You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

அயோத்தி: 'சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கு சொந்தம்; முஸ்லிம்களுக்கு மாற்று இடம்'

மசூதி கட்டவேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம் தர வேண்டும். சர்ச்சைக்குரிய புனிதத் தலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. 'சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம்'

    சர்ச்சைக்குரிய நிலம் இந்துக்களுக்கே சொந்தம் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    சர்ச்சைக்குரிய புனிதத் தலம் இந்துக்கள் கோயில் கட்டுவதற்காகத் தரப்படவேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

    ராம் லல்லாவுக்கு (குழந்தை வடிவ ராமர்) இந்த சர்ச்சைக்குரிய இடம் இனி உரித்தானதாகும்

    மசூதியின் உள் முற்றத்தில்தான் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்பி வந்துள்ளனர். ஆனால், உள் முற்றத்தில் முஸ்லிம்கள் தொழுகையை நிறுத்தியதாக எந்த ஆதாரமும் இல்லை உச்ச நீதிமன்றம்.

  2. 'வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலம்'

    சுன்னி வஃக்பு வாரியத்துக்கு வேறு இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு அல்லது மாநில அரசு அளிக்க வேண்டும்.

  3. 'பாபர் மசுதி இடிக்கப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது'

    1992ஆம் ஆண்டு பாபர் மசுதி இடிக்கப்பட்டது சட்டத்துக்கு புறம்பானது. தொழுகை நிறுத்தப்பட்டதால் மட்டும் மசூதி கைவிடப்பட்டதாகவோ அல்லது அவர்கள் பாத்தியதை இழந்ததாகவோ கருத முடியாது.

  4. நிர்மோஹி அகாரா மனு நிராகரிப்பு

    இந்து தரப்பில் ராம் லல்லா மற்றும் நிர்மோஹி அகாராவால் பிரதிநித்துவப் படுத்தப்பட்டது. நிர்மோஹி அகாராவின் மூன்றாவது மனு நிராகரிக்கப்படுகிறது.

  5. 'தொழுகை நடத்தியதற்கான ஆவணத்தை அளிக்கவில்லை'

    தொழுகை நிறுத்தப்பட்டதால் மட்டும் மசூதி கைவிடப்பட்டதாகவோ அல்லது அவர்கள் பாத்தியதை இழந்ததாகவோ கருத முடியாது. உள்முற்றம் யாரது கட்டுப்பாட்டில் இருந்தது என்பது மிகவும் முக்கியம்.

    முஸ்லிம்கள் மசூதியை கைவிடவில்லை. இருப்பினும் இந்துக்கள் ராம் சபுத்ராவில் தொடர்ந்து வழிபட்டு வந்தார்கள்.

    ஆனால், கருவறைக்குள் அவர்கள் உரிமை கோருகிறார்கள்.

    1528 -1856 இடையேயான காலக்கட்டத்தில் இஸ்லாமியர்கள் அங்கு தொழுகை நடத்தியதற்காக எந்த ஆவணத்தையும் சுன்னி வக்ஃப் வாரியம் அளிக்கவில்லை.

  6. தலைமை நீதிபதி மேலும் கூறுவது என்ன?

    நம்பிக்கையின் அடிப்படையில் இடத்தின் உரிமையாளர் யார் என்பதை அணுக முடியாது. சட்டத்தின் அடிப்படையிலேயே அணுக முடியும்.

    பயணிகளின் ஆவணங்களை உள்ளாய்வு செய்ய வேண்டும். பயணிகள் பார்த்ததை, அவதானித்ததை எச்சரிக்கையுடன்தான் அணுகி ஒரு முடிவுக்கு வர முடியும்.

    வரலாற்று தகவல்கள் அயோத்தி ராமர் பிறந்த இடமென குறிக்கின்றன.இஸ்லாமியர்கள் அதை பாபர் மசூதி என்கின்றனர்.

  7. 'குறைத்து மதிப்பிட முடியாது'

    இந்திய தொல்லியல் துறையின் நிபுணத்துவத்தை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. மசூதி இருந்த இடத்துக்கு கீழே இருந்த இடம் இடிக்கப்பட்டதாக இந்திய தொல்லியல் துறை தெரிவித்துள்ளது என்கிறார் கோகோய்.

  8. 'பாபர் மசூதி காலியாக இருந்த இடத்தில் கட்டப்படவில்லை'

    பாபர் மசூதியை கட்டியது மீர் பாகி. இறையியல் தொடர்பான விஷயங்களில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை. வழிபடும் மக்களின் நம்பிக்கையை நீதிமன்றம் கருத்தில் எடுத்துக் கொண்டாக வேண்டும் என்றும் தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

    பாபர் மசூதி காலியாக இருந்த இடத்தில் கட்டப்படவில்லை. அங்கு ஏற்கனவே ஒரு கட்டுமானம் இருந்தது.

    ஆனால், அது இஸ்லாமிய கட்டுமானம் அல்ல என்று தலைமை நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார். பாபர் மசூதி கட்டப்பட்ட இடத்தில் ஏற்கனவே ஒரு கட்டடம் இருந்ததை தொல்லியல் துறை அறிக்கை உறுதிசெய்துள்ளது; அதைப் புறந்தள்ள முடியாது என்று கோகோய் கூறினார்.

  9. அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனை

    அயோத்தி வழக்கின் தீர்ப்பு வெளியாகும் நிலையில், உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடக்க இருக்கிறது.

    தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்ளிட்ட மூத்த பாதுகாப்பு அதிகாரிகள் இதில் கலந்து கொள்கிறார்கள்.

  10. சற்று நேரத்தில் தீர்ப்பு

    உச்சநீதிமன்ற அவைக்கு அரசியல் சாசண அமர்வில் உள்ள ஐந்து நீதிபதிகளும் வந்துள்ளனர்.

    தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கியுள்ளார். இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு விவரம் தெரியவரும்.

    இது ஏகமனதாக தீர்ப்பு என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

    தீர்ப்பை வாசிக்க 30 நிமிடங்கள் ஆகும் என்று கூறினார் கோகோய்.

  11. சி.ஆர்.பி.எஃப் பாதுகாப்பு

    அயோத்தி நிலத்தகராறு வழக்கில் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தற்போது மத்திய ரிசர்வ் காவல் படையின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

    சி.ஆர்.பி.எஃப்-இன் 63வது படாலியான் அங்கு காவலில் ஈடுபட்டுள்ளது. பிரச்சனைக்குரிய இடம் உள்ள பகுதியை தங்கள் படையினர் பாதுகாப்பார்கள் என்றும் அயோத்தி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளை உத்தரப்பிரதேச மாநில காவல்துறை பாதுகாக்கும் என்றும் பிபிசியிடம் தெரிவித்தார் 63வது படாலியான் கமாண்டன்ட் விசேன்.

  12. தமிழகத்தில் நிலைமை என்ன?

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா,வெடி குண்டு நிபுணர்கள்,மோப்ப நாய் உள்ளிட்டவைகளை கொண்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

  13. தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும்: தமிழக முதலமைச்சர்

    அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் மதிக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    முதலமைச்சர் வெளியிட்டுள்ள செய்தியில், 'அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் தீர்ப்பை அனைத்து தரப்பும் மதிக்க வேண்டும். எவ்வித சட்டம், ஒழுங்கு பிரச்சனைக்கும் தமிழக மக்கள் இடம் கொடுக்கக் கூடாது. சாதி, மத பூசல் இன்றி தமிழ்நாட்டை அமைதி பூங்காவாக தமிழ்நாடு அரசு பராமரித்து வருகிறது.

    சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு இடம் தராமல் தமிழகத்தை தொடர்ந்து அமைதி பூங்காவாக திகழ செய்யுங்கள். இந்தியாவிற்கே நம் மாநிலம் முன்னுதாரணமாக இருப்பதற்கு அனைத்து மதத் தலைவர்கள், அனைத்து கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்று முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  14. 144 தடை உத்தரவு

    அயோத்தியில் ராமஜென்ம பூமி என்று இந்துக்கள் அழைக்கும் இடமான, பாபர் மசூதி இருந்த இடம் யாருக்குச் சொந்தம் என்று இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ள நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது.

    டெல்லியில் உச்ச நீதிமன்ற வளாகத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் 144 தடை உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளதுடன் அங்கு காவலும் பலப்படுத்தப்பட்டுள்ளது..

  15. தீர்ப்பை எழுதப்போகும் 5 நீதிபதிகள் யார்?

    அரசியல் ரீதியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ராம ஜென்மபூமி - பாபர் மசூதி நிலத்தகராறு வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுமார் 40 நாட்களாக தொடர்ந்து விசாரித்து வந்த நிலையில், அக்டோபர் 16ம் தேதி இந்த வழக்கின் இறுதி விசாரணை முடிந்தது தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

    உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான இந்த அமர்வில், அடுத்த தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ள எஸ்.ஏ.பாப்டே, நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி அசோக் பூஷண், நீதிபதி அப்துல் நசீர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

  16. மேல்முறையீடு மீது இன்று தீர்ப்பு

    பாபர் மசூதி 1992 டிசம்பர் 6 ஆம் தேதி இடிக்கப்பட்டது. அதன்பிறகு நிலத்துக்கு உரிமை கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் இந்து மற்றும் இஸ்லாமிய தரப்பினரால் வழக்கு தொடரப்பட்டது.

    அந்த வழக்கில் 2010 செப்டம்பர் 30ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அளித்த தீர்ப்பின்படி, அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, மூன்றில் ஒரு பகுதி ராம் லல்லாவுக்கும் (குழந்தை வடிவில் ராமர் கடவுள்), இன்னொரு மூன்றில் ஒரு பகுதி நிலம் சன்னி வக்ஃபு வாரியத்துக்கும், மீதி மூன்றில் ஒரு பகுதி நிலம் நிர்மோஹி அகாரா எனும் துறவிகள் குழுவின் அமைப்புக்கும் வழங்கப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

    இதை எதிர்த்து மூன்று தரப்பும் செய்த் மேல்முறையீடு மீதுதான் இன்று தீர்ப்பு வெளியாகிறது.