You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: 71.79 சதவீத வாக்குப்பதிவு - சென்னையில் குறைந்த பட்ச வாக்குப்பதிவு

தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களிலும் புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்திலும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடக்கிறது. மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. கேரளா, அசாம், மேற்கு வங்கத்தில் தமிழ்நாட்டை விட அதிக வாக்குப்பதிவு

    தமிழ்நாட்டுடன் சேர்ந்து வாக்குப்பதிவை சந்திக்கும் பிற மாநிலங்களில் வாக்குப்பதிவு விகிதம் அதிகமான உள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    மதியம் 3 மணிவரை கேரளாவில் உள்ள 140 தொகுதிகளிலும் 58.48% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இத்திய தேர்தல் ஆணையம் கூறுகிறது.

    மூன்றாம் கட்ட வாக்குப்பதிவை எதிர்கொள்ளும் அசாமின் 40 தொகுதிகளில் 68.31% மற்றும் மேற்கு வங்கத்தின் 31 தொகுதிகளில் 68.24% வாக்குப்பதிவும் நடந்துள்ளது.

    புதுச்சேரியில் மதியம் 3 மணி வரை 65.11 % வாக்குப்பதிவு நடந்துள்ளது.

    தமிழ்நாட்டில் 3 மணிவரை 53.35% வாக்குகள் பதிவாகியுள்ளன.

  2. திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் வீட்டில் வாக்குப்பதிவு இயந்திரம்

    மேற்கு வங்கத்தின் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் வீட்டில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக ஏ என் ஐ செய்தி முகமையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  3. உதயநிதி ஸ்டாலின் மீது அதிமுக புகார்

    திமுகவின் சின்னமான உதயசூரியன் படம் பொறித்த சட்டையை வாக்குச்சாவடிக்கு வந்தபோது உதயநிதி ஸ்டாலின் அணிந்திருந்தது தேர்தல் நடத்தை விதி மீறல் என்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுக புகார் அளித்துள்ளது.

    இது குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் விசாரிப்பார் என்று மாநில தலைமை தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

  4. புதுச்சேரி - 32,000 புதிய வாக்காளர்கள்

    புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சுமார் 32,000 பேர் முதல் முறையாக இந்தத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கிறது.

  5. 'வாகனம் தாக்கப்பட்டது' - ஓ.பி. ரவீந்திரநாத் குற்றச்சாட்டு

    துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் தமது வாகனம் தாக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

    அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் போட்டியிடும் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெருமாள்கவுன்டன்பட்டிக்கு சென்ற போது அவரது வாகனம் மற்றும் உடன் வந்த வாகனத்தின் மீது சிலர் கல் வீசி தாக்கினர் என்று அவர் கூறியுள்ளார்.

  6. மதியம் 3 மணி வரை

    தமிழ்நாட்டில் மதியம் 3 மணி வரை 53.35% வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு கூறியுள்ளார்.

    குறைந்தபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 41.58 % மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 44.72 % வாக்குகள் பதிவாகியுள்ளன.

    நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 59.73% வாக்குகள் பதிவாகியுள்ளன.

    சென்னை மாவட்டத்தில் 46.46% வாக்குகள் பதிவாகியுள்ளது.

    புதுச்சேரியில் மதியம் 3 மணி வரை 65.11 % வாக்குப்பதிவு நடந்துள்ளது.

  7. விருதுநகரில் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு

    விருதுநகரில் 139ஆம் எண் வாக்குச்சாவடியில், ஒரு வாக்காளர் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்தால் தாமரைக்கு பதிவானதுபோல ஒப்புகைச் சீட்டு காட்டுவதாகக் கூறியதால் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.

    பின்னர் வாக்குச்சாவடி முகவர்கள் முன்பு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, தவறு எதுவும் நடக்கவில்லை என்று உறுதி செய்தபின் 1:15 மணிக்கு மீண்டும் வாக்குப்பதிவு தொடங்கியது.

    சோதனை முறையில் கட்சி முகவர்கள் முன்னிலையில் குணசேகரன் வாக்கு செலுத்த ஏற்பாடு செய்தனர். வாக்கு சரியாக பதிவானதை அடுத்து, அவரிடம் ஒரு ஒப்புதல் கடிதம் பெற்றுக்கொண்டு அவரை அனுப்பி வைத்தனர்.

    மாவட்ட ஆட்சியர் ரா.கண்ணன், மின்னனு வாக்கு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாகவும், சிறிது நேரத்தில் சரி செய்யப்பட்டதாகவும் பிபிசி தமிழிடம் கூறினார்.

  8. கலிங்கப்பட்டியில் வாக்களித்த வைகோ

    மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தமது சொந்த ஊரான கலிங்கப்பட்டியில் வாக்களித்தார்.

  9. தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தேர்தல்

    இந்தியா விடுதலை அடைந்த பிறகு தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் நடந்த முதல் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இருந்தபோதும் காங்கிரஸ் ஆட்சியை அமைத்தது எப்படி?

  10. ஏற்கனவே போடப்பட்ட ஓட்டு; 49P பயன்படுத்திய வாக்காளர்

    புதுச்சேரி நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அரசு உயர்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில், புதுச்சேரி பெரியார் நகரைச் சேர்ந்த 53 வயதாகும் குமார் என்பவர் குடும்பத்துடன் வாக்களிக்க வந்துள்ளார். வாக்களிக்கச் சென்ற போது குமார் என்பவரது வாக்கு மட்டும் முன்பே செலுத்திவிட்டதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த குமார் வாக்குச்சாவடியிலிருந்த அதிகாரியிடம் புகார் எழுப்பினார். இதையடுத்து அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை செய்யப்படும் என்றும், தற்போது வாக்களிக்க ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் கூறியுள்ளனர். ஆனால் எனக்கு பதிலாக வேறு ஒருவர் செலுத்திய வாக்கை எதன் அடிப்படையில் நீக்குவீர்கள் என்று குமார் குடும்பத்தினர் கேள்வி எழுப்பினர்.

    இதற்கு பதிலளித்த வாக்குச்சாவடியில் உள்ள அதிகாரிகள் மொத்தமாக வாக்குப்பதிவு நிறைவடைந்தவுடன், கண்காணிப்பு கேமரா மற்றும் வாக்குப் பதிவான நேரத்தின் அடிப்படையில், அதிகமாக பதிவான ஒரு வாக்கை நீக்குவதாகக் கூறியுள்ளனர்.

    சுமார் 2 மணி நேரத்திற்கு பின்னர், தேர்தல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற கோரிக்கையை ஏற்று, தேர்தல் நடத்தை விதி 49P பிரிவின் கீழ் வாக்குச்சீட்டு முறைப்படி குமார் வாக்களித்தார்.

    49P என்றால் என்ன?

    ஒருவருடைய வாக்கை முறைகேடாக வேறு ஒருவர் செலுத்தி விட்டால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 49P பிரிவின்படி, அந்த வாக்காளர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு பதிலாக வாக்குசீட்டை பயன்படுத்தி வாக்களிக்க முடியும்.

    வாக்கு எண்ணைக்கையின்போது வெற்றி பெற்ற வேட்பாளர் மற்றும் இரண்டாம் இடம் பிடித்தவர் ஆகியோர் பெற்ற வாக்குகளின் வேறுபாடு குறைவாக இருந்தால், இந்த வாக்குச்சீட்டு ஓட்டுகள் கணக்கில் கொள்ளப்படும். வேறுபாடு அதிகமாக இருந்தால், இந்த ஒரு ஓட்டால் முடிவுகள் மாறப்போவதில்லை என்ற அடிப்படையில் கணக்கில் கொள்ளப்படாது.

  11. சைக்கிளில் வந்த விஜய்; மொபைலை பிடுங்கிய அஜித்

    நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் தங்களது முகக்கவசம் மற்றும் சைக்கிளில் உள்ள நிறத்தை குறியீடாக பயன்படுத்தி இந்த தேர்தலில் தங்களது நிலைப்பாட்டை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

    ஆனால், வாக்குச்சாவடிக்கு செல்லும் வழி குறுகியதாக இருந்ததாலும், கார் நிறுத்த இடம் இல்லாததாலும் தான் அவர் சைக்கிளில் வந்ததாக விஜய் தரப்பு கூறுகிறது.

  12. மதியம் 1 மணி நிலவரம்

    மதியம் 1 மணிவரை தமிழ்நாட்டில் 39.61% வாக்குகள் பதிவாகி உள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

  13. 'திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களித்தால் பாஜகவுக்கு பதிவாகிறது'

    மேற்கு வங்கத்தில் 31 தொகுதிகளுக்கான மூன்றாவது கட்ட வாக்குப் பதிவு நடந்து கொண்டிருக்கிறது.

    அரம்பாக் சட்டமன்றத் தொகுதியில் 45-வது வார்டில் திரிணாமுல் காங்கிரஸுக்கு வாக்களித்தாலும், வாக்குகள் பாஜகவுக்குச் செல்கின்றன என அத்தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிடும் சுஜாதா மொண்டல் குற்றம்சாட்டியுள்ளார்.

    அதோடு மத்திய பாதுகாப்புப் படையினரும் நடுநிலையோடு செயல்படவில்லை எனவும் கூறியுள்ளார்.

  14. 'அதிமுகவினர் கொலை மிரட்டல்' - கார்த்திகேய சிவசேனாபதி புகார்

    அதிமுகவினர் கொலை மிரட்டல் விடுப்பதாக தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி புகார் அளித்துள்ளார்.

    இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், இன்று காலை 7 மணி முதல் வாக்குச் சாவடிகளை ஆய்வு செய்து வந்த நிலையில் செல்வபுரம் பகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் பார்வையிட்டு திரும்பியபோது அதிமுகவினர், அடையாளம் தெரிந்த பெயர் தெரியாத நபர்கள் மற்றும் பாஜகவினர் மிரட்டல் விடுத்து தாக்குதல் நடத்தியதாகவும், காவல் துறையினரின் லத்தியை பிடிங்கி தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார்.

    காவலர்கள் அமைச்சருக்கு ஆதரவாக செயல்படுவதாக குற்றம் சாட்டியவர் ஆய்வாளர், உதவு ஆய்வாளர் சம்பவத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருந்ததாகவும் காவல் துணை ஆணையர் ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு வந்து தான் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் கூறினார்.

    கோவை தெற்கு தொகுதியில் பாஜகவினர் பணம் வினியோகம் செய்வதாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்துள்ளார்.

  15. விஜய் சைக்கிளில் வந்தது ஏன்? - பிபிசிக்கு விஜய் தரப்பில் விளக்கம்

    நடிகர் விஜய் வாக்களிக்க வேண்டிய வாக்குச்சாவடிக்கு செல்லும் வழி குறுகியதாக இருந்ததாலும், கார் நிறுத்த இடம் இல்லாததாலும் தான் அவர் சைக்கிளில் வந்ததாக அவரது மக்கள் தொடர்பு அலுவலர் ரியாஸ் பிபிசி தமிழ் செய்தியாளர் எம். மணிகண்டனிடம் தெரிவித்தார்.

    பெட்ரோல், டீசல் விலை உயர்வை மறைமுகமாக சுட்டிக்காட்ட அவர் சைக்கிளில் வந்தார் என்று சமூக ஊடகங்களில் தகவல் பரவிய சூழலில் இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

  16. 'கேரளாவில் வழக்கத்தை விட அதிக வாக்குப்பதிவு' - சசி தரூர்

    கேரளத்தைப் பொறுத்தவரை வாக்குப் பதிவு காலை 10 மணிக்கே 20 சதவீகமாகப் பதிவாகியுள்ளது.

    இது வழக்கத்தை விட அதிகம் எனவும், பொதுவாக அப்படி இருந்தால் அது காங்கிரஸின் யூடிஎஃப் கூட்டணிக்கு சாதகமாக அமையும் எனவும் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் சசி தரூர் கூறியுள்ளார்.

  17. 105 வயதாகியும் வாக்களிக்க தவறாத முதியவர்

    கோவை மாவட்டம், கருப்பராயன்பாளையத்தைச் சேர்ந்த 105 வயதாகும் மாரப்பன் தள்ளாத வயதிலும் சட்டமன்ற தேர்தலில் அவரது வாக்கினை இன்று செலுத்தினார். தமிழ்நாட்டின் முதல் சட்டமன்றத் தேர்தல் முதல் தற்போது வரை தவறாது தேர்தல்களில் வாக்களித்து வருவதாக இவர் தெரிவிக்கிறார்.

    மேலும், காமராஜர் மற்றும் காந்தியடிகள் ஆகியோரின் அரசியல் பங்களிப்புகளையும் தான் பார்த்துள்ளதாகவும், மக்களுக்கு நல்லது செய்யும் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்ய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என 105 வயதாகும் மாரப்பன் வலியுறுத்துகிறார்.

    இவருக்கு 1 மகன், 3 மகள்கள், 4 பேரன்கள் மற்றும் 4 பேத்திகள் உள்ளனர். தள்ளாத வயதிலும் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளோடு இன்று அவர் தனது ஜனநாயகக்கடமையை ஆற்றினார்.

  18. சமைத்து சாப்பிட்டு தேர்தல் புறக்கணிப்பு

    தூத்துக்குடி 3வது வார்டு ராஜிவ்நகர் பகுதியில் 13 வருடங்களாக 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் வசிக்கும் குடிருப்புகளுக்கு பட்டா வழங்க தமிழக முதல்வர், ஆளுநர் மாவட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் உள்ளனர். ஆனால் பல முறை முயற்சி செய்தும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை மட்டும் நடத்தி வந்தனர்.

    ஆனால் இன்று வரை இந்த பகுதிக்கு பட்டா அரசு வழங்கவில்லை. இதை கண்டித்து1340 வாக்களர்கள் கொண்ட ராஜிவ்நகர் பகுதி மக்கள் அங்கு உள்ள குடிருப்பு நல சங்கத்தில் மக்கள் ஒன்று சேர்ந்து தேர்தலை புறக்கணித்து மதிய உணவை சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.

  19. 6:40 மணிக்கே வந்த அஜித்

    வேளச்சேரி தொகுதிக்குள்பட்ட திருவான்மியூர் குப்பம் கடற்கரைச் சாலையில் உள்ள வாக்குச் சாவடிக்கு காலை 6:40 மணிக்கே தனது மனைவியுடன் வந்துவிட்டார் அஜித். வாக்குப் பதிவு 7 மணிக்குத்தான் தொடங்கும் என்பதால் வாக்குச் சாவடியின் கதவு பூட்டப்பட்டிருந்தது.

    அந்த நேரத்தில் அஜித் வரப்போகிறார் என்ற அறிந்திருந்த ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடியிருந்தனர். அவரைப் பார்ப்பதற்காகவும் செல்பி எடுப்பதற்காகவும் ரசிகர்கள் முயற்சித்ததால், சலசலப்பு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபத்துக்குள்ளான அஜித், ரசிகர் ஒருவரின் திறன்பேசியை பிடுங்கினார். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் விவாதமானது.

  20. தமிழ்நாட்டில் காலை 11 மணி நிலவரம்

    தமிழ்நாட்டில் காலை 11 மணி நிலவரப்படி 234 தொகுதிகளிலும் ஒட்டுமொத்தமாக 26.29 % வாக்குகள் பதிவாகியுள்ளது என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

    காலை 11 மணி வரை அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 28.33 % வாக்குகளும், குறைந்தபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 20.98% வாக்குகளும் பதிவாகியுள்ளன.