தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 19,280

தமிழ்நாட்டில் அதிபட்ச கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நகரங்களில் முதலிடத்தில் சென்னை உள்ளது. அங்கு புதிதாக 2,897 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. ஆறு பேர் இறந்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

  1. வந்துகொண்டிருக்கும் செய்தி, இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர்: குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.

    பட்ஜெட் கூட்டத் தொடர்

    பட மூலாதாரம், ANI

    இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.

    இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை இடம் பெற்றது.

    குடியரசுத் தலைவர் தனது உரையில், ''நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ள நிலையில், உயிர்த் தியாகம் செய்த அனைத்து வீரர்களுக்கும் வணக்கம். நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது நன்றிகள். கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னோடி நாடாக இந்தியா உள்ளது. சுகாதார கட்டமைப்பு பெருமளவு மேம்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சியை நோக்கிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது''. என்றார்.

    தமிழக எம்.பிக்கள் முழக்கம்:

    குடியரசுத் தலைவர் உரையின் போது, தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு இந்திய குடியரசுத் தலைவருக்கு அனுப்ப கோரி திமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர்.

    முன்னதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி கூறுகையில், ''இந்த அரசு அனைத்து பிரச்சினைகள் குறித்தும் திறந்த மனதுடன் விவாதிக்க தயாராக உள்ளதாக'' தெரிவித்துள்ளார். தொடர்ந்து நாளைய தினம் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    இன்று முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரையும் மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரையும் என இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

    பட்ஜெட் கூட்டத் தொடர்

    பட மூலாதாரம், ANI

  2. சென்னை துறைமுகத்தில் மீனவர்கள் போராட்டம்: விரிவாக்கத்திற்கு எதிர்ப்பு

    பழவேற்காடு மீனவர்கள் போராட்டம்

    பட மூலாதாரம், Paranthaman

    சென்னை பழவேற்காட்டில் 144 தடையை மீறி மீனவர்கள் எல் &டி மற்றும் அதானி துறைமுகங்களை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    சென்னை அருகே காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் மேற்கொள்ளப்படும் நிரந்தர பணி மற்றும் அதானி துறைமுக விரிவாக்கத்தை கைவிட வேண்டும் என்று வலியுறுத்தி துறைமுக நுழைவாயிலில் அமர்ந்து பழவேற்காடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    துறைமுகம் செல்லும் சாலைகளில் காவல் துறை தடுப்புகள் அமைத்ததால், மீனவர்கள் படகுகளில் பக்கிங்காம் கால்வாய் வழியாக சென்று துறைமுக நுழைவாயில் முன்பாக கூடினர். பெண்கள் உள்ளிட்ட பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பழவேற்காடு போராட்டம்

    பட மூலாதாரம், Paranthaman

  3. இயக்குநர் பாரதிராஜாவிற்கு கொரோனா - வைரமுத்து, சீனு ராமசாமி ட்வீட்

    பாரதிராஜா

    தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜாவிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

    இயக்குநர் பாரதிராஜாவிற்கு காய்ச்சல் மற்றும் லேசான அறிகுறிகள் ஏற்பட்டதால், கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதில், கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு மதிமுக பொதுச் செயலாளர் வைகோவிற்கு கொரோனா தொற்று உறுதியானது. அவரும் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்நிலையில், இயக்குநர் பாரதிராஜா, வைகோ இருவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில், “காலத்தின் நாயகர்களே விரைந்து வருக இருவரோடும் பழகுவதற்கு பாக்கியம் பெற்றவனின் அழைப்பு இது. நீங்கள் தந்த ஊக்கமதை ஒருக்காலும் மறவேன். 'கலிங்கப்பட்டியின் சிங்கம்' தலைவர் வைகோ அவர்களும் என் 'தென்கிழக்குச்சீமை' இயக்குனர் பாரதிராஜா அவர்களும் தொற்று நீங்கி நலமாக விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

    கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில், ''கொரோனா கண்டிருக்கும் அண்ணன் வைகோ இயக்குநர் பாரதிராஜா விரைவில் நலம்பெறவும் வலம்வரவும் வாழ்த்துகிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  4. இந்திய பட்ஜெட் 2022 : யாருடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறும்?

    ஆயிரமாயிரம் ஆசைகள். எந்தவொரு பட்ஜெட் பற்றியும் பேசுவதற்கு இந்த வரியிலிருந்து தொடங்கலாம். ஆனால், இந்த முறை நிலைமை வேறாக உள்ளது. ஏனென்றால், இந்த பட்ஜெட்டில் ஆசைகளை விட நிர்பந்தங்கள் அதிகமாக உள்ளன. அனைத்து நிலையிலும் உள்ள மக்களுக்கு ஏதோ ஒன்று தேவை என்பது மத்திய அரசுக்கு தெரிந்துள்ளது.

    மற்றவர்களுக்கு ஏதோ ஒன்றை கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பவர்களும், அரசிடமிருந்து இருந்து பல்வேறு எதிர்பார்ப்புகளை முன்வைக்கின்றனர். அனைவரது விருப்பங்களையும் எப்படி நிறைவேற்றுவது, யாருடைய விருப்பத்தை நிறைவேற்ற முடியாதோ, அவர்களுக்கு அதை எப்படி விளக்குவது என்பதுதான் நிதி அமைச்சர் முன் உள்ள சவாலாக தற்போது உள்ளது.

  5. இந்தியாவில் ஒரு நாள் கொரோனா தொற்று 2.09 லட்சம் : குறைந்து வரும் தொற்று விகிதம்

    கொரோனா

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,09,918 பேருக்கு கொரோனா தொற்று பதிவாகியுள்ளது. ஒரு நாளில் 959 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரு நாளில் 2,62,628 பேர் சிகிச்சை முடிந்து நலம் பெற்றுள்ளனர்.

    இந்தியாவில் தினசரி தொற்று விகிதம் 15.77 சதவீதமாக உள்ளது. தற்போது வரை மொத்தம் 18,31,268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் மொத்தம் 1,66,03,96,227 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

    தமிழ்நாடு மற்றும் பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. இதன்படி தமிழ்நாட்டில் நேற்றைய தினம் மட்டும் 22, 238 பேருக்கு தொற்று உறுதியானது. சிகிச்சையில் இருந்த 26, 624 பேர் குணமடைந்தனர். ஒரு நாளில் 38 பேர் உயிரிழந்தனர். தமிழ்நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு 33, 25, 940 ஆக உள்ளது என்று மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

  6. இந்திய பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடக்கம்: நாளை பட்ஜெட் தாக்கல்

    பட்ஜெட் கூட்டத் தொடர்

    பட மூலாதாரம், Ministry of Finance

    இந்திய நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுகிறார்.

    நாளைய தினம் (பிப்ரவரி 1ம் தேதி) இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.

    இன்று முதல் பிப்ரவரி 11-ம் தேதி வரையும் மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை எனஇரு கட்டங்களாக இந்த பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு உள்ளிட்ட விவகாரங்களை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

  7. பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம் - தொடர்ந்து இணைந்திருங்கள்

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் ஜோ மகேஸ்வரன்.