இலங்கை: போராட்டக்காரர்கள், செய்தியாளர்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா கண்டனம்

இலங்கை நெருக்கடி
பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

(இந்தியா, இலங்கையில் இன்று (23.07.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்)

இலங்கையில் போராட்டக்காரர்கள், செய்தியாளர்கள், சட்டத்தரணிகள் மீது தடியடி நடத்தப்பட்டதை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் கண்டித்துள்ளதாக தமிழ் மிரர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அதுகுறித்த செய்தியின்படி, கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகிலுள்ள போராட்ட முகாமை அகற்றுவதற்கு, பாதுகாப்புப் படையினர் தேவையற்ற பலத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவது தொடர்பில், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் பீதியடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் ஜெனீவா மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் ஜெரமி லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.

இதன்போது, போராட்டக்காரர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் சட்டத்தரணிகள் மீது தடியடி நடத்தப்பட்ட செய்திகளையும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் கண்டித்துள்ளது.

அத்துடன் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க முடியவில்லை என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

ஊடகவியலாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் மனித உரிமைப் பாதுகாவலர்கள் ஆர்ப்பாட்டங்களை கண்காணித்து அறிக்கை வெளியிடும் உரிமையுடையவர்கள். எனவே அவர்களின் செயல்பாடுகளுக்கு எந்த வகையிலும் தடை செய்யக்கூடாது என்று மனித உரிமைகள் அலுவலகப் பேச்சாளர் வலியுறுத்தினார்.

அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராக பலப்பிரயோகத்தைப் பயன்படுத்துவது சர்வதேச சட்டத்திற்கு முரணானது என்றும் அவ்வாறான பலத்தைப் பயன்படுத்துவதை அதிகாரிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் கோரியுள்ளது.

அத்துடன், இலங்கையின் பொருளாதாரம் மற்றும் அரசியல் நெருக்கடிகளை பலவந்தமாக தீர்க்க முடியாது என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், பரந்த ஆலோசனைகள் மற்றும் உரையாடல்களின் மூலமே, சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் இலங்கையர்கள் நம்பிக்கையை மீளக் கட்டியெழுப்ப ஆரம்பிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1200 ஆண்டுகள் பழைமையான சோழர் கால நடராஜர் சிலை மீட்பு

சென்னை அருகே 1200 ஆண்டுகள் பழைமையான சோழர் கால நடராஜர் சிலை மீட்கப்பட்டுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, "இந்திய தொல்லியல் துறையில் ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண், கடந்த 2017ஆம் ஆண்டு ஒரு நடராஜர் சிலையை, ஜெர்மனிக்கு கொண்டு செல்வதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தார். அந்தச் சிலையை ஆய்வு செய்த இந்திய தொல்லியல் துறை, அந்த சிலை பழைமையானதைப் போல் இருப்பதால் இந்தியாவை விட்டு வெளியே கொண்டு செல்ல அனுமதியளிக்க முடியாது என்று மறுப்பு தெரிவித்தது.

அதையடுத்து அந்தப் பெண், சிலையைக் கொண்டு செல்லும் முடிவைக் கைவிட்டு ஜெர்மனிக்குச் சென்றார். இந்நிலையில், அந்தச் சிலை எங்குள்ளது என்பது குறித்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் விசாரணை செய்து வந்தனர். இதில் அந்த சிலை சென்னை அருகே மணலி சாத்தங்காட்டில் ஓர் உலோக பொருட்கள் விற்கும் கடையில் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி முத்து ராஜா தலைமையில் வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 4.5 அடி உயரமுள்ள நடராஜர் சிலை பறிமுதல் செய்யப்பட்டது," என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

Presentational grey line
Presentational grey line

சுமார் 1200 ஆண்டுகள் பழைமையான இந்த சிலை சோழர் காலத்தைச் சேர்ந்ததாக இருக்கலாம் என்று சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். உலோகத்தால் செய்யப்பட்ட இந்த சிலையின் மேற்பகுதியில் ஐம்பொன் பூச்சு உள்ளது. உலோகத்தால் செய்யப்பட்ட நடராஜர் சிலைகளில், இது மூன்றாவது பெரிய சிலையாக இர்க்கலாம் என்று தொல்லியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதை உறுதி செய்வதற்குரிய நடவடிக்கையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த சிலை, கோயிலின் பீடத்திலிருந்து அறுத்து எடுத்திருப்பதற்கான தடயங்கள் இருப்பதாகவும் அந்த சிலையை கடையின் உரிமையாளர் பார்த்திபனிடம் ஒரு பெண் ஒப்படைத்திருப்பதும் பார்த்திபன் அதை வெளிநாடு அனுப்புவதற்கு 2017-ஆம் ஆண்டு தொல்லியல் துறையின் சான்றிதழ் பெற முயன்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

2021-22 ஆண்டில் தமிழ்நாட்டில் 2586 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

2021-22ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் 2,586 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் இந்தியளவில் அதிக குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளதாகவும் இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

அது குறித்த செய்தியில், "கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக இந்தியாவில் கடந்த 2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன.

குழந்தைத் தொழிலாளர்

பட மூலாதாரம், Getty Images

பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையிலுள்ள குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் கல்வியைத் தொடர முடியாத நிலை ஏற்பட்டது. அவர்கள் ஆன்லைன் வகுப்புகளிலும் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளுக்கான கைபேசிகளை வாங்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக கொரோனா ஊரடங்கு காலத்தில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்தது. இதுகுறித்து யுனிசெஃப் கடந்த ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், கொரோனா காரணமாக குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை உலகளவில் 160 மில்லியனாக உயரும் என தெரிவித்தது.

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த ஆண்டு அதிக குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்ட மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியாவில் 2021-22ஆம் ஆண்டில் மொத்தம் 13,271 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக பஞ்சாப்பில் 4867 குழந்தைத் தொழிலாளர்களும் தமிழ்நாட்டில் 2,586 குழந்தைத் தொழிலாளர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பேரிடர்க் காலமான 2020-21ஆம் ஆண்டில் இந்தியாவில் 58,289 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

Presentational grey line
காணொளிக் குறிப்பு, உலகத்தரவரிசையில் 9வது இடத்தை பிடித்து சாதனை படைத்த பாரா பேட்மிண்டன் வீராங்கனை அமுதா

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: