வந்துகொண்டிருக்கும் செய்தி, சித்துவுக்கு ஓராண்டு சிறை - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பஞ்சாப் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஓய்வு பெற்ற கிரிக்கெட் வீரருமான நவ்ஜோத் சிங் சித்துவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1988ம் ஆண்டு சாலையில் ஏற்பட்ட தகராறில் சித்து தாக்கியதில் ஒருவர் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கின் சீராய்வு மனுவை விசாரித்து இந்த தீர்ப்பை வழங்கியது ஏ.எம்.கன்வில்கர், எஸ்.கே.கௌல் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச். 2018ம் ஆண்டு இந்த வழக்கில் சித்து குற்றவாளி என்பதை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், அவருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சிறைத் தண்டனையை ரத்து செய்திருந்தது. இதை எதிர்த்து கொல்லப்பட்டவரின் குடும்பத்தினர் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தனர்.
1988 டிசம்பர் 27ம் தேதி நடந்த இந்த தகராறில் அப்போது கிரிக்கெட் வீரராக இருந்த சித்து குர்னாம் சிங் என்பவரை தாக்கியதாகவும் பிறகு அவர் இறந்துவிட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில் பாட்டியாலா செஷன்ஸ் நீதிமன்றம் அவரை விடுவித்தது. ஆனால், மேல் முறையீட்டு மனுவில் பஞ்சாப், ஹரியாணா உயர் நீதிமன்றம் சித்துவுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதித்திருந்தது. இந்திய தண்டனைச் சட்டத்தின் 323வது பிரிவின் கீழ் வேண்டுமென்றே தாக்கி காயமேற்படுத்தியதாக கூறப்பட்ட குற்றச்சாட்டிலேயே அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல் முறையீட்டில் 2018ல் அவருக்கு அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. குடும்பத்தினர் இதை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்தனர். அதை விசாரித்த உச்ச நீதிமன்றம் சித்து கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால், சித்து கொலை அல்லாமல் மரணம் விளைவிக்க காரணமாக இருந்ததாக ஒரு பிரிவின் கீழ் தண்டிக்கப்படவேண்டும் என்று குடும்பத்தினர் கோரியதை நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.