ராஜபக்ஷ சகோதரர்களை முதல் முறையாக கூட்டாக சந்தித்த தமிழ் தலைவர்கள் - விவாதிக்கப்பட்ட விஷயங்கள் என்ன?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பட மூலாதாரம், PMD SRI LANKA

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது
  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கும் இடையில் முதல் முறையாக இன்று (25) விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

அரசியல் தீர்வு தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்பின் ஊடாக, அரசியல் தீர்வொன்றை பெறுவது குறித்து பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை இரண்டு மாத காலத்திற்குள் மொழி பெயர்ப்புக்களுடன் கிடைக்கும் எனவும், அதிகார பகிர்வு உள்ளிட்ட புதிய அரசியல் குறித்த விடயங்கள் அதன் பின்னர் தொடர முடியும் எனவும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உறுதியளித்ததாக, எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இந்த விடயத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இணக்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, செய்ய வேண்டிய நான்கு விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்திற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பட மூலாதாரம், PMD SRI LANKA

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக சிறை வைக்கப்பட்டுள்ளவர்களின் விடுதலை தொடர்பில் ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார் என இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இராணுவ தேவைக்காக இனி காணிகள் சுவிகரிக்கப்படாது என ஜனாதிபதி இன்றைய பேச்சுவார்த்தையில் உத்தரவாதம் வழங்கியுள்ளார்.

அத்துடன், பிரதேச சபை எல்லைகள், மாவட்ட எல்லைகள், கரையோர எல்லைகள் ஆகியவை மாற்றப்படுவதற்கான சில முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கைகள் தற்போதைக்கு செய்யப்படாது எனவும் ஜனாதிபதி உறுதி வழங்கியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் காலப் பகுதியில் அந்த நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், விசேட சட்டங்களின் கீழ் நில ஆக்கிரமிப்பும் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் விவகாரத்தில், காணாமல் போனோரின் உறவுகளுக்கு வழங்கப்படுவதாக கூறப்படும் ஒரு லட்சம் ரூபா பணமானது, காணாமல் போனோருக்கான இழப்பீடு அல்லவெனவும், அது தற்காலிக கொடுப்பனவு எனவும் ஜனாதிபதி தரப்பினர் இதன்போது கூறியுள்ளனர்.

காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் எனவும் இன்றைய சந்திப்பில் உறுதி வழங்கப்பட்டுள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளின் பொருளாதார மீள் எழுச்சிக்காக ஒரு விசேட அபிவிருத்தி நிதியம் ஒன்று உருவாக்கப்படும் என இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

இந்த நிதியத்தின் ஊடாக புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகளை வருவிப்பதற்கு அரசாங்கம் அனைத்து விதமான நடவடிக்கைகளையும் எடுக்கும் எனவும் உறுதி வழங்கப்பட்டுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

இவ்வாறான நிலையில், அரசியல் தீர்வு தொடர்பிலான பேச்சுவார்த்தை, ஜனாதிபதி நிபுணர் குழுவின் மொழி பெயர்ப்பு அறிக்கை இரண்டு மாதங்களுக்குள் கிடைக்கப் பெற்றதை அடுத்து தொடரும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிடுகின்றார்.

இதேவேளை, பொருளாதார ரீதியில் நாடு எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் அறிக்கை

''நாட்டை கட்டியெழுப்புவதற்காக ஒன்றிணைந்து செயற்படுவோம்" என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பட மூலாதாரம், PMD SRI LANKA

நாட்டு மக்கள் அனைவரினதும் தலைவராக, அனைத்து மக்கள் மீதும் தாம் ஒருசேர அவதானத்தைச் செலுத்துவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.

நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களை விடுவித்தல், குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குத் தொடரப்படாத சந்தேக நபர்கள் தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுத்தல், உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை ஆரம்பித்தல், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை மறுசீரமைத்தல், காணாமற்போனோர் தொடர்பான பிரச்னைகளுக்கான தீர்வுகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

அத்துடன், தொடர்ந்தும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம், வடக்கு - கிழக்கு உட்பட நாட்டின் அனைத்து மக்களின் நோக்கங்களையும் நிறைவேற்றி, நாட்டை அபிவிருத்தியை நோக்கி நகர்த்த முடியும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு

பட மூலாதாரம், PMD SRI LANKA

ஐக்கிய இலங்கையில் அரசியல் தீர்வின் மூலம், நாட்டை சுபீட்சத்தை நோக்கி நகர்த்துவது தமது எதிர்பார்ப்பாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறுகின்றது.

தாம் ஒரு நாடாக ஒன்றுபட வேண்டும். ஒரு நாடு, ஒரே மக்கள் என்று செயற்பட்டு, நாட்டின் தற்போதைய நிலைமையில் இருந்து, நாட்டை விடுவிப்பது அனைத்துத் தரப்பினரின் பொறுப்பாகும் என இரா.சம்பந்தன் தெரிவித்தார். இலங்கை, கிழக்கு சுவிட்சர்லாந்தாக மாறுவதை காண விரும்புவதாக இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

நீண்டகாலமாக கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் எடுக்கப்படும் எதிர்கால நடவடிக்கைகள், நீண்டகாலமாக பயிர்ச் செய்யப்பட்ட காணிகளை விடுவித்தல், காணாமற்போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்தல், புதிய அரசியலமைப்பு தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதன் பின்னர் அதில் சேர்க்கப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடுதல், வடக்கு - கிழக்கு அபிவிருத்தி நிதியத்தை ஸ்தாபித்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளன.

YouTube பதிவை கடந்து செல்ல
Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

YouTube பதிவின் முடிவு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: