You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

புதிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோதி

பிரதமர் நரேந்திர மோதி இன்று சென்னைக்கு வருகை தந்துள்ளார். அவரை ஆளுநர் ஆர்.என் ரவி, அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

எம்.ஆர். ஷோபனா

  1. டெடி பியர் பொம்மை வெடித்ததில் பார்வை இழந்த மணமகன் – என்ன நடந்தது?

    குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் உள்ள மின்தாபரி கிராமத்தில் நடந்த திருமண விழா ஒன்றில் டெடி பியர் பொம்மை பரிசளிக்கப்பட்டது. ஆனால், அந்த பொம்மை திடீரென வெடித்ததில் மணமகனின் இரு கண்களிலும் பார்வை பறிபோனதோடு இடது மணிக்கட்டும் துண்டிக்கப்பட்டது.

    என்ன நடந்தது? இந்த காணொளியைப் பாருங்கள்.

  2. சமூக ஊடகங்களில் ட்ரெண்ட் ஆகும் GoBackModi - உங்கள் கருத்து என்ன?

    தொடர்ச்சியாக GoBackModi ஹேஷ்டேக் ட்ரெண்டாவதன் பின்னணியில் இருப்பது அரசியலா? சாமானிய மக்களா?

    பிபிசி தமிழின் ட்விட்டர் பக்கத்தில் உங்களின் கருத்துகளைத் தெரிவிக்கவும்.

  3. தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோதியை வரவேற்று ஆளுநர் ட்வீட்

    பிரதமர் நரேந்திர மோதி இன்று மாலை சென்னைக்கு வருகை தரவுள்ள நிலையில், அவரை வரவேற்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.

    அதில், "மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோதி அவர்களை கோடிக்கணக்கான ஏழைகள், விளிம்புநிலை மற்றும் இளைஞர்களுக்கு உதவிய அவரது துணிச்சலான நல்வாழ்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு தமிழக மக்கள் தங்கள் நன்றியை தெரிவித்து மனதார வரவேற்கின்றனர்", என்று அவர் தெரிவித்துள்ளார்.

  4. மாமல்லபுரம் கோவில் செயல் அலுவலர் உட்பட 2 பேர் பணியிடை நீக்கம்

    பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாக மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோவிலின் செயல் அலுவலர் சிவ சண்முகம் மற்றும் சமையல் செய்யும் பெண் ஊழியர் குமாரி இருவரையும் அறநிலைத்துறை அதிகாரி குமரகுருபர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

    செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் தளமான தலசயனப் பெருமாள் கோவிலில், நரிக்குறவர் இன மக்கள் உட்பட பலரையும் தரையில் அமரவைத்து அன்னதானம் வழங்கி வந்தது திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி அவர்களுக்கு தகவல் தெரிந்தவுடன் நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த விவகாரத்தில் அவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  5. வணக்கம் நேயர்களே!

    நான் எம். ஆர். ஷோபனா. இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிய நேரலையை இனி நான் தொகுத்து வழங்கவுள்ளேன். உலகம், இந்தியா மற்றும் தமிழக அளவிலான முக்கிய செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

  6. விசா முறைகேடு விவகாரம் - எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை

    விசா முறைகேடு விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணையை தொடங்கியது.

    முன்னதாக, அவர் செவ்வாய்கிழமையன்று (மே 24) வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்பினார். மேலும், சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கியதாக கூறப்படும் விவகாரத்தில், தனக்கு சம்பந்தமில்லை என்று கூறி, தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டார்.

    கடந்த மே 17ஆம் தேதியன்று, இந்த விவகாரம் தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளிலும் அவர்களுடன் தொடர்புடைய அலுவலகங்களிலும் சிபிஐ சோதனை நடத்தியது.

    இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பான விசாரணைக்காக கார்த்தி சிதம்பரம், சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்திற்கு வந்தார். அப்போது, சீனர்களுக்கு முறைகேடாக விசா வழங்கியதாக கூறப்படும் விவகாரத்தில், தனக்கு சம்பந்தமில்லை என அவர் கூறியதாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.

  7. சென்னை பாஜக நிர்வாகி கொலை: சேலத்தில் கைதான 4 பேர்

    சென்னையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், சேலம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    மத்திய சென்னை பாஜகவின் எஸ்.சி/எஸ்.டி அணியின் தலைவராகப் பதவி வகித்து வந்த பாலச்சந்தர், கடந்த 24 ஆம் தேதி இரவு 7.45 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சாமிநாயக்கன் தெருவில் நின்றிருந்தபோது, சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    இந்த வழக்கில் நான்கு தனிப்படைகளை அமைத்து, தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர். இதில், பாலச்சந்தரை வீட்டில் இருந்து வெளியே வரவழைத்த கலைவாணன், பிரதீப், சஞ்சய் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் பிரதீப் என்பவர் கடந்த 20ஆம் தேதிதான் குற்ற வழக்கில் இருந்து சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

    முன்னதாக, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆயத்த ஆடையகம் ஒன்றில் பிரதீப் தரப்பினர் துணி வாங்கிவிட்டு பணம் தராமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் துணிக்கடை உரிமையாளருக்கு ஆதரவாக பாலச்சந்தர் செயல்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    சிறையில் இருந்து வந்த பிறகும் போலீஸை வைத்து பாலச்சந்தர் மிரட்டுவதாகக் கருதிய கும்பல், அவரைக் கொலை செய்துவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேர், சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் தங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று இன்று அவர்களைக் கைது செய்தனர். பிரதீப், கலைவாணன், சஞ்சய் ஆகியோருடன் ஜோதி என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.

  8. ஜி ஸ்கொயர் விவகாரம்: ஜூனியர் விகடன் இதழின் இயக்குனர் பெயர் நீக்கம்

  9. இந்தியாவில் 2,628 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,628 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 15,414ஆக உள்ளது.

  10. 2500 ஆண்டுகளாக இலங்கையை இந்தியா நாசமாக்கியுள்ளது: முன்னாள் கணக்காய்வாளர்

  11. பிரதமர் மோதி இன்று சென்னை வருகை - ட்ரெண்டாகும் 'GoBackModi'

    அரசு விழாவில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி இன்று சென்னை வருகிறார். மத்திய, மாநில அரசுத் துறைகளின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்ட உள்ளார். மேலும், முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கவும் உள்ளார். இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமரின் வருகையையொட்டி சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பிரதமர் நரேந்திர மோதி முதல்முறையாக அரசு முறை பயணமாக இன்று சென்னை வருகிறார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில், சமூக வலைதளங்களில் 'Go Back Modi' ட்ரெண்டாகி வருகிறது.

  12. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.

    நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள யுவால்டே பகுதியில் தொடக்கப்பள்ளி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் 18 குழந்தைகள் உட்பட இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளனர் என்று டெக்சாஸ் மாகாண காவல்துறை தெரிவித்துள்ளது.
    • இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமான 'ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி' தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.
    • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் அக்கட்சியிலிருந்து விலகியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
    • இலங்கையின் நிதி, பொருளாதார ஸ்திரதன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று சத்திய பிரமாணம் செய்துகொண்டார்.
    • ராமேஸ்வரத்தில் கடற்பாசி சேகரிக்கும் தொழிலுக்கு சென்ற மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் சிலர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து பின், எரித்துக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டப்படும் சம்பவம் அங்கு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • விசா முறைகேடு விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக பி.டி.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.