சர்வதேச நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளில் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இலங்கைக்கு பக்கபலமாக இருப்பதாக இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்திருக்கிறார்.
இலங்கையின் கொழும்பு நகரில் வெளிநாட்டுச் செய்தியாளர்களிடம் ஜீ.எல். பீரிஸ் பேசுகையில், ரம்புக்கனையில் நடந்த நிகழ்வு குறித்து மனித உரிமை ஆணையம் அளிக்கும் விசாரணை முடிவுகளின்படி நடவடிக்கை எடுக்கப்படுமென்று தெரிவித்தார்.
"எங்களுடைய மக்கள் மிகக் கடினமான காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறார்கள். உணவுப் பொருட்களின் விலைகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது என்பதை ஒப்புக்கொள்கிறோம். அரசு இதனைப் பரிவுடன் புரிந்துகொள்கிறது.
இலங்கை நிதியமைச்சர் அலிசாப்ரோ தலைமையிலான குழுவினர் தற்போது, வாஷிங்டனில் சர்வதேச நிதியத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சர்வதேச அளவில் நிபுணத்துவம் பெற்ற 3 நிபுணர்கள் உதவி செய்து வருகிறார்கள்.
இந்தியாவின் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எங்களுக்கு பக்கபலமாக விளங்கி வருகிறார். சர்வதேச நிதியத்தின் நிதியுதவி கிடைக்க சில காலம் ஆகும். ஏறக்குறைய ஆறு மாதங்கள் ஆகலாம். மூன்று, நான்கு தவணைகளில் அந்த உதவி அளிக்கப்படலாம்.
இந்த நெருக்கடியில் இந்திய அரசு மிகப்பெரிய அளவில் உதவி செய்திருக்கிறது. சீனாவுடனும் பேசிவருகிறோம். இந்த இருநாடுகளுடனான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் சிறப்பாக இருக்கின்றன. இதுதவிர, ஜப்பான், வளைகுடா நாடுகளையும் அணுகி வருகிறோம்.
ஏற்கனவே இந்தியாவிடமிருந்து 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கிடைத்திருக்கிறது. அதேபோன்ற வேண்டுகோளை சீனா பரிசீலித்து வருகிறது. 250 மில்லியன் டாலர் உதவி வங்கதேசத்திலிருந்து கிடைத்திருக்கிறது. மேலும் இந்தியா 500 மில்லியன் டாலர்களை சுழல் நிதியாக எரிபொருள் வாங்க அளித்திருக்கிறது'' என்றார்.