கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் அபாயகரமான அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதா? – வைகோ கண்டனம்

பட மூலாதாரம், GETTY IMAGES
கூடங்குளம் அணுஉலை வளாகத்தில் அபாயகரமான அணுக் கழிவுகளை சேமித்து வைப்பதா என, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, வைகோ இன்று (பிப். 11) வெளியிட்ட அறிக்கையில், “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உருவாகும் கதிரியக்க அபாயம் கொண்ட அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றவும், உரிய முறையில் சேமிக்கவும் இந்திய அணுசக்திக் கழகத்திடம் திட்டங்கள் இல்லை என்பதால்,2013 ஆம் ஆண்டு ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
இதில், உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் அணுக் கழிவுகளை சேமித்து வைத்திட தொலைவில் ஒரு இடம் (Away From Reactor - AFR) மற்றும் அணுக்கழிவுகளை நிரந்தரமாகப் பாதுகாக்க ஆழ்நில கருவூல மையம் (Deep Geological Repository - DGR) ஆகிய இரண்டு வகையான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், அணுக்கழிவுகளை உலைக்கு வெளியே வைப்பதற்கான கட்டமைப்பு (AFR) 5 ஆண்டுகளில் அமைக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், கூடங்குளம் மட்டுமின்றி, இந்தியாவில் செயல்பட்டு வரும் 22 அணு உலைகளின் கழிவுகளையும் கொண்டுவந்து குவிப்பதற்கான அபாயகரமான திட்டத்தைச் செயல்படுத்த மத்திய பாஜக அரசு முனைந்து இருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
கூடங்குளத்தில் அணுஉலை 3ஆவது மற்றும் 4ஆவது அலகுகள் அமைத்திட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதியையும் நிறுத்தி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கூடங்குளத்தில் எக்காரணத்தைக் கொண்டும் அணு உலைக் கழிவுகளை கொண்டுபோய் சேமித்து வைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.


