வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் பெரிய எதிரி என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். நாட்டின் பல மாநிலங்களில் ஒரே குடும்பத்தினர் தலைமுறை தலைமுறையாக கட்சியை வழிநடத்தி வருவதை பார்க்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் நரேந்திர மோதி ஏஎன்ஐ செய்தி
முகமையின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு விரிவான பேட்டி அளித்துள்ளார்.
இப்பேட்டியில் பிரதமர் நரேந்திர மோதி பேசியதன்
முக்கிய அம்சங்கள்:
மாநிலங்களின் விருப்பங்களை பாஜக மதிப்பதில்லை
என்பது தொடர்பான விமர்சனம் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோதி, “நாட்டின் முன்னேற்றத்திற்கு பிராந்திய
சிந்தனைகள் கவனிக்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்.
நானும் மாநில முதல்வராக இருந்திருக்கிறேன்,
மாநிலங்களின் விருப்பங்களை புரிந்துகொண்டுள்ளேன். முன்பு, இந்தியாவுக்கு வருகை தரும் தலைவர்கள் டெல்லிக்கு மட்டுமே வருவார்கள்.
ஆனால், இப்போது, அவர்களை
நான் பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்துச் செல்கிறேன்” என தெரிவித்தார்.
தமிழகம் குறித்து பேசிய பிரதமர் மோதி, “ஒரு கட்சி ஒரே குடும்பத்தால்
தலைமுறை தலைமுறையாக நடத்தப்படும்போது, அங்கு வாரிசு அரசியல் மட்டுமே
இருக்கும், ஆக்கம் தரும் செயல்கள் இருக்காது. ஜம்மு-காஷ்மீர்
முதல், இரு வேறு குடும்பங்களால் நடத்தப்படும் இரு கட்சிகள்
உள்ளன. அதே போக்கை ஹரியாணா, ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காணலாம்.
வாரிசு அரசியல் ஜனநாயகத்தின் பெரிய எதிரி” என தெரிவித்தார்.
காங்கிரஸ்
எம்.பி ராகுல் காந்தி குறித்து மறைமுகமாக விமர்சித்த பிரதமர், “நாடாளுமன்றத்தை தவிர்க்கும்,
கவனிக்காத ஒருவருக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியும்?” என்றார்.
வேளாண்
சட்டங்கள் குறித்து பேசிய பிரதமர்,
“ நான் விவசாயிகளின் இதயங்களை வெல்ல வந்தேன், அதனைச்
செய்துமுடித்தேன். சிறு விவசாயிகளின் வலியை நான் புரிந்துகொண்டுள்ளேன். வேளாண் சட்டங்கள்
விவசாயிகளின் நலனுக்காக கொண்டு வரப்பட்டன. ஆனால், தேசத்தின்
விருப்பத்திற்காக அவை திரும்ப பெறப்பட்டன” என தெரிவித்தார்.
“ஊழல்
வழக்குகளில் தேசத்தின் சொத்துக்கள் விசாரணை முகமைகளால் மீட்கப்படுவதற்கு, அரசாங்கத்தைப் பாராட்ட
வேண்டும்” என்றும் அவர் தெரிவித்தார்.