You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

"மின் கட்டண உயர்வு: தமிழகம் முழுவதும் அதிமுக ஆர்ப்பாட்டம்"- இ.பி.எஸ்

தமிழகத்தில் மின் கட்டணத்தில் மாற்றத்தை செய்துள்ளதாக தமிழ்நாடு மின் வாரிய அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அறிவித்த நிலையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் வரும் 25ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

பிரசாந்த் முத்துராமன்

  1. சர்ச்சை கருத்து விவகாரம்: நூபுர் ஷர்மாவை ஆகஸ்ட் 10வரை கைது செய்ய வேண்டாம் - உச்ச நீதிமன்றம்

    நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்ட விவகாரத்தில் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை ஒரே விவகாரமாகக் கருதி விசாரிக்க உத்தரவிடக் கோரி பாஜகவைச் சேர்ந்த முன்னாள் நிர்வாகி நூபுர் ஷர்மா தாக்க்ல செய்த மனு மீதான விசாரணையை வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.

    இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விசாரித்து முடிவெடுக்கும்வரை நூபுர் சர்மாவை கைது செய்வதை தவிர்க்குமாறும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜேபி பர்திவாலா அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.

    நூபுரின் மனு மீது நீதிபதிகள் இன்று விசாரணை நடத்தினர். அப்போது மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்த நீதிபதிகள், "முந்தைய உத்தரவை சிறிய அளவில் சரி செய்கிறோம். நீங்கள் ஒவ்வொரு நீதிமன்றமாக செல்வதை நாங்களும் விரும்பவில்லை” என்று தெரிவித்தனர்.

    மேலும், நூபுர் சர்மாவுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கைகளை ஒன்றாக இணைக்கக் கோரும் மனுவுக்கு மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநிலங்களும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    முன்னதாக, ஜூலை 1ஆம் தேதி நடந்த விசாரணையின்போது தனக்கு எதிராக தெரிவிக்கப்பட்ட பாதகமான கருத்துக்களை உத்தரவு பக்கத்தில் இருந்து நீக்கும்படியும் நூபுர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.

    நீதிமன்றம் அத்தகைய விமர்சனங்களுக்கு தெரிவித்த பிறகு தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும் நூபுர் தரப்பில் கூறப்பட்டது.

    என்ன சொன்னது நீதிமன்றம்?

    ஜூலை 1ஆம் தேதி விசாரணையின்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், முகமது நபி குறித்து தொலைக்காட்சியில் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்காக அவர் மீது பல எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது மனுவை ஏற்க முடியாது. மேலும், நூபுர் ஷர்மாவின் கருத்து துரதிருஷ்டவசமான சம்பவங்களுக்கு வழிவகுத்துள்ளது. நாடு முழுவதும் அது உணர்ச்சிகளை தூண்டியது என்று குறிப்பிட்டனர்.

  2. ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணி

    இலங்கையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து காலி முகத்திடல் நோக்கி பேரணி நடைபெற்று வருகிறது.

  3. கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்: மறு உடற்கூராய்வுக்கு தடையில்லை - உச்ச நீதிமன்றம்

    கள்ளக்குறிச்சியில் பள்ளி விடுதியில் மாணவி மர்மமான முறையில் இறந்த விவகாரத்தில் அவரது மறு உடற்கூராய்வுக்கு தடையில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக மாணவியின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்ய உத்தரவிட்டிருந்தது. ஆனால், மருத்துவர் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவர் ஒருவரையும் சேர்க்க வேண்டும் என்றும் அதுவரை மறு உடற்கூராய்வுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி மாணவியின் தந்தை உச்ச நீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்தார். மேலும் இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறும் அவரது சார்பில் இன்று நீதிமன்றத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

    இந்த மனுவை நாளை மறுநாள் விசாரணைக்கு எடுப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதேவேளை, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  4. இலங்கையில் இருந்து மேலும் ஏழு பேர் தனுஷ்கோடி வருகை - மண்டபம் முகாமில் தங்க வைக்க நடவடிக்கை

    இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடியால் மேலும் 7 இலங்கை தமிழர்கள் இன்று காலை தனுஷ்கோடி வந்தடைந்தனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக யாழ்பாணம் மாவட்டம் நாவர்குழியை சேர்ந்த மேரி அகஷ்டா (44) அவரது இரண்டு குழந்தைகள், திருகோணமலை மாவட்டம் அனந்தபுரியை சேர்ந்த மகேசன் (39), அவரது மனைவி தேவி (38), அவர்களது இரண்டு குழந்தை என மொத்தமாக 7 பேர் இலங்கையிலிருந்து படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அருகே உள்ள ஐந்தாம் மணல் திட்டு கரையில் இறங்கினர்.

    இது குறித்து தகவலறிந்த மண்டபம் கடலோர காவல் படையினர் அந்த பகுதிக்குச் சென்று ஃஹோவர் கிராஃப்ட் படகு மூலம் ஏழு பேரையும் மீட்டு அரிச்சல்முனை கரைக்கு கொண்டு வந்தனர். பிறகு ராமேஸ்வரம் மரைன் போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.

    விசாரணைக்கு பிறகு இந்தியாவில் அடைக்கலம் தேடி வந்த 7 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவர்களுடன் சேர்த்து தமிழ்நாட்டுக்கு சமீபத்திய மாதங்களில் வந்துள்ளவர்களின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது.

    இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அடைக்கலம் தேடி வருவோரை அகதியாக அங்கீகரிக்கும் விவகாரத்தில் இந்திய அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. இதையடுத்து சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்ததாக அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்காமல் மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு வரும் இலங்கையர்களை அகதிகள் முகாமில் தங்க வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

  5. இலங்கையில் பெட்ரோல், டீசல் கிடைக்காமல் சைக்கிளுக்கு மாறும் மக்கள்

  6. கள்ளக்குறிச்சி வன்முறை: “தீயில் கருகிய சான்றிதழுக்கு பதிலாக மாற்று ஆவணங்கள் வழங்க நடவடிக்கை”- அமைச்சர் அன்பில் மகேஷ்

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் நடந்த வன்முறையில் எரிந்த சான்றுகளுக்கு பதிலாக மாற்றுச்சான்றுகள் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி கூறியுள்ளார்.

    இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி நேற்று பள்ளியை ஆய்வு செய்தேன். நீதிமன்ற வழக்கு காரணமாக மாணவியின் பெற்றோரை நேரில் சந்திக்க முடியவில்லை. அவர்களிடம் தொலைபேசியில் பேசினேன். அப்போது பள்ளியில் மர்மமான முறையில் இறந்த மாணவியின் தாய் தன் மகள் படித்து முடித்து குடும்பத்தை பார்ப்பாள் என்று எண்ணினோம். தான் எம்.காம் படித்துள்ளதாகவும், தனக்கு அரசு வேலை வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அவருக்கு பணி வழங்குவது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்வேன்," என்று கூறினார்.

    மேலும் "பள்ளியில் ஏற்பட்ட வன்முறையால் மற்ற மாணவர்களின் மாற்றுச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட மாணவர்களின் பல சான்றிதழ்கள், ஆவணங்கள் எரிந்துள்ளன. எரிந்த சான்றிதழுக்கு பதிலாக புதிய சான்றிதழ் வழங்க ஏற்பாடு செய்து வருகிறோம், மாணவர்களின் கற்றல் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து விவரங்களும் முதலமைச்சருக்கு அறிக்கையாக வழங்குவோம்," என்றார் அமைச்சர் அன்பில் மகேஷ்.

  7. 1984ல் சியாச்சினை கைப்பற்றிய இந்தியப் படை.

  8. இலங்கையில் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக போராட்டம்

    இலங்கை கொழும்புவில் உள்ள கோட்டை ரயில் நிலையம் அருகே ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக 150க்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இலங்கை ஜனாதிபதியின் பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று நடைபெற்றது.

    இதில் ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர், இந்நிலையில்கொழும்புவில் ரணிலுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

  9. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உடற்கூராய்வு பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் - கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முதல்வர் தகவல்

    தனியார் பள்ளியில் மர்மமான முறையில் உயிரிழந்த மாணவியின் உடலை உடற்கூராய்வு செய்ய மருத்துவக் குழு தாயார் நிலையில் உள்ள நிலையில் மாணவியின் பெற்றோர்‌ தரப்பில் யாரும் மருத்துவமனைக்கு இதுவரை வரவில்லை என்பதால் உடற்கூராய்வு தொடங்காமல் இருந்தனர்.

    உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாணவியின் உடல் பிற்பகல் 1 மணிக்கு உடற்கூராய்வு நடைபெறும் என கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையின் முதல்வர் உஷா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பான, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மாணவியின் தந்தை இந்த உடற்கூராய்வில் இருக்கலாம் என்ற அறிக்கையை கடலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள உயிரிழந்த மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டது.

  10. எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி. உதயகுமார் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

    அதிமுகவின் சட்டமன்ற புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்வு செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு அறிவித்துள்ளது.

    மேலும், அதிமுகவின் கழக துணை செயலாளராக அக்ரி கிருஷ்ணமூர்த்தியும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

  11. பெட்ரோல், டீசல் கிடைக்காமல் சைக்கிளுக்கு மாறும் இலங்கை மக்கள்

  12. மக்களவை - அமளியால் ஒத்திவைப்பு

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று தொடங்கியது முதலே அவையில் சலசலப்பு இருந்து வந்த நிலையில், எதிர்கட்சியினர் விலையேற்றம் மற்றும் பணவீக்கம் ஆகியவற்றை குறித்து முழக்கங்களை எழுப்பினர்.

    இதையடுத்து, மக்களவை மதியம் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

  13. இலங்கை நெருக்கடி: 'மத அரசியல்' விளைவித்த துன்பங்கள் - வரலாறு மாற்றியமைக்கப்படுமா?

  14. மாணவன் தற்கொலை முயற்சி - போலீசார் குவிப்பு

    காஞ்சிபுரம் மாவட்டம் 'ஓரிக்கை'யில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் மாணவர் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற காரணத்தால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    காஞ்சிபுரம் மாவட்டம் 'ஓரிக்கை' பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் +1 பயிலும் மாணவர் ஒருவர், ஆசிரியர்கள் கடுமையாக கண்டித்ததன் காரணமாக அப்பள்ளியின் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.

    இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்த நிலையில் மாணவன் காயங்களுடன் உயிர் தப்பினார். பின்னர், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து தாலுகா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அப்பள்ளியில் காஞ்சிபுரம் பொறுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சம்பவம் நடைபெற்ற தனியார் பள்ளிக்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டார்.

    இதனைத்தொடர்ந்து எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க அதிவிரைவு படை காவலர்கள் வரவழைக்கப்பட்டு அப்பள்ளி வளாகம் முழுவதும் இரண்டு டிஎஸ்பி-க்கள் தலைமைகள் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற சம்பவம் போல ஓரிக்கை தனியார் பள்ளியில் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாமல் தடுக்கும் வகையில் பள்ளி வளாகம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியிலும்,கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

  15. கள்ளக்குறிச்சி - மறு உடற்கூராய்வு செய்வதில் தாமதம்

    கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் - சிபிசிஐடி விசாரணை தொடங்கியது.

    கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் மறு உடற்கூராய்வு பரிசோதனை இன்று நடைபெறுகிறது. அதனையொட்டி மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி விடுதியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு நடந்த போராட்டம் (ஞாயிற்றுக்கிழமை) கலவரமாக மாறியது. இந்த கலவரம் தொடர்பாக காவல் துறை இதுவரை 221 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மேலும் 20 சிறார்கள் கூர்நோக்கு இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

    மேலும் கைது நடவடிக்கையைக் காவல் துறையினர் தொடர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், மாணவியின் உடலை உடற்கூராய்வு செய்து அதன் அறிக்கை வெளியாகி இருந்தது. ஆனால் இதில் பெற்றோர் தரப்பில் ஏற்க மறுத்து மறு உடற்கூராய்வு உத்தரவிடக் கோரியும், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

    இதனை ஏற்ற நீதிமன்றம் மறு உடற்கூராய்வு செய்ய அனுமதியளித்தது. மேலும் அதற்காக சிறப்பு மருத்துவக் குழுவை நியமித்தனர். அந்த குழுவில், விழுப்புரம் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் ஜூலியான ஜெயந்தி, சேலம் அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் கோகுலநாதன், தடயவியல் துறை ஓய்வு பெற்ற நிபுணர் சாந்தகுமாரி உள்ளிட்ட நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    உடற்கூராய்வு இன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கருதி கள்ளக்குறிச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பலத்த காவல் துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இதனிடையே உடற்கூராய்வு செய்ய மருத்துவக் குழு தாயார் நிலையில் உள்ள நிலையில் மனுதாரரான மாணவியின் பெற்றோர்‌ தரப்பில் யாரும் மருத்துவமனைக்கு இதுவரை வரவில்லை யாரும் வரவில்லை. "உடற்கூராய்வின் போது பெற்றோர்‌ தரப்பினர் இருக்க வேண்டும் என்பதால் அவர்களுக்காக மறு உடற்கூராய்வு தொடங்காமல் காத்திருக்கின்றனர். அவர்கள் வந்தால் மட்டுமே இது தொடங்கும், அவர்களைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. தொடர்ந்து அவர்களை தொடர்பு கொள்ள அனைத்து வகையில் முயற்சி செய்து வருகிறோம்," என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக இந்த வழக்கை தமிழக டிஜிபி சைலேந்திர பாபு சிபிசிஐடிக்கு மாற்றியதாக தெரிவித்தார். இதன் விசாரணை இன்று முதல் சிபிசிஐடி தொடங்கியது. சிபிசிஐடி எஸ்.பி. ஜியாவுல் ஹக் தலைமையில் ஏடிஎஸ்பி கோமதி உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  16. மிஸ்டர் வாக்குப்பெட்டி

    மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச சட்டமன்ற வளாகத்தில் உள்ள வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகளை டெல்லிக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்திருக்கிறது.

    மிஸ்டர் பேலட் பாக்ஸ் என்ற பெயரில் விமான பயணி போல டிக்கெட் போடப்பட்டது முதல், பேனா மை திரும்ப வருவது வரை சுவாரஸ்யமான தகவல்களை இந்த கட்டுரையில் படிக்கலாம்.

  17. ராகுல் காந்தி போராட்டம்

    பணவீக்கம், விலையேற்றம் ஆகியவற்றைக் கண்டித்து இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 18 வரை நடைபெற உள்ளது. இரண்டாம் நாளான இன்று காலையில் எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி உட்பட எதிர்க்கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக, நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

  18. வரலாற்றில் முதல் முறை

    இந்திய வரலாற்றில் முதல் முறையாக அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 80 ரூபாயைக் கடந்துள்ளது.

  19. இலங்கை அதிபர் போட்டியில் மூவர்

    இலங்கை அதிபர் பதவிக்கான போட்டியில் ரணில் விக்கிரமசிங்க, டளஸ் அழகப்பெரும, அநுர குமார திஸாநாயக்க ஆகியோரின் பெயர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் முன்மொழியப் பட்டுள்ளன.

    நாளை இலங்கை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இந்த இந்த வீடியோவில் பார்க்க முடியும்.

  20. ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் மூவர் வேட்பு மனுத் தாக்கல்

    இலங்கை ஜனாதிபதி பதவி விலகலை அடுத்து, புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று இடம்பெறுகின்றது.

    நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன், வேட்பு மனுத் தாக்கல் தொடர்பான விபரங்களை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தஸநாயக்க முன்வைத்தார்.

    அதனைத் தொடர்ந்து, வேட்டு மனுத் தாக்கல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    ஜனாதிபதி வேட்பாளராக டளஸ் அழகபெருமவின் பெயரை, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்மொழிந்ததுடன், அதனை ஜீ.எல்.பீரிஸ் வழிமொழிந்தார்.

    அத்துடன், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரை, அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்மொழிந்ததுடன், அதனை மனுஷ நாணயக்கார வழிமொழிந்தார்.

    தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் பெயரை நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் முன்மொழிந்ததுடன், அதனை நாடாளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய வழிமொழிந்தார்.

    இதன்படி, மூன்று பேர் ஜனாதிபதி வாக்கெடுப்புக்காக முன்வந்துள்ளனர்.

    ரணில் விக்ரமசிங்க, டளஸ் அழகபெரும மற்றும் அநுர குமார திஸாநாயக்க ஆகியோரே, ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்புக்காக போட்டியிடுகின்றனர்.

    இந்த நிலையில், நாளைய தினம் (20) ஜனாதிபதி தேர்வுக்கான வாக்கெடுப்பு காலை 10 மணிக்கு இடம்பெறவுள்ளதாக சபையில் அறிவிக்கப்பட்டது.

    புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான இரகசிய வாக்கெடுப்பு நாளைய தினம் இடம்பெறவுள்ளது.

    இதற்கு முன்னர் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட எதிர்பார்த்திருந்த சஜித் பிரேமதாஸ, ஜனாதிபதி பதவிக்கான போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார்.