You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

உத்தர பிரதேசம்: அப்னா தளம், நிஷாத் கட்சியுடன் கூட்டணியை உறுதிப்படுத்தியது பாஜக

மக்களவை தேர்தலிலும் அப்னா தளம், நிஷாத் கட்சியுடன் நாங்கள் அணி சேர்ந்தோம். அதே வழியில் இப்போது சட்டசபை தேர்தலிலும் களம் காண்கிறோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

விக்னேஷ். அ and ஜோ மகேஸ்வரன்

  1. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் – அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது

    தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.

    தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவுள்ளது. கொரோனா பரவல் தொடரும் நிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை, பாதுகாப்பாக நடத்துவது குறித்து அனைத்து கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று காலை 11.30 மணியளவில் நடைபெறுகிறது.

    சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதையடுத்து, விரைவில் தேர்தல் தேதி அறிவிப்பு உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  2. சிறுமியை சுட்டுக் கொன்ற போலீசார் மீது வழக்கு

    எட்டு வயது சிறுமி ஒருவரை சுட்டுக் கொன்றதாக அமெரிக்காவில் மூன்று போலீசார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வழக்கில் முதலில் கைதான இரு பதின் வயதினர் மீதுமான வழக்கு கைவிடப்பட்டுள்ளது.

    ஃபிலடெல்ஃபியாவில் 2021 ஆகஸ்டு 27ஆம் தேதி, பள்ளி ஒன்றின் கால்பந்து போட்டி நடந்த மைதானத்துக்கு வெளியே இருந்த வாகனத்தில் அமர்ந்திருந்த ஃபாண்டா பிலிட்டி எனும் சிறுமி சுட்டுக்கொல்லப்பட்டார்.

    அதற்கு அருகே இரு பதின்வயதினர் ஒருவரை நோக்கி ஒருவர் சுட்டதால், வாகனத்தின் உள்ளே ஆயுதம் தாங்கிய சந்தேக நபர்கள் இருந்ததாக எண்ணி காவல் அதிகாரிகள் சுட்டதாக அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

  3. டோங்கா சுனாமி: எரிமலை சாம்பலை அப்புறப்படுத்த போராட்டம்

    பசிஃபிக் பெருங்கடலுக்கு அடியில் நடந்த எரிமலை வெடிப்பை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட டோங்கா தீவின் விமானநிலையத்தில் படிந்துள்ள எரிமலைச் சாம்பலை நீக்க மீட்புதவிக் குழுக்கள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன.

    உணவு, குடிநீர் மற்றும் பிற அடிப்படை பொருட்களை விமானம் மூலம் கொண்டு செல்லும் பணிகள் இதனால் தாமதம் அடைந்துள்ளன.

    கடந்த சனிக்கிழமை எரிமலை வெடிப்புக்கு பின் நடந்த சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கப்பல்களை அனுப்பியுள்ளன.

    சுனாமி காரணமாக டோங்காவில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்களில் ஒருவர் பிரிட்டிஷ் பெண்மணி.

    எரிமலை வெடிப்பால் உண்டான புகை 20 கிலோ மீட்டர் உயரத்துக்கு எழும்பியது என்று டோங்கா அரசு தெரிவிக்கிறது,

  4. நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம்.