You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

மேற்குவங்க பீர்பம் வன்முறை: மமதா பானர்ஜிக்கு பாஜக நெருக்கடி

மேற்குவங்க மாநிலம் பீர்பம் மாவட்டத்தில் எட்டு பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது என, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. நன்றி நேயர்களே...

    இன்றைய நேரலைப் பக்கம் இத்துடன் நிறைவடைகிறது. மீண்டும் புதிய நேரலை பக்கம் நாளை காலை தொடங்கும்.

    இன்று காலையில் இருந்து இன்றைய நேரலை பக்கத்தில் பதிவான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.

    • இழந்த பகுதிகளை ரஷ்ய படையிடமிருந்து மீட்க யுக்ரேன் படைகள் தீவிர சண்டையிட்டுவருவதாக, அமெரிக்கா, ஜெர்மன் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
    • யுக்ரேன் தலைநகர் கீயவின் மேற்கில் அமைந்துள்ள புறநகர் பகுதியான மகாரீவ் பகுதியில் மீண்டும் யுக்ரேனின் தேசிய கொடி ஏற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • எனினும், யுக்ரேனின் தெற்கு துறைமுக நகரமான மேரியோபோலில் ரஷ்யப்படைகள் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்திவருகிறது.
    • மேரியோபோல் நகர மக்கள்தொகையில் கால்வாசி மக்கள் அல்லது சுமார் 1,00,000 பேர் “மனிதநேயமற்ற சூழல்களில்” இன்னும் சிக்கியுள்ளதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
    • வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் நள்ளிரவில் ஆண் நண்பரை தாக்கி இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • மேற்குவங்க மாநிலம் பீர்பம் மாவட்டத்தில் எட்டு பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது என, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து ‘நியாயமான’ முறையில் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
    • விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "நிச்சயம் பொள்ளாச்சி பாலியல் வழக்குபோல இல்லாமல் இந்த அரசு குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தருகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்" என தெரிவித்தார்.
  2. யுக்ரேனில் சமீபத்திய செய்தி என்ன?

    இந்த நேரலைப் பக்கத்தில் இப்போதுதான் இணைந்தீர்களா? யுக்ரேனில் இன்று இதுவரை என்ன நடந்தது என்பதை இங்கே வழங்குகிறோம்.

    • இழந்த பகுதிகளை ரஷ்ய படையிடமிருந்து மீட்க யுக்ரேன் படைகள் தீவிர சண்டையிட்டுவருவதாக, அமெரிக்கா, ஜெர்மன் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.
    • யுக்ரேன் தலைநகர் கீயவின் மேற்கில் அமைந்துள்ள புறநகர் பகுதியான மகாரீவ் பகுதியில் மீண்டும் யுக்ரேனின் தேசிய கொடி ஏற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • எனினும், யுக்ரேனின் தெற்கு துறைமுக நகரமான மேரியோபோலில் ரஷ்யப்படைகள் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலை நடத்திவருகிறது.
    • மேரியோபோல் நகர மக்கள்தொகையில் கால்வாசி மக்கள் அல்லது சுமார் 1,00,000 பேர் “மனிதநேயமற்ற சூழல்களில்” இன்னும் சிக்கியுள்ளதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
    • மேரியோபோலில் மனிதநேய வழித்தடமும் ரஷ்யப்படைகளால் கைப்பற்றப்பட்டதாகவும், யுக்ரேன் அவசரசேவை பணியாளர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் சிறைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
    • ரஷ்ய அதிபர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சிஎன்என் இண்டர்நேஷனல் ஊடகத்திடம் பேசுகையில், ரஷ்யாவின் “இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டால்” அணு ஆயுதங்களை ரஷ்யா யன்படுத்தலாம் என தெரிவித்தார்.
    • அணு ஆயுதங்கள் குறித்த ரஷ்யாவின் கருத்துக்கு அமெரிக்க பாதுகாப்புத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.
  3. வேலூரில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது - நடந்தது என்ன?

    வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் நள்ளிரவில் ஆண் நண்பரை தாக்கி இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

  4. பீர்பம் வன்முறை: துரதிருஷ்டவசமானது; நியாயமான விசாரணை நடத்தப்படும் – மமதா பானர்ஜி

    மேற்குவங்க மாநிலம் பீர்பம் மாவட்டத்தில் எட்டு பேர் எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது என, அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து ‘நியாயமான’ முறையில் விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    மேற்குவங்க மாநிலம் பீர்பம் மாவட்டம், ராம்புராட் பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவர் பாது ஷேய்க், இரு தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார். இவரது கொலையால் ஆத்திரமடைந்த கும்பல் ஒன்று, நேற்று, செவ்வாய்க்கிழமைபோக்டுய் கிராமத்தில் வீடுகளுக்குத் தீ வைத்ததில், 8 பேர் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டனர்.

    அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பாக, 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில டிஜிபி மாலவியா தெரிவித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

    இச்சம்பவத்தைத் தொடர்ந்து மேற்குவங்கத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என, அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.

    ராம்புராட் பகுதிக்கு நாளை அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி செல்லவுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தெரிவித்ததாக ஏஎன்ஐ வெளியிட்டுள்ள செய்தியில், “இச்சம்பவம் துரதிருஷ்டவசமானது. இதுகுறித்து நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படும். எங்கள் மாநிலத்தில் உள்ள மக்களின் நலனில் நாங்கள் அக்கறை கொண்டுள்ளோம். யாரும் துன்பப்பட நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என தெரிவித்தார்.

    இம்மாதிரியான சம்பவங்கள் ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களிலும் நடைபெற்றுள்ளன. ராம்புராட்டில் நடந்ததை நியாயப்படுத்தவில்லை. நியாயமான முறையில் விசாரணை நடத்தப்படும்” என கூறினார்.

    பாஜகவை விமர்சித்த மமதா பானர்ஜி, “இது மேற்குவங்கம். உத்தரப்பிரதேசம் அல்ல. ஹத்ராஸில் கூட்டுப்பாலியல் வன்கொடுமை நடந்தபோது திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக ஒருகுழுவை அம்மாநிலத்திற்கு அனுப்பினோம், ஆனால், எங்களை அனுமதிக்கவில்லை. ஆனால், யாரும் இங்கு வருவதை நாங்கள் தடுக்கவில்லை” என்றார்.

  5. "இலங்கையில் இது பஞ்ச நிலைமை இல்லை என்றால், எதனை நாங்கள் பஞ்சம் என்று கருதுவது?"

      • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
      • பதவி, பிபிசி தமிழுக்காக

    நேரடியாகவே எதிர்கட்சிகள் தற்போது நாட்டில் பஞ்சம் நிலவுவதாக நேரடியாகவே கூறுகின்றார்கள். அரசாங்கம் அதை மறுத்து வருகின்றது. உங்களின் பார்வை எவ்வாறு இருக்கின்றது?

    நாட்டிலே பஞ்சம் இருக்கின்றதா? இல்லையா? என்பதை தீர்மானிக்கின்ற ஒரு காரணி, பாதையிலே இருக்கின்ற மக்களை பார்த்தால், தெரியும். என்னை பொருத்த வரையிலே உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இருக்கின்றது. குறிப்பாக எரிபொருள் தட்டுப்பாடு இருக்கின்றது. இது நேரடியாக ஒரு பஞ்ச நிலைமையா என்று கருத முடியாது என்றால், எதனை நாங்கள் பஞ்சம் என்று கருதுவது?

  6. சீன விமான விபத்து: விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தது

    132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் MU5735 விமானம் குவாங்சி மாகாணத்தில் நேற்று முன்தினம் விபத்துக்குள்ளான நிலையில், 24 மணிநேரத்தைக் கடந்து தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயினும் இதுவரை யாரும் உயிருடன் காணப்படவில்லை.

    இந்நிலையில், விபத்துக்கு உள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை தேடுதல் குழுவினர் கண்டறிந்துள்ளதாக, அரசு ஊடக அறிக்கை தெரிவித்துள்ளது.

    இதனை இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் சீன விமான போக்குவரத்துத்துறை அதிகாரிகள் அறிவித்தனர். இரு தினங்களாக நடந்த தேடுதலுக்குப் பின் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டறியப்பட்டுள்ளது.

    இவ்விபத்தில் உயிரிழந்தோர் எத்தனை பேர் என்பதை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. எனினும், விமானத்தில் பயணித்த 132 பேரில் ஒருவர்கூட உயிர்பிழைத்திருக்க மாட்டார் என அஞ்சப்படுகிறது.

  7. இழந்த பகுதிகளை ரஷ்ய படையிடமிருந்து மீட்க யுக்ரேன் படைகள் தீவிர சண்டை – ஜெர்மன், அமெரிக்கா

    இழந்த பகுதிகளை ரஷ்ய படையிடமிருந்து மீட்க யுக்ரேன் படைகள் தீவிர சண்டையிட்டுவருவதாக, அமெரிக்கா, ஜெர்மன் ஆகிய நாடுகள் தெரிவித்துள்ளன.

    யுக்ரேனின் பல்வேறு நகரங்களில் குண்டுவீச்சு தாக்குதல்களை தொடர்ந்துவரும் போதிலும், ரஷ்யப்படைகள் அந்நாட்டில் முன்னேறுவதில் தோல்வியடைந்துள்ளதாக, ஜெர்மன் ஆட்சித்துறை தலைவர்ஓலாஃப் ஷோட்ஸ் தெரிவித்துள்ளார்.

    “யுக்ரேனில் ரஷ்யப்படைகள் தினந்தோறும் அழிவுகளை மேற்கொண்டுவந்தாலும், புதினின் தாக்குதல் நிறுத்தப்பட்டுள்ளது,” என அவர் ஜெர்மனி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார். ரஷ்ய அதிபர் “உண்மையை கேட்க வேண்டும்” என தெரிவித்த அவர், சண்டையை நிறுத்தி, ராஜரீக தீர்வை கண்டறிய முயற்சிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    யுக்ரேன் – ரஷ்யா இருநாடுகளுக்கு இடையிலான போர் யுக்ரேனை மட்டும் அழிப்பதில்லை எனவும், “ரஷ்யாவின் எதிர்காலத்தையும் அழிப்பதாக” அவர் தெரிவித்தார்.

    ரஷ்யாவுக்கு மேலும் பல தடைகள் குறித்து எச்சரிக்கைவிடுத்த அவர், “ரஷ்யாவுக்கு எதிரான தடைகளை தொடர்ந்து தீவிரமாக்கி வருகிறோம். ஆனால், அந்த தடைகள் ரஷ்ய தலைமையைவிட ஐரோப்பிய நாடுகளை பாதிக்கக்கூடாது” என தெரிவித்தார்.

    மேலும், யுக்ரேனியர்கள் “ஜெர்மனியை நம்பலாம்” எனவும், அந்நாட்டிலிருந்து “அகதிகளை வரவேற்பதாகவும்” அவர் கூறினார்.

    இந்நிலையில், நேட்டோ முன்னாள் துணை தலைமை கமாண்டர் ஆட்ரியன் பிராட்ஷா, பிபிசி ரேடியோ 4 நிகழ்ச்சியில் கூறுகையில், “நம்ப முடியாத அளவுக்கு யுக்ரேனியர்கள் தொடர்ந்து தைரியத்துடன் போரிட்டு வருகின்றனர். பல பகுதிகளில் ரஷ்ய படையினரை தடுத்துவருகின்றனர்” என தெரிவித்தார்.

    இதே கருத்தைக் கூறியுள்ள அமெரிக்காவும், இழந்த பகுதிகளை ரஷ்ய படையிடமிருந்து மீட்க யுக்ரேன் படைகள் தீவிர சண்டையிட்டுவருவதாக தெரிவித்துள்ளது.

  8. அணு ஆயுதங்கள் குறித்த ரஷ்யாவின் கருத்து ஆபத்தானது - அமெரிக்கா

    யுக்ரேனில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தலாம் என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முன்னதாக எச்சரித்திருந்தார். அனால், அமெரிக்காவின் இந்த கூற்றை ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித்தொடர்பாளர் மறுத்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் மறுப்புக்கு அமெரிக்க பாதுகாப்புத்துறை கண்டனம் தெரிவித்துள்ளது.

    ரஷ்ய அதிபர் புதினின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் சிஎன்என் இண்டர்நேஷனல் ஊடகத்திடம் பேசுகையில், ரஷ்யாவின் “இருப்புக்கு ஆபத்து ஏற்பட்டால்” அணு ஆயுதங்களை ரஷ்யா யன்படுத்தலாம் என தெரிவித்தார். உலகிலேயே அதிகளவிலான அணு ஆயுதங்கள் கையிருப்பைக் கொண்டுள்ள நாடு ரஷ்யா.

    அணு ஆயுதங்கள் குறித்த ரஷ்ய அதிபர் மாளிகையின் கருத்து “ஆபத்தானது” என, அமெரிக்க பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.

    “பொறுப்புள்ள அணுசக்தி நாடு இப்படி நடந்துகொள்ளக்கூடாது,” என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

    மேலும் அவர் கூறுகையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள், “எங்களின் போர் தடுப்பு நிலைப்பாட்டை மாற்ற வேண்டும் என்ற நிலைக்கு இட்டுச்செல்லும் எதையும் பார்க்கவில்லை” என தெரிவித்தார்.

    “இதுகுறித்து எங்களால் முடிந்த அளவுக்கு தினந்தோறும் கண்காணித்து வருகிறோம்,” என அவர் கூறினார்.

    அமெரிக்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டாவும், பெஸ்கோவ்வின் கருத்தை விமர்சித்துள்ளார்.

    “அணு ஆயுதங்கள் குறித்த ரஷ்யாவின் கருத்து ஆபத்தானது. இதனை வேறுவழியில் எப்படி பார்ப்பது என்பது தெரியவில்லை. குறைவான திறன் கொண்ட அணு ஆயுதங்களை உபயோகிப்பதற்கான சாத்தியமான வழிகளை ரஷ்யா ஆராய்ந்துவருகிறது,” என பனேட்டா சிஎன்என் ஊடகத்திடம் தெரிவித்தார்.

  9. காஷ்மீர் பண்டிட்கள் வரலாறு: தங்கள் சொந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டிவந்த அந்த இரவின் கதை

    விவேக் அக்னிஹோத்ரி எழுதி இயக்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் பற்றி இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

    காஷ்மீர் பண்டிட்டுகள், காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து தப்பிச் செல்லும் கதையும் அவர்களின் வலியும் இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்து பல சர்ச்சைகள் எழுந்துள்ளது.

    அரசியல்வாதிகள் முதல் பொதுமக்கள் வரை, அதன் கதையின் உண்மையைப் பற்றி மாறுபட்ட கருத்துக்களை கொண்டுள்ளது தெரிய வருகிறது.

    இப்படம் இதுவரை 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்துள்ளது.

    பல மாநில அரசுகள் இந்தப் படத்திற்கு வரிவிலக்கு அறிவித்துள்ளன. ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் #KashmirFiles பல நாட்களாக ட்ரெண்டிங்கில் உள்ளது.

    காஷ்மீரி பண்டிட்டுகள் பள்ளத்தாக்கை விட்டு வெளியேறி நாட்டின் பிற நகரங்கள் அல்லது மாநிலங்களில் தஞ்சம் அடைய வேண்டிய அந்த இரவு பற்றிய கதை இந்தக்கட்டுரையில் உள்ளது.

  10. ஓ.பன்னீர்செல்வம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்: சசிகலா

    ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்திவரும் ஆறுமுகசாமி ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த இரு தினங்களாக ஆஜரானார். விசாரணை நிறைவுற்ற பின் நேற்று செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தனக்கு சசிகலா மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது என தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “என் மீது மதிப்பும் மரியாதையும் உள்ளது என, ஓ.பன்னீர்செல்வம் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்” என தெரிவித்தார்.

  11. இலங்கை கடலினை இந்தியா ஆக்கிரமிப்பதாகவும் வான் பரப்பை இந்தியாவுக்கு விற்பதாகவும் குற்றச்சாட்டு

      • எழுதியவர், ரஞ்சன் அருண்பிரசாத்
      • பதவி, பிபிசி தமிழுக்காக

    இலங்கை பொருளாதார ரீதியில் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள இந்த தருணத்தில், இந்தியா உதவிகளை வழங்கி, இலங்கையை ஆக்கிரமிக்க முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

    இலங்கை இந்தியாவுடன் மேற்கொள்ளவுள்ள இரண்டு உடன்படிக்கைகளே இவ்வாறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுவதற்கு பிரதான காரணமாக அமைந்துள்ளன.

    இந்தியாவுடன் முக்கிய இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை அமைச்சரவை மார்ச் 21ம் தேதி அனுமதி வழங்கியுள்ளது.

    நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டு, இலங்கைக்கான ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவிக்கான உடன்படிக்கைகளை கைச்சாத்திட்டு, அடுத்த வாரமே இந்தியாவுடன் முக்கிய இரண்டு உடன்படிக்கைகளில் கைச்சாத்திட அமைச்சரவை அனுமதி வழங்கியது.

  12. ‘நரகம்’ போன்று காட்சியளிக்கும் மேரியோபோல்: சுமார் ஒரு லட்சம் பேர் சிக்கியுள்ளனர்

    யுக்ரேனின் தெற்கு எல்லையில் ரஷ்யப்படைகள் போர்த்திறனுடன் இருப்பதால், மேரியோபோல் நகரம் ரஷ்ய படைகளின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகிவருகிறது.

    கடந்த சில வாரங்களாகவே மேரியோபோல் நகரம் ரஷ்யப் படைகளின் பாரபட்சமற்ற குண்டுவீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. அங்கு நிலவும் சூழல் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு ஒன்று திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், அந்நகரம் “இறந்தவர்களின் சடலங்கள் மற்றும் அழிக்கப்பட்ட கட்டடங்களுடன் நரகம் போன்று காட்சியளிப்பதாக” விவரித்துள்ளது.

    அந்நகர மக்கள்தொகையில் கால்வாசி மக்கள் அல்லது சுமார் 1,00,000 பேர் “மனிதநேயமற்ற சூழல்களில்” இன்னும் சிக்கியுள்ளதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    நேற்று நள்ளிரவு அவர் வெளியிட்ட பதிவில், “உணவு இல்லை. தண்ணீர் இல்லை. மருந்துகள் இல்லை. தொடர்ச்சியான ஷெல் தாக்குதலுக்கு அந்நகரம் உள்ளாகியுள்ளது” என அந்நகர மக்களின் அச்சத்தை விவரித்தார்.

    மக்ஸர் டெக்னாலஜிஸ் நிறுவனம் வெளியிட்ட இந்த செயற்கைக்கோள் படங்கள், அந்நகரத்தின் அழிவுகளை விளக்குவதாக அமைந்துள்ளது.

    அந்நகரத்திற்கு மனிதநேய உதவிகளை கொண்டு சேர்ப்பதிலும், மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதிலும், யுக்ரேன் அதிகாரிகள் மற்றும் அதன் நட்பு நாடுகள் முடிந்தளவு ஈடுபட்டுள்ளதாகவும், ஸெலென்ஸ்கி தெரிவித்தார். நேற்று செவ்வாய்க்கிழமை அந்நகரத்திலிருந்து 7,000 பேர் வெளியேறினர்.

    ஆனால், அவ்வாறு தப்பிப்பவர்களும் மனிதநேய வழித்தடங்களில் தாக்கப்படுவதாக, அவர் தெரிவித்தார்.

    அவ்வாறு ஒரு மனிதநேய வழித்தடம் ரஷ்யப்படைகளால் கைப்பற்றப்பட்டதாக, ஸெலென்ஸ்கி கூறியுள்ளார்.

    யுக்ரேன் அவசரசேவை பணியாளர்கள் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் சிறைக்கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    “மக்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கும், மனிதநேய உதவிகள் சென்று சேருவதற்கான தடைகளை உடைப்பதற்காகவும், அனைத்து வழிகளையும் மேற்கொண்டு வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.

  13. விருதுநகர் பாலியல் வன்கொடுமை: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - முதல்வர் ஸ்டாலின்

    விருதுநகர் பாலியல் வன்கொடுமை சம்பவம் குறித்து இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், "நிச்சயம் பொள்ளாச்சி பாலியல் வழக்குபோல இல்லாமல் இந்த அரசு குற்றவாளிகளுக்கு எப்படி தண்டனை பெற்றுத் தருகிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்" என தெரிவித்தார். மேலும், விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  14. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை முடித்துக்கொள்ளலாம்: உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

    பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை ரத்து செய்வதாக, உள்துறை அமைச்சகம் இன்று பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை கூறியுள்ளது.

    நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில், இந்த முடிவை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எடுத்துள்ளதாக, உள்துறை செயலாளர் அஜய் பல்லா கையெழுத்திட்ட உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக, பிப்ரவரி 25 ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்புக்குப் பின் உள்துறை அமைச்சகத்தால் புதிய உத்தரவுகள் ஏதும் பிறப்பிக்கப்படாது என தெரியவந்துள்ளது.

    எனினும், முகக்கவசம் அணிவது, கைகளை தூய்மையாக வைத்துக்கொள்வது போன்ற அடிப்படை கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை முடித்துக்கொள்ளலாம் என, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  15. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழ் நேரலை பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். இதுவரை அ.தா. பாலசுப்ரமணியன் மற்றும் ஆ. லட்சுமி காந்த் பாரதி வழங்கிய நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    யுக்ரேனில் உள்ள பிபிசி செய்தியாளர்கள் மூலம் சமீபத்திய தகவல்கள் மற்றும் தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை இந்த நேரலை பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

  16. இலங்கை பொருளாதார நெருக்கடி: நடுக்கடலில் 37 மணி நேரம் போராடி தனுஷ்கோடி வந்த தமிழ் அகதிகள்

    இலங்கையில் இருந்து உயிரை காப்பாற்றி கொள்ள, 2வது முறையாக தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளதாக இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

    இலங்கையில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களான குழந்தைகளுக்கான பால் பவுடர், அரிசி, பருப்பு, கோதுமை மண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இலங்கையில் வாழும் மக்கள் தமிழ்நாட்டுக்கு அகதிகளாக மீண்டும் வரத் தொடங்கியுள்ளனர்.

    இந்நிலையில், திங்கள்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்கரையில் இருந்து தனது சொந்த பைபர் படகில் ஐந்து குழந்தைகள், மூன்று பெண்கள், இரண்டு ஆண்கள் என இரண்டு குடும்பத்தை சேர்ந்த 10 பேர் தனுஷ்கோடிக்கு புறப்பட்டுள்ளனர். நடுக்கடலில் படகின் இஞ்சினில் ஏற்பட்ட பழுது காரணமாக கடும் வெயிலில் உணவு, தண்ணீர் இன்றி சுமார் 37 மணி நேரத்திற்கும் மேலாக குழந்தைகளுடன் நடுக்கடலில் தத்தளித்தாக தெரிவித்துள்ளனர்.

    பல மணி நேர முயற்சிக்கு பின் பழுதை சரி செய்து, செவ்வாய்கிழமை இரவு 8 மணியளவில் தனுஷ்கோடி வடக்கு பாலம் மீன்பிடி துறைமுகம் சென்று சேர்ந்துள்ளனர்.

    ''இலங்கை நடந்த உள்நாட்டு யுத்தகாலங்களில் உறவுகளையும் உடமைகளையும் இழந்து, உயிர் பிழைத்தால் போதும் என 1990 ஆம் ஆண்டு தமிழகத்திற்கு அகதிகளாய் வந்து, போர் முடிந்த பின் 2012ல் மீண்டும் இலங்கைக்கு புறப்படுச் சென்றோம்.

    தற்போது உணவு பஞ்சத்தால் பட்டினிசாவுக்கு பயந்து குழந்தைகளோடு மீண்டும் இரண்டாவது முறையாக அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளோம். இலங்கையில் தற்போது உள்ள சூழ்நிலையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பல்லாயிரம் பேர் தமிழகத்தில் அகதிகளாக தஞ்சமடைய உள்ளனர்,'' என அவர்கள் தெரிவித்தனர்.

    செவ்வாய்கிழமை காலை முதல் இரவு வரை இலங்கை தமிழர்கள் 16 பேர் அகதிகளாக தனுஷ்கோடிக்கு வந்துள்ளனர்.

  17. மேகேதாட்டு அணை: தொடரும் காவிரிப் பிரச்னைக்கு தீர்வு - முன்னாள் அதிகாரிகள் சொல்வது என்ன?

    இந்தியாவின் தென் மாநிலங்களான தமிழ்நாடு - கர்நாடகம் இடையிலான காவிரி நதி நீர்ப் பிரச்னை கடந்த 2018ம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புடன் முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், மேகேதாட்டு அணை என்கிற பெயரில் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது.

    ''கடந்த 1973 -80 ஆண்டுகளில் கபிணி, ஹேரங்கி, ஹேமாவதி, யாகாச்சி, ஸ்வர்ணாவதி ஆகிய 5 அணைகளை காவிரி மற்றும் துணை நதிகளில் கர்நாடக அரசு கட்டியது. இதன் மூலம் 70 டிஎம்சி தண்ணீர் தேக்கப்படுகிறது.

    இந்த திட்டங்களுக்கு மத்திய அரசின் அனுமதி, திட்டக்குழு நிதி, மாநில அரசுகளின் அனுமதி என எதையும் கர்நாடகம் பெறவில்லை. இவை முறைப்படுத்தப்படாத முறைகேடுகளாகவே தொடர்கின்றன.'' என்கிறார் முன்னாள் தலைமைப் பொறியாளர் அ.வீரப்பன்.

    இந்த பிரச்னைக்கு தீர்வு காண முன்னாள் அரசு அதிகாரிகள், சட்ட நிபுணர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் சொல்வதை விரிவாக படிக்க இங்கே சொடுக்கவும்

  18. தெலங்கானா மர குடோனில் தீ விபத்து - 11 பேர் பலி

    தெலங்கானா மாநிலம், செகந்தராபாத் நகரில் உள்ள மரக் கிடங்கு ஒன்றில் இன்று காலை நேரிட்ட தீ விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

    இந்த தகவலை பிபிசி தெலுங்கு சேவை உறுதி செய்துள்ளது.

  19. மேரியோபோல் நகரில் உணவு இல்லாமல் ஒரு லட்சம் பேர் தவிப்பு யுக்ரேன் அதிபர்

    ரஷ்யாவின் கடுமையான குண்டுவீச்சுக்கு மத்தியில், உணவு, தண்ணீர் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாமல் மேரியோபோல் நகரில் ஒரு லட்சம் பேர் உள்ளதாக யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

    "இன்றைய நிலவரப்படி, மேரியோபோல் நகரத்தில் சுமார் 1,00,000 மக்கள் உள்ளனர். மனிதாபிமானமற்ற சூழ்நிலையில், ரஷ்ய படையெடுப்பால் உணவு, தண்ணீர் , மருந்து இல்லாமல் இருக்கின்றனர். தொடர்ச்சியான குண்டு வீச்சு மற்றும் குண்டுவெடிப்புக்கு மத்தியில் இவர்கள் உள்ளனர்", என்று அவர் தனது இரவு நேர சமூக ஊடக உரையில் கூறினார்.

    தற்காலிக போர் நிறுத்தம் மூலம் அங்குள்ள பொதுமக்களை மீட்பதற்கான முயற்சிகள், ரஷ்ய " குண்டு வீச்சால் " தடைப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். செவ்வாயன்று, மக்கள் வெளியேறுவதற்கான முயற்சியில் ஈடுபட்ட யுக்ரேனிய அரசாங்க ஊழியர்களும், அவர்களது பேருந்து ஓட்டுனரும் ரஷ்யாவால் சிறைபிடிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

  20. இந்தியாவில் இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு

    நாடு முழுவதும் தொடர்ந்து இரண்டாவது நாளாக பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 80 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்தியாவில் நேற்று 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் 80 காசுகளும் சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு 50 ரூபாயும் உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.