You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஐபிஎல் 2020: முதல் வெற்றியை பதிவு செய்த கொல்கத்தா அணி – ஆறாவது இடத்தில் சென்னை அணி
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற எட்டாவது போட்டியில், ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதிக் கொண்டன.
இதில் கொல்கத்தா அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் தனது முதல் வெற்றியைப் பதித்துள்ளது.
டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது, பின் கொல்கத்தா அணிக்கு 143 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 36 ரன்களையும், மணிஷ் பாண்டே 51 ரன்களும், சகா 30 ரன்களும் எடுத்திருந்தனர்.
சிறப்பாக பந்துவீசிய கொல்கத்தா அணி, அதிக ரன்களை விட்டுக் கொடுக்கவில்லை.
பின்னர் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு ஐதராபாத் அணி 142 ரன்களை எடுத்தது.
ஷுப்மன் கில்லின் சிறப்பான ஆட்டம்
கொல்கத்தா அணி வெற்றி பெற்ற போதிலும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுனில் நரேன் ரன் ஏதும் எடுக்காமல் இரண்டாவது ஓவரிலேயே அவுட் ஆனார். இருப்பினும் அந்த அணியின் இரண்டாவது ஓபனர் ஷுப்மன் கில் முதல் இரு ஓவர்களுக்குள் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். மூன்றாவது விக்கெட்டாக வந்த ரானாவும் 13 பந்துகளில் 36 ரன்களை எடுத்து அவுட் ஆனார்.
ஆனால் அதன்பின் வந்த கேப்டன் தினேஷ் கார்த்திக்கால் சோபிக்க முடியவில்லை அவர் ரன் ஏதும் எடுக்காமல் ரஷித் கான் பந்தில் `எல்பிடபள்யு` முறையில் அவுட் ஆனார்.
ஏழாவது ஓவரில் கொல்கத்தா அணியின் மூன்றாவது விக்கெட்டு சரியும்போது அந்த அணி 53 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.
ஆனால் அணியின் நெருக்கடியைப் புரிந்துகொண்ட ஷுப்மன் கில், 42 பந்துகளில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார். இதன்மூலம் 14ஆவது ஓவரில் 100 ரன்களை கடந்தது கொல்கத்தா அணி.
ஐந்தாவது விக்கெட்டாக வந்த மார்கனுடன் கூட்டு சேர்ந்து கில், 92 ரன்களை எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.
பிரகாசிக்காத ஐதராபாத் அணி
ஐதராபாத் அணி டாஸ் வென்றிருந்தாலும் 20 ஓவர்களில் அந்த அணியால் 142 ரன்களுக்கு மேல் எடுக்க முடியவில்லை. அணியில் அதிகபட்சமாக 38 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் இரு சிக்ஸர்களை விளாசி 51 ரன்களை எடுத்தார் மனிஷ் பாண்டே.
கேப்டன் டேவிட் வார்னர் 36 ரன்களையும், சகா 30 ரன்களையும் எடுத்திருந்தனர். ஆனால் அவர் மெதுவாக ஆடியது குறித்து சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்தனர்.
ஐதராபாத் அணி 16 ஓவர்களில்தான் 100 ரன்களை கடந்தது.
அதிக ரன்களை இலக்காக நிர்ணயிக்க முடியாத நிலையில் அந்த அணி தோல்வியை சந்தித்தது.
இந்த தொடரில் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா ஆகிய இரு அணிகளுமே இதுவரை தலா ஒரு போட்டிகளில் விளையாடியுள்ளன அதில் கொல்கத்தா அணி ஒரு வெற்றியைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புள்ளிகள் பட்டியலைப் பொறுத்தவரை டெல்லி கேபிடல்ஸ் அணி முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி ஆறாவது இடத்தில் உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: