பிரதமர் மோதி தலைமையிலான அமைச்சரவை புதன்கிழமை விரிவுபடுத்தப்பட்ட வேளையில், பழைய அமைச்சரவையில் இருந்து சதானந்த கெளடா, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் உள்பட 12 பேர் நீக்கப்பட்டிருக்கிறார்கள்.
இது தொடர்பாக அந்த 12 பேரின் ராஜிநாமாவை ஏற்கும்படி பிரதமர் மோதி இன்று மாலை பரிந்துரை செய்ததையடுத்து அவர்களின் கடிதங்களை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று அவரது மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் பட்டியலில் டி.வி. சதானந்த கெளடா, ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜாவடேகர் ஆகியோருடன் சேர்த்து தாவர்சந்த் கெலாட், ரமேஷ் பொக்ரியால், ஹர்ஷ் வர்தன், சந்தோஷ் குமார் காங்வார், பாபுல் சுப்ரியோ, தோத்ரே சஞ்சய் ஷாம்ராவ், ரத்தன் லால் கட்டாரியா, பிரதாப் சந்திர சாரங்கி, தேபஸ்ரீ செளத்ரி ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
இதில் தாவர்சந்த் கெலாட் ஏற்கெனவே மாநில ஆளுநர் பதவிக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார். அவரை கர்நாடகா மாநில ஆளுநராக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று முன்தினம் நியமித்தார்.
அடுத்த ஆண்டு கோவா, மணிப்பூர், பஞ்சாப், உத்தராகண்ட், பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிளங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி தற்போது மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகியவர்களுக்கு பாஜக மேலிடம் தேர்தல் பணிகளை ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.