You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

பிரேசிலில் கனமழை: வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

பிரேசிலின் பெட்ரோபோலிஸ் பிராந்தியத்தில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

நந்தினி வெள்ளைச்சாமி

  1. இளையராஜா- கங்கை அமரன் சந்திப்பு: "எங்களுக்குள் இருந்த நட்பு போய்விட்டதே என்று வருந்தினேன்"

      • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
      • பதவி, பிபிசி தமிழுக்காக

    நேற்று இரவு 8.30 மணியளவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று நடந்த சந்திப்பு, இறை அருளுக்கு நன்றி! உறவுகள் தொடர்கதை…!!!' என எழுதி, இளையராஜாவை நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்தபோது எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

    இளையராஜா – கங்கை அமரன் இடையிலான கருத்து வேறுபாடு என்ன? பல ஆண்டுகள் கழித்து இருவரும் சந்தித்து பேசிக்கொண்டது என்ன? கங்கை அமரன் என்ன சொல்கிறார்என இக்கட்டுரையில் படியுங்கள்:

  2. சிவகார்த்திகேயன் பிறந்தநாள்: பல குரல் கலைஞனாக வாங்கிய சம்பளம் முதல் ஹாலிவுட் கதாநாயகி வரை

      • எழுதியவர், ச. ஆனந்தப்பிரியா
      • பதவி, பிபிசி தமிழுக்காக

    சின்னத்திரையில் தொடங்கி தற்போது முன்னணி நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமைகளை கொண்டுள்ள சிவகார்த்திகேயன், இன்று தன் 37வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

    அவருடைய முதல் சம்பளம் எவ்வளவும், தன் மகள் ஆராதனா பிறக்கும்போது அவர் காரில் என்ன பாடலை கேட்டார் என்பது தெரியுமா?

  3. சென்னையில் கொரோனா பாதிப்பு: மண்டல வாரியான நிலவரம்

    சென்னையில் இதுவரை 7,47,791 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7,34,141 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். தற்போது வரை 4,600 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 9,050 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அடையாறு, தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 500-ஐ கடந்தும், அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகிய மண்டலங்களில் 300-ஐ கடந்தும் உள்ளது.

  4. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிடிபட்ட 2 யானை தந்தங்கள்

    ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை புல்பத்தி காட்டு பகுதியில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான 2 யானை தந்தங்கள் பிடிபட்டன.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதி அமைந்துள்ளது. இந்த மலையில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இந்த மலை பாதுகாக்கப்பட்ட புலிகள் வாழும் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இன்று ராஜபாளையம் அருகே புல்பத்தி காட்டுப்பகுதியில் சுமார் 10 லட்சம் மதிப்பிலான 2 யானை தந்தங்களை வனத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இதுகுறித்து சுந்தரராஜபுரம் பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் யானையைவேட்டையாடியகும்பலை தேடிவருகின்றனர்.

    கடந்த சில வருடங்களாக இப்பகுதியில் எண்ணற்ற வனவிலங்குகள் ஆயுதங்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டுகள் மூலம் வேட்டையாடி கொல்லப்பட்டுள்ளதாகவும், இதனால் எதிர்காலத்தில் காடுகள் அழியும் நிலை ஏற்படலாம் எனவும், வன உயிரின ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    எதிர்கால குற்றங்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் துறை ரீதியாக நடவடிக்கை எடுத்து வன உயிரினங்களை பாதுகாக்க முன்வர வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

  5. எச்.ஐ.வி தொற்றில் இருந்து குணமடைந்ததாக கருதப்படும் உலகின் முதல் பெண்

    அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், உலகிலேயே எச்.ஐ.வி தொற்று நோயிலிருந்து குணமடைந்த முதல் பெண்ணாக கருதப்படுகிறார். மேலும், இந்த தொற்றில் இருந்து குணமடைந்த மூன்றாவது நபராகவும் அவர் நம்பப்படுகிறார்.

    இவர் ரத்த புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது, எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. வைரசுக்கு, இயற்கையாக எதிர்ப்புத்திறன் கொண்ட ஒருவரிடமிருந்து தொப்புள்கொடி ரத்த ஸ்டெம் செல் கொடை பெற்றார்.

    14 மாதங்களாக அவருக்கு எச்.ஐ.வி.க்கு எதிரான தொடர் சிகிச்சையான ஆன்டி ரெட்ரோவைரல் தெரபி தேவைப்படவில்லை.

  6. மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து டார்வின் சொன்னது என்ன?

    பிரிட்டனின் இயற்கை ஆர்வலர் சார்லஸ் டார்வின் மக்களுக்கு அறிமுகம் ஆகும்வரை எல்லா உயிரினங்களும் ஒரு தெய்வீக சக்தியால் கருத்தரிக்கப்படுகிறது என அனைவரும் நம்பினர்.

    டார்வின்தான் முதன் முதலில் மனிதனின் பரிணாம வளர்ச்சி இயற்கையாக நிகழ்கிறது என விளக்கினார்.

    மனிதனின் பரிணாம வளர்ச்சி குறித்து டார்வின் சொன்னது என்ன? இந்த காணொலியில் பாருங்கள்:

  7. ஆர்யா ராஜேந்திரன் - சச்சின் தேவ்: இந்தியாவின் இளம் மேயருக்கும், கேரளாவின் இளம் எம்.எல்.ஏ.வுக்கும் திருமண ஏற்பாடு

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் நகர மேயர் எஸ். ஆர்யா ராஜேந்திரன், பாலுச்சேரி எம்.எல்.ஏ சச்சின் தேவ் என்பவரை திருமணம் செய்யவுள்ளதாக ' தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

    22 வயதாகும் ஆர்யா, இந்தியாவின் இளம் மேயராவார். 28 வயதாகும் சச்சின் தேவ் கேரள சட்டமன்றத்தில் இளம் எம்.எல். ஏ ஆவார். இருவரும் பால சங்கம் மற்றும் எஸ்.எஃப்.ஐ அமைப்புகளில் பணியாற்றிய நாட்களில் இருந்து நண்பர்களாக இருந்துள்ளனர். இவர்களின் திருமணத்திற்கு கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைமை ஒப்புதல் அளித்துள்ளது.

  8. குடல் நாளத்தில் இருக்கும் நுண்ணுயிரிகளை மகிழ்விக்க 5 வழிகள்

    உங்கள் வயிற்றுக்குள் இருக்கும் நுண்ணுயிரிகள் நன்றாக இருந்தால்தான் உங்களால் நன்றாக இருக்க முடியும்.

    குடல் நாளத்தில் இருக்கும் நுண்ணுயிர்கள் எப்படி நலமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கின்றன என்பதை நீங்கள் உண்ணும் உணவு முடிவு செய்கிறது.

  9. மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி குறித்து உங்களுக்கு தெரியுமா?

    இங்கிலாந்தின், ஹென்ரி ஏழாம் மன்னர் காலத்தில், நாட்டின் உயரிய பதவி என்ன தெரியுமா?

    மன்னருக்கு மலம் கழிப்பதில் உதவி செய்பவர்களின் பதவிதான் உயரிய பதவி. மன்னரின் கவனத்தை பெற மலம் கழித்த பின் அவரின் பின்புறத்தை சுத்தம் செய்வது ஒரு நல்ல யோசனையாகதான் அந்த சமயத்தில் இருந்தது.

    மனிதர்களின் மலம் இரவோடு இரவாக உள்ளூர் விவசாயிகளுக்கு விற்கப்பட்டது. சிறுநிர் சேகரிக்கப்பட்டு லெதர் பொருட்களை மிருதுவாக்க பயன்படுத்தப்பட்டது.

    மனித மலத்திற்கு இருக்கும் அபார சக்தி என்ன என்பது குறித்து இக்கட்டுரையில் வாசியுங்கள். அறிவியலில் ஆர்வம் இருப்பவர்களுக்கு இக்கட்டுரை சுவாரஸ்யத்தையும் அறியாத பல தகவல்களையும் வழங்கும்.

  10. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: திருச்சி மாநகராட்சியை வெல்லப் போவது யார்?

      • எழுதியவர், ஆ விஜயானந்த்
      • பதவி, பிபிசி தமிழுக்காக

    இந்தமுறை தனது ஆதரவாளர்களில் ஒருவருக்கு மேயர் பதவியைப் பெற்றுத் தந்துவிடும் நோக்கில் அமைச்சர் கே.என்.நேரு, பிரசாரப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்துக்கு என ரிங் ரோடு, மேம்பாலம், புதிய பேருந்து நிலையம், வணிக வளாகம் எனப் புதுப்புது திட்டங்களை அமைச்சர் கே.என்.நேரு அறிவித்துள்ளதால், `மலைக்கோட்டையை தி.மு.க பிடிக்கும்' என அக்கட்சியினர் பேசி வருகிறார்கள்.

    அதேநேரம், அ.தி.மு.கவை பொறுத்தவரையில் கடந்த ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்பட பல்வேறு வளர்ச்சிப் பணிகளை முன்வைத்து வாக்கு சேகரித்து வருகிறது. `பா.ஜ.க தங்கள் கூட்டணியில் இல்லாததால் நகரில் உள்ள சிறுபான்மையினர் வாக்குகளும் தங்கள் பக்கம் வரலாம்' என அவர்கள் நம்புகின்றனர்.

  11. பங்குச்சந்தை முன்னாள் அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை சோதனை

    மும்பையில் தேசிய பங்கு சந்தையின் முன்னாள் நிர்வாக இயக்குநரும் தலைமை செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக, பிடிஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

    தேசிய பங்கு சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான சித்ரா ராமகிருஷ்ணா, சாமியார் ஒருவரிடம் கலந்தாலோசித்து பங்கு சந்தை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுத்ததாகவும், ரகசிய தகவல்களை அவருக்குப் பகிர்ந்ததாகவும் இந்திய பங்குச்சந்தைகளின் ஒழுங்காற்று அமைப்பான செபி தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், மும்பையில் அவருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

  12. வணக்கம் நேயர்களே!

    நான் நந்தினி வெள்ளைச்சாமி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறேன். இதுவரை அ.தா.பாலசுப்ரமணியன் வழங்கிக்கொண்டிருந்த நேரலை செய்திகளை இனி நான் வழங்கவிருக்கிறேன்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடக்கும் நிகழ்வுகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

  13. பிரபல மலையாள நடிகர் கோட்டயம் பிரதீப் காலமானார்

    மலையாள திரையுலகில் பிரபல நடிகரான கோட்டயம் பிரதீப் இன்று காலமானார். அவருக்குவயது 61. அதிகாலை 4.30 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

    கோட்டயம் பிரதீப் தமிழில் 'ராஜாராணி', 'விண்ணைத்தாண்டிவருவாயா', நடிகர்விஜய்யின் 'தெறி' உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

    மலையாளத் திரையுலகில் கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நடித்துவந்த கோட்டயம் பிரதீப், மம்மூட்டி, மோகன்லால், பிரித்விராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவரது இறப்பு செய்தியை நடிகர் பிரித்விராஜ் தனது சமூக வலைதள பக்கங்களில் உறுதி செய்துள்ளார். அவரது புகைப்படத்தை பகிர்ந்து ’ஆத்மா சாந்தி அடையட்டும்’ என தனது இரங்கலை நடிகர் பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

    கடந்த 2001-ம்ஆண்டு தனது 40வது வயதில்தான் கோட்டயம் பிரதீப் தனது நடிப்பு பயணத்தை தொடங்கினார்.

    அதற்கு முன்பு படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்தவர் ஐவி சசி இயக்கத்தில் ’இ நாடு என்னாலே வரே’ என்ற படத்தின்மூலம் பலருக்கும் பரிச்சயமானார்.

    அதிகஅளவில்நகைச்சுவைகதாப்பாத்திரங்களில்நடித்தஇவர் 'ஒருவடக்கன்செல்ஃபி', 'அமர்அக்பர்ஆண்டனி' உள்ளிட்ட 70க்குமேற்பட்டபடங்களில்நடித்திருக்கிறார்.

    இவருக்கு மாயா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரதீப்பின் இந்த திடீர் மறைவிற்கு திரையுலக நட்சத்திரங்கள், ரசிகர்கள் தங்களது இரங்கலை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்துவருகின்றனர்.

  14. ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் பிரிட்டனின் முன்னாள் துணை பிரதமருக்கு புதிய பதவி!

    பிரபல சமூக ஊடகமான ஃபேஸ்புக்கின் தாய் நிறுவனம் 'மெட்டா'வில் புதிய பதவி உயர்வைப் பெற்றுள்ளார் பிரிட்டனின் முன்னாள் துணை பிரதமரான சர் நிக் கிளெக்.இதுகுறித்து, ஃபேஸ்புக்கில் பதிவிட்ட மார்க் ஜுக்கர்பெர்க், மெட்டாவின் உலக விவகாரங்களுக்கு சர் நிக் முதன்மை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல், சர் நிக் ஃபேஸ்புக்கின் உலக விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு பிரிவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பு வகித்தார். இதுகுறித்து, ஜுக்கர்பெர்க் மேலும் கூறுகையில், "உலக அளவில் எங்களின் கொள்கையின் ஏற்படும் பிரச்சனைகளைக் கவனிக்கவும், எங்களை வழிநடத்தவும் என்னளவிலான ஒரு மூத்த தலைவர் மெட்டாவுக்கு தேவைப்பட்டது என்று கூறியுள்ளார்.

  15. உத்தரப்பிரதேசம்: கிணற்றில் விழுந்து 13 பேர் பலி

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷி நகர் மாவட்டத்தில் ஒரு திருமண விழாவில் நடந்த விபத்தில் பெண்கள் குழந்தைகள் உள்பட குறைந்தது 13 பேர் உயிரிழந்தனர்.

    கிணற்றை மூடியிருந்த பலகை மீது அமர்ந்திருந்த அவர்களின் பாரம் தாங்காமல் அந்தப் பலகை உடைந்ததால் இந்த விபத்து நேரிட்டது என்கிறது போலீஸ்.

    மேலும் இருவர் இந்த சம்பவத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.

    இந்த சம்பவம் இதயத்தைக் கிழிப்பதாக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும், இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும், காயம் அடைந்தவர்களுக்கு 50,000 ரூபாய் நிதியுதவியும் பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் எனவும், பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.

    புதன் கிழமை மாலை நடந்த திருமண நலுங்கு விழாவின்போது இந்த துயரம் நிகழ்ந்துள்ளது.

    சம்பவம் நடந்ததும், உறவினர்கள் உடனடியாக ஓடிவந்த விழுந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களில் 11 பேர் இறந்துவிட்டதாக உடனடியாக அறிவிக்கப்பட்டது. மேலும் இருவர் பிறகு உயிரிழந்தனர்.

  16. ''உங்களின் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை" - இலங்கை அமைச்சர் கருத்தும், கேள்விகளும்

    ''உங்களின் பிள்ளைகள் இப்போது உயிருடன் இல்லை என்பதை அவர்களின் முகத்தை பார்த்து எவ்வாறு கூறுவது?" என இலங்கை நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

    யுத்த காலப் பகுதியில் வலிந்து காணாமல் போனோர் தொடர்பில் வீரகேசரி பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

    இராணுவ முகாம்களில் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற உண்மையை கூற வேண்டியது உங்களின் கடமையல்லா? என எழுப்பப்பட்ட கேள்விக்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

    பாதுகாப்பு படைகளிலேயே நான்காயிரத்திற்கு அதிகமான பேர் காணாமல் போயுள்ளனர் என்றால், அதனை விடவும் அதிகமான நபர்கள் விடுதலைப் புலிகள் பக்கத்திலும் காணாமல் ஆக்கப்பட்டிருப்பார்கள் என்பதே உண்மை என அலி சப்ரி கூறுகின்றார்.இது குறித்த முழு தகவல்களையும், அலசல்களையும் முழுமையாகப் படிக்க...

  17. நேற்று இந்தியாவில் 30,757 பேருக்கு கொரோனா தொற்று

    நேற்று தொடங்கி 24 மணி நேரத்தில் இந்தியாவில் 30,757 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது, 541 கொரோனா நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

    இதுவரை கொரோனா தொற்றியதாக இந்தியாவில் கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 54 ஆயிரத்து 315. இதுவரை இந்தியாவில் இறந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை: 5 லட்சத்து 10 ஆயிரத்து 413.

    தமிழ்நாட்டில் ஒரு நாளில் 1,310 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து தமிழ்நாட்டில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34,40,531 ஆக உயர்ந்துள்ளது.

    இன்னும் குணமடையாதவர்கள் எண்ணிக்கை தமிழ்நாட்டில்

    27,294. இது நேற்றைய எண்ணிக்கையை விட 4,074 குறைவு.

  18. ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கூறுவது படி நடப்போம் - கர்நாடக முதல்வர் பொம்மை

    "விஷயம் மிகவும் தெளிவாக இருக்கிறது. ஹிஜாப் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் கூறுவதின்படி எங்கள் அரசாங்கம் நடந்துகொள்ளும்" என்று கூறியுள்ளார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை. பிடிஐ செய்தி நிறுவனம் இத்தகவலை தெரிவிக்கிறது. கர்நாடக ஹிஜாப் சர்ச்சையில் உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

  19. நிக்கோபர் தீவில் 4.4 அளவில் நிலநடுக்கம்

    நிக்கோபர் தீவில் புதன் - வியாழன் இடையிலான இரவு 12.45 அளவில் நிக்கோபர் தீவில் 4.4 அளவிலான நிலநடுக்கம் நடந்ததாகத் தெரிவிக்கிறது இந்தியாவின் தேசிய நிலநடுக்கவியல் மையம். அந்தமான் நிக்கோபர் தீவுகளின் தலைநகர் போர்ட் பிளேருக்கு தெற்கே 375 கி.மீ. தொலைவில் இது நிகழ்ந்ததாகவும் அந்த மையம் கூறுகிறது.

  20. இந்தியா - மேற்கிந்திய தீவுகள் முதல் டி20: இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாதனை

    இந்தியா மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முன்னிலை பெற்றுள்ளது.

    அத்துடன் இந்த வெற்றியின் மூலம், தொடர்ந்து 7 டி20 சர்வதேசப் போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்து இது தொடர்பான தனது முந்தைய சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது.

    கொல்கத்தாவில் நடந்த இந்த ஆட்டத்தில் இந்தியா டாஸ் வென்று முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த மேற்கிந்திய தீவுகள் 7 விக்கெட் இழப்புக்கு 20 ஓவரில் 157 ரன் எடுத்திருந்தது. அணியின் விக்கெட் கீப்பர் நிக்கோலஸ் பூரன் அரைசதம் அடித்தார்.

    தனது முதல் சர்வதேசப் போட்டியை விளையாடிய ரவி பிஷ்னோய் 17 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருதினை தட்டிச் சென்றார்.