ஜல்லிக்கட்டு போராட்டம்: 23 பேர் விடுதலை - மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி தரக்கோரி மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கடந்த 2017-ஆம் ஆண்டு மதுரை தத்தனேரி ரயில் பாலத்தில் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 23 பேரை விடுதலை செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீட்டா என்ற விலங்கு நல அமைப்பு கோரியதன் அடிப்படையில், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மத்திய அரசு தடை விதித்திருந்தது. இதனை எதிர்த்து, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.
மதுரையில் அலங்காநல்லூர், தமுக்கம் பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. அப்போது, மதுரை தத்தனேரி எல்ஜசி ரயில்வே பாலத்தில் அமர்ந்து 300க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகர்கோவில் பயணிகள் ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர்.
காவல்துறை தரப்பில் போராட்டத்தைக் கைவிடக்கோரி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதன் காரணமாக நடைபெற்ற கலவரத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி காவல்துறை 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களைக் கைது செய்தது.
இது தொடர்பான வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட குற்றவியல் 4ஆவது நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், நீதிபதி நாகலட்சுமி முன்பாக வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது வழக்கில் தொடர்புடைய 23 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார். இந்த வழக்கு கடந்த 5 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் 23 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.









