கள்ளக்குறிச்சி
தனியார் பள்ளி மாணவி மரண வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்துள்ளார். மேலும் சிபிசிஐடி பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையைக் கொண்டு
ஜாமீன் மனு தாக்கல் செய்யவும் ஜாமீன்
மனு தொடர்பாக சிபிசிஐடி விளக்கம் அளிக்குமாறும் விழுப்புரம் மகளிர் நீதிமன்ற நீதிபதி சாந்தி உத்தரவிட்டு
வழக்கை ஆகஸ்ட் 1ஆம் தேதிக்குத்
தள்ளி வைத்தார்.
கள்ளக்குறிச்சி
மாவட்டம் சின்னசேலம் கணியாமூர் தனியார் பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணித்தது
தொடர்பாக பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர்
சாந்தி,
பள்ளி முதல்வர்
சிவசங்கரன், வேதியியல்
ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை
கீர்த்திகா ஆகியோர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் 15 நாள்கள் நீதிமன்ற காவலில்
அடைக்கப்பட்டனர். இதனிடையே இவ்வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, மாணவி
மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில்
கைது செய்யப்பட்ட 5 பேரையும் சிபிசிஐடி போலீசார் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய விழுப்புரம்
நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு மீதான விசாரணை நீதிபதி புஷ்பராணி
முன்னிலையில் கடந்த 27ஆம் தேதியன்று
விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சேலம் மத்திய சிறையிலிருந்த ஐந்து பேரும்
விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அன்றைய தினம் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்ட 5 பேரை காவலில் விசாரணை செய்ய அனுமதி அளித்திருந்தது. அதேவேளையில் கைது செய்யப்பட்டவர்களை ஜாமீனில் விடுவிக்க வேண்டுமென பள்ளி நிர்வாகம் தரப்பில் முன் வைத்த ஜாமீன் மனுவை நீதிபதி நிராகரித்தார்.
இந்நிலையில் அந்த மனுவின் மீதான விசாரணை இன்று விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, “சின்னசேலம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் நகலைக் கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அந்த மனுவை ஏற்க முடியாது,” என்று கூறிய நீதிபதி சாந்தி,வழக்கு சிபிசிஐடி வசம் சென்றுவிட்டதால் சிபிசிஐடி பதிவு செய்யும் முதல் தகவல் அறிக்கையைக் கொண்டு ஜாமீன் மனு தாக்கல் செய்யுமாறு பள்ளி தரப்பு வழக்கறிஞருக்கு அறிவுறுத்தினார்.
மேலும் வருகின்ற ஆகஸ்ட் 1ஆம் தேதி ஜாமீன் மனு மீதான விசாரணை எடுத்துக் கொள்ளப்படும் எனவும் ஜாமீன் மனு தொடர்பாக சிபிசிஐடி விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டார்.
பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், செயலாளர் சாந்தி, வேதியியல் ஆசிரியை ஹரிப்பிரியா, கணித ஆசிரியை கீர்த்திகா ஆகிய 4 பேருக்கு ராமச்சந்திரன் என்ற வழக்கறிஞர், பள்ளி முதல்வர் சிவசங்கரனுக்கு மட்டும் சீனிவாசன் என்ற வழக்கறிஞர் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.