நாட்டின் பிரதமராக
நரேந்திர மோதி இன்று மாலை பதவியேற்க உள்ள நிலையில், பாஜக தலைவர் அமித் ஷாவுடன் இறுதிகட்ட பேச்சுவார்த்தைகளை அவர் நடத்தி
வருகிறார். அமைச்சரவை அமைப்பது குறித்து அவர்கள் பேசி வருகின்றனர்.
கேபினட்
அமைச்சர்கள் விரைவில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு செல்வார்கள் என்று தெரிகிறது. நடந்து
முடிந்த மக்களவை தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில், நரேந்திர மோதி இரண்டாவது முறையாக மாலை ஏழு மணிக்கு பதவி ஏற்கவுள்ளார். அப்போது
அமைச்சர்களும் பதவியேற்றுக் கொள்வார்கள்.
புதிய அமைச்சரவை
அமைப்பக்கப்பட உள்ள நிலையில், கடந்த இரண்டு நாட்களாக
மோதி மற்றும் அமித் ஷா பல கட்ட பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
புதிய அமைச்சரவையில் பெரும்பாலும் கூட்டணி கட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்றும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ள புதிய பலத்தை இது
பிரதிபலிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம்,
அதிமுக, லோக் ஜனசக்தி கட்சி, அகாலி தளம்,
அப்னா தளம் உள்ளிட்ட பாஜகவின் கூட்டணி கட்சிகள் இதில் இடம்
பெற உள்ளனர்.
பாஜகவுடன்
கைக்கோர்த்த ஒவ்வொரு கூட்டணி கட்சிக்கும் ஒரு அமைச்சரவை பதவி வழங்கப்படும் என்று
தெரிகிறது.
மும்பையில்
காங்கிரஸின் மிலிந்த் தியோராவை வீழ்த்தி வெற்றி பெற்ற சிவசேனாவின் அரவிந்த
சாவந்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுகிறதாக அக்கட்சி உறுதிபடுத்தியுள்ளது.
அதே போல லோக்
ஜனசக்தி கட்சியின் ராம் விலாஸ் பஸ்வானும் அமைச்சரவையில் இடம் பெற அக்கட்சி
பரிந்துரைத்துள்ளது.
நிதி அமைச்சராக
இருந்த அருண் ஜேட்லி உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால், அவரது இடத்திற்கு கடும் போட்டி நிலவுகிறது. தேர்தலுக்கு முன்பு பட்ஜெட்
தாக்கல் செய்து ஜேட்லிக்கு பதிலாக அந்த பொறுப்பை வகித்த சுரேஷ் பிரபு, இதற்கு முக்கிய
போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.
காந்திநகர்
மக்களவை தொகுதியில் வெற்றி பெற்று, பாஜகவின் இமாலய
வெற்றிக்கு காரணமாக கூறப்படும் அமித் ஷாவுக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்படலாம்
என்று பேச்சுவார்த்தை நிலவுகிறது.
அப்படி அமித்ஷாவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என்றால், நிதித்துறை,
உள்துறை, பாதுகாப்பு அல்லது
வெளியுறவுத்துறை என்ற நான்கு முக்கிய துறைகளில் ஒன்று அவருக்கு வழங்கப்படலாம்
என்று தெரிகிறது.
கடந்த
அமைச்சரவையில் இடம்பெற்ற அக்கட்சியின் மூத்த தலைவர்களான ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி,
நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் டோமர், பிரகாஷ் ஜவதேகர்,
ரவி சங்கர் பிரசாத், தர்மேந்திர பிரதான்
மற்றும் ஸ்மிரிதி இரானி ஆகியோர் இதில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸின்
கோட்டையாக கருதப்பட்ட அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை ஸ்மிரிதி
இரானி தோற்கடித்தார்.
இன்று மாலை குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற உள்ள இந்த பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில், வங்காள வரிகுடா பிராந்தியத்தில் அமைந்துள்ள நாட்டுத் தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி, பல்வேறு மாநில முதலமைச்சர்கள், சினிமா நட்சத்திரங்கள்
உள்ளிட்ட சுமார்
8000 விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
நரேந்திர மோதி
மற்றும் அமைச்சர்களுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணம் செய்து
வைப்பார்.