You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன்: இந்தியாவின் சிந்து அரையிறுதிக்கு முன்னேற்றம்
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை சிந்து உலகின் முதல் நிலை வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார்.
நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு
ஜோ மகேஸ்வரன்
புழுதியில் மறைந்த துபாய் கட்டடங்கள்- காற்று மாசின் பாதிப்புகளை விளக்கும் காணொளி
துபாய் உள்ளிட்ட நாடுகளில் கால நிலை மாற்றத்தினால் வானிலையில் சீரற்ற தன்மை நிலவுகிறது. இதனால், மத்திய கிழக்கு நாடுகள் மணற் புயலினால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில், உலகின் மிக உயரமான புர்ஜி கலிபா கட்டடமே கண்ணுக்கு தெரியவில்லை என்கிறார்கள். இது குறித்து விளக்கும் காணொளியைப் பாருங்கள்.
இந்திய ரயில்வே தனியார் மயமாக்கப்படாது - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்
இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சென்னை ரயில்பெட்டித் தொழிற்சாலை(ஐ.சி.எப்)யில் இன்று ஆய்வு செய்தார். அப்போது, அங்கு பணியாற்றும் தொழிலாளர்களைச் சந்தித்து, பணிகளை கேட்டறிந்தார். வந்தே பாரத் ரயில்கள் சிறப்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறி கைதட்டி, பாராட்டு தெரிவித்தார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அப்போது செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்திய ரயில்வே துறையை உலக தரத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும் என்பதே பிரதமரின் நோக்கமாக உள்ளது. அந்தவகையில், சென்னை ஐ.சி.எப்பில் தயாரிக்கப்படும் வந்தே பாரத் ரயில்கள், உலகத்தரம் வாய்ந்தவையாக இருப்பது பெருமைக்குரியதாக உள்ளது.'' என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், 'ரயில்வே துறையை தனியார்மயமாக்கும் திட்டம் இல்லை. ரயில்வே துறையை மேம்படுத்தி, தரமான சேவையைத் தொடர வேண்டும் என்பதில் கவனமாக உள்ளோம். ரயில் நிலையங்களில் பணியாற்றும் ரயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் அந்தந்த மாநில மொழி கற்க வேண்டும். இதன்படி, தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே ஊழியர்கள் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரம் முன் ஜாமீன் கோரி மனு தாக்கல்
முறைகேடாக விசா வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்கக் கோரி காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு முறைகேடாக விசா வழங்கியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்.பியுமான கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த விவகாரத்தில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரின் வீடுகளிலும் அவர்களுடன் தொடர்புடைய அலுவலகங்களிலும் மே 17ஆம் தேதி சிபிஐ சோதனை நடத்தியது. இதையடுத்து சென்னையைச் சேர்ந்த ஆடிட்டர் பாஸ்கரராமன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், முன் ஜாமீன் வழங்கக் கோரி கார்த்திக் சிதம்பரம் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் என்று ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இலங்கை முதல் முறையாக கடன் கட்ட முடியாத நிலைக்கு சென்றது
உதகை: 124வது மலர் கண்காட்சி தொடங்கியது
உதகமண்டலத்தில் 124வது மலர்க் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு, உதகமண்டலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் மலர் கண்காட்சி கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை.
இந்நிலையில், 124வது உதகை மலர் கண்காட்சி இன்று தொடங்கி வரும் 25ம் தேதி வரை நடைபெறுகிறது. இத்துடன் உதகமண்டலம் தோற்றுவிக்கப்பட்டதன் 200வது ஆண்டும், தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். மலர் கண்காட்சியில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தோட்டக்கலைத் துறையின் மலர் அலங்காரங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு வனத்துறை தோட்டக்கலைத் துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பழங்குடியின மக்களால் உருவாக்கப்பட்ட கலைப்பொருட்கள், மதிப்பு கூட்டப்பட்ட வேளாண் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், தமிழ்நாடு அரசின் மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக மலர்களால் மஞ்சப்பை உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஜி 7 நாடுகள் கடனுதவி - பிரதமர் ரணில் வரவேற்பு
இலங்கைக்கு கடனுதவி வழங்குவதாக ஜி 7 நாடுகள் அறிவித்துள்ளதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றுள்ளார்.
இலங்கை பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ''இலங்கை கடன் நிவாரண உதவிகளை வழங்குவதாக ஜி-7 நாடுகள் அறிவித்துள்ளன. அதனை நான் வரவேற்கிறேன்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு சர்வதேச நாடுகளின் தொடர்ச்சியான பங்களிப்பு மிகமுக்கியமான ஒன்றாகும்.'' என்று தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழர்கள் உண்ணாவிரதப் போராட்டம் - திருச்சி சிறப்பு முகாமில்
திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் 10க்கும் மேற்பட்டவர்கள் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயன்றது, சட்ட விரோத குடியேற்றம் உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 100க்கும் மேற்பட்டவர்கள் தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர்.
இந்நிலையில், சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் எப்ஸிபன், கன்பூசியஸ், ரெஜிபன், ப்ரணவன், சவுந்தரராஜன் 10க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''தங்கள் மீதான வழக்குகள் முடிந்தும், 3 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பு முகாம் எனும் சிறையில் அடைத்துள்ளனர்.
சட்டப்படி எங்களை விடுதலை செய்ய வேண்டும். அதுவரை உண்ணாநிலை அறப்போராட்டத்தை தொடர்வோம். இப்போது 10க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளோம். மற்றவர்களும் பங்கேற்கும் தொடர் போராட்டத்தை நடத்த உள்ளோம்'' என்று தெரிவித்தனர்.
இந்திய பிரதமர் தேசத்தை பாதுகாக்க வேண்டும் - ராகுல் காந்தி
இந்திய ''பிரதமர் தேசத்தைப் பாதுகாக்க வேண்டும்" என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னள் தலைவரும் எம்.பியுமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பதிவில்,
''சீனா பாங்காங்கில் முதல் பாலத்தை கட்டுகிறது.
இந்திய அரசு: நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம்.
சீனா பாங்காங்கில் இரண்டாவது பாலத்தைக் கட்டுகிறது.
இந்திய அரசு: நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம்.
இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு விவாதத்திற்கு அப்பாற்பட்டது. துணிச்சலற்ற பதிலடி பயன்படாது. பிரதமர் தேசத்தை பாதுகாக்க வேண்டும்.'' என்று தெரிவித்துள்ளார்.
படகுகளை விடுவிக்க கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம்
இலங்கை வசமுள்ள படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், காரைக்கால் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2018 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டுள்ள, விசைப்படகு மற்றும் நாட்டுப் படகுகளை உடனடியாக மீட்டு தர வேண்டும்.
இதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், உற்பத்தி விலையில் மீனவர்களுக்கு டீசல் வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசால் மீனவர்களுக்கு வழங்கப்படும் மானிய டீசலை உயர்த்தி வழங்க வேண்டும்.
மக்களவை உறுப்பினராக மீனவ சமுதாயத்தை சேர்ந்தவருக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று காலை தொடங்கிய இந்த உண்ணாவிரதப் போராட்டம் நாளை மாலை வரை தொடர்ந்து நடைபெறும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை என்றால், தொடர் பேராட்டங்கள் நடத்தப்படும் என மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
தொடர்ந்து இணைந்திருங்கள்
வணக்கம்.
நான் ஜோ மகேஸ்வரன். இதுவரை நந்தினி வெள்ளைச்சாமி தொகுத்து வழங்கிய நேரலைப் பக்கத்தை இனி நான் வழங்குகிறேன். தொடர்ந்து இணைந்திருங்கள்.
தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
குறிப்பாக, இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்
மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப முயற்சி - பிரதமர் மோதி
மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப முயற்சிகள் நடப்பதாக, இந்திய பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளதாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் பாஜக தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோதி,
“கடந்த சில நாட்களாக, மொழி அடிப்படையில் சர்ச்சைகளை கிளப்ப முயற்சிகள் நடப்பதை பார்க்கிறோம். பாஜக ஒவ்வொரு பிராந்திய மொழியிலும் இந்திய கலாசாரத்தின் பிரதிபலிப்பை காண்கிறது.
மேலும், அவற்றை வணங்குவதற்கு உரியதாக கருதுகிறது. தேசிய கல்விக் கொள்கையில், ஒவ்வொரு பிராந்திய மொழிக்கும் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்” என்றார்.
சரணடைய கால அவகாசம் கோரும் நவ்ஜோத் சிங் சித்து
தான் சரணடைய இன்னும் சில வாரங்கள் கால அவகாசம் வேண்டும் என, உச்ச நீதிமன்றத்தில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்து கோரியுள்ளார். தன் உடல்நலத்தைக் காரணம் காட்டி சித்து கால அவகாசம் கோரியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் இன்று நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு, நவ்ஜோத் சிங் சித்து தரப்பில் வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, சித்துவின் உடல்நிலையை காரணம் காட்டி, கால அவகாசம் கோரினார்.
இதுகுறித்து மனு தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 1988ம் ஆண்டு சாலையில் ஏற்பட்ட தகராறில் சித்து தாக்கியதில் ஒருவர் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கின் சீராய்வு மனுவை விசாரித்து, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், எஸ்.கே.கௌல் அடங்கிய அமர்வு சித்துவுக்கு ஓராண்டு சிறை தண்டனை வழங்கி நேற்று உத்தரவிட்டது.
இலங்கையில் 9 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
இலங்கையில் 9 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்றனர்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் புதிய அமைச்சர்கள் இன்று காலை பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.
துறைமுகங்கள், கடற்துறை மற்றும் விமான சேவைகள்: நிமல் சிறிபால டி சில்வா
கல்வி அமைச்சர்: சுசில் பிரேமஜயந்த
சுகாதார அமைச்சர்: கெஹெலிய ரம்புக்வெல
நீதி, சிறைச்சாலைகள், அரசியலமைப்பு சீர்திருத்தம் அமைச்சர்: விஜேதாஸ ராஜபக்ஸ
சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர்: ஹரின் பெர்ணான்டோ
பெருந்தோட்டத்துறை அமைச்சர்: ரமேஷ் பத்திரண
தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர்: மனுஷ நாணயக்கார
வர்த்தகம், வணிகம், உணவு பாதுகாப்பு அமைச்சர்: நலின் பெர்ணான்டோ
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்: டிரான் அலஸ்
புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவி பிரமாணம் செய்துகொண்டதை அடுத்து, நான்கு புதிய அமைச்சர்கள் இதற்கு முன்னர் பதவி பிரமாணம் செய்திருந்தனர்.இதன்படி, ஜி.எல்.பீரிஸ், காஞ்சன விஜேசேகர, பிரசன்ன ரணதுங்க மற்றும் தினேஷ் குணவர்தன ஆகியோர் இதற்கு முன்னர் பதவி பிரமாணம் செய்துகொண்டனர்.
நிகத் ஜரீன்: உலக பாக்சிங் போட்டியில் தங்கம் வென்று வரலாறு படைத்த தெலங்கானா வீராங்கனை
உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் பட்டத்தை தெலங்கானா சிறுமி நிகத் ஜரீன் வென்றார். சீனியர் பிரிவில் உலக சாம்பியனான அவர், இந்த சாதனையை நிகழ்த்திய முதல் தெலுங்கு பெண் என்ற சாதனையை படைத்தார்.
துருக்கியில் நடந்த சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் (IBA) உலக சீனியர் பெண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றார்.
வியாழக்கிழமை நடைபெற்ற 52 கிலோ பிரிவு (பிளை வெயிட்) இறுதிப் போட்டியில் நிகத் 5-0 என்ற கணக்கில் ஜிட்பாங் ஜூடாமஸை (தாய்லாந்து) தோற்கடித்தார்.
முன்னதாக நடந்த அரையிறுதியில் நிகத் 5-0 என்ற கணக்கில் கரோலின் டி அல்மேடாவை (பிரேசில்) தோற்கடித்தார்.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,259 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 2,259 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 15,044 ஆக உள்ளது.
லாலு பிரசாத் யாதவுக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை
பிகார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவுக்கு எதிராக சிபிஐ மேலும் ஒரு புதிய வழக்கை பதிவு செய்துள்ளது.
மேலும், லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறது.
17 இடங்களில் சோதனை நடத்திவருவதாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவித்துள்ளது. டெல்லி மற்றும் பிகாரின் பல்வேறு இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
மேலும், லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவருடைய மகள் மிசா பாரதி மீது சிபிஐ புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது.
வணக்கம் நேயர்களே
நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.
குறிப்பாக இலங்கையில் இருந்து எமது செய்தியாளர்கள் தரும் அண்மைத் தகவல்களை அறிய தொடர்ந்து இந்த பக்கத்தில் இணைந்திருங்கள்.உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றிஎங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.