You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

லாலு பிரசாத் மேலும் ஒரு ஊழல் வழக்கில் குற்றவாளி என தீர்ப்பு

பிகார் முன்னாள் முதல்வரும் ஆர்ஜேடி தலைவருமான லாலு பிரசாத் யாதவ், டோராண்டா அரசு கருவூலத்தில் இருந்து சட்டவிரோதமாக ₹ 139.35 கோடி பணம் எடுத்ததாக தொடரப்பட்ட பழைய ஊழல் வழக்கில் அவரை குற்றவாளி என்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. யுக்ரேனை விட்டு வெளியேறுமாறு இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் வேண்டுகோள்

    யுக்ரேன்னில் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு தற்காலிகமாக யுக்ரேனை விட்டு வெளியேறுமாறும், குறிப்பாக அத்தியாவசிய தேவையில்லாத மாணவர்கள் வெளியேற வேண்டும் என்று கீவ்வில் உள்ள இந்தியத் தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

    தேவைப்படும்போது தூதரக அதிகாரிகள் அவர்களைச் சென்றடையும் வகையில் தாங்கள் எங்கு இருக்கிறார்கள் என்ற தகவலைத் தொடர்ந்து தெரிவிக்குமாறும் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

    யுக்ரேனில் உள்ள இந்தியர்களுக்கு தேவையான அனைத்து தூதரக சேவைகளையும் வழங்க தூதரகம் வழக்கம் போல இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  2. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு - முன்னாள் டி.ஜி.பி நேரில் ஆஜர்

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் பற்றி விசாரணை நடத்திவரும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையத்தின் முன்பு இன்றுதமிழ்நாட்டின் முன்னாள் காவல்துறை தலைவர் டி.கே. ராஜேந்திரன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்து வருகிறார்.

    மே 22, 2018 அன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் தடையை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல் துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதில் 15 பேர் உயிரிழந்தனர்.

  3. யுக்ரேன் மக்களுக்கு அதிபரின் வேண்டுகோள்

    பிப்ரவரி 16ஆம் தேதி ரஷ்யா யுக்ரேன் மீது படையெடுக்க வாய்ப்புள்ளது என்று சில மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், அந்த நாளன்று யுக்ரேன் மக்கள் ஒற்றுமையுடன், தேசிய கொடியை ஏற்றி, தேசிய கீதத்தைப் பாட வேண்டும் என்றும் அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கோரிக்கை விடுத்துள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

    ''மேற்கத்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியை யுக்ரேன் அதிபர் உறுதிசெய்யவில்லை; அந்தச் செய்திகள் குறித்து சந்தேகம் வெளியிடும் நோக்கிலேயே வோலோடிமிர் ஜெலன்ஸ்கி இவ்வாறு மக்களிடம் கோரியுள்ளார்,'' என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    சென்ற வாரம் யுக்ரேன் - ரஷ்ய எல்லைக்குச் சென்று அங்குள்ள தங்கள் நாட்டு ராணுவ வீரர்களை சந்தித்தார் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி .

  4. இந்தியாவில் கொரோனா நிலவரம்

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,409 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    கடந்த 24 மணி நேரத்தில் 347 பேர் கோவிட் தொற்றால் இறந்துள்ளனர் என்று இந்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவிக்கிறது.

    தற்போது நாடு முழுவதும் 4,23,127 பேர் கொரோனவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பரிசோதனை செய்யப்படுபவர்களில் தொற்று உறுதியாகும் விகிதம் 2.23 சதவிகிதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  5. திருமண வரவேற்பின்போது மூளைச்சாவு அடைந்த மணப்பெண்: உறுப்பு தானம் செய்ய பெற்றோர் முடிவு

    கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவர் 26 வயதான சைத்ரா. இவரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியின்போது மேடையிலேயே மயங்கி விழுந்து மூளைச்சாவு அடைந்தார் சைத்ரா.

    இச்சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவருடைய பெற்றோர் சைத்ராவின் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்துள்ளனர் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

  6. யுக்ரேன் நெருக்கடிக்கு தீர்வு காண உடன்படிக்கை: அமெரிக்கா, பிரிட்டன் தலைவர்கள் நம்பிக்கை

    யுக்ரேன் நெருக்கடிக்கு ராஜரீக முறையிலான தீர்வுக்கான அனைத்து நம்பிக்கைகளும் இழக்கப்படவில்லை என, அமெரிக்கா மற்றும் பிரிட்டன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

    ஆனால், இவ்விவகாரத்தில் வலுவற்ற சூழலே நிலவுவதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

    ஒரு லட்சத்துக்கும் அதிகமான படைவீரர்களை எல்லையில் நிறுத்தியுள்ள ரஷ்யா, யுக்ரேனில் படையெடுப்பதற்கான திட்டம் இல்லை என தொடர்ந்து மறுத்து வருகிறது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இடையேயான 40 நிமிட தொலைபேசி உரையாடலில், ரஷ்ய ராணுவ நடவடிக்கைகள் குறித்த எச்சரிக்கைகளுக்கு இடையிலும் அதுகுறித்த ராஜரீக உடன்படிக்கைக்கு இன்னும் சாத்தியம் இருப்பதாக இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

  7. வணக்கம் நேயர்களே!

    இன்றைய இந்த நேரலைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள் தொடர்புடைய செய்திகள், விளையாட்டு, சினிமா, அரசியல் உள்ளிட்ட பல்துறை செய்திகள் ஆகியவற்றை இந்த நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    எங்களோடு இணைந்திருங்கள். இந்த நாள் இனியதாகட்டும்.