ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம் - கர்நாடக அமைச்சர் கே.எஸ்.ஈஷ்வரப்பா ராஜினாமா செய்ய முடிவு

கர்நாடகா அமைச்சர் கே.எஸ்.ஈஷ்வரப்பா தன்னுடைய ராஜினாமா கடிதத்தை நாளை முதலமைச்சரிடம் வழங்க உள்ளதாக, ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. சேலத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜக - விசிகவினர் மோதல்

    அம்பேத்கர் பிறந்த நாள்

    அம்பேத்கர் பிறந்தநாள் விழாவையொட்டி சேலம் தொங்கும் பூங்கா எதிரே உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று அரசியல் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    சிலைக்கு அருகே காவல்துறையினர் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. இந்த நிலையில், அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த பாஜகவினர் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

    இதனிடையே, ஊர்வலமாக வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சிலைக்கு மாலை அணிவிக்க சென்றனர். நீண்டநேரம் காத்திருந்த நிலையில் திடீரென வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை காவல்துறையினர் அனுமதித்ததால், பாஜகவினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து, பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிரெதிர் முழக்கங்களை எழுப்பியதால் இருதரப்பினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து, அஸ்தம்பட்டி பிரதான சாலையில் பாஜகவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இரு தரப்பினரையும் காவல்துறையினர் சமாதானப்படுத்தி அழைத்து தனித்தனியாக சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த அனுமதித்தனர்.

  2. கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் திட்டத்தைக் கண்டித்து விவசாயி தற்கொலையா?

    விவசாயி தற்கொலை
    படக்குறிப்பு, கணேசன்

    தருமபுரி மாவட்டம் பாலவாடி அருகே, கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணிக்காக விளைநிலங்களில் அளவீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதனிடையே, கரியப்பனஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

    இதன்பின், கிராம மக்கள் அவரின் சடலத்தை தருமபுரி - பென்னாகரம் சாலையில் ஏரிக்கோடி பேருந்துநிறுத்தத்தில் சாலையின் நடுவே வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

    விவசாயிகள் சாலை மறியல்

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன்,மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, "கணேசனுக்கு வாழ்வாதாரமாக இருந்த நிலத்தினை ஏற்கெனவே டவர் அமைக்க பவர் கிரிட் நிறுவனம் எடுத்துக்கொண்டது. இருந்த மிச்ச நிலத்தயைும் தற்போது கெயில் நிறுவனம் குழாய் பதிக்க எடுக்க வந்ததால் விரக்தியடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்" என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    பின்னர் தருமபுரி ஆட்சியர் திவ்யதர்சினி முன்னிலையில் விவசாய பிரதிநிதிகள், முன்னாள் அரூர் எம்எல்ஏ டெல்லிபாபு ஆகியோர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் ஏற்பட்டதையடுத்து, ஆறு மணி நேர மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.

  3. ஆந்திராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 7 பேர் உயிரிழப்பு

  4. ரஷ்ய போர்க்கப்பலை தாக்கி வெடிக்கச் செய்ததாக கூறும் யுக்ரேன்

    யுக்ரேன் - ரஷ்யா

    பட மூலாதாரம், EPA

    முன்னதாக, ரஷ்யாவின் ஏவுகணை தாங்கிய மோஸ்க்வா போர்க்கப்பல், யுக்ரேன் தயாரித்த நெப்டியூன் ஏவுகணையால் குண்டுவெடிப்புக்கு உள்ளானதாக, யுக்ரேன் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், இது தொடர்பாக மேலதிக தகவல்கள் தெரியவந்துள்ளன. அதில், போர்க்கப்பலில் தீப்பற்றியதால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

    அந்த கப்பலை ரஷ்ய மீட்புப்படையினரால் அடைய முடியவில்லை எனவும், அக்கப்பலில் 510 பணியாளர்கள் இருந்ததாகவும் யுக்ரேன் அதிபரின் உதவியாளரான ஒலேக்ஸி அரேஸ்டோவிச் தெரிவித்துள்ளார்.

    "மோஸ்க்வா என்ற ஏவுகணை இன்று பாம்புத் தீவில் எங்களின் எல்லைக் காவலர்களால் அனுப்பப்பட்ட இடத்திற்குச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ளது!" என, ஒடேசா ஆளுநர் மக்ஸிம் மர்சென்கோ தன் டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.

    ரஷ்ய படையெடுப்பின் முதல் நாளான பிப்ரவரி 24 அன்று நடைபெற்ற நிகழ்வை அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    ரஷ்ய படையெடுப்பின் முதல் நாளன்று ஸ்மீன்யீ (பாம்பு) தீவினை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு 13 யுக்ரேனிய வீரர்கள் இறந்ததாக நம்பப்பட்டது. ஆனால், அவர்கள் கைதிகளாக ரஷ்ய கைப்பற்றியிருந்த கிரைமியாவில் வைக்கப்பட்டதாக பின்னர் வந்த தகவல்களில் தெரியவந்தது.

  5. ஆளுநர் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கும் - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

    ஜெயக்குமார்

    தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கவுள்ள தேநீர் விருந்து மற்றும் பாரதியார் சிலை திறப்பு விழாவை தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக சட்டப்பேரவை உறுப்பினர்களும் புறக்கணிப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

    நீட் விலக்கு மசோதாவை ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைப்பது தொடர்பாக எந்தக் காலக்கெடுவையும் குறிப்பிடவோ உத்தரவாதம் அளிக்கவோ ஆளுநர் முன்வராத நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

    இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், "இந்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஆளுநர் தேநீர் விருந்துக்கு அழைத்திருக்கிறார். இது தமிழ் கலாச்சாரம். முதன்முதலில் இவ்வாறு நடத்தப்படுகிறது. இதில், தமிழ் பற்றாளர் என்ற முறையில் கலந்துகொள்ள வேண்டும் என்பதுதான் என்னுடைய கருத்து.

    பாரதியார் இந்திய விடுதலைக்காக குரல் கொடுத்த மகாகவி. அவருடைய சிலை திறப்பை புறக்கணிப்பதும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

    நீட் தேர்வை ரத்து செய்வோம் என தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. அதை ஏன் செய்யவில்லை?

    முன்னாள் ஆளுநர் சென்னா ரெட்டி அரசியலமைப்பை தாண்டி செயல்பட்டதால்தான் ஜெயலலிதா அவர் அளித்த தேநீர் விருந்துகளை புறக்கணித்தார். இந்த தேநீர் விருந்தில் அதிமுக கலந்துகொள்ளும்" என தெரிவித்தார்.

  6. "குறிப்பாக எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு" - பிரதமர் தமிழ் புத்தாண்டு வாழ்த்து

    நரேந்திர மோதி

    "அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். குறிப்பாக, எனது தமிழ் சகோதர சகோதரிகளுக்கு. வரும் புத்தாண்டு வெற்றிகளையும் சந்தோஷங்களையும் தரட்டும், அனைத்து லட்சியங்களும் நிறைவேறட்டும், அனைவரும் ஆரோக்கியமாகவும் மகிழ்வுடனும் இருக்க வாழ்த்துக்கள்." என, ட்விட்டரில் தமிழ் புத்தாண்டு வாழ்த்தை பிரதமர் நரேந்திர மோதி தமிழில் தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. ஆளுநர் தேநீர் விருந்தை முதல்வர், திமுக எம்.எல்.ஏ.க்கள் புறக்கணிக்க முடிவு

    திமுக

    பட மூலாதாரம், Getty Images

    தமிழ் புத்தாண்டையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி அளிக்கவுள்ள தேநீர் விருந்தினை தமிழ்நாடு முதல்வரும், திமுக சட்டமன்ற உறுப்பினர்களும் புறக்கணிப்பதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார்.

    தங்கம் தென்னரசு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இருவரும் ஆளுநரை ராஜ்பவனில் சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது இந்த தகவலை செய்தியாளர்களிடம் கூறினார் தங்கம் தென்னரசு.

    இன்று மாலை நடைபெற இருக்கும் தேநீர் விருந்து மற்றும் பாரதியார் சிலை திறப்பு விழாவில் முதலமைச்சர் பங்கேற்க மாட்டார் என்று அவர் தெரிவித்தார்.

    தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து, ஒன்றிய அரசுக்கு அனுப்பிவைப்பது தொடர்பாக எந்தக் காலக்கெடுவையும் குறிப்பிடவோ உத்தரவாதம் அளிக்கவோ ஆளுநர் முன்வராத நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தங்கம் தென்னரசு தெரிவித்தார். ஏற்கனவே சிபிஎம், விசிக உள்ளிட்ட கட்சிகள் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

  8. இனப்பெருக்க காலம்: நள்ளிரவு முதல் தமிழக விசைப்படகுகள் மீன்பிடிக்க தடை

    மீன்பிடி தடைக்காலம்

    மீன் இனப்பெருக்கக் காலமான 61 நாட்கள் மீன்பிடி தடைகாலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் விசைப்படகுகளை கரையோரம் நங்கூரமிட்டு நிறுத்தியுள்ளனர்.

    கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் வங்கக்கடல் பகுதிகளில் மீன்கள் இனப்பெருக்கம் செய்யும் காலம் என்பதால், இக்காலங்களில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடித்தால் மீன் குஞ்சுகளும் வலையில் சிக்கிவிடும். இதனால், இந்த மாதங்களில் மீன்பிடிக்க 61 நாட்கள் தடை விதிக்கப்படும்.

    அதன் அடிப்படையில் ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சென்னை, உள்ளிட்ட தமிழகத்தின் 13 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 6,500 விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை பயன்படுத்தி கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல கூடாது என தடை விதிக்கப்படுகிறது.

    இந்நிலையில், இந்த வருடம் நாளை நள்ளிரவு முதல் ஜூன் 14 வரையிலும் தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வெள்ளிக்கிழமை மீன்பிடிக்க கடலுக்கு செல்ல மாட்டார்கள் என்பதால் இன்று நள்ளிரவு முதல் ராமநாதபுரம் மாவட்டத்தில் மீன்பிடி தடை காலம் தொடங்கியது.

  9. வணக்கம் நேயர்களே

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறோம். இதுவரை அ.தா.பாலசுப்ரமணியன் மற்றும் எம்.ஆர்.ஷோபனா வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    இலங்கை மற்றும் யுக்ரேனில் இருந்து பல்வேறு செய்தியாளர்கள் வழங்கும் செய்திகளையும், தமிழ்நாடு, இந்தியா, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளையும் இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

  10. இலங்கையின் தவறான பொருளாதார கொள்கையின் சாயல் இந்திய பொருளாதார கொள்கையிலும் உள்ளது: ப.சிதம்பரம்

    ப சிதம்பரம்

    பட மூலாதாரம், Getty Images

    இலங்கையின் தவறான பொருளாதார கொள்கையின் சாயல் இந்திய பொருளாதார கொள்கையிலும் உள்ளது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    சிவகங்கையில் உள்ள காங்கிரஸ் எம்.பி அலுவலகத்தில், நிர்வாகிகளை சந்தித்து புதிய டிஜிட்டல் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார் ப.சிதம்பரம்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம் தவறான பொருளாதார கொள்கையே என தெரிவித்ததுடன் அதே சாயல் இந்திய பொருளாதாரத்திலும் உள்ளது என்றும் பெட்ரோல், டீசல் மீது அதிக வரி விதித்து வருவதுடன் அந்த பணத்தை என்ன செய்கிறார்கள் என தெரியவில்லை?", என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து மேலும் பேசிய அவர், " இந்த தவறான பொருளாதார கொள்கையால் சில்லரை பணவீக்கம் 7 சதவீதத்தை தாண்டியுள்ளது. இலங்கைக்கு ஏற்பட்ட நிலை இந்தியாவிற்கு வந்துவிட்டது என கூறவில்லை. அவ்வாறு இந்தியாவிலும் ஏற்படும் அபாயம் இருக்கிறது என எச்சரிக்கிறேன்.

    இனைப்பு மொழி இந்தி என்கிற சர்ச்சை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், "ஒரே நாடு, ஒரே மொழி என்பது பேராபத்து. அது கண்டிக்கத்தக்கது. மாநிலங்களுக்கு முழு அதிகாரம் உள்ளது. ஒரு நாடு, ஒரு கட்சி என்பதும், ஒரு நாடு, ஒரு தலைவர் என்பதுமே பா.ஜ.கவின் நோக்கம். சீனா, ரஷ்யா, துருக்கி உள்ளிட்ட பல நாடுகள் செல்லும் பாதையிலேயே பா.ஜ.க செல்கிறது என பகிரங்கமாகவே நான் குற்றம் சாட்டுகிறேன்", என்று கூறினார்.

    CUET தேர்வுக்கு எதிரான தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை வரவேற்பதாக கூறிய அவர், தமிழ்நாடு மாணவர்களை தேர்வு செய்யும் உரிமை தமிழ்நாடு அரசிற்கு இருக்க கூடாதா? என கேள்வி எழுப்பினார்.

    மேலும் உயர்கல்வி தகுதி தேர்வுகளுக்கு எதிராக காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் தீர்மானம் நிறைவேற்றாதது குறித்த கேள்விக்கு, அதனை அவர்களிடம்தான் கேட்கவேண்டும் என தெரிவித்தார்.

  11. சித்திரை புதுவருட பிறப்பை வீதிகளில் போராடி கொண்டாடும் இலங்கையர்கள்

    இலங்கை

    பட மூலாதாரம், Getty Images

    இலங்கையில் என்றும் இல்லாதவாறான ஒரு புதுவருடம் பிறந்துள்ளது.தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என்ற அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து காலி முகத்திடலில் இன்று புதுவருட பிறப்பை கொண்டாடி வருகின்றனர்.இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்த பின்னணியில், பொருட்களின் விலை சடுதியாக அதிகரித்திருந்தது.அத்துடன், பெரும்பாலான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வந்த நிலையில், அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை நாட்டு மக்கள் ஆரம்பித்திருந்தனர்.இவ்வாறு சூழ்நிலையில், கடந்த 9ம் தேதி முதல் காலி முகத்திடலில் தன்னெழுச்சி போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.இவ்வாறு ஆரம்பிக்கப்பட்ட போராட்டம், 6வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

  12. சைபர் மோசடிக் குற்றங்கள் கோவையில் அதிகரிக்கின்றனவா?

  13. காஞ்சிபுரம்: லாரி மோதி இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் சென்ற பெண் காவலர் உயிரிழப்பு

    விபத்து
    படக்குறிப்பு, விபத்தில் உயிரிழந்த உமாதேவி

    காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் அருகே லாரி மோதி இருசக்கர வாகனத்தில் குழந்தையுடன் சென்ற பெண் காவலர் உயிரிழந்துள்ளார்.

    காஞ்சிபுரம் சிவகாஞ்சி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த உமாதேவி(வயது 26). இவர் பணி முடித்துவிட்டு தனது வீட்டிற்கு தனது கணவர் ராஜா மற்றும் மகன் ரக்ஷத்-வுடன் பனப்பாக்கம் நோக்கி சென்னை-பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த லாரி ஒன்று இரண்டு கார்களை மோதி முன்னால் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் காவலர் உமாதேவி மற்றும் அவரது இரண்டு வயது மகன் ரக்ஷத் இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.

    இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாலுசெட்டி போலீசார் காயமடைந்த ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிரிழந்தவர்களின் இரு பிரேதங்களையும் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த பாலுசெட்டி காவல்துறையினர் லாரியை கைபற்றி தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

    சாலை விபத்தில் பெண் காவலரும் அவரது பிஞ்சு குழந்தையும் பரிதாபமாக சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சக காவலர்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

  14. கோவை: ரேஷன் கடையில் பிரதமர் நரேந்திர மோதியின் படத்தை மாட்டிய அண்ணாமலை

    பிரதமர் மோதி

    தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக கோவை வந்திருந்தார். அதன் ஒரு பகுதியாக கோல்டு வின்ஸ், துரைசாமி நகரில் உள்ள ரேஷன் கடைக்குச் சென்று அங்கிருந்த மக்களிடம் ரேஷன் கார்டுதார்களுக்கு மத்திய அரசு வழங்கும் திட்டங்கள் குறித்து விளக்கினார். அப்போது ரேஷன் கடையின் உள்ளே சென்ற அண்ணாமலை அங்கு முதல்வர் ஸ்டாலின் படத்துக்கு அருகில் பிரதமர் மோதியின் படத்தை மாட்டினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவை மாவட்டம் ஆலந்துறை அடுத்துள்ள பூலுவபட்டி பேரூராட்சி அலுவலகத்தில் பா.ஜ.க பிரமுகர் ஒருவர் பிரதமர் மோதியின் படத்தை மாற்றியது சர்ச்சையாகியிருந்தது. அதற்காக அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து பாஜக பிரமுகரை ஆலாந்துறை போலீசார் கைது செய்திருந்தனர்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  15. வரலாற்று மர்மம்: அசாமில் கிடைத்த மணல் கல் ‘மர்ம’ ஜாடிகள்

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  16. ஆக்டோபஸை 'துவைத்துக் காயப்போடும்' இந்தியப் பெருங்கடல் தீவு

    ரோட்ரிக்ஸ்

    பட மூலாதாரம், Getty Images

    மொரீஷியஸுக்கு வடகிழக்கே 600கிமீ தொலைவில் இருக்கும் தனி உலகம் அது. அதற்கு அருகே எந்த நிலப்பரப்பும் கிடையாது. இது உலகின் மிக தொலைதூரத்தில் மக்கள் வசிக்கும் தீவுகளில் ஒன்று.

    விமானத்தில் இருந்து பார்த்தால் ​​ரோட்ரிக்ஸ் என்பது கடல், காயல், வட்டவடிமான நிலப்பரப்புகளைக் கொண்ட அழகான இடமாகும். அலைகள்தான் ரோட்ரிகஸின் வெளிப்புற எல்லையைக் வகுக்கின்றன.

    ரோட்ரிக்ஸ் ஒரு திறந்தவெளிச் சிறைச்சாலையாக இருந்தால், அங்கிருந்து யாரும் தப்பிக்க முடியாது. தனிமைதான் இந்தத் தீவின் நண்பன். அது உலகத்திலிருந்தும் அதன் சத்தத்திலிருந்தும் இந்தத் தீவைப் பாதுகாக்கிறது.

  17. விருதுநகரில் இடி மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழப்பு

    விருதுநகர்

    விருதுநகரில் பெய்த கனமழையின் போது, கட்டட பணியில் ஈடுபட்டு இருந்தவர்களின் மீது இடி மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். விருதுநகரில் கடந்த மூன்று நாட்களாக பகல் நேரங்களில் மேக மூட்டத்துடனும் மாலை நேரங்களில் லேசான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் விருதுநகர் கருப்பசாமி நகரில் ரோசல்பட்டி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் என்பவர் புதுவீடு கட்டி வருகிறார். கட்டுமான பணிகளில் சுமார் 15-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.வீட்டின் கட்டுமான பணிகளில் மாடி பகுதியில் ரோசல்பட்டியை சேர்ந்த ஜக்கம்மாள் (49) கார்த்தி (24) முருகன் (25) மற்றும் கருப்பசாமி நகர் பகுதியை சேர்ந்த சூர்யா (21) ஆகியோர் வேலை பார்த்து கொண்டிருந்துள்ளனர்.இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி முதல் சுமார் 1 மணி நேரம் இடி மின்னலுடன் பெய்த கன மழையின் போது, இடி மின்னல் தாக்கி பணியிலிருந்த 4 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் ஊரக காவல் நிலைய போலீசார் உயிரிழந்த சடலங்களை பொதுமக்கள் ஒத்துழைப்புடன் மீட்டு விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஊரக காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் இடி மின்னல் தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  18. ஆந்திராவில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் தீ விபத்து: 6 பேர் உயிரிழப்பு

    ஆந்திர மாநிலம் - தீ விபத்து

    பட மூலாதாரம், UGC

    ஆந்திரா மாநிலம் ஏலூரு மாவட்டத்தில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். புதன்கிழமையன்று இரவு 11.30 மணியளவில் நடந்த இந்த விபத்தின் போது, அங்கு 150 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 25 லட்சம் நஷ்டஈடு வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

  19. நேயர்களுக்கு வணக்கம்!

    வணக்கம் நான் ஷோபனா எம்.ஆர்.

    இன்றைய நேரலை பக்கத்திற்கு உங்களை வரவேற்கிறேன். நேற்றைய நேரலை பக்கத்திலிருந்து முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.

    • இலங்கையில், 367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை நீட்டித்து அரசிதழில்(Gazette) வெளியிடப்பட்டுள்ளது.
    • கர்நாடகாவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை வழக்கில், பாஜக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • உலக வங்கியிடமிருந்து 76 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இது மருந்து வகைகளை கொள்முதல் செய்வதற்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர்.
    • 'பீஸ்ட்' பார்த்த இருசக்கர வாகன ஓட்டிகள் நூறு பேருக்கு தலா ஒரு லிட்டர் பெட்ரோல்
    • யுக்ரேன் மேரியோபோல் நகரில் ரஷ்யப் படையினர் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக கூறப்படுவது குறித்து ஆராயப்போவதாக அமெரிக்காவும், பிரிட்டனும் தெரிவித்துள்ளன.
    • இலங்கைக்கான சீன தூதுவரை, புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்.
    • இலங்கை தலைநகர் கொழும்பு காலி முகத்திடலில் ஐந்தாவது நாளாகவும் போராட்டம் நடைபெற்று வருகின்ற நிலையில், போராட்டக்காரர்களை கலந்துரையாடல்களுக்கு வருகைத் தருமாறு இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
    • தமிழ்நாட்டில் என்ன உற்சாக வரவேற்பு இருக்கிறதோ, அதற்கு சற்றும் குறையாத வரவேற்புடன் யாழ்ப்பாணத்திலும் திரையிடப்பட்டிருக்கிறது பீஸ்ட் திரைப்படம்.
    • யுக்ரேனில் இனப்படுகொலை நடத்தியுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முதல்முறையாக குற்றச்சாட்டியுள்ளனர். மேலும், புதினை 'சர்வாதிகாரி' என்றும் பைடன் குறிப்பிட்டுள்ளார்.

    பிபிசி தமிழின் பேஃஸ்புக்,ட்விட்டர்,இன்ஸ்டாகிராம்,யூடியூப்பக்கங்கள் வாயிலாகவும் செய்திகளை அறியலாம்.