தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை மீண்டும் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பியிருக்கிறார் மாநில ஆளுநர் ஆர்.என். ரவி.
தமிழக அரசின் மசோதா உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக இருப்பதாகவும் இது தொடர்பான விளக்கத்தை தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியே ஆளுநர் தெரிவித்து விட்டதாகவும் ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்: எம்பிபிஎஸ் மருத்துவ படிப்புகளில் சேர கட்டாயமாக்கப்பட்ட நீட் தேர்வு முறையில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு கோரும் 2021ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட மசோதா எண் 43 மற்றும் இணைக்கப்பட்டிருந்த மாநில அரசால் நியமிக்கப்பட்டிருந்த உயர்நிலைக்குழு அறிக்கையையும் மாநில ஆளுநர் விரிவாக ஆய்வு செய்தார்.
நீட் விலக்கு மசோதாவுக்கான அடிப்படையான அந்த உயர்நிலைக்குழு அறிக்கை மற்றும் நீட் தேர்வுக்கு முந்தைய நிலையில் இருந்த மாணவர்களுக்கான சமூக நீதியின்படி மருத்துவ படிப்பில் மாணவர்களின் சமூக, பொருளாதார பின்னணியை ஆராய்ந்த உயர்நிலைக்குழு அறிக்கையை ஆய்வு செய்ததில், இந்த மசோதா, குறிப்பாக கிராமப்புற மற்றும் பொருளாதார ரீதியாக வறிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு எதிரானது என்ற கருத்தை ஆளுநர் கொண்டிருக்கிறார்.
அந்த மசோதாவை தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகருக்கு கடந்த பிப்ரவரி 1ஆம் தேதியே திருப்பி அனுப்பிய ஆளுநர், பேரவையின் மறுபரிசீலனைக்கு ஏதுவாக அதற்கான காரணங்களையும் விளக்கியிருக்கிறார்.
இந்திய உச்ச நீதிமன்றம், வேலூர் கிறிஸ்தவ மருத்துவ கல்லூரிக்கும் இந்திய அரசுக்கும் இடையிலான வழக்கில் மிகவும் விரிவாக விசாரித்து சமூக நீதி நோக்கத்தில் நீட் தேர்வு அவசியத்தை உறுதிப்படுத்தியிருக்கிறது. சமூக நீதி என்ற பெயரில் வறியநிலை மாணவர்களின் பொருளாதார நிலையை சுரண்டும் வகையில் முந்தைய சேர்க்கை முறை இருப்பதாக உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதாக ஆளுநர் கருதுகிறார் என்று அவரது மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கோரி தமிழ்நாடு அரசு மற்றும் அனைத்துக் கட்சியினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
நாடாளுமன்றத்திலும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேற்று இது குறித்து பேசியிருந்தனர். இந்த நிலையில் ஆளுநரின் நிலைப்பாடு தொடர்பான அறிவிப்பு இன்று வெளிவந்திருக்கிறது.