உலகக்கோப்பை 2019 : ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றது

உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஞாயற்றுக் கிழமை மோதின. இப்போட்டியில் இந்தியா நிர்ணயித்த 353 ரன்கள் இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 316 ரன்கள் மட்டுமே எடுத்தது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. இந்தியா நிதான ஆட்டம், ஓவர் -12, ரன்கள் - 55/0

    இந்திய அணி முதல் 10 ஓவர்களில் விக்கெட் இழக்கவில்லை. நிதானமான ஆட்டத்தை கையாண்டு வருகிறது.

    ரோகித் ஷர்மா 33 பந்துகளில் 19 ரன்கள் எடுத்துள்ளார். ஷிகர் தவான் 39 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.

    கோல்டர் நைல் வீசிய எட்டாவது ஓவரில் தவான் 13 ரன்கள் குவித்தார். இதில் மூன்று பௌண்டரிகள் அடங்கும்.

    தவான் இதுவரை இங்கிலாந்து மண்ணில் ஒருநாள் போட்டிகளில் மூன்று சதம், நான்கு அரை சதம் விளாசியுள்ளார்.

    Shikhar Dhawan

    பட மூலாதாரம், ADRIAN DENNIS/AFP/Getty Images

  2. யார் சிறந்த பேட்ஸ்மேன்? - ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?, சிவக்குமார் - லண்டனிலிருந்து (பிபிசி தமிழ்)

    மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தங்களது அணியின் வீரர் ஸ்டீவ் ஸ்மித்தான் சிறந்த பேட்ஸ்மேன் என்று நேற்று (சனிக்கிழமை) ஓவல் மைதானத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் கருத்துத் தெரிவித்துள்ளார்.

    உலகின் சிறந்த பேட்ஸ்மேனான ஸ்மித் மற்றும் போட்டியின் போக்கையே மாற்ற கூடிய வீரரான வார்னர் ஆகியோரின் வருகை இந்தியாவுக்கெதிரான போட்டியில் ஆஸ்திரேலியாவின் பலத்தை கூட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், பின்ச்சின் கருத்துக்கு இந்திய ரசிகர்கள் மறுப்புத் தெரிவிக்கின்றனர்.

    "ஸ்மித்தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என்று பின்ச் எப்படி கூறுவார்? இந்திய அணியின் கேப்டன் கோலியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டியின் புள்ளிவிவரங்கள் ஸ்மித்தைவிட சிறப்பானதாகவே உள்ளன. இந்திய அணியின் கேப்டன் மற்றும் வீரர்களை தூண்டிவிடும் வகையிலேயே பின்ச் இவ்வாறு கூறியுள்ளார். ஆனால், இது உண்மையில் எடுபடாது" என்று கூறுகிறார் நாட்டிங்காமை சேர்ந்த கிரிக்கெட் ரசிகரான அஜய்.

    "பின்ச்சின் கருத்துக்கு கோலியின் பேட் ஓவல் மைதானத்தில் பதிலளிக்கும். கோலி கண்டிப்பாக அதிக ரன்களை விளாசுவார்" என்று கூறுகிறார் ஓவல் மைதானத்தின் முன்பு கூடியிருந்த மற்றொரு கிரிக்கெட் ரசிகரான சௌரவ் பட்டாச்சார்யா.

    இந்திய அணியின் சார்பாக செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற ரோஹித் ஷர்மாவிடம் பின்ச்சின் கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அதற்கு நேரடியாக பதிலளிக்காமல், இந்திய அணி போட்டியில் கவனம் செலுத்த விரும்புவதாக தெரிவித்தார்.

    பிரிட்டனிலுள்ள காலநிலையை சரியாக பயன்படுத்திக் கொள்ளும் அணிகளே இங்கு அதிகம் வெற்றிப்பெற்றிருக்கின்றன என்பதன் அடிப்படையில் போட்டியை எதிர்கொள்ளவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  3. வரலாறு என்ன சொல்கிறது?, சிவக்குமார் - லண்டனிலிருந்து (பிபிசி தமிழ்)

    இந்தியா - ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான போட்டியை ஆவலுடன் எதிர்நோக்குபவர்கள், இவ்விரு அணிகள் இதற்கு முன்னர் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிகளில் நேருக்குநேர் மோதியை கண்டிப்பாக நினைத்து பார்ப்பார்கள் என்று கூறலாம்.

    2015ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதிப் போட்டி இந்தியாவுக்கு மறக்க முடியாத ஒன்று என்றால், அதே அளவுக்கு 2011ஆம் ஆண்டு காலியிறுதியில் தோல்வியுற்று போட்டியிலிருந்து வெளியேறியது ஆஸ்திரேலிய அணிக்கு மோசமான நினைவுகளை ஏற்படுத்தும்.

    2015ஆம் ஆண்டு அரையிறுதி போட்டியை போன்றே 2003ஆம் ஆண்டு இறுதிப் போட்டியும் மறக்க முடியாத ஒன்று. அப்போதும், முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 359 ரன்களை குவிக்க, அடுத்து ஆடிய இந்திய அணி 234 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

    1999ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில், சூப்பர் சிக்ஸ் பிரிவில் இவ்விரு அணிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில், முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 282 ரன்களை அடித்தது. ஆனால், கங்குலி, சச்சின், ட்ராவிட், அசாருதீன் ஆகிய நட்சத்திர வீரர்களை கொண்டிருந்த இந்திய அணியால் அந்த போட்டியிலும் சோபிக்க இயலவில்லை.

    மேற்குறிப்பிட்டவைகளில் பெரும்பாலான போட்டிகளில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பேட்ஸ்மேனோ அல்லது பவுலரோ சிறப்பாக செய்யப்பட்டதை தொடர்ந்தே அந்த அணி வெற்றிபெற்று வந்துள்ளது.

    அதாவது, 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியை எடுத்துக்கொண்டால், ரிக்கி பாண்டிங் மற்றும் மார்ட்டின், 1999ஆம் ஆண்டில் மார்க் வாக் மற்றும் மெக்ராத் ஆகியோரை உதாரணமாக குறிப்பிட முடியும்.

    முக்கியமான போட்டிகளின்போதே ஆஸ்திரேலியாவின் முக்கிய வீரர்கள் ஃபார்முக்கு திரும்புவர். எனவே, 2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவின் முகமாக மாறப்போகும் வீரர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு சரிசமமான பலத்துடன் திகழும் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவுக்கு கடும் நெருக்கடியை கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்..

  4. ஆட்டம் துவங்கியது, கோல்டர் நைலால் தப்பித்த ரோகித்

    முதல் ஓவரை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசினார். ரோகித் ஷர்மா ஆறு பந்துகளையும் எதிர்கொண்டு இரண்டு ரன்கள் மட்டும் எடுத்தார்.

    இரண்டு ஓவர்கள் முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி ஏழு ரன்கள் எடுத்துள்ளது. மிச்செல் ஸ்டார்க் பந்தில் ரோகித் ஷர்மாவை அவுட் செய்யும் ஒரு வாய்ப்பை தவற விட்டார் கடந்த வெஸ்ட் இண்டீஸ் போட்டியின் நாயகன் கோல்டர் நைல்.

    இந்திய அணி விவரம் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, கேதர் ஜாதவ், ஹர்டிக் பாண்ட்யா, குலதீப் யாதவ், யுவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், ஜஸ்ப்ரீத் பும்ரா. ஆஸ்திரேலிய அணி விவரம் ஆரோன் பின்ச், டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், மார்கஸ் ஸ்டாய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கரே, நாதன் கோல்டர் நைல், பேட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா.

    India v Australia

    பட மூலாதாரம், Henry Browne /Getty Images

  5. டாஸ் வென்றது இந்தியா, இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை

    உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் இன்று மோதுகின்றன. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளார். இந்திய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியிலும் கடந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அணியே தற்போதும் களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணி ஏற்கனவே உலகக்கோப்பைத் தொடரில் இரண்டு வெற்றிகளைப் பெற்றுள்ளது. உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியாவில் விளையாடிய ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரை வென்றது குறிப்பிடத்தக்கது.

    Virat Kohli

    பட மூலாதாரம், Getty Images