You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்களுக்கு மிரட்டல் விடுத்ததாக, புதுக்கோட்டை இளைஞரிடம் விசாரணை

உத்தரப்பிரதேசம், கர்நாடக மாநிலங்களில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகங்களை தகர்க்க போவதாக மிரட்டியதாக, புதுக்கோட்டையைச் சேர்ந்த இளைஞரிடம் லக்னௌ காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. நூபுர் ஷர்மா சர்ச்சை பேச்சு: காவல் துறை சம்மன் அனுப்பியது

    சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நூபுர் ஷர்மா வரும் 22ம் தேதி வாக்குமூலம் அளிக்க காவல் துறை சம்மன் அனுப்பியுள்ளது.

    முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக, பாஜக செய்தித் தொடர்பாளர்நூபுர் ஷர்மா, அக்கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இதுதொடர்பான வழக்கில் நூபுர் ஷர்மா மீது முதல் தகவல் அறிக்கை ( எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், நூபுர் ஷர்மா வரும் 22ம் தேதி தனது வாக்குமூலத்தை அளிக்க மும்பை காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  2. பஞ்சாபில் கொல்லப்பட்ட பாடகர் வீட்டிற்கு சென்ற ராகுல் காந்தி - குடும்பத்தினருக்கு ஆறுதல்

    பஞ்சாபில் சுட்டுக் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலா வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி ஆறுதல் தெரிவித்தார்.

    பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்வாலா கடந்த 29ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    பஞ்சாப் அரசு சனிக்கிழமை (மே 28) அன்று மத, அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என மொத்தம் 424 விஐபிக்களுக்கு அளித்துவந்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டது அல்லது பாதுகாப்பை குறைத்துக்கொண்டது.

    அவ்வாறு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டவர்களில் சித்து மூஸ்வாலாவும் ஒருவர். இந்த நடவடிக்கைக்கு மறு நாள் சித்து மூஸ்வாலா கொல்லப்பட்டது கடும் விமர்சனத்திற்குள்ளானது.

    இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் மான்சா பகுதியில் உள்ள சித்து மூஸ்வாலா வீட்டிற்கு, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இன்று சென்றார். அவரது உருவ படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

  3. தென் ஆப்ரிக்காவின் குப்தா சகோதரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது – யார் இவர்கள்?

  4. சிவகளை அகழாய்வு: சங்க கால செங்கல் கட்டுமானம் கண்டுபிடிப்பு

    தூத்துக்குடி மாவட்டம் சிவகளையில் நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில், சங்க கால செங்கல் கட்டுமானம் கண்டறியப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த மார்ச் மாத இறுதியில், மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கியது. சுமார் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் நடைபெற்று வரும் அகழாய்வு பணியில், சிவகளை பரம்பு, ஸ்ரீ மூலக்கரை பகுதியில் இறந்தவர்களை அடக்கம் செய்த இடத்தையும், ஸ்ரீ பராக்கிரம பாண்டி திரடு, பொட்டல்கோட்டை திரடு பகுதியில் முன்னோர்களின் வாழ்விடப் பகுதிகளை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதற்காக, தற்போது வரை 18 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் சிவகளை பரம்பு மற்றும் ஸ்ரீமூலக்கரையில், இதுவரை முதுமக்கள் தாழிகள் 35 கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

    மேலும் ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு பகுதியில், சுடுமண்ணால் செய்யப்பட்ட வட்டசில்கள், தக்களி சாதனம், புகைப்பான், ஆட்டக்காய்கள், பாசி மணிகள் வளையல் துண்டுகள், காதணிகள், எலும்பால் செய்யப்பட்ட கூர்முனைக்கருவிகள், முத்திரைகள் உள்பட 80 தொல்லியல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    இதனிடையே, சங்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்று கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் இதே போல், கொற்கை பகுதியில் செங்கல் கட்டுமான அமைப்பு கண்டறியப்பட்டது.

  5. எஞ்சிய 2 ஆண்டுகள் ஆட்சி செய்த பிறகே பதவி விலகுவேன்: இலங்கை ஜனாதிபதி கோட்டாபய

  6. சிதம்பரம் நடராஜர் கோயிலில் அறநிலையத் துறை ஆய்வு - ஆட்சேபனை தெரிவித்த தீட்சிதர்கள்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை குழுவினர் ஆய்வு செய்ய, தீட்சிதர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் நிர்வாக ரீதியான அலுவல் ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை குழு கோயிலுக்கு சென்றனர். அவர்களுக்கு கோயில் சார்பில் தீட்சிதர்கள் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    பின்னர் ஆய்வு தொடர்பான ஆவணங்கள் மற்றும் தணிக்கை விவரங்களை அதிகாரிகள் கோயில் தீட்சிதர்களிடம் கேட்டனர். அப்போது தீட்சிதர்கள் குழு சார்பில் வழக்குரைஞர் சந்திரசேகர், 'சட்ட ரீதியான விதிமுறைகளை மேற்கொள் காட்டி,சட்ட ரீதியாக அனுமதி பெற்று ஆய்வு மேற்கொள்ளுமாறு' தெரிவித்தார்.

    இது குறித்து தீட்சிதர்கள் சார்பில் பேட்டியளித்த வழக்கறிஞர் சந்திரசேகர், "1959 சட்டத்தின் 107வது பிரிவின் வெளிச்சத்தில் மேலே குறிப்பிட்டுள்ள நீதித்துறை உத்தரவுகளுடன் படித்தால் அறநிலைத்துறை அல்லது அதன் அதிகாரிகளுக்கு தானாகவே பதிவுகளை அழைக்கவும் அல்லது ஆய்வு செய்யவோ அத்தகைய அதிகார வரம்பு இல்லை. இந்து சமய கோயில் விருப்பப்படி, எங்கள் சட்டத்தின் விதிகளின்படி அனைத்து கணக்குகளையும் மற்ற பதிவுகளையும் நாங்கள் பராமரிக்கிறோம். தணிக்கையின் அதிகார வரம்பை கொண்ட செல்லுபடியாகும் வகையில் அமைக்கப்பட்ட குழுவிற்கு முழு ஒத்துழைப்பை வழங்குதல், எங்கள் நோக்கமாக உள்ளது.," என தெரிவித்தார்

    இந்து அறநிலையத் துறை விசாரணைக்குழு, 'இது சம்பந்தமாக ஆலோசனை செய்து வருகிறோம் இன்னும் ஆய்வு முடியவில்லை, ஆய்வு முடிந்த பிறகு விவரங்களை தெரிவிப்போம்'என்றனர்.

    ஆய்வுக் குழுவில், , விசாரணை குழு ஒருங்கிணைப்பாளராக, ஆலய நிலங்களுக்கான கடலூர் துணை ஆணையர்சி.ஜோதி உள்ளார். பழனி திருக்கோயில் இணை ஆணையர் நடராஜன், வேலூர் மாவட்ட இணை ஆணையர் லட்சுமணன், பெரம்பலூர் உதவி ஆணையர் அரவிந்தன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

  7. தொடர்ந்து இணைந்திருங்கள்

    வணக்கம். நான் ஜோ மகேஸ்வரன்.

    இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் தொகுத்து வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.

  8. இலங்கையில் தடுத்து வைக்கப்பட்ட ரஷ்ய விமானம்: பின்னர் நீக்கப்பட்ட தடை

    இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏரோபுளோட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், நேற்று மாலை 6 மணிக்கு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரஷ்யா நோக்கி பயணித்தது.

  9. இலங்கை அமைச்சர்கள் ஒரு ஆண்டுக்கு சம்பளத்தை பெறாதிருக்க தீர்மானம்

    எதிர்வரும் ஓராண்டு காலத்திற்கு சம்பளத்தை பெற்றுக்கொள்ளாமல் கடமையாற்ற அனைத்து இலங்கை அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

    அமைச்சரவை கூட்டத்தில் நேற்றைய தினம் இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அனைத்து அமைச்சர்களும் இணக்கம் தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

    இலங்கையின் நாளொன்றின் வருமானம் 4 பில்லியனாக காணப்படுகின்ற நிலையில், நாளொன்றின் செலவீனமாக 9.6 பில்லியன் ரூபாய் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், நாடு நாளாந்தம் பாரியளவிலான நிதி நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

    இதனை கருத்தில்கொண்டு, எதிர்வரும் ஓராண்டு காலத்திற்கு அனைத்து அமைச்சர்களும் சம்பளத்தை பெற்றுக்கொள்ளாதிருக்கும் வகையில், பிரதமரினால் அமைச்சரவை பத்திரமொன்று நேற்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளது. #

    இந்த அமைச்சரவை பத்திரத்திற்கு அமைய, இலங்கை அமைச்சர்கள் எதிர்வரும் ஓராண்டு காலத்திற்கு சம்பளத்தை பெற்றுக்கொள்ளாது பணியாற்ற இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

  10. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,714 பேருக்கு கொரோனா தொற்று

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,714 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 2,513 பேர் குணமடைந்துள்ளனர்.

    தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோரின் மொத்த எண்ணிக்கை: 26,976

  11. பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவியை தக்க வைத்தார் - நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி

    பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றார். அவருடைய தலைமைத்துவத்திற்கு எதிராக சொந்த கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்தபோதும் அவர் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளார். இருப்பினும் அவரின் அதிகாரம் வலுவிழந்திருப்பதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

    திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 59 சதவீத வாக்குகளை பெற்று போரிஸ் ஜான்சன் தன் பதவியை தக்க வைத்துள்ளார்.

    நம்பிக்கை வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சனின் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த மொத்தம் உள்ள 359 எம்.பிக்களில், 211 எம்.பி.க்கள் போரிஸ் ஜான்சனுக்கு ஆதரவாகவும் 148 எம்.பிக்கள் அவருக்கு எதிராகவும் வாக்களித்தனர்.

  12. நூபுர் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்ப மும்பை காவல்துறை திட்டம்

    முகமது நபி குறித்து சர்ச்சை கருத்து கூறியதாக, பாஜகவிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட நூபுர் ஷர்மாவுக்கு சம்மன் அனுப்பி, அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மும்பை காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளதாக, பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    ஏற்கெனவே இதுதொடர்பான வழக்கு ஒன்றில் நூபுர் ஷர்மா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  13. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கியமான செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • இந்திய அரசு எல்லா மதங்களையும் உச்சபட்ச மரியாதையுடன் நடத்துகிறது. மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய நபருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
    • மேற்கு வங்கத்தில் முதலமைச்சரே மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக இருக்க வேண்டும் என்று அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
    • மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அது நான்காவது அலையாக இருக்கலாம் என, அம்மாநில அமைச்சர் ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.
    • தனக்கும் தன் தந்தைக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக, பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
    • நைஜீரியாவில் தேவாலயத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட 50 பேர் கொல்லப்பட்டனர்.
    • இலங்கை நீதிமன்ற உத்தரவையடுத்து, தடுத்து வைக்கப்பட்டிருந்த ரஷ்ய விமானம் நேற்று மாலை புறப்பட்டுச் சென்றது.
    • இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் இன்று நடைபெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். கடந்த 4 நாட்களில், நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகங்களில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்