You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

அதிமுக பொதுக்குழு - உச்சநீதிமன்றத்தில் ஓ.பி.எஸ். கேவியட் மனு

அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் எங்களை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று கோரி ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. ஓ.பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியது ஏன்? - திருச்சி மாவட்ட செயலாளர் கேள்வி

    எடப்பாடி பழனிச்சாமி ஜாதி, மதம் பாராமல் பணியாற்றுவார் என நம்புகிறோம் என்று முன்னாள் எம்பி ப.குமார் தெரிவித்துள்ளார்.

    திருச்சி சுப்ரமணியபுரத்தில் அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் எம்.பியுமான ப.குமார் செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், ''ஒபிஎஸ் தான் சார்ந்த முக்குலத்தோர் சமுதாயத்திற்கு எந்த காலத்திலும் ஒரு நன்மையும் செய்ததில்லை. தற்போது அதிமுகவில் முக்குலத்தோர் சமுதாய மாவட்ட செயலாளர்கள் 19 பேர் உள்ளனர். அவர்களில் 2 பேர் தவிர மற்ற 17 பேரும் எடப்பாடியின் தலைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

    எடப்பாடி பழனிச்சாமி ஜாதி, மதம் பாராமல் பணியாற்றுவார் என நம்புகிறோம். சசிகலாவை முதல்வராக விடாமல் ஓபிஎஸ் தர்மயுத்தம் செய்தது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், 'ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டனர். 95 சதவீத அதிமுக தொண்டர்கள் இபிஎஸ் பக்கம் தான் இருக்கின்றனர்.

    வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும். ஓபிஎஸ், டிடிவி, சசிகலா சுற்றுப்பயணங்களால் அதிமுகவில் எந்த மாற்றமும் ஏற்படாது.' என்றார் ப.குமார்.

  2. அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம்: என்ன பேசப்பட்டது?

    இன்று அதிமுக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் அதிமுக அவைத் தலைவர் தமிழ் மகன் உசைன் தலைமையில் நடைபெற்றது.

    இதனையொட்டி அலுவலகத்தில் அதிமுக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

    இந்த கூட்டத்தில் பங்குபெற்ற ஜெயகுமார் செய்தியாளர்களிடம் பேசியபோது, “11ஆம் தேதி நடைபெறும் என முடிவு செய்யப்பட்டபொதுக் குழுவுக்கான அழைப்பு தபால் மூலம் விடுக்கப்படும்.

    பொதுக் குழுவில் என்னென்ன விவாதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து இந்த கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது” என்று தெரிவித்தார். விவாதிக்கப்பட்ட அம்சங்கள் குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, அதை வெளியில் சொல்லக் கூடாது என்றார்.

    மேலும் விதிகளை மீறி இந்த கூட்டம் கூட்டப்பட்டிருப்பதாக பன்னீர் செல்வம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் இது குறித்து ஜெயகுமாரிடம் கேட்டபோது, ஒருங்கிணைப்பாளர் இல்லாதபோது தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டலாம் என்றும் ஓபிஎஸ்க்கு விதிகளே தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

  3. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம்.

    நான் ஜோ மகேஸ்வரன். இது வரை க.சுபகுணம் வழங்கி வந்த, நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்

  4. ஓபிஎஸ் உருவப்படத்தை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை: அதிமுக தலைமை கழகம்

    அதிமுக தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் ஓ. பன்னீர் செல்வத்தின் உருவப் படத்தை தொண்டர்கள் கிழித்தனர்.

    இந்நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ் புகைப்படத்தை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மீண்டும் புகைப்படத்துடன் பேனர் வைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அதிமுக தலைமை கழகம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக இக்கூட்டத்தில், பொருளாளர் பதவியில் இருந்து ஓ.பி.எஸ்-ஐ நீக்க இ.பி.எஸ் தரப்பினர் திட்டம் எனவும் தகவல் வெளியானது.

  5. இலங்கை: சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா செல்ல முயன்ற 54 பேர் கைது

    சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா நோக்கிப் பயணிக்க முயன்ற 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

    மட்டக்களப்பு பகுதியில் கிழக்குக் கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இன்று, அதிகாலை 1.30 மணியளவில் நடத்தப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்களை திருகோணமலை கடற்படை தளத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவர்களை போலீஸாரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படை பேச்சாளர் பிபிசி தமிழுக்குத் தெரிவித்தார்.

    இந்த ஆண்டின் இதுவரையான காலம் வரை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்குச் செல்ல முயன்ற 9 படகுகளைக் கைப்பற்றியுள்ளதாக கடற்படை குறிப்பிடுகின்றது.

    இவ்வாறு கைப்பற்றப்பட்ட படகுகளிலிருந்த 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

  6. "என்னை இளம் கலைஞர் என்றெல்லாம் அழைப்பதில் துளியும் விருப்பமில்லை" - உதயநிதி ஸ்டாலின்

    "என்னை 3ம் கலைஞர், இளம் கலைஞர் என்றெல்லாம் அழைக்கிறீர்கள். எனக்கு இதில் துளிக்கூட விருப்பம் கிடையாது," என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  7. இந்தியாவில் ஒரே நாளில் 17,073 பேருக்கு கோவிட் தொற்று

    இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 17,073 பேருக்கு கோவிட் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இப்போதைய நிலவரப்படி, இந்தியாவில் 94,420 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

  8. ஜி7 தலைவர்களால் கேலி செய்யப்பட்ட ரஷ்ய அதிபர் புதின் – குதிரையில் இருந்தபடி எடுத்த ஒளிப்படம் காரணமா?

    ஏழு பணக்கார நாடுகளின் குழுவான ஜி7 குழுவின் தலைவர்கள் ஞாயிற்றுக்கிழமை, ஜெர்மனியில் யுக்ரேன் மீதான ரஷ்ய அதிபரின் படையெடுப்பு குறித்த பேச்சுகள் ஆதிக்கம் செலுத்திய கூட்டத்தில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் ஆஜானுபாகுவான தோற்றத்தைக் கேலி செய்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    ராய்ட்டர்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின்படி, ஜி7 தலைவர்கள் பவேரியன் ஆல்ப்ஸில் மூன்று நாட்கள் ஜி7 உச்சிமாநாட்டின் முதல் கூட்டத்திற்காகக் கூடியபோது, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுடைய ஜாக்கெட்களை கழற்ற வேண்டுமா அல்லது கூடுதலான ஆடைகளை அணிய வேண்டுமா எனக் கேட்டார்.

    “புதினை விட நாம் கடினமானவர்கள் என்பதை நாம் அனைவரும் காட்ட வேண்டும்,” என்று ஜான்சன் கூறினார். அவருடன் இருந்த சக தலைவர்கள் சிலர் அதற்குச் சிரித்தனர்.

    “வெறும் மார்புடன் குதிரை சவாரி,” என்று கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டார்.

    “ஓ ஆமாம், குதிரை சவாரி சிறந்தது,” என்று ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் கூறினார்.

    ரஷ்ய அரசு ஊடகம் வெளியிட்டுள்ள ஒளிப்படங்களில் புதினின் சில படங்கள் வெளியாகியுள்ளன. அதில் அதில் அவர் கருப்புக் கண்ணாடிகள், தங்கச் சங்கிலி மற்றும் ராணுவ கால்சட்டை அணிந்து பழுப்பு நிற குதிரையில் சவாரி செய்தது உட்பட, பலமுறை மேல்சட்டையின்றி படம் பிடிக்கப்பட்டுள்ளார்.

    மேலும், “ஜி7 தலைவர்கள் ஆயிரக்கணக்கான மக்களைப் பலியாக்கிய, லட்சக்கணக்கான மக்களை அவர்களுடைய வீடுகளில் இருந்து வெளியேற்றிய ரஷ்யாவின் யுக்ரேன் மீதான படையெடுப்பு காரணமாக, அந்நாட்டை மேலும் தனிமைப்படுத்தும் முயற்சிகள் குறித்து விவாதித்தனர். பிரிட்டன், கனடா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் தங்கள் ரஷ்ய தங்க இறக்குமதிக்குத் தடை விதிப்பதாக அறிவித்தன. ஜி7-இல் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஜெர்மனியும் அடங்கும்,” என்று அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  9. வணக்கம் நேயர்களே!

    நேயர்களுக்கு வணக்கம்!

    நான் விஷ்ணுப்ரியா ராஜசேகர். தமிழ்நாடு, இந்தியா, இலங்கை மற்றும் பிற உலக நாடுகளில் நிகழும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.