You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ரஷ்ய அட்டூழியங்கள் எனக்கூறி ஐ.நா கூட்டத்தில் பட்டியல் வாசித்த ஸெலென்ஸ்கி

ரஷ்யர்களின் நடவடிக்கைகள் 'இஸ்லாமிய அரசு' என்ற பயங்கரவாதக் குழுவைப் போலவே இருந்தன. அதிபர் புதினின் பிரசாரம் தனது சொந்த வெறுப்பை யுக்ரேன் மட்டுமல்லாமல் மற்ற நாடுகளுக்கும் கொண்டு சேர்க்கிறது என்கிறார் யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை அரசின் கூட்டணிக் கட்சி விலகல் - செந்தில் தொண்டமான் அறிவிப்பு

    இலங்கை அரசின் கூட்டணிக் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அரசாங்கத்திலிருந்து விலகியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் செந்தில் தொண்டமான், பிபிசி தமிழுக்கு தெரிவித்துள்ளார்.

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. மலையகத்திற்கான பல்கலைக்கழகம் அமைப்பதற்கான திட்டம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஆயிரம் ரூபா சம்பள பிரச்சினை, ஆசிரியர் உதவியாளர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

    இவ்வாறு கலந்துரையாடப்பட்ட விடயங்களுக்கு சாதகமான பதிலை ஜனாதிபதி வழங்கியதாக செந்தில் தொண்டமான் கூறினார். எவ்வாறாயினும், ஜனாதிபதியுடனான சந்திப்பு தொடர்பில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்கள் நேற்றிரவு கலந்துரையாடியுள்ளனர்.

    இதையடுத்து, அரசாங்கத்திலிருந்து விலகி, நாடாளுமன்றத்தில் சுயேட்சையாக செயற்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உயர்மட்ட குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். இந்த நிலையில், தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலக, ஜீவன் தொண்டமான் தீர்மானித்துள்ளார்.

    இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஜீவன் தொண்டமான் மற்றும் மருதபாண்டி ராமேஷ்வரன் ஆகியோர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கு தலைசாய்த்தே இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த தீர்மானத்தை எட்டியதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

  2. கிராமி விருது பெற்றவருக்கு பிரதமர் மோதி வாழ்த்து

    கிராமி விருது வழங்கும் விழாவில் சிறந்த குழந்தைகளுக்கான இசைத் தொகுப்பிற்கான விருது பெற்ற ஃபல்குனி ஷாவிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''அவருடைய எதிர்கால முயற்சிகள் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.'' என்று தெரிவித்துள்ளார்.

  3. இலங்கை நாடாளுமன்றம் இன்று கூடுகிறது

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணியளவில் கூடுகிறது.

    பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவையில் உள்ள 26 அமைச்சர்கள் பதவி விலகுவதாக அறிவித்தனர். தேசிய அமைச்சரவை அமைக்கும் முடிவை எதிர்க்கட்சிகள் ஏற்கவில்லை.

    ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் பதவிகளை ராஜிநாமா செய்துவிட்டு வீட்டிற்கு செல்லுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

    இவ்வாறான நிலையில், ஜனாதிபதி செயலக வளாகத்தை திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை இளைஞர், யுவதிகள் முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தியிருந்தனர்.

  4. இலங்கை ஜனாதிபதி செயலகம் முற்றுகை: விடிய விடிய மக்கள் போராட்டம், ரஞ்சன் அருண் பிரசாத்

    இலங்கை ஜனாதிபதி செயலக வளாகத்தை நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை இளைஞர், யுவதிகள் முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தினர்.

    இலங்கையில் விடிய விடிய நடைபெற்ற போராட்டத்தில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்பட்டது. அத்துடன், ராஜபக்ஷ குடும்பத்தை வெளியேறுமாறு கோஷங்கள் எழுப்பப்பட்டிருந்தன.

    கொழும்பு நகர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளிலிருந்து வாகனங்களில் பேரணியாக வருகைத் தந்த பெருந்திரளான இளைஞர், யுவதிகள், ஜனாதிபதி செயலக வளாகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

    நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம், இன்று அதிகாலை வரை தொடர்ந்திருந்தது. தேசிய கொடிகள் மற்றும் அரசாங்கத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டது.

    ஜனாதிபதி செயலகத்திற்குள் பிரவேசிக்க முடியாதவாறு, பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டிருந்தன. போலீஸார், கலகத் தடுப்பு பிரிவினர், விசேட அதிரடி படையினர் என அனைத்து பாதுகாப்பு தரப்பினரும் இந்த பகுதிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

    எனினும், போராட்டக்காரர்கள் தொடர்ந்தும் கோஷங்களை எழுப்பியவாறு அதிகாலை வரை போராட்டத்தை தொடர்ந்திருந்தனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக நாளுக்கு நாள் அரசாங்கத்திற்கு எதிரான தொடர் போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர். ஜனாதிபதி, பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரது வீடுகளும் முற்றுகையிடப்பட்டு, போராட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.

    அமைச்சர்கள் தமது பதவிகளை இராஜினாமா செய்ததாக அறிவித்த போதிலும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்பத்தினர் அனைவரும் பதவிகளை இராஜினாமா செய்து, வீட்டிற்கு செல்லுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

  5. இன்றைய நேரலைக்கு வரவேற்கிறோம்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்,

    பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம். தொகுத்து வழங்குவது எம்.மணிகண்டன், ஜோ மகேஸ்வரன்.

    உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின்மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்று மற்றும் இன்றைய செய்திகள் சிலவற்றின் முக்கிய தகவல்கள்

    • இலங்கையில் ஜனாதிபதி செயலகம் முன்பாக விடிய விடிய மக்கள் போராட்டம்
    • ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி இன்று பேசுகிறார்.
    • தமிழ்நாட்டில் சொத்துவரி உயர்வு உள்ளிட்டவற்றைக் கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்.
    • ஆந்திராவில் குண்டூர் மாவட்டம் தாடேபள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் , முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வீடியோ கான்பரன்சிங் மூலம் 13 புதிய மாவட்டங்களை நேற்று தொடங்கி வைத்தார்.
    • யுக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தமது தாய்நாடு மீதான ரஷ்ய படையெடுப்பை "முழு நாட்டையும் சித்ரவதைக்கு உள்ளாக்கும் செயல்" என்று அழைத்துள்ளார்.
    • ஈலோன் மஸ்க், ட்விட்டரின் 9.2% பங்குகளை வாங்கியுள்ளதாக ஒரு அமெரிக்கப் பத்திரங்கள் ஆணையம் தெரிவிக்கிறது. இதன் மூலம் ட்விட்டர் பங்குகளின் மதிப்பு சுமார் 25% உயர்ந்ததுள்ளது.
    • ரஷ்யாவின் ஆக்கிரமிப்புக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அமைதிப் பேச்சுவார்த்தையில் யுக்ரேனுக்கு ஆதரவளிக்கும் விதமாகவும், பிரிட்டன் வெளியுறவுச் செயலர் லிஸ் ட்ரஸ் போலந்திற்குச் செல்லவுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
    • யுக்ரேன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதில் இருந்து சுமார் 24,81,000 பேர் யுக்ரேனில் இருந்து போலந்துக்கு தப்பிச் சென்றுள்ளதாக போலந்து எல்லைக் காவல்படை தெரிவித்துள்ளது.
    • ஹாங்காங் பிராந்தியத்தின் தலைமை நிர்வாகி பதவியை கேரி லாம், இரண்டாவது முறையாக வகிக்கப் போவதில்லை என்று கேரி லாம் தெரிவித்துள்ளார்.
    • மேலதிகச் செய்திகளுக்குமுகப்புப் பக்கம்செல்லவும்.பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.