தமிழ்நாட்டில் பாஜக மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது - அன்புமணி ராமதாஸ் பேட்டி

தமிழ்நாட்டில் பாஜக முழுமையாக வரவில்லை. அவர்கள் ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகின்றனர். தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி பாமக தான் என்று முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று பாட்டாளி மக்கள் கட்சி தலைவர், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'நீட் பயிற்சி மையம் என்கிற பெயரில் வணிகம் செய்து வருகிறார்கள். இதன் மூலன் ஆண்டிற்கு 1 லட்சம் கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்படுகிறது. நீட் தேர்வு காரணமாக தமிழ்நாட்டில் 60 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இந்தியாவில் எந்த மாநிலத்தில் இது போல் இல்லை.
மற்ற மாநிலங்களை நீட் தேர்வு முறையாக நடக்கவில்லை. தமிழ்நாட்டு மாணவர்கள் நேர்மையாக, நியாயமாக எழுதுவதால்தான், தேர்ச்சி பெற முடியவில்லை.' என்றார்.
மேலும், 'பாஜக இந்தியாவிலேயே பெரிய கட்சி. தமிழ்நாட்டைப் பொருத்தவரை, அது வளர்ந்து வரும் கட்சிதான். குறிப்பாக கன்னியாகுமரி உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் அதிக வாக்குகளை பெற்றுள்ளனர். அதுவும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தான்.
தமிழ்நாட்டில் பாஜக முழுமையாக வரவில்லை. அவர்கள் ஒரு மாய தோற்றத்தை உருவாக்குகின்றனர். தமிழ்நாட்டில் உண்மையான எதிர்க்கட்சி பாமக தான்.
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி எனக்கு மிகவும் பிடித்த தலைவர். சமூக நீதிக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியவர். இதன் மூலம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தவர். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கருணாநிதி இருவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கிறேன்.' என்றார் அன்புமணி ராமதாஸ்.


