You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இந்திய மீனவர்கள் இலங்கையில் விடுதலை:

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, தமிழ்நாடு மற்றும் காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுதலை, விசைப் படகை பறிமுதல் செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி - மே மாதம் வரை மட்டுமே அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு

    மதுரை மாவட்டம் பள்ளப்பட்டியில் ஜூலை 15 ஆம் தேதி வடமாடு மஞ்சுவிரட்ட நடத்த அனுமதி வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பள்ளப்பட்டி மகாராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''பள்ளப்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் விழாக் குழுத் தலைவராக உள்ளேன். பள்ளப்பட்டி கிராமப் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் திருவிழா 15.07.2022 அன்று நடத்த முடிவு செய்துள்ளனர்.

    திருவிழாவில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது, முக்கியமாக வடமாடு மஞ்சுவிரட்டு, 1994 ஆம் ஆண்டு நடத்தப்படுகிறது. மஞ்சுவிரட்டு திருவிழாவின் போது பத்து காளைகள் மட்டுமே பங்கேற்கும். இது கிராம மக்களின் பழக்கம் மற்றும் நடைமுறையாகும்.

    வடமாடு மஞ்சு விரட்டு நடத்த போலீசாரிடம் அனுமதி கோரினேன். ஆனால், எனது கோரிக்கையை பரிசீலிக்காமல், கொரோனா பரவல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி எனது மனுவை நிராகரித்து விட்டனர்.

    எனவே, பள்ளப்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் ஜூலை 15 ஆம் தேதி வடமாடு மஞ்சுவிரட்ட நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.'' என மனுவில் கூறி இருந்தார்.

    இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞர் கூறுகையில், ''ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தான் ஜல்லிகட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க இயலும் என விதிமுறையில் உள்ளது.'' என்றார்.

    இதைய்டுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரர் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்து, உரிய நிவாரணம் பெறலாம்.'' என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

  2. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம்.

    நான் ஜோ மகேஸ்வரன். இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  3. ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு இடைக்கால ஜாமீன் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

    ஆல்ட் நியூஸ் இணை நிறுவனர் முகமது ஜுபைருக்கு 5 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் சித்தாபூரில் பதிவான வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

    இவ்வழக்கில் அடுத்த விசாரணை வரும்வரை இவ்விவகாரம் தொடர்பாக புதிய ட்வீட் ஏதும் பதிவிடக்கூடாது என உச்ச நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது. மேலும், சித்தாபூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட பகுதிகளுக்கு வெளியே அவர் செல்லக்கூடாது எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    Alt News என்ற உண்மைச் சரிபார்ப்பு இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜூபைர் டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார். முகமது ஜுபைரின் 2018 ட்வீட் குறித்து ட்விட்டர் பயனர் ஒருவர் புகார் அளித்தார். முகமது ஜூபைர் மத உணர்வுகளை புண்படுத்தியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதன் அடிப்படையில் ஜூபைரை டெல்லி போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    முகமது ஜுபைரின் கைது, பாஜகவின் முன்னாள் தேசிய செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மா முகமது நபி குறித்து கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன. நூபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துகளை முகமது ஜுபைர் சமூக வலைதளங்களில் கடுமையாக சாடியிருந்தார்.

  4. ஷின்சோ அபே மீது தாக்குதல் - இந்திய பிரதமர் மோதி வருத்தம்

    ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டதாக, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    நிகழ்ச்சியில் ஒன்றில் ஷின்சோ அபே உரையாற்றியபோது, அவரை பின்புறத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுட்டதாகவும், இதனால் அவர் காயமடைந்ததாகவும் என்.ஹெச்.கே ஊடகம் தெரிவிக்கிறது. சுட்ட நபரை பிடித்த போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் ஜப்பானின் உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

    இந்நிலையில், இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோதி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "நண்பரான ஷின்சோ அபே தாக்கப்பட்டது மனவருத்தம் அளிக்கிறது. ஷின்சோ அபே விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

  5. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெவ்வேறு சாலை விபத்துகளில் 11 பேர் உயிரிழப்பு

    செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று நடைபெற்ற வெவ்வேறு சாலை விபத்துகளில் 11 பேர் உயிரிழந்தனர்.

    செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்தும், லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் இரு பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.

    அதேபோன்று, காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் நடைபெற்ற பயங்கர விபத்தில் 7 மாத குழந்தை உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

    மேலும், ஸ்ரீபெரும்புதூர் அருகே சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞர்கள் மீது டிப்பர் லாரி ஏரி இறங்கியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

  6. உத்தராகண்ட்: ஆற்று வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் 9 பேர் உயிரிழப்பு

    உத்தராகண்ட் மாநிலம் நைனிட்டால் மாவட்டத்தில் உள்ள தேலா ஆற்றின் வெள்ளத்தில் கார் அடித்துச் செல்லப்பட்டதில் 9 பேர் உயிரிழந்தனர். ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஒரு சிறுமி உயிருடன் மீட்கப்பட்டார். அச்சிறுமி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    இதுவரை நான்கு பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மீதம் உள்ள 5 பேரின் உடல்கள் அடித்துச் செல்லப்பட்ட காரிலேயே சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மீதமுள்ள உடல்களை கைப்பற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி இச்சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

  7. இளையராஜாவுக்கு வழங்கப்பட்ட எம்பி பதவி தமிழ் மண்ணுக்குக் கிடைத்த அங்கீகாரம் - எல்.முருகன்

    இளையராஜாவுக்கு எம்.பி பதவி வழங்கப்பட்டது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மண்ணுக்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    'தூய்மை இந்தியா' திட்டத்தின் கீழ் புதுச்சேரியைச் சுத்தம் செய்யும் விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று காலை கடற்கரைச் சாலையில் உள்ள தலைமைச் செயலகம் எதிரே நடைபெற்றது. மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்று கடற்கரையில் உள்ள குப்பைகளை அகற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், "இளையராஜா ஒரு மிகப்பெரிய சாதனையாளர். தன்னுடைய திறமையின் மூலமாக உலகம் முழுவதுமுள்ள இசை ஆர்வலர்களைத் தனது இசையால் கட்டிப்போட்டவர். இப்படி ஒரு இசை மாமேதைக்குப் பிரதமர் நரேந்திர மோதி இளையராஜாவைக் கௌரவப்படுத்தும் விதமாக அவருக்கு நியமன ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

    இது தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் தமிழ் மண்ணுக்கும் கிடைத்த மிகப்பெரிய ஒரு பெருமை. தமிழ் மண்ணுக்குக் கிடைத்த அங்கீகாரம். தமிழ்நாட்டிற்குக் கிடைத்த கௌரவமாக நான் பார்க்கிறேன்," என்று தெரிவித்தார்.

  8. முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - இபிஎஸ் விமர்சனம்

    ''அரசியல் பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவதை நிறுத்திவிட்டு மக்கள் பணிகளில் கவனம் செலுத்த வேண்டுமென இந்த விடியா அரசை வலியுறுத்துகிறேன் '' - எடப்பாடி பழனிசாமி.

  9. முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

    முன்னாள் அமைச்சர் காமராஜுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதிமுக ஆட்சியில் உணவு பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர் காமராஜ். இவர் அமைச்சராக இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

    இந்த புகாரின் அடிப்படையில், இன்று காலை முதல் சென்னை, கோயம்புத்தூர், தஞ்சாவூர், மற்றும் திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

    அதன் ஒரு பகுதியாக, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜுக்கு சொந்தமான பிளாசம் ஹோட்டல், கே.கே. நகர் உழவர் சந்தை எதிரில் உள்ள ஐயர் பங்களா மற்றும் தில்லைநகரில் உள்ள ஒரு வீடு ஆகியவற்றில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டதாக தகவல்

    ஜப்பானின் நாரா நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்டதாக, உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    நிகழ்ச்சியில் அவர் உரையாற்றியபோது, அவரை பின்னாலிருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுட்டதாகவும், இதனால் அவர் காயமடைந்ததாகவும் என்.ஹெச்.கே ஊடகம் தெரிவிக்கிறது. சுட்ட நபரை போலீசார் விசாரணையில் இருப்பதாகவும் அச்செய்தி தெரிவிக்கிறது.

    இதுகுறித்த மேலதிக விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.