோது, அதே பகுதியில் ஒரு பயணியை இறக்கிவிட சென்றிருந்தார்.
பயணியை இறக்கிவிட்ட பிறகு, வானத்தில் அந்த விமானத்தை பார்த்தேன். அது பெரிய புகை மண்டலம் போல தெரிந்தது. ஏதோ விபத்து நடந்துவிட்டது என்று நினைத்தேன். உள்ளே செல்ல எந்த வாய்ப்பும் இல்லை. புகையும் தீயுமாக இருந்தது. அப்போது என் உடன் பிறந்தோரின் மகன் அழைத்தான். நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்? என்று கேட்டான். நான், இங்கேதான் இருக்கிறேன், நீயும் உன் அத்தையும் எங்கே இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அத்தை சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், ஆகாஷை வீட்டில் எங்கும் காணவில்லை என்றும் சொன்னான்.
அந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆகாஷின் தாத்தா இயற்கையான முறையில் மரணமடைந்தார். அந்த இரண்டு மரணங்கள் குறித்தும் குடும்பத்தினர் சீதாபென்னிடம் தெரிவித்தனர்.
நான் என் மனைவியிடம் சொன்னேன். அழாதே. நீ மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புகிறாய். உன் மாமனார் இறந்துவிட்டார், ஆகாஷும் நம்மை விட்டுச் சென்றுவிட்டான். எனவே, நாம் ஒருவருக்கொருவர் துணையாக இருக்க வேண்டும்.
ஆமதாபாத் விபத்து நடந்து ஓராண்டு கடந்த பிறகும், இந்தக் குடும்பத்தின் துயரம் இன்னும் குறையவில்லை. இவர்களைப் போலவே இன்னும் பல குடும்பங்கள் நீதிக்காக காத்திருக்கின்றன.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு