You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட பாதுகாப்புப் படைகளுக்கு ரணில் விக்ரமசிங்க உத்தரவு

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவர் தனது உரையில், "சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்தையும் செய்வதற்கு" ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. நன்றி நேயர்களே...

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

    • இலங்கை ஜனாதிபதி கோட்டாபய அந்நாட்டில் இருந்து வெளியேறிய தகவலை பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
    • இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் இந்தியா பின்னணியில் உதவி செய்ததாக சில ஊடகங்களில் வெளியான தகவலை இலங்கைக்கான இந்திய தூதர் மறுத்துள்ளார்.
    • ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராஜினாமா கடிதம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார் என ஏ.என்.ஐ. செய்தி முகமை ட்வீட் செய்துள்ளது.
    • இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்துள்ளார் பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.
    • இலங்கை பொறுப்பு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க செயல்படுவார் என கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் கூறியதாக நாடாளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
    • இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வரக்கூடிய சூழலில் அந்நாட்டின் அரச தொலைக்காட்சியான 'ரூபவாஹினி' தனது ஒளிபரப்பை நிறுத்தியது.
    • ரணில் விக்ரமசிங்க அலுவலக வளாகத்தின் வாயில்களுக்கு வெளியே ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சுமார் ஒரு மணிநேரம் தள்ளுமுள்ளு நடந்து வந்த நிலையில் போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தில் நுழைந்தனர்.
  2. இலங்கையில் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்ற மக்கள் மீது நூற்றுக்கணக்கான கண்ணீர் புகைகுண்டு வீச்சு

  3. குலுங்கியது இலங்கை தலைநகர்; ஆவேசமான போராட்டக்காரர்கள் - நடந்தது என்ன?

  4. கோட்டாபய ராஜபக்ச மாலத்தீவுகளுக்கு தப்பிச் சென்றது ஏன்?

    கோட்டாபய ராஜபக்ச இலங்கையைவிட்டு இரவோடு இரவாக தன் மனைவி மற்றும் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகளுடன் மாலத்தீவுகளுக்கு தப்பிச் சென்றுள்ளார்.

    இந்தியப் பெருங்கடலில் உள்ள அதன் அண்டைத் தீவு நாடான மாலத்தீவுடன் இலங்கைக்கு எப்போதும் நெருங்கிய உறவு உள்ளது. இலங்கையிலிருந்து மாலத்தீவு 90 நிமிட விமான பயணத் தொலைவில் உள்ளது.

    பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் இருந்து சுதந்திரம் பெற்றதில் இருந்து இரு நாடுகளும் நேர்மறையான ராஜரீதியிலான மற்றும் பொருளாதார உறவுகளைப் பேணி வருகின்றன. உதாரணமாக, மாலத்தீவின் ராணுவம் இலங்கை ராணுவத்தால் பயிற்றுவிக்கப்படுகிறது.

    ஆனால், குறிப்பாக ராஜபக்ச குடும்பம் மாலத்தீவுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது, மேலும் மாலத்தீவின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய நாடாளுமன்ற சபாநாயகருமான மொஹமத் நஷீத்துடன் நட்பாக உள்ளது.

    ராஜபக்சவை வரவேற்பதற்காக நஷீத் இரவு முழுவதும் மாலே விமான நிலையத்தில் தார் சாலையில் காத்திருந்ததாக சில உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    மாலத்தீவில் ராஜபக்சக்களுக்கு குடும்ப வீடுகள் இருப்பதாகவும், அங்கு சொத்துக்கள் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

  5. இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாலத்தீவுக்கு தப்பிச் சென்றது ஏன்?

  6. குஜராத் கடற்கரையில் தஞ்சம் புகுந்த சிங்கங்கள் - கிர் காட்டிலிருந்து வெளியேறியதன் காரணம் என்ன?

  7. அவள் என்ன சொன்னாள்?

    பெண்களே.. நீங்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்விகளுக்கான பதில்களை சொல்லுங்கள். பிபிசியின் புதிய தொடர் - #AvalEnnaSonnal நீங்கள் கீழுள்ள கேள்விக்கு அளிக்கும் பதிலில் தேர்ந்தெடுக்கப்படுபவற்றை உங்கள் பெயருடன் வரும் நாட்களில் பதிப்பிப்போம். பிபிசி தமிழின் இந்த ட்விட்டர் பதிவுக்கு சென்று உங்களின் பதிலை அளியுங்கள்:

  8. இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது ஏன்?

    இலங்கைக்கு மூன்று வழிகளில் அதிகமான பணம் வருகிறது. ஒன்று தேயிலை, இரண்டாவது ஆடை உற்பத்தி மூன்றாவது சுற்றுலா. இதை மூன்று 'டி' என்கிறார்கள். பொருளாதாரத்தில் இந்த மூன்று துறைகள்தான் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன.

    இந்த வழக்கத்தை உடைத்தது 2020-ஆம் ஆண்டில் வந்த கொரோனா. 2020 மார்ச் மாதம் முதல் இலங்கையும் அண்டை நாடுகளும் சர்வதேச விமானச் சேவைகளை நிறுத்தின. நாடும் முடங்கியது. பொருளாதாரத்தின் தூண்களாக இருந்த தேயிலை, ஆடை உற்பத்தி, சுற்றுலாத் துறை ஆகிய அனைத்தும் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டன.

    இந்த மூன்றைத் தவிர வேறு எந்த நிரந்த வருமானமும் இல்லாத இலங்கை, படிப்படியாகப் பொருளாதாரப் பின்னடைவைச் சந்திக்கத் தொடங்கியது.

  9. பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதி

    பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தன் ட்விட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ள ராமதாஸ், தன்னுடைய இல்லத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

    இதுதொடர்பாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில், "நேற்று முதல் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டிருந்த எனக்கு இன்று மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தைலாபுரம் தோட்ட இல்லத்தில் என்னை நான் தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

    கொரோனா தொற்று வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், மக்கள் அனைவரும் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தவணை தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.

  10. அதிமுகவுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து அறிவிப்பு வெளியிட்ட இபிஎஸ்

    அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவுக்கு புதிய பொறுப்பாளர்களை நியமித்து இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, துணைப் பொதுச் செயலாளர்களாக கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் ஆகியோரும், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலாளராக பொன்னையனும், அதிமுக தலைமை நிலையச் செயலாளராக எஸ்.பி.வேலுமணியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அதேபோன்று, அதிமுக அமைப்புச் செயலாளர்களாக செல்லூர் ராஜூ, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், ஆர்.காமராஜ் உள்ளிட்ட 11 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

  11. இந்தியாவை ஒரே குடும்பமாக பார்க்க வேண்டும் - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

    இந்தியாவை ஒரே குடும்பமாக பார்க்க வேண்டும் என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 54 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:

    "இந்தியாவின் பன்மைத்துவத்தை சிதைக்க ஆங்கிலேயர்கள் முயற்சி செய்தார்கள். தெற்கே இருந்தவர் திராவிடர் என்றும் வடக்கே இருந்தவர் ஆரியர் என்றும் பிரித்தனர். ஆங்கிலேயர் எவ்வாறு இந்திய வரலாற்றை மாற்றினார்கள் என்பதை அனைவரும் தேடி தெரிந்து கொள்ள வேண்டும்.

    தமிழக கல்வி கட்டமைப்பை உருவாக்கியவர் காமராஜர். தொழிற்சாலைகள், சென்னை ஐஐடியை உருவாக்கியவர் காமராஜர். அவரை நினைவுகூருவதில் பெருமை கொள்கிறேன்.

    எல்லோரும் சென்ற பாதையில் செல்லாமல், புதிதாக தொழில் தொடங்க முயற்சியுங்கள். புதிய இந்தியாவை இளைஞர்கள் தான் உருவாக்க வேண்டும். 100வது சுதந்திர தினத்தில் உலகத்திற்கே இந்தியா தலைமையாக இருக்க வேண்டும் அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும்.

    இந்தியாவை ஒரே குடும்பமாக பார்க்க வேண்டும். பல பிரிவுகளாக பார்க்கக் கூடாது.

    சுயதொழில் முனைவோராக மாற மூன்று விசயங்கள் முக்கியம். முதலில் எப்படி ஒரு செயலை செய்ய வேண்டும் என்பது, இரண்டாவது அந்த தொழில் செய்ய நிதி முக்கியம், அது அரசின் நிதி ஆயோக், வங்கிகள் என எளிமையாக கிடைக்கிறது அதனை பயன்படுத்தலாம். மூன்றாவது அந்த திட்டத்தை செயல்படுத்தும் துணிவும், முயற்சியும் வேண்டும். இவை மூன்றும் இருந்தால் சிறந்த தொழில்முனைவோராக மாற முடியும். அதற்கு அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது" என்றார்.

  12. இலங்கை நாடாளுமன்றத்தை கைப்பற்ற முயற்சிக்கும் போராட்டக்காரர்கள் - நேரலை

  13. சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் - இலங்கை ராணுவ தலைமைத் தளபதி

    இலங்கை மக்கள் அமைதி காக்க வேண்டும் எனவும், சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட மக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவம் அந்நாட்டின் ராணுவ தலைமைத் தளபதி ஷவேந்திர சில்வா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    காணொளி உரையில் ஜெனரல் ஷவேந்திர சில்வா, “புதிய ஜனாதிபதி பதவிப் பிரமாணம் செய்யும் வரை முடிவுகளை தீர்மானிப்பதற்கும், இன்று மாலைக்குள் எமக்கும் பொதுமக்களுக்கும் அறிவிக்கவும்” கட்சித் தலைவர்களை சந்திக்குமாறு நாடாளுமன்ற சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டதாக தெரிவித்தார்.

    ராணுவமும் காவல்துறையும் அரசியல் சாசனத்திற்கு கட்டுப்பட்டு நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

    இதனிடையே இலங்கையில் தற்போதுள்ள சூழல் நிலையற்றதாக உள்ளது. முன்னதாக, இலங்கை பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட சென்ற போராட்டக்காரர்களை நோக்கி ஆயுதம் ஏந்திய போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தற்போது பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

    இந்த நிலவரம் உண்மையில் எல்லை மீறினால், பாதுகாப்புப் படைகள் ஓரங்கட்டப்படுமா என்று பலரும் ஆச்சர்யப்படுகின்றனர்.

  14. இலங்கை: பிரதமர் அலுவலகம் முன்னே திரண்ட மக்கள்; கண்ணீர் புகைகுண்டு வீச்சு - விளக்கும் புகைப்படங்கள்

  15. இலங்கையில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது?

    இந்த நேரலை பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா? இலங்கையில் இன்று இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • ரணில் விக்ரமசிங்க அலுவலக வளாகத்தின் வாயில்களுக்கு வெளியே ஆயுதமேந்திய காவல்துறை அதிகாரிகளுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சுமார் ஒரு மணிநேரம் தள்ளுமுள்ளு நடந்து வந்த நிலையில் போராட்டக்காரர்கள் பிரதமர் அலுவலகத்தில் நுழைந்தனர்.
    • இலங்கை பிரதமர் அலுவலக கட்டடத்தின் பால்கனி ஒன்றிலிருந்து இலங்கைக் கொடியை உயர்த்திப் பிடித்து போராட்டக்காரர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
    • இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அந்நாட்டில் இருந்து வெளியேறி மாலத்தீவுக்கு செல்ல ஜெட் விமானத்தக வழங்கியதாக, பிரதமர் அலுவலகம் உறுதிப்படுத்தியது.
    • பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்பு ஜனாதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். இதையடுத்து அவர் இலங்கையில் அவசரநிலையை பிரகடனப்படுத்தினார்.
    • இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தொலைக்காட்சியில் உரையாற்றினார். அவர் தனது உரையில், "சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட தேவையான அனைத்தையும் செய்வதற்கு" ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
    • பொறுப்பு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமனம் செய்யப்பட்டிருப்பது "கேலிக்கூத்தானது" என, இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விமர்சனம் செய்துள்ளார்.
    • இலங்கையில் தினசரி மின்வெட்டு, உணவு, எரிபொருள், மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவிவருவதையடுத்து, அந்நாட்டில் அசாதாரண சூழல் நிலவிவருகிறது.
  16. போலி பாஸ்போர்ட் விவகாரம்; உளவுத் துறை ஏடிஜிபி மீது அண்ணாமலை குற்றச்சாட்டு

  17. இலங்கை பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள் - புகைப்படங்கள்

    கொழும்புவில் உள்ள இலங்கை பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டுள்ள நிலையில், பிபிசி செய்தியாளர்கள் இன்று நாள் முழுதும் அங்கு உள்ளனர்.

    இலங்கை பிரதமர் அலுவலகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில புகைப்படங்கள்:

  18. இலங்கை பிரதமர் அலுவலகத்திலிருந்து நேரலை

  19. பொறுப்பு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க நியமனம் - "கேலிக்கூத்தானது" என சஜித் பிரேமதாச விமர்சனம்

    ரணில் விக்ரமசிங்க பேச்சு தொடர்பான பல கருத்துக்கள் வரப்பெறுகின்றன.

    இலங்கை நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறுகையில், ரணில் விக்ரமசிங்கவை பொறுப்பு ஜனாதிபதியாக நியமித்தது "கேலிக்கூத்தானது" என்றும் "வருத்தத்திற்குரியது" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    இது "ராஜபக்ச பாணியிலான ஜனநாயகத்தைக்" காட்டுவதாக சஜித் தெரிவித்தார்.

    இலங்கை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் ஆலோசகர் ராம் மாணிக்கலிங்கம் பிபிசியிடம் கூறுகையில், ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக நியமனம் செய்தது தொடர்பாக தனக்கும் சந்தேகங்கள் இருப்பதாகவும், இலங்கையின் அரசியல் நிலப்பரப்பு குறித்த அச்சம் அதிகரித்துவருவதாகவும் தெரிவித்தார்.

    "தேர்தெடுக்கப்படாத ஒரு பிரதமர் (ரணில் விக்ரமசிங்க), நாடாளுமன்றத்தில் தனது சொந்த இடத்துக்குக் கூட தேர்ந்தெடுக்க முடியாத ஒருவர், இந்த நாட்டுக்கே பொறுப்பானவர் போன்றதொரு கொந்தளிப்பான சூழ்நிலையை இலங்கை எதிர்கொள்கிறது" என்று அவர் கூறினார்.

  20. தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கத்தான் புதிய கல்விக்கொள்கை - எல்.முருகன்

    இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்று மத்திய இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் எல்.முருகன் பேசியதாவது: "தமிழ்மொழியை உலகம் முழுவதிலும் எடுத்துசென்றவர் பிரதமர் மோதி. ஐநா சபையில் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' எனக்கூறி பேச்சை தொடங்கியவர் மோதி. வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியாரின் பெயரில் இருக்கை அமைத்தவர் மோதி தான். பிரதமர் எங்கு சென்றாலும் திருக்குறளை மேற்கோளைகாட்டி தமிழ்மொழி பெருமையை பரப்பிவருகிறார்.

    தற்போதைய இளைஞர் சமூகம் இந்தியாவை ஆளும் சமூகமாக உலகளவில் செல்லக்கூடியவர்களாக மாறுவார்கள். வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக இருக்க வேண்டும் என்பது பிரதமரின் எண்ணம். 100வது சுதந்திர தின ஆண்டில் இந்தியா முன்னேறிய தேசமாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்திய அரசு செயல்படுகிறது.

    உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகளில் இளைஞர்கள் சிறந்து விளங்குகின்றனர். மாவட்டம் தோறும் விளையாட்டுத் திடல் அமைப்பது என்பது பிரதமரின் கனவு.

    தாய் மொழியில் கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக தான் புதிய கல்விக்கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக்கொள்கை முறையில் தான் தாய்மொழியில் நம்முடைய கருத்துகளை படிக்க முடியும். உலகெங்கும் முன்னேற்றும் கல்விக்கொள்கையாக இருக்கும். தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கத்தான் புதிய கல்விக்கொள்கை திட்டம்" என தெரிவித்தார்.