கண்ணெதிரே விழுந்து வெடிக்கும் குண்டு: தவிக்கும் தமிழ்நாட்டு மாணவர்கள்
இந்திய மாணவர்கள் சிலர் க்ரைமியாவுக்கு அருகில் இருக்கும் மிகொலயேவ் நகரத்திலுள்ள பெட்ரோ மொஹைலா ப்ளாக் சீ தேசிய பல்கலைக்கழகத்தில் உள்ளனர். அவர்களில் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் திவாகரிடம் பேசினோம்.
திவாகர், நான்காம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். அவர் சற்று நேரம் முன்பு பிபிசி தமிழிடம் பேசியபோது, “நாங்கள் இருக்கும் பகுதியிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
நேற்று முதல் நாங்கள் எங்கள் விடுதியின் அடித்தளத்தில் தான் இருக்கிறோம். இங்கு மின் விளக்கு, ஹீட்டர் என்று எதுவுமே இல்லை. இப்போது எங்களிடம் இருக்கும் உணவு 3 நாட்களுக்குத் தான் தாக்குப் பிடிக்கும். அது முடிந்த பிறகு என்ன செய்யப் போகிறோம் என்று தெரியவில்லை.
பதுங்கு குழிகளுக்குச் செல்லுமாறு சொல்கிறார்கள். ஆனால், அவை எங்கு உள்ளன என்று எந்த விவரமும் தெரியவில்லை.
போர் தொடங்கி மூன்று நாட்கள் ஆகிவிட்டன. இதுவரைக்கும் எங்கள் நாட்டிற்குத் திரும்புவது என்பது குறித்த எந்தத் தகவலும் இல்லை. நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து கொண்டேயிருக்கிறது. இந்திய அரசு சொல்வதுபோல் எல்லைக்குச் செல்ல வேண்டுமெனில் நாங்கள் சுமார் 800 கி.மீ பயணிக்க வேண்டும். இந்தச் சூழலில் அதற்கு வாய்ப்பே இல்லை. அடுத்து என்ன செய்வது என்றே தெரியவில்லை,” என்று கூறினார்.
அவர்கள் கண்ணெதிரே குண்டு விழுந்து வெடிப்பது அவர்கள் பகிர்ந்துகொண்ட விடியோக்களில் தெரிகிறது.

