You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

"கார்ப்பரேட் வேலைவாய்ப்பில் அக்னி வீரர்களுக்கு வாய்ப்புகள்" - ஆனந்த் மஹிந்த்ரா

"தலைமைப் பண்பு, அணி செயல்பாடு போன்ற திறன்கள், அக்னி வீரர்களை சந்தையிலுள்ள தொழில்துறைகளின் தேவைக்கேற்ப தயார் நிலையில் இருக்க வைக்கிறது. இது கார்ப்பரேட் துறையில் அக்னிவீரர்களுக்குச் சிறந்த வேலை வாய்ப்பை வழங்கும்"

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. 'அக்னிபத்' திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்வது குறித்து 2 நாட்களில் அறிவிப்பு - மனோஜ் பாண்டே

    'அக்னிபத்' திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் பணி குறித்து இன்னும் இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என்று இந்திய ராணுவ ஜெனரல் மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

    ஏ. என் ஐ முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், “அக்னிபத் திட்டத்தின் கீழ் வீரர்களை தேர்வு செய்யும் பணி தொடர்பான அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வெளியிடப்படும்”, என்று தெரிவித்துள்ளார்.

    இந்த ஆண்டு டிசம்பர் மாதம், இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு பயிற்சி தொடங்கப்படும்,” என்று அவர் கூறியுள்ளார்.

  2. 'அக்னிபத்' திட்டத்தை இளைஞர்கள் நிராகரித்துள்ளனர் - ராகுல் காந்தி ட்வீட்

    மத்திய அரசு அறிவித்த ‘அக்னிபத் திட்டத்தை’ இளைஞர்கள் நிராகரித்துள்ளனர் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.

    அவர் பதிவிட்ட ட்வீட்டில் “அக்னிபத் திட்டம் - இளைஞர்கள் நிராகரித்துள்ளனர்.

    வேளாண் சட்டம் - விவசாயிகள் நிராகரித்துள்ளனர்.

    பணமதிப்பிழப்பு - பொருளாதார வல்லுநர்கள் நிராகரித்துள்ளனர். ஜி.எஸ்.டி - வியாபாரிகள் நிராகரித்துள்ளனர்.

    இந்த நாட்டு மக்களுக்கு என்ன தேவை என்று பிரதமர் புரிந்துகொள்ள மாட்டார். அவருடைய ‘நண்பர்களின்’ குரலை தவிர அவர் யாருடைய குரலுக்கும் செவி சாய்க்க மாட்டார்,” என்று பதிவிட்டுள்ளார்.

  3. அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுதும் போராட்டம்: பாஜக துணை முதல்வர் வீடு மீது தாக்குதல்

  4. சோனியா காந்தி சிகிச்சை குறித்து காங்கிரஸ் கட்சி விளக்கம்

    காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தியின் சிகிச்சை குறித்து அக்கட்சியின் தகவல் தொடர்புப் பொதுச் செயலாளரான ஜெய்ராம் ரமேஷ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், சோனியா காந்திக்கு கடந்த ஜூன் 12ம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவர் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு சுவாசக்குழாயில் பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா தொற்று அறிகுறிகளுக்கான சிகிச்சையுடன், பூஞ்சை தொற்றுக்கும் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு சோனியா காந்தி ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இதனையடுத்து, அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், அவ்வழக்கு விசாரணைக்கு ஆஜராக மூன்று வார கால அவசாகம் அளிக்கப்பட்டுள்ளது.

  5. வணக்கம் நேயர்களே!

    நான் எம். ஆர். ஷோபனா. இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலையை இனி நான் தொகுத்து வழங்கவுள்ளேன். உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவிலான முக்கிய செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

  6. நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு: நிராகரித்த உயர் நீதிமன்றம் - காரணம் என்ன?

  7. சேலத்தில் போட்டிப் போட்டுக்கொண்டு சுவரொட்டிகள் ஒட்டும் இபிஎஸ்-ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

    அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்ற சர்ச்சை எழுந்துள்ள நிலையில், சேலத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களும் ஓபிஎஸ் ஆதரவாளர்களும் போட்டிப் போட்டுக்கொண்டு சுவரொட்டிகள் ஒட்டி வருகின்றனர்.

    சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'அதிமுகவின் சாதாரண தொண்டன் விருப்பம், ஒற்றை இலக்கு திமுகவை வீழ்த்துவது; ஒற்றைத் தலைமை எடப்பாடி ஐயா; கழகம் வாழ்வது யாரால்? கழகம் வீழ்ந்தது எவரால்? தொண்டர்கள் சிந்தியுங்கள்' என்ற வாசகங்கள் இந்த சுவரொட்டிகளில் இடம்பெற்றுள்ளன.

    இதற்கு பதிலடியாக ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், 'அம்மாவால் அடையாளம் காணப்பட்ட கழக பாதுகாவலரே... ஒற்றைத்தலைமையை ஏற்று கழகத்தை வழி நடத்திட வாருங்கள்... இப்படிக்கு சேலம் மாவட்ட, மாநகர கழக உண்மை விசுவாசிகள்' என்ற வாக்கியங்கள் இடம் பெற்றுள்ளன. சேலம் மாநகரின் பல்வேறு பகுதிகளில் இது போன்ற போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

  8. குழந்தைகளுடன் தனுஷ்கோடி தப்பி வந்த இலங்கை தமிழர்கள்

    இலங்கை ராணுவத்துக்கு பயந்து பத்து மணிநேரத்துக்கு மேலாக மன்னார் காடுகளில் மறைந்து இருந்து குழந்தைகளுடன் இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி வந்துள்ளனர்.

    இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக இரு நாட்டு கடற்படை பாதுகாப்பையும் மீறி நேற்று நள்ளிரவில் வவுனியா மற்றும் திருகோணமலை பகுதிகளிலிருந்து இரண்டு குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள், பெண்கள் உட்பட 7 இலங்கை தமிழர்கள் தனூஷ்கோடி அரிச்சல் முனைப்பகுதிக்கு பைபர் படகில் வந்து இறங்கினார்கள்.

    இலங்கை ராணுவத்தின் கைது நடவடிக்கைக்கு பயந்து மன்னார் காடுகளில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக இருளில் பதுங்கியிருந்து உயிர் தப்பி வந்ததாகவும், காடுகளில் மறைந்து இருந்த போது கை கால்களில் காயம் பட்டதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

    மேலும், தனது குழந்தையின் தொண்டை அறுவை சிகிச்சைக்கு ரூபாய் 5 லட்சம் செலவாகும் என்பதால் தமிழ்நாடு முதலமைச்சர் என் குழந்தையை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் தமிழகம் வந்ததாகவும் தெரிவித்தனர்.

    மத்திய மாநில உளவுத் துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளின் விசாரணைக்குப் பின்னர் இவர்கள் 7 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த மார்ச் மாதம் 22-ஆம் தேதி முதல் இன்றைய தினம் வரை இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக 25 குடும்பத்தை சேர்ந்த 90 இலங்கை தமிழர்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

  9. நடிகர் ரஜினிகாந்தின் 169வது படத்தின் பெயர் 'ஜெயிலர்'

    அண்ணாத்தே படத்திற்குப் பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் 'ஜெயிலர்' என அறிவிக்கப்பட்டுள்ளது.

    சிவா இயக்கத்தில் ரஜினி நடித்த 'அண்ணாத்தே' கடந்த நவம்பர் 4ஆம் தேதி வெளியானது. இதற்குப் பிறகு ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை நெல்சன் இயக்குவார் என்று மட்டும் அறிவிக்கப்பட்டிருந்தது.சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் பெயர் ஜெயிலர் என தற்போது தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, தங்களை விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்குகள் தள்ளுபடி

    ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்ட நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுவிக்க வேண்டுமென தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. அவர்களை விடுவிக்க தாங்கள் உத்தரவிட முடியாது என்றுகூறி அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

  11. உசிலம்பட்டி: சாலையோரம் வீசிய பச்சிளம் குழந்தையை நாய்கள் கடித்து கொன்றதா?

  12. அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் தொடரும் போராட்டம்

    அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் போராட்டம் தொடர்ந்துவருகிறது.

    அம்மாநிலத்தின் பெகுசாராய் மாவட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் ரயில் தண்டவாளத்தின் நடுவே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், போராட்டக்காரர்கள் டயர் ஒன்றையும் தண்டவாளத்தில் வைத்து எரித்துள்ளனர்.

    பிகாரின் லக்மினியா ரயில் நிலையத்தில் காலியாக இருந்த ரயில் பெட்டிக்குத் தீ வைத்ததாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அதேபோன்று உத்தர பிரதேசத்தின் பாலியா ரயில் நிலையத்திலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாலியா ரயில் நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலர் காலியாக இருந்த ரயில் பெட்டிக்கு தீவைத்ததாக, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.கே.நய்யார் தெரிவித்துள்ளார்.

    அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நேற்றும் போராட்டம் நடைபெற்றது.

  13. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 12,847 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 12,847 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 14 பேர் உயிரிழந்துள்ளனர். 7,985 பேர் குணமடைந்துள்ளனர். தற்போதுவரை 63,063 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தினசரி தொற்று விகிதம் 2.47 சதவீதமாக உள்ளது.

    அதேபோன்று, தமிழ்நாட்டில் நேற்று ஒரு நாளில் 552 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதுவரை 2,313 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும் மருத்துவமனைகளிலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 177 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு இல்லை.

  14. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • அதிமுகவில் ஒற்றைத்தலைமை என்பது தற்போதைய சூழ்நிலையில் தேவையில்லை என்று கூறியிருக்கிறார் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்.
    • அதிமுகவில் இரட்டைத் தலைமையே நீடிக்க வேண்டும் என்றும், ஒற்றைத் தலைமை ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் எனவும் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
    • அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பிகாரில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டின் வேலூர் மாவட்டத்திலும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி தலைமையில் நேற்று காங்கிரஸ் கட்சியினர் சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்தித்து முறையிட்டனர்.
    • இந்தியாவில் நேற்று 12,213 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
    • ஜூன் 23ஆம் தேதி சென்னையில் நடக்கவிருக்கும் அ.தி.மு.கவின் பொதுக் குழுவுக்குத் தடை விதிக்க வேண்டும் எனக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உரிமையியல் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
    • உத்தர பிரதேச மாநிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டவர்களின் வீடுகள் புல்டோசர் வைத்து இடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அம்மாநில அரசிடம் விளக்கம் கேட்டுள்ளது.