You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மக்கள் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை: மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

"ஐந்து மாநில தேர்தல் நடைபெறும் சூழலில் தங்களுக்கு ஏதாவது நல்ல அறிவிப்பு கிடைக்காதா என ஏங்கித் தவித்த மக்களின் எதிர்பார்ப்பை புறக்கணித்து, மக்களை பற்றி சிந்திக்காத இந்த நிதிநிலை அறிக்கை, மக்களின் நலனை மறந்த நிதிநிலை அறிக்கை என்று அடைமொழியிட்டு அழைப்பதே முற்றிலும் பொருத்தமானது," என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்திய நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்

    இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை 4-வது முறையாக தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.

    இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. கூட்டத் தொடரின் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று (பிப். 01) காலை 11 மணியளவில் தொடங்கியது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 4வது முறையாக தனது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, காகிதமில்லா, டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக குடியரசுத் தலைவரை நிதியமைச்சர் சந்தித்தார். மத்திய பட்ஜெட்டிற்கு பிரதமர் மோதி தலைமையிலான ம்த்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

  2. 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

    தமிழ்நாடு நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 21 மீனவர்களை எல்லை தாண்டி சென்றதாக, இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

    நாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நள்ளிரவு மீன் பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் மாதகல் கடற்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக நாகை மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 21 மீனவர்களையும் கைது செய்து, மயிலட்டி துறைமுகத்திற்கு அழைத்துச் சென்றனர். சிறைபிடிக்கப்பட்ட 21 மீனவர்களையும் இரண்டு படகையும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறையிடம் ஒப்படைக்கின்றனர். பின்னர் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

    கடந்த 27ம் தேதி இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சியில் இருந்து பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகின் மீது தமிழக மீனவர்களின் மீன்பிடி விசைப்படகு மோதியதில், படகு நடுக்கடலில் மூழ்கி படகில் இருந்த இலங்கை மீனவர் மாயமானதாக இலங்கை மீனவர்கள் தரப்பில் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இந்நிலையில், படகு மூழ்கி மாயமான இரண்டு மீனவர்களில் ஒருவர் நேற்று மாலை சடலமாக பருத்தித்துறை கடற்கரையில் கரை ஒதுங்கினார். இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் தமிழக மீனவர்கள் படகுகளை சிறைபிடித்து கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தொடர்ந்து நேற்று காலை முதல் சாலைகளில் படகுகளை நிறுத்தி மீனவர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  3. தமிழ்நாட்டில் இன்று முதல் பள்ளிகள் திறப்பு

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்து வருவதையடுத்து, பள்ளிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டு, இணைய வழி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அளித்து வருகிறது. இதன்படி, கடந்த 40 நாட்களாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் இன்று முதல் திறக்கப்படுகின்றன.

    பள்ளிகளில் கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்படி, ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் இன்று தொடங்கியுள்ளன. முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியுடன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆன்லைன் வகுப்பை விட, நேரடி வகுப்பில் பங்கேற்பதையே விரும்புவதாக மாணவர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

  4. இந்தியாவில் குறையும் கொரோனா பாதிப்பு - இறப்பு 1,192 ஆக அதிகரிப்பு

    இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று இரண்டு லட்சத்திற்கு கீழ் குறைந்து, 1,67,059 ஆக பதிவாகியுள்ளது.

    இந்தியா முழுவதும் ஒரு நாளில் 1,192 பேர் உயிரிழந்துள்ளனர். சிகிச்சையில் இருந்த 2,54,076 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் தினசரி கொரோனா தொற்று விகிதம் 11.69 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 1,66,68,48,204 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு:

    தமிழ்நாட்டில் ஒரு நாள் கொரோனா தொற்று 20 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. இதன்படி, நேற்றைய ஒரு நாள் கொரோனா தொற்று 19,280 ஆக பதிவாகியுள்ளது. கடந்த 28ம் தேதி 26,533 ஆக இருந்தது. ஒரு நாளில் 25,056 பேர் குணமடைந்துள்ளனர். ஒரு நாள் நாள் இறப்பு 20 ஆக பதிவாகியுள்ளது. தற்போதுவரை மொத்தம் 33, 45,280 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 37, 564 பேர் உயிரிழந்துள்ளனர்.

  5. இந்திய பங்கு சந்தை புள்ளிகள் உயர்வு

    இந்திய நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    இந்நிலையில், இந்திய பங்கு சந்தையின் புள்ளிகள் உயர்ந்துள்ளன. இதன்படி, சென்செக்ஸ் 582.85 புள்ளிகள் உயர்ந்து, தற்போது 58,597.02 ஆக உள்ளது. நிஃப்டி 156.20 புள்ளிகள் உயர்ந்து 17,496.05 ஆக உள்ளது.

  6. இந்திய நாடாளுமன்றத்தில் இன்று பட்ஜெட்: நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்

    இந்திய நாடாளுமன்றத்தில் இன்று மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. முன்னதாக குடியரசுத் தலைவரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்தார்.

    இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கிய கூட்டத் தொடரில் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் செய்யும் நிகழ்வு இன்று நடைபெறுகிறது. காலை 11 மணியளவில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

    வருமான வரி உச்ச வரம்பு, புதிய சலுகைகள், அறிவிப்புகள், திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டும் காகிதமில்லா டிஜிட்டல் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நிதியமைச்சர் சந்தித்தார்.

    பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக 2021-22 நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

  7. பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம் - தொடர்ந்து இணைந்திருங்கள்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் ஜோ மகேஸ்வரன்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்