புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில், புதுச்சேரி பெரியார் நகரைச் சேர்ந்த 53 வயதாகும் குமார் என்பவர் குடும்பத்துடன் வாக்களிக்க வந்துள்ளார்.
வாக்களிக்கச் சென்ற போது குமார் என்பவரது வாக்கு மட்டும் முன்பே செலுத்திவிட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த குமார் வாக்குச்சாவடியிலிருந்த அதிகாரியிடம் புகார் எழுப்பினார். இதையடுத்து அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என்றும், தற்போது வாக்களிக்க ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் எனக்கு பதிலாக வேறு ஒருவர் செலுத்திய வாக்கை எதன் அடிப்படையில் நீக்குவீர்கள் என்று குமார் குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகள் மொத்தமாக வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், கண்காணிப்பு கேமரா மற்றும் வாக்குப் பதிவான நேரத்தின் அடிப்படையில், அதிகமாக பதிவான ஒரு வாக்கை நீக்குவதாகக் கூறியுள்ளனர்.
சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர், தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கோரிக்கையை ஏற்று, தேர்தல் நடத்தை விதி 49P பிரிவின் கீழ் வாக்குச்சீட்டு முறைப்படி குமார் வாக்களித்தார்.
ஒருவருடைய வாக்கை முறைகேடாக வேறு ஒருவர் செலுத்தி விட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 49P பிரிவின்படி, அந்த வாக்காளர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குசீட்டை பயன்படுத்தி வாக்களிக்க முடியும்.
வாக்கு எண்ணைக்கையின்போது வெற்றி பெற்ற வேட்பாளர் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர் ஆகியோர் பெற்ற வாக்குகளின் வேறுபாடு குறைவாக இருந்தால், இந்த வாக்குச்சீட்டு ஓட்டுகள் கணக்கில் கொள்ளப்படும்.
வேறுபாடு அதிகமாக இருந்தால், இந்த ஒரு ஓட்டால் முடிவுகள் மாறப்போவதில்லை என்ற அடிப்படையில் கணக்கில் கொள்ளப்படாது.