You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி

தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

பிரசாந்த் முத்துராமன்

  1. நன்றி நேயர்களே...

    இன்றைய நேரலை இத்துடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருந்தமைக்கு நன்றி.

    இதுவரையிலான இன்றைய முக்கிய நிகழ்வுகள்:

    • இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று அதிகாலை துபாய் செல்வதற்காக விமான நிலையம் சென்ற நிலையில், அவருக்கு சேவைகள் வழங்கக்கூடாது என பிற பயணிகள் போராட்டம் நடத்தியதால், அவருக்கு சேவைகள் மறுக்கப்பட்டதாக இலங்கை விமான நிலைய அதிகாரி பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.
    • சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.கவின் தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
    • தன்னைக் கேட்காமல் அ.தி.மு.க. வங்கிக் கணக்கிலிருந்து எவ்வித வரவுசெலவுகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் கரூர் வைஸ்யா வங்கியின் மயிலாப்பூர் கிளை மேலாளருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
    • லீனா மணிமேகலைக்கு எதிராக வாராகி என்பவர், தமிழ்நாடு உள்துறை செயலர், தாம்பரம் காவல் ஆணையர் மற்றும் சேலையூர் காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளார்.
    • தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    • திங்கட்கிழமையன்று (ஜூலை 11) ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    • கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சந்திரசேகர், செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகளில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் கண்டறியப்பட்டுள்ளதாக, வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
  2. ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவதா? - சசிகலா

    ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவதா என, தஞ்சையில் சசிகலா பேசியுள்ளார்.

    அதிமுகவை கைப்பற்றும் விதமாக தற்போது புரட்சி பயணத்தை மேற்கொள்வதாக முன்னதாக தெரிவித்திருந்த சசிகலா இன்று தஞ்சாவூர் சென்றார். அங்கு திவாகரனை சசிகலா சந்தித்தார். அமமுகவில் தினகரனுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக திவாகரன் தனியாக செயல்பட தொடங்கிய கட்சிதான் அண்ணா திராவிடர் கழகம்.

    தஞ்சையில் உள்ள தனியார் மண்டபத்தில் அண்ணா திராவிடர் கழகத்தை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் அதன் பொதுச் செயலாளர் திவாகரனின் தலைமையில் இணைந்தனர்.

    அதனைத் தொடர்ந்து பேசிய சசிகலா, "கட்டுக்கோப்பாக இருந்த அதிமுக எதிரிகளின் ஆசைப்படி சிதறிப்போனது. பிரிந்தவர்களை கட்சியில் எப்படி சேர்ப்பது என்ற கலையை நான் தெளிவாக கற்றுக் கொண்டு விட்டேன்.

    தற்போது நடந்த நிகழ்வு மிகுந்த வேதனையை அளிக்கிறது. இரு பெரும் தலைவர்களும் இதனை வருத்தத்துடன் பார்த்துக் கொண்டு தான் இருப்பார்கள். ஒரு சிலரின் தனிப்பட்ட தேவைக்காக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவதா?

    சில சுயநலவாதிகள் தங்களுக்குக் கிடைக்க வேண்டிய ஆதாயத்தை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு போட்டிப் போட்டுக் கொண்டு செயல்படுவது எந்த விதத்தில் நியாயம்?

    இதனால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி தொண்டர்கள் என்று எண்ணும்போது என் மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது.

    தற்போது நடப்பது பெரிய கேலிக்கூத்தாக உள்ளது. இதற்கெல்லாம் விரைவில் ஒரு தீர்வு ஏற்படும். நான் இருக்கும் வரை யாராலும் இயக்கத்தை அபகரித்து விடவோ அழித்துவிட முடியாது" என பேசினார்.

  3. இலங்கை அதிபர் மாளிகையில் இருந்து நேரலை

    நாளை பதவி விலகுவதாக அறிவித்திருக்கும் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே அதிபர் மாளிகையில் நிறைந்திருக்கும் மக்கள் அடுத்து என்ன நடக்கப் போகிறது? #நேரலை

  4. இந்திய தேசிய சின்னத்தின் சிலையில் சிங்கங்கள் குரூரமாக இருப்பதாக விமர்சனம்

    நரேந்திர மோதி இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் திறந்து வைத்த இந்திய தேசிய சின்னத்தின் சிலையில் சிங்கங்கள் குரூரமாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. உங்கள் பார்வைக்கு இது எப்படி இருக்கிறது என்பதை பிபிசி தமிழின் இந்த ட்விட்டர் பதிவுக்கு சென்று தெரிவியுங்கள்:

  5. கோவையைச் சேர்ந்த இரு தொழிலதிபர்களின் இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.500 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு

    கோயம்புத்தூரைச் சேர்ந்த தொழிலதிபர்கள் சந்திரசேகர், செய்யாதுரை தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகளில் கணக்கில் வராத 500 கோடி ரூபாய் கண்டறியப்பட்டுள்ளதாக, வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.

    ஜூலை ஆறாம் தேதியன்று வருமான வரித்துறை சந்திரசேகர் மற்றும் செய்யாதுரை ஆகியோருக்குச் சொந்தமான இரண்டு தொழில் குழுமங்கள் தொடர்புடைய 40 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது. சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

    இந்த சோதனைகளின்போது பல ஆவணங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இந்த ஆவணங்களைப் பரிசோதித்தபோது, இந்த நிறுவனங்கள் கடந்த சில ஆண்டுகளாகவே போலியான செலவுகளைக் காட்டி பெருமளவில் வரி ஏய்ப்புச் செய்திருப்பது கண்டறியப்பட்டது.

    இதில் ஒரு நிறுவனம், ஏதோ ஒன்றை வாங்கியதற்கு செலவு செய்ததாக காட்டப்பட்டிருக்கிறது. பிறகு அதே தொகை பணமாகப் பெறப்பட்டுள்ளது. பல கூட்டுத் தொழில்களில் கிடைத்த லாபம், கணக்கில் காட்டப்படாததும் தெரியவந்திருக்கிறது.

    மற்றொரு நிறுவனத்தைப் பொறுத்தவரை, வேறு பல போலி நிறுவனங்களை உருவாக்கி அவற்றிடம் பொருட்களை வாங்கியதாகவும் துணை - ஒப்பந்தங்கள் விடப்பட்டதற்கு செலவு ஏற்பட்டதாகவும் காட்டப்பட்டுள்ளது.

    இதுபோல போலி நிறுவனங்கள் பற்றிய ஆவணங்கள், கூடுதல் வருமானம் குறித்த ஆவணங்களை மறைத்துவைப்பதற்கு ஏற்படுத்தப்பட்டிருந்த ரகசிய இடத்தையும் தேடுதல் அணி கண்டுபிடித்தது.

    இந்த இரு நிறுவனங்களிலும் சேர்த்து கணக்கில் வராத ரூ. 500 கோடி கண்டறியப்பட்டிருக்கிறது என வருமான வரித்துறையின் அறிக்கை கூறுகிறது.

  6. தமிழ்நாடு மீனவர்கள் 6 பேருக்கு சிறை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

    நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற 6 மீனவர்களை எல்லைதாண்டி மீன்பிடித்ததாக காரைநகர் கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு கைது செய்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். ஒரு படகையும் பறிமுதல் செய்தனர்.

    விசாரணைக்குப் பின் மீனவர்கள் 6 பேரும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தமிழ்நாடு மீனவர்களின் வழக்கை விசாரித்த ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிபதி கஜநிதிபாலன் மீனவர்களை வரும் 15ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, மீனவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    கைது செய்யப்பட்ட ஜெகதாபட்டினம் மீனவர்களை நேரில் சந்தித்த இந்திய துணை தூதரக அதிகாரிகள் மீனவர்களுக்கு தேவையான அடிப்படை பொருட்களை வழங்கினர். எல்லை தாண்டி மீன் பிடித்ததாக யாழ்ப்பாணம் சிறையில் 11 தமிழக மீனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  7. நாடாளுமன்ற தேசிய சின்னத்தில் கோரைப் பல் சிங்கங்கள்: மாறுபடும் வடிவமைப்பும் விமர்சனமும்

  8. மாணவர்களிடம் தமிழ்நாடு ஆளுநர் ஆர் .என். ரவி அரசியலை புகுத்துவதாக அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு

    #வாதம்விவாதம்: பல்கலைக்கழகங்ககளில் மாணவர்களிடம் ஆளுநர் ஆர் .என். ரவி அரசியலை புகுத்துவதாக தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் பொன்முடி குற்றச்சாட்டு.

    ஆளுநர் எல்.முருகனை அழைத்தது மாநில சுயாட்சிக்கு பாதகமா?

    அமைச்சரின் முடிவு

    அரசியல் ரீதியான நோக்கமுடையதா?

    பிபிசி தமிழின் இந்த ட்விட்டர் பக்கத்திற்கு சென்று உங்களின் கருத்தை தெரிவியுங்கள்:

  9. அதிமுக அலுவலக கலவரம்: குற்றவாளிகளைக் கைது செய்ய தனிப்படை

    திங்கட்கிழமையன்று (ஜூலை 11) ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    திங்கட்கிழமையன்று அதிமுகவின் பொதுக் குழு சென்னைக்கு அருகில் உள்ள வானகரத்தில் நடந்துகொண்டிருந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமையகத்திற்குள் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் புகுந்தனர்.

    இதையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் அங்கு வந்த எடப்பாடி கே. பழனிசாமி ஆதரவாளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்களாலும் கட்டைகளாலும் தாக்கிக் கொண்டனர். சாலையோரங்களில் நின்ற வாகனங்களை அடித்து நொறுக்கினர்.

    இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கெனவே 14 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்து யார், யார் கலவரத்தில் ஈடுபட்டார்கள் என கண்டறிந்து கைது செய்வதற்காக மூன்று உதவி ஆணையர்கள் தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் மைலாப்பூர் துணை ஆணையர் திஷா மிட்டல் தலைமையின் கீழ் செயல்படுவார்கள்.

    இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி தரப்பில் 200 பேர் மீதும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் 200 பேர் மீதும் என 400 பேர் மீது ஏழு பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்று உறுதி

    தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக, மு.க.ஸ்டாலின் தன் ட்விட்டர் பக்கத்தில், "இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கோவிட் 19 உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

    அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்" என பதிவிட்டுள்ளார்.

  11. கோடநாடு வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் - ஆறுக்குட்டி

    கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே தனது நோக்கம் என, அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டி தெரிவித்தார்.

    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு இல்லத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் கோவையில் பல கட்டங்களாக இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் இன்று தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

    கடந்த ஏப்ரல் மாதம் ஆறுக்குட்டியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது தனிப்படை காவல்துறையினர் மீண்டும் அழைத்து விசாரணை நடத்தினர்.

    விசாரணை முடிவடைந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆறுக்குட்டி, "கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நிலவும் சந்தேகங்கள் குறித்து கேட்டார்கள், அவற்றுக்கு பதில் அளித்திருக்கிறேன். கனகராஜ் 2 ஆண்டுகள் எனக்கு ஓட்டுநராக இருந்ததால் மீண்டும் விசாரணை செய்கின்றனர். இவ்வழக்கில் உண்மை குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதே என் நோக்கம்" என தெரிவித்தார்.

  12. வட தமிழகம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

    இன்று வட தமிழகம், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட அறிவிப்பில், "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெயக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த்பாட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

    இன்று கர்நாடகா கடலோரப் பகுதிகள், மத்திய அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் வீசக்கூடும்.

    இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  13. மக்கள்தொகை: 2023இல் இந்தியா சீனாவை முந்தும் - ஐ.நா

    மக்கள்தொகை பெருக்கத்தில் 2023-ஆம் ஆண்டில் சீனாவை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பெறும் என்று ஐ.நா கணித்துள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

    இது தொடா்பாக ஐ.நா. பொருளாதார, சமூக விவகாரத் துறையின் மக்கள்தொகை பிரிவு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்ததாவது:

    உலக மக்கள்தொகை நிகழாண்டு நவம்பா் 15-இல் 800 கோடியை எட்டும். 1950-க்குப் பின்னா் உலக மக்கள் தொகை மெதுவான வீதத்தில் வளா்ச்சியடைகிறது. 2030-ஆம் ஆண்டில் உலக மக்கள் தொகை 850 கோடியையும், 2050-ஆம் ஆண்டில் 970 கோடியையும் எட்டும்.

    2080-இல் உலக மக்கள்தொகை 1,040 கோடியாக இருக்கும். 2100 வரை இதே விகிதம் நீடிக்கும். 2023-இல் சீனாவை பின்னுக்குத் தள்ளி உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இந்தியா விளங்கும். வரும் 2050-இல் இந்தியாவின் மக்கள்தொகை 166 கோடியாக இருக்கும்.

    உலக மக்கள்தொகையில் 29 சதவீதத்துடன் அதாவது 230 கோடி மக்கள்தொகையுடன் 2022-இல் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட பிராந்தியமாக கிழக்கு மற்றும் தென்-கிழக்கு ஆசியா திகழ்கிறது.

    மத்திய, தெற்கு ஆசியா 210 கோடி மக்களுடன் உலக மக்கள்தொகையில் 26 சதவீதத்தைக் கொண்டுள்ளது.இந்த பிராந்தியத்தில் சீனாவும் இந்தியாவும் தலா 140 கோடி மக்கள்தொகையுடன் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நாடுகளாக விளங்குகின்றன.

    2050-ஆம் ஆண்டுவரையிலான உலக மக்கள்தொகை பெருக்க கணக்கீட்டின்படி, காங்கோ குடியரசு, எகிப்து, எத்தியோப்பியா, இந்தியா, நைஜீரியா, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ், தான்ஸானியா ஆகிய 8 நாடுகளும் 50 சதவீதத்துக்கும் அதிகமான பங்கு வகிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஐ.நா. பொதுச் செயலாளா் அன்டோனியோ குட்டெரெஸ் கூறுகையில், 'பூமியின் 800 கோடியாவது மக்களைப் பெற போவதால் நிகழாண்டு சா்வதேச மக்கள்தொகை தினம் (ஜூலை 11) முக்கிய மைல்கல்லாகும். நமது பன்முகத்தன்மை, மனிதாபிமானத்தை அங்கீகரிக்கவும், நீடித்த வாழ்நாளை உறுதிப்படுத்தி, தாய்-சேய் இறப்பு விகிதத்தை குறைக்க உதவிய மருத்துவத் தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டாடவும் இது சரியான தருணம்' என்றார் என தினமணி நாளிதழ் செய்தி தெரிவிக்கிறது.

  14. பல்கலைக்கழகங்களில் அரசியலைப் புகுத்துகிறார் ஆளுநர்: பொன்முடி குற்றச்சாட்டு

  15. லீனா மணிமேகலை குறித்து உள்துறை செயலருக்கு புகார்

    இந்து கடவுள்களை இழிவுபடுத்தும் வகையில் உள்நோக்கத்தோடு சமூக வலைதளத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருவதாகக் கூறி இயக்குநர் லீனா மணிமேகலைக்கு எதிராக வாராகி என்பவர், தமிழ்நாடு உள்துறை செயலர், தாம்பரம் காவல் ஆணையர் மற்றும் சேலையூர் காவல் நிலையம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் அளித்த புகாரில், "தான் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணத்துடன் லீலா மணிமேகலை சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிடுகிறார்.

    மாணவர் விசா மூலம் கனடா சென்று அங்கிருந்து கொண்டு தமது சமூக வலைதளத்தில் தொடர்ந்து இந்து கடவுள்களையும் சிவன் பார்வதி போன்ற கடவுள்களின் புகைப்படங்களையும் அவமானப்படுத்தும் வகையில் தனது ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.

    தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ள லீனா மணிமேகலை, தனது பதிவுகள் தனது கருத்து சுதந்திரம் என்றும் தொடர்ந்து வாதிட்டு வருகிறார். இது பெரும்பான்மை இந்து மக்களின் மத உணர்வையும் நம்பிக்கையும் அவமதிக்கும் வகையில் உள்ளது. இது போன்ற கருத்துக்களை வெளியிட்டு இரு பிரிவினருக்கிடையே வன்முறையை தூண்டும் வகையில் பிரிவினையை உண்டாக்கும் வகையில், தேசத்திற்கு எதிரான தீய செயலில் ஈடுபட்டு வருவதால் ஏற்கனவே இவர் மீது டெல்லி, மேற்கு வங்கம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

    இவர் கனடா நாட்டு பிரஜை போல பாவனை செய்கிறார். ஆனால் , இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர். தமிழ்நாட்டிலும் இது போன்ற பல சர்ச்சை கருத்துக்களை முன்பு வெளியிட்டு தமிழ்நாட்டு மக்களிடையே கொந்தளிப்பை உண்டாக்கியவர் . தற்போது மீண்டும் வன்முறையை தூண்டும் வகையில், இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

  16. அதிமுக வங்கிக்கணக்குகள் தொடர்பாக வங்கிக்கு ஓபிஎஸ் கடிதம்

    தேர்தல் ஆணைய விதிகளின் படி அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர், பொருளாளர் ஆகிய பதவிகளில் தானே தொடர்வதாகவும் தன்னைக் கேட்காமல் அ.தி.மு.க. வங்கிக் கணக்கிலிருந்து எவ்வித வரவுசெலவுகளையும் மேற்கொள்ளக்கூடாது என்றும் கரூர் வைஸ்யா வங்கியின் மயிலாப்பூர் கிளை மேலாளருக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம்.

    அதிமுக தொடர்புடைய மூன்று வங்கிக்கணக்குகளையும் குறிப்பிட்டு, சேவைகளை நிறுத்துவதற்கான கோரிக்கையை, வங்கி மேலாளருக்கு இந்த கடிதம் மூலம் அனுப்பியுள்ளார்.

  17. கோடநாடு வழக்கு: ஆறுக்குட்டியிடம் மீண்டும் விசாரணை

    முன்னாள் தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு இல்லத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கை மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் கோவையில் பல கட்டங்களாக இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக முன்னாள் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியிடம் இன்று தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த ஏப்ரல் மாதம் ஆறுக்குட்டியிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது தனிப்படை காவல்துறையினர் மீண்டும் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

  18. செஸ் ஒலிம்பியாட் டிக்கெட் விற்பனை தொடக்கம்

    மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான நுழைவுச் சீட்டுகளை https://tickets.aicf.in/ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    200 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரை விலையுள்ள டிக்கெட்கள் விற்கப்படுகின்றன.

  19. மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் - முதலமைச்சர் ஆய்வு

    மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டி ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் இன்று ஆய்வுசெய்தார்.

    44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இப்போட்டியில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட சர்வதேச சதுரங்க வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

    இந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் கடந்த சில வாரங்களாக மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரியில் தீவிரமாக நடந்துவருகின்றன. 52 ஆயிரம் சதுர அடி கொண்ட ஒரு அரங்கு, 22 ஆயிரம் சதுர அடி கொண்ட ஒரு அரங்கு என இரு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக 23 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலர் இறையன்பு, விளையாட்டுத் துறைச் செயலர் அபூர்வா உள்ளிட்டோர் இந்த ஏற்பாடுகளை மேற்பார்வை செய்துவருகின்றன. இந்தப் போட்டிகளுக்காக 1400 பேர் விளையாடும் வகையில் 700 சதுரங்கப் பலகைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் வீரர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவருகின்றன.

    இந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளும் பல வீரர்களுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால், அவர்களுக்கு உதவ மொழிபெயர்ப்பாளர்கள், வழிகாட்டிகள் ஆகியோரும் ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறார்கள்.இந்த செஸ் ஒலிம்பியாட்டின் துவக்கவிழா நேரு உள் விளையாட்டு அரங்கில் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கென 92 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு விடுவித்துள்ளது. இந்தப் போட்டிகளுக்கான சிறப்பு அதிகாரியாக தரேஷ் அகமது நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த செஸ் ஒலிம்பியாட்டிற்கான 50 சதவீதப் பணிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில், பணிகளின் தற்போதைய நிலை குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வுசெய்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் தலைமைச் செயலர் இறையன்பு, டிஜிபி சைலேந்திரபாபு, விளையாட்டுத் துறை அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்று, ஏற்பாடுகளின் தற்போதைய நிலை குறித்து விளக்கினர்.

  20. அ.தி.மு.க. அலுவலகம் சீல் வைப்பு விவகாரம்: நாளை விசாரணை

    சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள அ.தி.மு.கவின் தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    அ.இ.அ.தி.மு.க. தலைமையகத்தில் ஜூலை 11ஆம் தேதி கடுமையான மோதல் ஏற்பட்டது. ஓ. பன்னீர்செல்வம் தரப்பினரும் எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பினரும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதையடுத்து அந்த அலுவலகத்தை வருவாய்த் துறை அலுவலர்கள் பூட்டி சீல் வைத்தனர்.

    இந்த அலுவலகம் தொடர்பாக நீதிமன்றத்தை அணுகி தீர்வுபெறுமாறு எடப்பாடி தரப்பிற்கும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பிற்கும் கூறப்பட்டது.

    இந்த நிலையில், அ.தி.மு.க. அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பாக மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி கோரிக்கை விடுத்தார். இந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி மனுவை நாளை விசாரிப்பதாக தெரிவித்திருக்கிறார்.