இந்தியா - ஆஸி 2வது டெஸ்ட்: சொந்த ஊரில் சதம் அடித்து 3 ஆண்டு தாகம் தீர்ப்பாரா விராட் கோலி?

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது
வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது. சர்வதேச டெஸ்டில் 3 ஆண்டுகளாக சதம் காணாத நட்சத்திர வீரர் விராட் கோலி டெல்லியில் சொந்த மைதானத்தில் அந்த தாகத்தை தீர்ப்பாரா என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள், 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது. இரு அணிகள் இடையே நாக்பூரில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 4 போட்டிகள் கொண்ட, பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்குகிறது. நாக்பூர் போட்டியை போலவே இந்த டெஸ்டிலும் இந்தியாவின் அதிரடி தொடருமா? என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் சதத்தை தேடிய பயணத்தில் ஏறத்தாழ 1,100 நாட்களுக்குப் பிறகு நாக்பூர் டெஸ்டில் தீராத தாகத்தை தணித்துக்கொண்ட கேப்டன் ரோகித் சர்மா, தனது ரன் வேட்டையைத் தொடரும் வேட்கையுடன் இருக்கிறார். இந்த டெஸ்டிலும் சதம் கண்டால், டெஸ்ட் போட்டிகளில் அவரது சத எண்ணிக்கை இரட்டை இலக்கத்தை எட்டும்.

அதேநேரத்தில், அணியின் மிக முக்கியமான நட்சத்திர வீரரான விராட் கோலி 3 ஆண்டுகளுக்குப் பிறகு சதம் காணும் ஆவலில் இருக்கிறார். விராட் கோலி கடைசியாக 2019-ம் ஆண்டு நவம்பரில் வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்திருந்தார். ஒட்டுமொத்த சர்வதேச கிரிக்கெட்டிலும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பார்முக்கு வந்த கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் அடுத்தடுத்து சதம் விளாசியிருக்கிறார். இருபது ஓவர் போட்டியிலும் கூட சதம் விளாசி தான் மீண்டும் பார்முக்கு வந்திருப்பதை கிரிக்கெட் உலகிற்கு பறைசாற்றி இருக்கிறார்.

நாக்பூரில் நடந்த கடந்த டெஸ்டிலும் அதனைத் தொடர்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் சொற்ப ரன்களில் அறிமுக வீரர் டாம் மர்பியின் பந்துவீச்சில் அவர் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சுழற்பந்துவீச்சில் தனக்குள்ள சில குறைகளைக் களைய அவர் நீண்ட நேரம் பயிற்சி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. டெல்லியில் சொந்த மைதானத்தில் விளையாடும் அவர் இம்முறை சதம் அடித்து 3 ஆண்டு தாகத்தை தீர்ப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்திய அணியில் இடம் பெற்றுள்ள டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் சத்தேஷ்வர் புஜாராவுக்கு இது மைல்கல் போட்டியாக அமைந்துள்ளது. அதாவது, சர்வதேச கிரிக்கெட்டில் இது அவருக்கு 100-வது டெஸ்ட் போட்டி ஆகும். புஜாராவின் கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த டெஸ்டை நேரில் காண அவரது குடும்பத்தினர் வருகை தந்துள்ளனர். 2017-ம் ஆண்டு இதே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டை சதம் கண்டு புஜாரா அசத்தியதை நினைவுகூர்ந்துள்ள பிசிசிஐ, நூறாவது போட்டியில் அவர் சதம் காண வாழ்த்தியுள்ளது.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

கால் மூட்டில் அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டு, 6 மாதங்களுக்குப் பிறகு அணிக்குத் திரும்பிய ரவீந்திர ஜடேஜா, நாக்பூரில் 5 விக்கெட் வீழ்த்தியதுடன் 50 ரன்களையும் சேர்த்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 249 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், டெல்லியில் இன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்டில் 250 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டுவார் என்று எதிர்பார்க்கலாம்.

கடந்த டெஸ்டில் சுழற்பந்துவீச்சில் மாயாஜாலம் காட்டிய ரவிச்சந்திரன் அஸ்வினும் முக்கிய மைல்கல்லை எதிர்நோக்கியுள்ளார். 89 டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 457 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ள அவர், இன்னும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் ஆஸ்திரேலிய சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயனை முந்திவிடுவார். ஆனால், இந்த டெஸ்டில் லயனும் விளையாடுவதால், அவரது சவாலை முறியடித்து புதிய மைல்கல்லை அஸ்வின் எட்டுவாரா என்பதைப் பார்க்க கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

ரவிச்சந்திரன் அஸ்வின்

பட மூலாதாரம், Getty Images

காயத்தில் இருந்து மீண்டும் இந்திய அணியினருடன் இணைந்துள்ள மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் இன்றைய போட்டியில் விளையாட வாய்ப்புள்ளது. ஏனெனில், ஸ்ரேயாஸ் முழு உடல் தகுதியை எட்டிவிட்டால் இன்றைய போட்டியில் களம் காண்பார் என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஏற்கனவே தெரிவித்துவிட்டார். ஒருவேளை ஸ்ரேயாஸ் இன்றைய ஆட்டத்தில் விளையாடினால், சூர்யகுமார் நீக்கப்படலாம். இருபது ஓவர் போட்டிகளில் அசத்தி, நாக்பூர் போட்டி மூலம் சர்வதேச டெஸ்டில் ஆடும் வாய்ப்பைப் பெற்ற சூர்யகுமார், சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதேபோல், சமீபமாக ரன்களை குவிக்க திணறி வரும் தொடக்க வீரர் லோகேஷ் ராகுல் கூடுதல் வாய்ப்புகளைப் பெற தகுதியானவர் என்றும் ராகுல் டிராவிட் கூறியிருப்பதால் இன்றைய ஆட்டத்தில் ஆடும் லெவனில் அவருக்கு இடம் உண்டு என்று உறுதியாக நம்பலாம். இதனால், ஒருநாள், இருபது ஓவர் போட்டிகளில் அதிரடியில் கலக்கிய சுப்மான் கில், டெஸ்டில் வாய்ப்பு பெற சிறிது காலம் காத்திருக்க நேரிடலாம்.

பந்துவீச்சைப் பொருத்தவரை, இந்திய அணியில் மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது. அஸ்வின் - ஜடேஜா - அக்ஷர் படேல் ஆகியோர் அடங்கிய சுழற்பந்து வீச்சு கூட்டணி ஆஸ்திரேலிய அணியை திணறடிக்க தயாராகி வருகிறது. வேகப்பந்துவீச்சில் முகமது ஷமி - முகமது சிராஜ் கூட்டணி தாக்குதலைத் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியடைந்ததால் கடும் நெருக்கடியில் உள்ளது. நாக்பூர் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய சுழற்பந்துவீச்சாளர்களின் மந்திரச் சுழலில் வெறும் 91 ரன்களில் அந்த அணி பேட்ஸ்மேன்கள் அடங்கிப் போனது அந்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதனால், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் பலரும் அந்த அணியை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

குறிப்பாக, ஐ.சி.சி.யின் சர்வதேச டெஸ்ட் தர வரிசையில் நான்காவது இடத்தில் உள்ள டிரெவிஸ் ஹெட்டை முதல் டெஸ்டில் சேர்க்காததால் அவர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடரில் வெல்லும் அணிக்கு வழங்கப்படு கோப்பையின் பெயரை தாங்கியுள்ள ஆலன் பார்டரும் கூட, டிரெவிஸ் ஹெட்டிற்கு வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார். இதனால், அந்த அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இரண்டாவது டெஸ்டில் அந்த அணியில் மாற்றம் இருககும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லியில் இன்று தொடங்கும் போட்டி, இரு அணிகளுக்கும் இடையிலான 105-வது டெஸ்டாகும். இதுவரை நடந்த 104 போட்டிகளில் இந்தியா 32 போட்டிகளிலும், ஆஸ்திரேலியா 43 டெஸ்ட்களிலும் வெற்றி பெற்றுள்ளன. 28 டெஸ்ட் போட்டிகள் 'டிரா' ஆகியுள்ளன. ஒரு போட்டி 'டை'யில் முடிந்தது.

பார்டர் - கவாஸ்கர் கோப்பையை பொறுத்த வரையில் இந்தியா கடைசியாக நடந்த மூன்று தொடர்களிலும் தொடர்ச்சியாக வெற்றிப் பெற்று, கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. அதில் 2018-19, 2020 -21 - ஆஸ்திரேலிய மண்ணில் விளையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

4 போட்டிகள் கொண்ட இந்த தொடரிலும் முதல் போட்டியில் வென்று முன்னிலை பெற்றுள்ள இந்திய அணி, அதே உத்வேகத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. இந்தியாவுக்கு சொந்த மண்ணில் விளையாடுவது சாதகம். அதேநேரத்தில், முதல் போட்டியில் கிடைத்த மோசமான தோல்வியால் கடும் நெருக்கடியில் உள்ள ஆஸ்திரேலிய அணி அதில் இருந்து மீண்டெழ பேட்டிங், பந்துவீச்சில் முன்னேற்றம் காண்பதுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம்.

பிபிசி விளையாட்டு வீராங்கனை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: