சென்னையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், சேலம் மாவட்டத்தில் பதுங்கியிருந்த நான்கு பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
மத்திய சென்னை பாஜகவின் எஸ்.சி/எஸ்.டி அணியின் தலைவராகப் பதவி வகித்து வந்த பாலச்சந்தர், கடந்த 24 ஆம் தேதி இரவு 7.45 மணியளவில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள சாமிநாயக்கன் தெருவில் நின்றிருந்தபோது, சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் நான்கு தனிப்படைகளை அமைத்து, தொடர்புடையவர்களை போலீசார் தேடி வந்தனர். இதில், பாலச்சந்தரை வீட்டில் இருந்து வெளியே வரவழைத்த கலைவாணன், பிரதீப், சஞ்சய் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இவர்களில் பிரதீப் என்பவர் கடந்த 20ஆம் தேதிதான் குற்ற வழக்கில் இருந்து சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.
முன்னதாக, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஆயத்த ஆடையகம் ஒன்றில் பிரதீப் தரப்பினர் துணி வாங்கிவிட்டு பணம் தராமல் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் துணிக்கடை உரிமையாளருக்கு ஆதரவாக பாலச்சந்தர் செயல்பட்டுள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சிறையில் இருந்து வந்த பிறகும் போலீஸை வைத்து பாலச்சந்தர் மிரட்டுவதாகக் கருதிய கும்பல், அவரைக் கொலை செய்துவிட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய 4 பேர், சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடியில் தங்கியுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்று இன்று அவர்களைக் கைது செய்தனர்.
பிரதீப், கலைவாணன், சஞ்சய் ஆகியோருடன் ஜோதி என்ற நபரையும் போலீசார் கைது செய்தனர்.