மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாவை திருப்பி அனுப்ப ஆளுநருக்கு முழு அதிகாரம் உள்ளது என்று தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
அரசியலமைப்புக்கு எதிராக தமிழ்நாடு ஆளுநர் நடந்தார் என்று சொல்வது சரியாகாது என்றும் தமிழிசை கூறியுள்ளார்.
புதுச்சேரி கதிர்காமம் பகுதியில் முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, நீட் சட்ட மசோதா தொடர்பாக தமிழ்நாடு ஆளுநரின் நடவடிக்கை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறித்த கேள்விக்கு, "ஆளுநருக்கு மசோதாவை திருப்பி அனுப்ப அதிகாரம் இருக்கிறது. அதிகாரம் இல்லை என்று சொல்ல முடியாது. தமிழ்நாட்டில் ஆளுநர் சில கருத்துக்களை சொல்லிருக்கிறார். அதற்கு சபாநாயகர் எந்த முடிவும் எடுக்கவில்லை. எந்த மசோதாவாக இருந்தாலும் அதைத் திருப்பி அனுப்ப, ஆளுநருக்கு முழு அதிகாரம் இருக்கிறது," என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், "அதே நேரத்தில் ஆளுநர்கள் கைப்பாவையாக இருப்பார்கள், ஆளும் கட்சிக்கு எதிராக இருப்பார்கள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். அப்படி கிடையாது, எல்லா ஆளுநர்களுமே திறமைசாலிகள். ஒரு பிரச்சினையை எப்படி அணுகுவது என்று தெரிந்தவர்கள். அதன் காரணமாக அவர்களுக்கு இருக்கின்ற உரிமையைத் தான் ஆளுநர்கள் பயன்படுத்துகின்றனர்.
ஆகவே, ஆளுநருக்கு மசோதாவை திருப்பி அனுப்ப உரிமை இருக்கிறது. சட்டத்தில் அதற்கு இடமுள்ளது. அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்பது கிடையாது.
அரசியலமைப்பு சட்டம் 200வது சரத்தில் ஆளுநருக்கு ஒப்புதல் இல்லை என்றாலும், மக்களுக்கு அது நல்லதில்லை என்று நினைத்தால் அந்த மசோதாவை திருப்பி அனுப்பலாம் என்ற சரத்து சட்டத்தில் உள்ளது. ஆகவே அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது எதிராக தமிழக ஆளுநர் நடந்தார் என்று சொல்வது சரியாகாது," என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். பேட்டியின் போது புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி உடனிருந்தார்.