தமிழ்நாடு ஆளுநர் ரவி டெல்லி பயணம் - என்ன விஷயம்?

தமிழ்நாட்டில் தனக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக முறையிட அவர் தலைநகருக்கு வருகிறாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.புதன்கிழமை பகல் 1.30 மணியளவில் டெல்லி வரும் ஆளுநர் வியாழக்கிழமை காலையில் மீண்டும் சென்னைக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார் என்று பிபிசி தமிழ் அறிந்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே

    இன்றைய நேரலை இத்துடன் முடிவடைகிறது.

    பிபிசி தமிழின் புதிய நேரலைப் பக்கம் நாளை காலை மீண்டும் தொடங்கும். மேலதிகச் செய்திகளுக்குமுகப்பு பக்கம்செல்லவும்.

    பிபிசி தமிழின்பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.

    இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்:

    • இலங்கையில் தொடரும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேகாலை - ரம்புக்கனை பகுதியில் இன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, போலீஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
    • மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதினத்திற்கு ஆளுநர் சென்ற போது பாதுகாப்பு வாகனங்கள் மீது போராட்டக்காரர்கள் கருப்புக் கொடியை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்த நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ரவி ஏப்ரல் 20ஆம் தேதி ஒரு நாள் பயணமாக டெல்லிக்கு செல்லவுள்ளார்.
    • தமிழக ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை என்று மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
    • தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு எழுந்த நிலையிலும் நீட் மசோதா விவகாரத்தில் கோரிக்கை வலுத்துள்ள நிலையிலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்கிறார்.
    • சென்னையில் விசாரணைக் கைதி மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவுள்ளார்.
    • கேரளாவில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்த கிறிஸ்தவ பெண்ணின் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
    • சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்து போட நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் அல்ல என்று தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
    • பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு புதிதாக பிறந்த ஆண் குழந்தை உயிரிழந்துவிட்டதாக, அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
    • ஆப்கானிஸ்தானின் மேற்கு காபுலில் இன்று, ஏப். 19 அன்று, உயர்நிலைப்பள்ளி ஒன்றில் மூன்று குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாகவும் இதில் பலர் உயிரிழந்திருக்கலாம் எனவும், ஆப்கன் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
    • மதநிந்தனை புகார் தொடர்பாக, பாகிஸ்தானில் இலங்கையைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
  2. இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு: சஹரான் பயன்படுத்தி செகுசு வாகனத்தை, போலீஸ் அமைச்சர் பயன்படுத்தினாரா? எம்.பி கேள்வி

    ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சஹரான் ஹஷீம் பயன்படுத்தி வாகனமொன்று, பொதுமக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர பயன்படுத்தியமை தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ, நாடாளுமன்றத்தில் இன்று கேள்வி எழுப்பினார்.

    ட்விட்டர் தளத்தில் வெளியான செய்தி ஒன்றை மேற்கோள்காட்டியே, ஹரின் பெர்ணான்டோ இந்த கேள்வியை எழுப்பியிருந்தார்.

    இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர பதிலளித்தார்.

    ''இந்த சம்பவம் தொடர்பில் இன்று காலை கேள்வியுற்றத்தை அடுத்து, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் நான் இது குறித்து வினவினேன். இது அரசுடமையாக்கப்பட்ட வாகனம். போலீஸாருக்கு வழங்கப்பட்டு, போலீஸாரினால் விசேட அதிரடி படைக்கு வழங்கப்பட்டுள்ளது. அது எனக்கு வழங்கப்படவில்லை. அதனை நான் பயன்படுத்தவில்லை என அவர் கூறினார். செயலாளர் அதனை உறுதிப்படுத்தினார். பயன்படுத்தவில்லை" என சரத் வீரசேகர பதிலளித்தார்.

    பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் எவ்வாறு, வழக்கு பொருள் ஒன்றை பயன்படுத்தினார் என்ற பிரச்சினை எழுகின்றது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

    சஹரானுக்கு வழக்கொன்று இருக்கின்றது. அவர் பயன்படுத்திய வாகனம் வழக்கு பொருளாக இருக்க வேண்டும் என அவர் கூறுகின்றார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  3. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழ்நாடு ஆளுநர் ரவி நாளை டெல்லி வருகை - என்ன விஷயம்?

    ஆளுநர் ரவி

    பட மூலாதாரம்,

    படக்குறிப்பு, ஆர்.என். ரவி, தமிழ்நாடு ஆளுநர்

    தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி புதன்கிழமை ஒரு நாள் பயணமாக டெல்லிக்கு வருகை தரவுள்ளார்.

    தமிழ்நாட்டில் நீட் விலக்க மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல் ஆளுநர் தாமதப்படுத்தி வருவதாக ஆளும் திமுக புகார் கூறி வருகிறது.

    இந்த விவகாரத்தில் நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக ஆளுநர் ரவி சமீபத்தில் பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.

    ஆனால், அதற்கு முன்னதாக அவர் தமிழ்நாடு முதலமைச்சருடன் பேசிய பிறகு இந்த மசோதா முறைப்படி டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படும் என்று ஆளுநர் தரப்பு தெரிவித்தது.

    இதற்கிடையே, ஏப்ரல் 14ஆம் தேதி ஆளுநர் அழைப்பு விடுத்திருந்த தேநீர் விருந்தை ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன. இதன் பின்னணியில் முக்கிய மசோதாக்களை ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்பாததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தமிழக அரசு கூறியது.

    மேலும், ஆளுநர் மசோதாவை டெல்லிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியான பிறகு திங்கட்கிழமை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் 110ஆவது விதியின் கீழ் வாசித்த அறிக்கையில், ஆளுநருக்கும் தனக்கும் தனிப்பட்ட முறையில் சமூகமான உறவு இருப்பதாகவும் முக்கிய மசோதாக்களை அவர் அனுப்பாமல் தாமதப்படுத்தும் விஷயத்தில்தான் இணக்கமற்ற நிலை உள்ளதாகவும் கூறியிருந்தார்.

    இந்த நிலையில், மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினம் மடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் கலந்து கொள்ள செவ்வாய்க்கிழமை சென்றார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கட்சியினர், இடதுசாரி கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

    ஆளுநர் தருமபுரம் ஆதினம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, அவரது வாகன தொடரணி மீது கருப்புக் கொடியை போராட்டக்குழுவினர் வீசியதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக 73 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை கூறியிருந்த நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லிக்கு செல்லும் தகவல் வெளியாகியுள்ளது.

    நீட் விலக்கு மசோதா தொடர்பாக அவர் மத்திய அரசுடன் பேச டெல்லி வருகிறாரா இல்லை தனக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக முறையிட அவர் தலைநகருக்கு வருகிறாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

    புதன்கிழமை பகல் 1.30 மணியளவில் டெல்லி வரும் ஆளுநர் வியாழக்கிழமை காலையில் மீண்டும் சென்னைக்கு திரும்ப திட்டமிட்டுள்ளார் என்று பிபிசி தமிழ் அறிந்துள்ளது.

  4. சென்னையில் விசாரணைக் கைதி மரணம் - மாஜிஸ்திரேட் விசாரணை நடத்த உத்தரவு

    சென்னையில் விசாரணைக் கைதி மரணம் அடைந்த விவகாரம் தொடர்பாக, மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவுள்ளார்.

    சென்னை புரசைவாக்கம் கெல்லிஸ் சிக்னல் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா வைத்திருந்ததாக பட்டினப்பாக்கத்தை சேர்ந்த விக்னேஷ், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    இந்நிலையில், அவர்களை விசாரணைக்காக சென்னை தலைமைச் செயலகம் காலனியில் உள்ள காவல்நிலையத்திற்கு அழைத்து வந்தபோது நெஞ்சுவலி காரணமாக விக்னேஷ் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    உயிரிழந்த விசாரணைக் கைதி விக்னேஷின் உடல் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ள நிலையில், மாஜிஸ்திரேட் காவல் நிலையத்திலும், மருத்துவமனையிலும் நேரில் விசாரணை நடத்த உள்ளார்.

  5. இளையராஜாவை ஆதரிக்கும் நட்டா - எச்சரிக்கும் உதயநிதி, எதிர்ப்பு வலுப்பது ஏன்?

  6. பிரதமர் மோதியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு பேசியதில் என்ன தவறு? - மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி

    இளையராஜா - அம்பேத்கர் - மோதி

    பிரதமர் மோதியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு இளையராஜா பேசியதில் என்ன தவறு என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

    மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் நாராயணசாமி ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்களை நேரில் பார்வையிட்டார்.

    அதனைத்தொடர்ந்து முன்மாதிரி மாவட்டமாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, "இசையமைப்பாளர் இளையராஜாஅம்பேத்கர் பற்றியும் பிரதமர் பற்றியும் நன்கு புரிந்து வைத்திருப்பதால் தான் அவர் இதுபோல கூறியிருக்கிறார்.

    இதுபோல கருத்து கூறுவதற்கு அவருக்கு முழு சுதந்திரம் உள்ளது. அம்பேத்கரின் எண்ணங்களை பிரதமர் மோதி நிறைவேற்றி வருகிறார் என்பதை புரிந்து கொண்டுதான் இளையராஜா இவ்வாறு கூறியிருக்கிறார்.

    உலகை அச்சுறுத்திய கொரோனாவுக்குப் பிறகு இலங்கை, நேபாளம், பாகிஸ்தான் போன்ற அண்டை நாடுகள் எல்லாம் சீர்குலைந்து போன நிலையில், இந்தியா இன்று பல நாடுகளுக்கும் உதவி செய்து வரும் நிலையில் உள்ளது. உலகுக்கே முன்மாதிரியாக இந்தியா திகழ்ந்து வருகிறது.

    இந்த நிலையில், அம்பேத்கரின் எண்ணங்களை செயல்படுத்தி வரும் பிரதமர் மோதியை அம்பேத்கருடன் ஒப்பிட்டுப் பேசியதில் என்ன தவறு? இளையராஜாவை வசைபாடுபவர்களுக்கு பாஜக சார்பில் கடும் கண்டனங்கள்" என தெரிவித்தார்.

  7. புதிய செயலியை உருவாக்கி ஐபிஎல் போட்டியை ஒளிபரப்பியவர் கைது

    ஐபிஎல் போட்டி

    பட மூலாதாரம், SIVAGANGAI DISTRICT POLICE

    படக்குறிப்பு, ராமமூர்த்தி

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை கட்டணமில்லாமல் காண தனி செயலியை உருவாக்கி யூடியூப்பில் ஒளிபரப்பு செய்ததாக, சிவகங்கை இளைஞரை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

    சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்கால் பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி (வயது 29). இவர் பி.இ. படித்து சென்னை தனியார் நிறுவனத்தில் வெப் டிசைனராக பணிபுரிகிறார். தற்போது வீட்டிலேயே 2 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளார்.

    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தனியார் டிவி நிறுவனங்கள் கோடி கணக்கில் ஏலத்தில் எடுத்து ஒளிபரப்பு செய்து வரும் நிலையில், ராமமூர்த்தி கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை அனுமதி பெறாமல் தனி செயலி மூலம் கட்டணம் இல்லாமல் ஒளிபரப்பியுள்ளார்.

    இதுதொடர்பாக ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த கடாரம் துப்பா (36) என்பவர், ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்ததன் அடிப்படையில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இதனடிப்படையில் ஹைதராபாத் சைபர் கிரைம் சப் இன்ஸ்பெக்டர் ரவீந்தர் தலைமையில் நேற்று சிவகங்கை வந்த போலீசார் ராமமூர்த்தியை கைது செய்தனர். பின்னர் அவரிடம் இருந்து லேப்டாப், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து பின்னர் அவரை சிவகங்கை ஜே.எம்1 நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். பின்னர் ஹைதராபாத் சைபர் கிரைம் போலீசார் அழைத்துச் சென்றனர்.

  8. வந்துகொண்டிருக்கும் செய்தி, நாளை டெல்லி செல்கிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி

    தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு எழுந்த நிலையிலும் நீட் மசோதா விவகாரத்தில் கோரிக்கை வலுத்துள்ள நிலையிலும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்கிறார்.

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வழிபட்டார். அங்கிருந்து புறப்பட்டு தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் சென்றார்.

    அப்போது மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரி அருகே பல்வேறு அமைப்பினர், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களை தடுப்புகள் கொண்டு தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள், கருப்புக் கொடியை ஏந்தியபடி ஆளுநருக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட, பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

    தமிழக ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை என்று மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    இந்நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  9. தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற ஆளுநருக்கு எதிர்ப்பு - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    எடப்பாடி பழனிசாமி

    பட மூலாதாரம், FACEBOOK

    தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற ஆளுநருக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில், இச்சம்பவத்திற்கு சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக ஆளுநர் கான்வாய் மீது ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மயிலாடுதுறையில் தருமபுர ஆதீனத்தை சந்தித்துவிட்டு திரும்பி வரும் வழியில், மன்னம்பந்தல் என்ற இடத்தில் ஒரு சில சமூக விரோதிகள் கற்களையும், கருப்புக் கொடி கம்பங்களையும் கொண்டு அவர் சென்ற வாகனங்களின் மீது கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.

    தமிழகத்திலேயே தமிழக ஆளுநர் மீது கற்களையும் கம்புகளையும் கொண்டு தாக்குதல் நடத்தியதும், தமிழகத்திற்குள்ளேயே தமிழக ஆளுநர் பயணிக்க முடியவில்லை என்பதும் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு எவ்வளவு சீர்கேடு அடைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.

    தமிழக ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லை எனில், சாதாரண மக்களுக்கு இந்த விடியா அரசு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கும் என்ற கேள்வியும் எழுகிறது.

    இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை உடனடியாகக் கண்டறிந்து கைது செய்ய வேண்டும் என்றும், சட்டம் ஒழுங்கு சீர்கேடு அடைவதை அதிமுக ஒருபோதும் ஏற்காது என்பதோடு, அதிமுகவின் சார்பில் இந்தத் தாக்குதலுக்குக் கடுமையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    தமிழக ஆளுநர் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு, காவல்துறையை தன் கையில் வைத்திருக்கும் இந்த விடியா அரசின் முதலமைச்சர் என்ன பதில் சொல்லப் போகிறார்?" என தெரிவித்துள்ளார்.

  10. வந்துகொண்டிருக்கும் செய்தி, தமிழக ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை - மாநில காவல்துறை

    காவல்துறை வன்முறை

    தமிழக ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசப்படவில்லை என்று மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

    தமிழ்நாட்டில் மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தமிழக ஆளுநர் செவ்வாய்க்கிழமை காலையில் சென்றார். அப்போது, அவரது வாகன தொகுப்பு தொடரணி மீது நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் தாமதப்படுத்துவதாகக் கூறி ஆர்ப்பாட்டம் செய்த சில கட்சியினர் கொடிகளை வீசியதாக சில காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக மாநில காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் தலைமை இயக்குநர் தரப்பில் இருந்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்:

    தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று 19.04.2022 காலை 7.50 மணிக்கு கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் விருந்தினர் மாளிகையில் புறப்பட்டு 8.30 மணிக்கு மயிலாடுதுறை மாவட்டம் ஆணைக்காரன் சத்திரம் சோதனை சாவடிக்கு வந்தடைந்தார்.

    காவல்துறை

    பின்னர் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். ஆளுநர் தருமபுரம் ஆதினத்தை சந்திக்க திருக்கடையூர் கோயிலில் இருந்து புறப்பட்டார்.

    இந்நிலையில், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சீனிவாசன், தந்தை பெரியார் திராவிட கழக மாவட்ட செயலாளர் தெ. மகேஷ், மீத்தேன் எதிர்ப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் த. ஜெயராமன் உள்ளிட்ட 73 பேர் மயிலாடுதுறை சாலை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரிக்கு எதிரே வடகரை சாலையில் கையில் கருப்புக் கொடிகளுடன் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில அங்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முன்னர் 3 அடுக்கு இரும்புத் தடுப்பு பாதுகாப்பு அரண்கள் அமைக்கப்பட்டன. அத்துடன் அவர்களை அப்புறப்படுத்த காவல்துறை வாகனங்களும் அங்கே கொண்டு வரப்பட்டன.

    ஆளுநரின் வாகனம் மற்றும் இதர கான்வாய் வாகனங்கள் காலை 9.50 மணிக்கு ஏவிசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைக் கடந்து சென்றது. அப்போது ஆளுநரின் கவனத்தை தங்கள்பால் ஈர்க்க முடியவில்லை என்ற ஆதங்கத்தில் போராட்டக்காரர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு சிலர் கையில் ஏந்திய கொடிகளை ரோட்டை நோக்கி வீசினர். ஆளுநரின் கான்வாய் சென்ற பின்பு காவல் அதிகாரிகள் சென்ற வாகனங்கள் மீது சில கொடிகள் விழுந்தன.

    காவல்துறை

    உடனடியாக பாதுகாப்பிற்கு இருந்த காவலர்கள் கொடிகளைக் கைப்பற்றி ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் ஏற்றினர்.

    கைது செய்தவர்கள் மீது மயிலாடுதுறை காவல் நிலையத்தில் தகுந்த சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆளுநரின் பாதுகாப்பிற்காக மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் வே. பாலகிருஷ்ணன் மேற்பார்வையில் இரண்டு காவல்துறை துணைத் தலைவர்கள், ஆறு காவல்துறை கண்காணிப்பாளர்கள், ஆறு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள், 54 ஆய்வாளர்கள், 102 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1,120 காவல் ஆளிநர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கொடிகள் வீசியதாகக் கூறப்படுவதில் எந்த உண்மையும் இல்லை. காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை, தடுப்புகள் அமைத்து கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

    பின்னர் கைது செய்து வாகனங்களில் ஏற்றினர். ஆளுநரின் கான்வாய் முற்றிலும் சென்ற நிலையில், அவர்கள் காவலர்களிடம் வாக்குவாதம் செய்து பிளாஸ்டிக் பைப்புகளில் கட்டப்பட்டிருந்த கருப்புக் கொடிகளை வீசி எறிந்தனர் என்பதுதான் உண்மை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

  11. தருமபுரம் ஆதீனத்திற்கு சென்ற ஆளுநருக்கு எதிர்ப்பு - உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு அண்ணாமலை கடிதம்

    அண்ணாமலை

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வழிபட்டார். அங்கிருந்து புறப்பட்டு தருமபுரம் ஆதீனத்திற்கு ஆளுநர் சென்றார்.

    அப்போது மன்னம்பந்தல் ஏ.வி.சி கல்லூரி அருகே பல்வேறு அமைப்பினர், ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களை தடுப்புகள் கொண்டு தடுத்து நிறுத்தினர். போராட்டக்காரர்கள், கருப்புக் கொடியை ஏந்தியபடி ஆளுநருக்கு எதிரான வாசகங்களைக் கொண்ட, பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டனர்.

    இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தில், "ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தை சந்திக்க சென்றபோது, ஆளுநர் கான்வாய் மீது திமுக கூட்டணி அமைப்பினர், கருப்பு கொடிகள், கருப்பு பதாகைகள், கற்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்களை வீசியுள்ளனர்.

    இந்த போராட்டம் முன்பே திட்டமிடப்பட்டதாக தோன்றுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் கழகம், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சியினர் இதில் பங்கேற்றுள்ளனர்.

    "ஆளுநர் ஒரு கொலைகாரர்" போன்ற முழக்கங்கள் இதில் எழுப்பப்பட்டுள்ளன. இந்த முழக்கங்களை எழுப்பியவர்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த கூட்டத்தை அகற்றாமல் போலீசார் அங்கேயே நின்றுள்ளனர்.

    கடமையை செய்யத் தவறிய அதிகாரிகள், விளைவுகளை சந்தித்தாக வேண்டும்.

    திமுக அரசு ஆளுநருக்கு பாதுகாப்பை உறுதிசெய்ய முடியவில்லை என்றால், மக்களின் நிலைமை கற்பனை செய்துபார்க்க முடியாததாக உள்ளது. மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு குறித்த எச்சரிக்கையாக இது உள்ளது.

    எனவே, இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீதும், கடமையை செய்ய தவறிய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

  12. வந்துகொண்டிருக்கும் செய்தி, இலங்கை கேகாலை - ரம்புக்கனை வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி - 10 பேர் படுகாயம்

    இலங்கை துப்பாக்கி சூடு
    படக்குறிப்பு, இலங்கை கேகாலையில் நடந்த வன்முறை சம்பவத்தில் காயம் அடைந்த நபர்

    இலங்கையில் தொடரும் எரிபொருள் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேகாலை - ரம்புக்கனை பகுதியில் இன்று நடத்தப்பட்ட போராட்டத்தின் போது, போலீஸார் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    கேகாலை மருத்துவமனையில் பணிப்பாளர் டொக்டர் மிஹிரி பிரியங்கனி தெரிவிக்கின்றார்.

    இந்த துப்பாக்கி பிரயோகத்தில் மேலும் 10ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

    ரம்புக்கனை ரயில் வீதியை மறித்து இன்று காலை முதல் போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.

    போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு போலீஸார் கோரிய போதிலும், போராட்டக்காரர்கள் கலைந்து செல்லவில்லை என போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

    இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முயற்சித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

    ரம்புக்கனை பகுதிக்கு சென்ற டீசல் பவுசர் ஒன்றை வழிமறித்த போராட்டக்காரர்கள், அதனை தீ வைக்க முயற்சித்துள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

    அத்துடன், முச்சக்கரவண்டி ஒன்றுக்கும் போராட்டக்காரர்கள் தீ வைத்துள்ளதாகவும், பல சொத்துக்களுக்கு சேதம் விளைவித்துள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

    இதையடுத்து, போராட்டக்காரர்களை கலைக்கும் நோக்கில், போலீஸாரினால் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

    கண்ணீர் புகை பிரயோகத்தை அடுத்து, போராட்டக்காரர்கள் போலீஸார் மீது கற்களை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

    இந்த நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில், போலீஸாரினால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

    துப்பாக்கி பிரயோகத்தில் பலர் காயமடைந்து, கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அதேபோன்று, போராட்டக்காரர்கள் தாக்குதலில் காயமடைந்த போலீஸ் உத்தியோகத்தர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அமைதியின்மையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் நோக்கில் போலீஸார் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

  13. குர்ஆன் எரிப்பு சம்பவத்துக்கு சவுதி அரேபியா கடும் கண்டனம்; ஸ்வீடனில் வன்முறை வெடித்தது

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  14. 'ஓ மை டாக்' அருண்விஜய்: "அப்பா, மகனுடன் இணையும் புதிய கதை தேர்வுக்கு இதுதான் காரணம்"

  15. நியாயவிலைக் கடையில் பிரதமரின் புகைப்படத்தை வைக்க வந்த பாஜகவினர் கைது

    பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

    சேலம் மாவட்டத்தில் நியாயவிலைக் கடையில் பிரதமர் மோதியின் புகைப்படத்தை வைக்க வந்த பாஜகவினருக்கும் இதையறிந்து அங்குவந்த திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் நியாயவிலை கடையில் பிரதமர் மோதியின் உருவப் படத்தை வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையறிந்த திமுகவினர் நியாய விலை கடை அருகே வந்து குவிந்ததால் இரு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினரும் திமுகவினரும் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

    இதன் காரணமாக, நியாய விலைக் கடையின் முன்பாக ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் அனுமதியின்றி கூடியதால் காவல்துறையினர் பாஜகவினரை கைது செய்தனர்.

    அப்போது கைது செய்த பாஜகவினரை காவல்துறை வாகனத்தில் ஏற்றும்போது காவல்துறையினரிடம் திமுகவினரையும் கைது செய்யுமாறு பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

  16. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சிற்றுண்டி, உணவோடு இரவு வகுப்புகள் - ஆசிரியர்கள் முன்னெடுப்பு

  17. கேரளாவில் மாற்று மதத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த மகள் - தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி

    திருமணம்

    பட மூலாதாரம், Getty Images

    கேரளாவில் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்த கிறிஸ்தவ பெண்ணின் தந்தை தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை கேரள உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

    செளதி அரேபியாவில் செவிலியராக பணிபுரிந்து வரும் ஜியோட்ஸ்னா மேரி ஜோசஃப், கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூன்ஸ்ட் கட்சியின் இளைஞர் அணியான, டி.ஒய்.எஃப்.ஐ (DYFI) அமைப்பின் நிர்வாகியான ஷெஜினை திருமணம் செய்துள்ளார்.

    இதையடுத்து, அப்பெண்ணின் உறவினர்கள் இத்திருமணத்தை "லவ் ஜிகாத்" என குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், அவர்களின் திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் விவாதம் எழுந்தது.

    மேலும், சிபிஎம் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ ஒருவரே இதனை "லவ் ஜிகாத்" என கூறியது விமர்சனத்தைப் பெற்றது.

    வெவ்வேறு மதங்களை சேர்ந்த குறிப்பாக முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்வதை பாஜகவினர் "லவ் ஜிகாத்" எனக்கூறி வருகின்றனர்.

    எனினும், DYFI அமைப்பு இத்தகையை மாற்று மத திருமணங்களுக்கு எதிர்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், ஜியோட்ஸ்னா தந்தை, தன் மகள் சட்டத்திற்கு புறம்பாக தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறி, கேரள உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

    இந்த வழக்கை இன்று நீதிபதிகள் வி.ஜி.அருண் மற்றும் சி.எஸ்.சுதா ஆகியோர் விசாரித்தனர்.

    அப்போது, தான் சட்டத்திற்கு புறம்பாக தடுத்து வைக்கப்படவில்லை எனவும், தன்னுடைய திருமண முடிவு தன் விருப்பத்தின் பேரிலேயே நடைபெற்றதாகவும் ஜியோட்ஸ்னா தெரிவித்தார்.

    இதையடுத்து, அவர் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

  18. கோயில் கதவை உடைத்து உள்ளே புகுந்த கரடிகள்

    நீலகிரி மாவட்டத்திலுள்ள கோயில் ஒன்றின் கதவை உடைத்து, உள்ளே புகுந்த கரடிகள் - சிசிடிவி காட்சிகள்

  19. டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை: முரண்படும் தகவல்களில் எது உண்மை? - கள நிலவரம்

  20. இலங்கையின் பல பகுதிகளில் தொடரும் போராட்டங்கள்

    இலங்கை போராட்டம்

    பட மூலாதாரம், UGESH

    இலங்கையின் பல்வேறு பகுதியில் இன்று மீண்டும் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    எரிபொருள் விலை நேற்று நள்ளிரவு முதல் திடீரென அதிகரிக்கப்பட்ட நிலையில், அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகளும் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து, பிரதான கோரிக்கையாக எரிபொருள் விலையை குறைக்குமாறு வலியுறுத்தி இன்று போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

    அவிசாவளை - கொழும்பு, சிலாபம் - கொழும்பு, கண்டி - மஹியாங்கனை ஆகிய பிரதான வீதிகள் மறிக்கப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி, கேகாலை, காலி, பதுளை, ஹபுத்தலை, மாத்தறை, தெரணியகலை, யட்டியந்தோட்டை, கித்துல்கல, புலத்கோஹபிட்டிய, தெரணியகல, அவிசாவளை உள்ளிட்ட பல பிரதேசங்களின் பிரதான வீதிகளை மறித்து போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த போராட்டம் காரணமாக, ரயில் சேவைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், தனியார் பேருந்து உரிமையாளர்கள், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் இந்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ளமையினால், பொது போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    பல பகுதிகளில் வாகன டயர்களை எரித்து, மக்கள் தமது எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர். அத்துடன், சில பகுதிகளின் பிரதான வீதிகளில் பேருந்துகளை வீதிக்கு நடுவே நிறுத்தி வைத்து, போராட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாக தெரிய வருகின்றது.

    நாடு முழுவதும் தற்போது பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பல பிரதேசங்களுக்கு கலகத்தடுப்பு பிரிவில் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    இதேவேளை, கொழும்பு - காலி முகத்திடலில் இன்று 11ஆவது நாளாகவும் தன்னெழுச்சி போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. இன்றைய போராட்டத்திலும் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டுள்ளனர்.