கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழாவில் பங்கேற்க 50 இந்தியர்களுக்கு இலங்கை அனுமதி

இந்தியா - இலங்கை எல்லையில் சுமார் 290 ஏக்கர் பரப்பளவில் கச்சத்தீவு உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தின் இறுதியிலோ மார்ச் மாதத்தின் முதல் வாரத்திலோ 2 நாட்களுக்கு தேவாலய திருவிழா நடைபெறுவது வழக்கம்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. இலங்கையில் சிறை பிடிக்கப்பட்ட நாகை மீனவர்கள் 21 பேரை நிபந்தனை அடிப்படையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு

    நாகை மீனவர்கள்
    படக்குறிப்பு, கைதுசெய்யப்பட்ட 21 நாகை மீனவர்கள்

    இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 21 பேரை நிபந்தனை அடிப்படையில் விடுதலை செய்வதாக அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

    கடந்த ஜனவரி மாதம் 31ஆம் தேதி நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப் படகுகளையும், அதிலிருந்த 21 மீனவர்களையும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் தொடர்பான வழக்கு இன்று இலங்கை பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி கிஷாந்தன், மீனவர்களை நிபந்தனையுடன் விடுதலை செய்வதாகவும் கையகப்படுத்தப்பட்ட மீனவர்களுடைய இரண்டு விசைப்படகுகள் அரசுடமையாக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

  2. வந்துகொண்டிருக்கும் செய்தி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறை: 5ஆவது ஊழல் வழக்கில் தீர்ப்பு

    லாலு பிரசாத் யாதவ்

    பட மூலாதாரம், Getty Images

    படக்குறிப்பு, லாலு பிரசாத் யாதவ்

    பிகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் மீதான ஐந்தாவது ஊழல் ஊழக்கில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 60 லட்சம் அபராதமும் விதித்து ஜார்கண்ட் மாநில தனி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    இந்த வழக்கில் அவரை குற்றவாளி என்று கடந்த வாரம் தனி நீதிமன்றம் அறிவித்திருந்தது.

    லாலு பிரசாத் யாதவ் பிகார் முதலமைச்சராக இருந்த காலத்தில் கால்நடைகளுக்கான தீவனம் மற்றும் பிற தேவை எனக் கூறி கற்பனையான செலவினங்களுக்காக பல்வேறு அரசு கருவூலங்களில் இருந்து ரூ.950 கோடி மதிப்பிலான சட்ட விரோதமாக எடுத்ததாக அவர் மீது ஊழல் வழக்குகள் தொடரப்பட்டன.

    அதில் ஒன்று ஜார்க்கண்டில் உள்ள டோராண்டா கருவூலத்தில் இருந்து ரூ.139.35 கோடியை சட்டவிரோதமாக எடுத்தது தொடர்பான வழக்கு.

    இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 99 பேரில், 24 பேரை கடந்த வாரம் ஜார்க்கண்ட் தனி நீதிமன்றம் விடுவித்தது.

    அப்போது குற்றம்சாட்டப்பட்ட 46 பேருக்கு மூன்றாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த நிலையில், லாலு பிரசாத் மீதான தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    ஜார்க்கண்டில் உள்ள தும்கா, தியோகர் மற்றும் சாய்பாசா கருவூலங்களில் பணம் எடுத்தது தொடர்பான நான்கு வழக்குகளில் 73 வயதான லாலு பிரசாத் யாதவுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குகளில் மேல் முறையீடு செய்ததையடுத்து அவர் ஜாமீனில் விடுவிக்கப்ட்டிருந்தார்.

    இந்த நிலையில், தற்போது டோராண்டா கருவூல வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால் அவர் மீண்டும் சிறைக்கு செல்லும் நிலை எழுந்துள்ளது.

    பிகாரில் உள்ள பாங்கா கருவூலத்தில் இருந்து பணம் எடுத்தது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மீது ஆறாவதாகவும் ஒரு ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது.

  3. அரியலூர் மாணவி மரணம் வழக்கில் சிபிஐ விசாரணை தொடக்கம்

    சிபிஐ விசாரணை

    பட மூலாதாரம், HIMALAYAN

    படக்குறிப்பு, சிபிஐ விசாரணை அதிகாரிகள்.

    கடந்த மாதம் அரியலூர் மாணவி உயிரிழந்த வழக்கில், சிபிஐ அதிகாரிகள் இன்று முதல் விசாரணையை தொடங்கினர்.

    சிபிஐ ஐ.ஜி வித்யா குல்கர்னி தலைமையில், எஸ்பி, டிஎஸ்பி உட்பட சுமார் 10 அதிகாரிகள் விசாரணைக்காக இன்று 12.30 மணியளவில், சம்பந்தப்பட்ட பள்ளியின் மாணவியர் விடுதி அலுவலகத்திற்கு சென்று விசாரணையை தொடங்கியுள்ளனர்.

  4. உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை தோற்கடித்த 16 வயது பிரக்ஞானந்தா

    ches

    பட மூலாதாரம், ANI

    ஆன்லைனில் நடந்துவரும் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை 16 வயதான பிரக்ஞானந்தா தோற்கடித்தார்.

    தொடர்ந்து மூன்று வெற்றிகளைப் பெற்றிருந்த கார்ல்சன், கறுப்புக் காய்களுடன் ஆடிய பிரக்ஞானந்தாவின் 39 நகர்வுகளில் வீழ்ந்தார்.

    அனைத்து வகையான செஸ் வடிவங்களிலும் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.

    ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் போட்டியில், ஒரு வெற்றிக்கு 3 புள்ளிகளும், டிராவுக்கு ஒரு புள்ளியும் வழங்கப்படுகிறது. தொடக்க கட்டத்தில் இன்னும் ஏழு சுற்றுகள் இருக்கின்றன.

  5. வணக்கம் நேயர்களே!

    நான் ஆ.லட்சுமி காந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை எம். மணிகண்டன் மற்றும் நந்தினி வெள்ளைச்சாமி வழங்கிக்கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன். தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

  6. இந்தியாவில் புதிதாக 16,051 பேருக்கு கொரோனா தொற்று

    கொரோனா வைரஸ்

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 16,051 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 204 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை, 2,02,131 பேர் சிகிச்சையில் உள்ளனர். தினசரி தொற்று விகிதம் 1.93% ஆக உள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

    அதேபோன்று, தமிழகத்தில் நேற்று (பிப். 20) 949 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை, தமிழகத்தில் 34,44,929 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று 3,172 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தனர். நேற்று கொரோனா தொற்றால் 3 பேர் உயிரிழந்தனர்.

  7. யுக்ரேன் நெருக்கடி: வடக்கு எல்லை குடியிருப்புவாசிகளுடன் ஒரு சந்திப்பு

    யுக்ரேன் நெருக்கடி: எல்லையில் குடியிருக்கும் மக்களின் நிலை என்ன? இந்த காணொலியை பாருங்கள்.

    YouTube பதிவை கடந்து செல்ல
    Google YouTube பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது YouTubeபதிவில் விளம்பரங்கள் இருக்கக்கூடும்

    YouTube பதிவின் முடிவு

  8. உலகத் தாய்மொழிகள் தினம்: தாய்மொழி வழிக் கல்வியின் தேவை என்ன?

      • எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
      • பதவி, பிபிசி தமிழ்
    தாய்மொழி

    பட மூலாதாரம், GETTY IMAGES

    ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ ) பிப்ரவரி 21ம் தேதியை உலக தாய்மொழி தினமாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான தாய்மொழி தின யுனெஸ்கோவின் கருதுகோளாக ''பன்மொழிக் கற்றலுக்கு தொழில் நுட்பத்தின் பயன்பாடு'' என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

  9. குஜராத் பாஜக ட்விட்டரில் முஸ்லிம்கள் தூக்கிலிடப்படுவது போன்று வெளியிட்ட சர்ச்சை கார்ட்டூனை நீக்கிய ட்விட்டர்

    பாஜக

    பட மூலாதாரம், GETTY IMAGES

    குஜராத் பாஜக வெளியிட்ட சர்ச்சை கார்ட்டூனை ட்விட்டர் நீக்கியது குறித்த செய்தியை 'தி இந்து' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

    2008ம் ஆண்டின் அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்ட 49 பேரில் 38 பேருக்குத் தூக்குத் தண்டனையும், 11 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து, இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் பிப்.19 அன்று தீர்ப்பளித்தது.

    இந்நிலையில், தொப்பி அணிந்த சிலர் தூக்கிலிடப்படுவது போன்ற கார்ட்டூன் குஜராத் பாஜகவின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று வெளியிடப்பட்டது. அதில், "சத்யமேவ ஜெயதே", "தீவிரவாதத்தைப் பரப்புபவர்களுக்குக் கருணை கிடையாது" எனவும் பதிவிடப்பட்டிருந்தது.

  10. அமெரிக்க வரலாறு: மால்கம் எக்ஸ் படுகொலை - 'கொல்லப்படுவோம் என்பது அவருக்கு முன்பே தெரியும்'

    மால்கம் எக்ஸ்

    பட மூலாதாரம், Getty Images

    அமெரிக்கா கறுப்பினத்தவரை மட்டும் கொண்ட நாடாக மாற வேண்டும் என்று கூறிய மால்கம் எக்ஸ் 1965-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ம் தேதி படுகொலை செய்யப்பட்டார்.

    நியூயார்க்கில் உள்ள ஹார்லெம் மாவட்டத்திற்கு அருகே உள்ள ஆடுபோன் அரங்கில் சுமார் 400 பேர் முன்னிலையில் அவர் உரையைத் தொடங்கியபோது பல முறை அவரது உடலில் குண்டுகள் பாய்ந்தன.

    அப்போது 39 வயதாகியிருந்த மால்கம் எக்ஸ் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிறிது நேரத்திலேயே அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

    துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கருதப்படும் இருவர் அரங்குக்கு வெளியே மால்கம் எக்ஸின் ஆதரவாளர்களால் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பல நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு அவர்களை காவல்துறையினர் மீட்டனர்.

  11. திருமங்கலத்தில் மறுதேர்தல் அறிவித்த வாக்குச்சாவடியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு: மாவட்ட டிஐஜி, எஸ்.பி ஆய்வு

    மாவட்ட டிஐஜி, எஸ்.பி ஆய்வு

    மதுரை மாவட்டம் திருமங்கலம் நகராட்சியில் உள்ள 17வது வார்டில் பெண் வாக்காளர்கள் வாக்குச்சாவடி மையத்தில், கடந்த 19ஆம் தேதி நடைபெற்ற தேர்தலின்போது சில வாக்காளர்கள் உடைய கையொப்பம் வாக்குச்சாவடி மைய அலுவலர் பெறாமல் இருந்ததை அறிந்து, திமுக வேட்பாளர் ராஜம்மாள் கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி, மாநில தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்ததன் பேரில், மறுதேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது .

    இந்த வாக்குச்சாவடியில்அதிமுக சார்பில் உமா விஜயன், திமுக சார்பில் ராஜம்மாள், பாஜக சார்பில் இருளாயி, நாம் தமிழர் கட்சி சார்பில் சாந்தி ஆகிய 4 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

    இன்று காலை 17வது வார்டுக்கான பெண் வாக்காளர் வாக்குச்சாவடி மையத்தில்,பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தேர்தல் அலுவலர்கள் தேர்தலை நடத்தி வருகின்றனர். இன்று காலை 7 மணி முதலே ஏராளமான பெண்கள் வரிசையில் நின்று தங்களது வாக்குப் பதிவினை செய்து வருகின்றனர். இந்த வாக்குச்சாவடியில் உள்ள பெண் வாக்காளர்கள் 949 உள்ளனர்.

    மறு வாக்குப்பதிவு நடைபெறும் 17வது வார்டு மையத்தை காவல்துறை டிஐஜி பொன்னிமற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையமான பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை பார்வையிட்ட டிஐஜி பொன்னி, எஸ்.பி.பாஸ்கரன், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் , சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதா? என்பது குறித்தும்,வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் இருக்கும் இடத்தையும் ஆய்வு மேற்கொண்டனர்.

  12. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

    பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள்

    பட மூலாதாரம், கியூ பிரிவு போலீசார்

    தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்குக் கடத்த முயன்ற 30 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையில் தூத்துக்குடி கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் விஜய அனிதா, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜீவமணி வேல்ராஜ், வேலாயுதம், சுரேஷ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகில் இருந்த 8 பேர் கொண்ட கும்பலை சுற்றிவளைத்து போலீசார் சோதனை செய்ததில், அவர்களிடம் 2 கிலோ வீதம் 5 பாக்கெட்டுகளில் கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன் என்னும் ஐஸ் போதைப் பொருளை வைத்திருப்பது தெரியவந்தது. மேலும், அதனை அவர்கள் இலங்கைக்குக் கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக, கீழவைப்பார் பரலோக மாதா கோவில் தெருவைச் சேர்ந்தஇருதய வாஸ் , கிங் பேன், சிலுவை, அஸ்வின், வினிஸ்டன், சுபாஷ்,கபிலன்,சைமோன், ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவர்களிடம் இருந்த ரூ.30 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

  13. நரேந்திர மோதிக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஸ்டாலினை முந்துகிறாரா கேசிஆர்?

    கேசிஆர்

    பட மூலாதாரம், TWITTER/@TRSPARTYONLINE

    உத்தரப்பிரதேசம், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் மீதும் அனைவரின் பார்வையும் இருந்தது. தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவ் (கே.சி.ஆர்.) முதலில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரேயை சந்தித்தார். இதை தொடர்ந்து அவர் என்சிபி தலைவர் ஷரத் பவாரையும் சந்தித்துப்பேசினார்.

    இரண்டு சந்திப்புகளுக்குப்பிறகும் செய்தியாளர் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் "புதிய முன்னணி"க்கான ஏற்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன என்ற தெளிவான செய்தி அளிக்கப்பட்டது. இப்போது நாடு இயங்கும் விதம் சரியான திசையில் இல்லை என்றும், "நாட்டிற்கு மாற்றம் தேவை" என்றும் கே.சி.ஆர் கூறினார்..

    தற்போது நாடு இயங்கும் முறையை மாற்ற வேண்டிய அவசியம் இருப்பதாக உத்தவ் தாக்கரே உடனான செய்தியாளர் சந்திப்பில், கேசிஆர் கூறினார்.

    "நாட்டில் பெரிய மாற்றங்கள் தேவை என்ற விஷயத்தை நாங்கள் ஒப்புக்கொண்டோம். நாட்டின் சூழலை கெடுக்கக்கூடாது," என்று கே.சி.ஆர் மேலும் தெரிவித்தார். "நாங்கள் அடக்குமுறையை எதிர்த்துப் போராட விரும்புகிறோம். நாங்கள் சட்டவிரோதமான செயல்களை எதிர்த்துப் போராட விரும்புகிறோம்,"என்றார் அவர்.

    'சமூக நீதிக்கான அகில இந்திய கூட்டமைப்பு' என்ற பெயரில் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொடங்கிய இயக்கம் தேசிய அரசியலுக்கான அடித்தளமாகக் கவனிக்கப்பட்டது. இத்தகைய சூழலிலும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தேசிய அளவில் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் இதற்கு முந்தைய முயற்சிகள் பெரிய வெற்றியைப் பெறாத நிலையிலும், கேசிஆரின் முயற்சி முக்கியத்துவம் பெறுகிறது.

    இது தொடர்பாக விரிவாகப் படிக்க இங்கே கிளிக் செய்யவும்

  14. யுக்ரேன் விவகாரம் குறித்து புதினுடன் பேச ஜோ பைடன் சம்மதம்

    பைடன்

    பட மூலாதாரம், Getty Images

    யுக்ரேன் மீதான நெருக்கடி குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடன் பேச அமெரிக்க அதிபர் ஜோ பைடன் "கொள்கை அடிப்படையில்" ஒப்புக்கொண்டுள்ளார்.

    எனினும் ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுக்காவிட்டால் மட்டுமே பிரான்ஸ் முன்மொழிந்த பேச்சுவார்த்தை நடைபெறும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

    ரஷ்யா ராணுவ நடவடிக்கையைத் தொடங்கத் தயாராக இருப்பதாக உளவுத்துறை கூறுவதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால் மாஸ்கோ அதை மறுத்துள்ளது.

    பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங்குக்கும் புதினுக்கும் இடையே நடந்த இரண்டு தொலைபேசி பேச்சுகளுக்குப் பிறகு இந்த முன்மொழிவு அறிவிக்கப்பட்டது.

  15. யுக்ரேன் நெருக்கடி: ராஜரீக தீர்வுக்கு ரஷ்யா சம்மதம் – பிரான்ஸின் சமாதான முயற்சியில் முன்னேற்றம்

    யுக்ரேன் நெருக்கடி

    பட மூலாதாரம், Getty Images

    ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி விவகாரத்தில், “ராஜரீக முறையிலான தீர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க” ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளதாக, பிரான்ஸ் தெரிவித்துள்ளது.

    யுக்ரேன் எல்லைக்கு அருகில் 1,90,000 துருப்புகள் வரை ரஷ்யா நிறுத்தியுள்ளது. யுக்ரேன் மீது ரஷ்யா படையெடுக்க தயாராக உள்ளதாக, மேற்கு நாடுகள் நம்புகின்றன. யுக்ரேன் மீது ரஷ்யா எந்நேரமும் படையெடுக்கலாம் என, அமெரிக்கா தொடர்ந்து கூறிவருகிறது. ஆனால், அதனை ரஷ்யா மறுத்துவருகிறது. இதனிடையே, உடனடி படையெடுப்பு குறித்த பேச்சுக்கள் “பொருத்தமற்றது” என, யுக்ரேன் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இது தொடர்பாக, பிரான்ஸ் அதிபர் எமானுவேல் மக்ரோங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் நேற்று (பிப். 20) தொலைபேசியில் உரையாடினார்.

    அப்போது, ரஷ்யா – யுக்ரேன் நெருக்கடி விவகாரத்தில், “ராஜரீக முறையிலான தீர்வுக்கு முக்கியத்துவம் அளிக்க” ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சம்மதம் தெரிவித்துள்ளதாக, பிரான்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், வரும் நாட்களில் யுக்ரேன் – ரஷ்யா இருநாட்டு வெளியுறவு அமைச்சர்களும் சந்திப்பு நடத்த புதின் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த உரையாடல் குறித்து மாஸ்கோ தரப்பு கூறுகையில், பதற்றத்தை அதிகரித்ததாக, யுக்ரேன் ராணுவம் மீது புதின் குற்றம்சாட்டியதாக தெரிவித்துள்ளது.

  16. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம். உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள் டிவிட்டர் கணக்கின் மூலம் தகவல் அளியுங்கள்.