ஜல்லிக்கட்டுக்கு ஜனவரி - மே மாதம் வரை மட்டுமே அனுமதி: உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு
மதுரை மாவட்டம் பள்ளப்பட்டியில் ஜூலை 15 ஆம் தேதி வடமாடு மஞ்சுவிரட்ட நடத்த அனுமதி வழங்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள பள்ளப்பட்டி மகாராஜன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ''பள்ளப்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் கோயில் விழாக் குழுத் தலைவராக உள்ளேன். பள்ளப்பட்டி கிராமப் பெரியோர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் திருவிழா 15.07.2022 அன்று நடத்த முடிவு செய்துள்ளனர்.
திருவிழாவில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது, முக்கியமாக வடமாடு மஞ்சுவிரட்டு, 1994 ஆம் ஆண்டு நடத்தப்படுகிறது. மஞ்சுவிரட்டு திருவிழாவின் போது பத்து காளைகள் மட்டுமே பங்கேற்கும். இது கிராம மக்களின் பழக்கம் மற்றும் நடைமுறையாகும்.
வடமாடு மஞ்சு விரட்டு நடத்த போலீசாரிடம் அனுமதி கோரினேன். ஆனால், எனது கோரிக்கையை பரிசீலிக்காமல், கொரோனா பரவல் உள்ளது என்றும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று கூறி எனது மனுவை நிராகரித்து விட்டனர்.
எனவே, பள்ளப்பட்டியில் ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் ஜூலை 15 ஆம் தேதி வடமாடு மஞ்சுவிரட்ட நடத்த அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்.'' என மனுவில் கூறி இருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பு வழக்குரைஞர் கூறுகையில், ''ஆண்டு தோறும் ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை தான் ஜல்லிகட்டு நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்க இயலும் என விதிமுறையில் உள்ளது.'' என்றார்.
இதைய்டுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''மனுதாரர் தமிழ்நாடு அரசிடம் மனு அளித்து, உரிய நிவாரணம் பெறலாம்.'' என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.