மின்னல் வேகத்தில் தாலிபன்: வெளியேறும் திட்டத்தில் மாற்றமில்லை என்கிறது அமெரிக்கா

பட மூலாதாரம், Getty Images
10 நாள்களில் ஆப்கானிஸ்தான் நாட்டின் பெரும்பகுதியை பிடித்துவிட்டு இப்போது தலைநகர் காபூலை கைப்பற்றும் முனைப்பில் உள்ளது தாலிபன் அமைப்பு. ஆனாலும், செப்டம்பர் மாத மத்தியில் ஆப்கானிஸ்தானில் இருந்து முழுமையாக படையினரைத் திரும்பப் பெறும் முந்தைய திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறியதாக தெரிவித்துள்ளது ராய்டர்ஸ் செய்தி முகமை.
தங்கள் தூதரக ஊழியர்களை வெளியேற்றும் திட்டத்தில் தாலிபன்கள் தலையிட்டால் மட்டுமே அமெரிக்கப் படையினர் எதிர்வினையாற்றுவார்கள் என்றும் பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி கூறியுள்ளார்.
அமெரிக்கர்கள் தாலிபன்களால் இடர்ப்பாட்டுக்கு உள்ளானால் விரைவான, தீவிரமான அமெரிக்க ராணுவ நடவடிக்கை இருக்கும் என்று அமெரிக்கா முன்னதாக எச்சரித்திருந்தது.
அமெரிக்க அதிகாரியின் இந்தக் கூற்று, சமீபத்தில் அதிபர் ஜோ பைடன் வெளியிட்ட கருத்துக்கு ஏற்பவே அமைந்துள்ளது. அமெரிக்காவின் பெருமளவு படையினர் வெளியேறிவிட்ட நிலையில், தாலிபன்கள் வெகு விரைவாக ஆப்கானிஸ்தான் நாட்டின் பிராந்தியங்களை கைப்பற்றிய நிலையில் இது பற்றிப் பேசிய பைடன், அமெரிக்கத் துருப்புகளை முழுமையாகத் திரும்பப் பெறும் தனது முடிவை நினைத்து தான் வருந்தவில்லை என்று கூறியிருந்தார்.
ஆப்கானிஸ்தான் படைகளுக்கு செய்வதாக கூறிய உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து செய்து வந்தது என்றும், ஆனால், அவர்கள்தான் போராடவேண்டும் என்றும் அவர் கூறினார்.






