இந்தியாவிற்கு அதிக எண்ணிக்கையில் வெளிநாட்டு பறவைகள் வருகை - கணக்கெடுப்பில் தகவல், பிரபுராவ் ஆனந்தன்
கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்வாழ் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தளம், மணக்குடி, ராஜாக்கமங்கலம் ஆகிய 3 கடல் சார்ந்த நீர் நிலைகளில் வனத்துறையினர் , பறவை ஆர்வலர்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆபிரிக்கா, ஐரோப்பியா, ரஷ்யா (அதிலும் குறிப்பாக சைபீரியா), மங்கோலியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, கடந்த ஆண்டை விட அதிக எண்ணிக்கையில் வெளி நாட்டு பறவைகள் வந்து உள்ளதாக வனத்துறை அலுவலர் தீலீபன் தெரிவித்தார்.
ஆபிரிக்கா, ஐரோப்பியா, சைபீரியா, ரஷ்யா, மங்கோலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை கடும் குளிர் ஏற்படும். ஆகையால், பறவைகள் அங்கு வாழ முடியாத நிலை ஏற்பட்டு, இந்தியாவில் முக்கிய இடங்களுக்கு வலசை வருவது வழக்கம்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகளில் வந்து முகாமிட்டு இனப்பெருக்கம் செய்யும் வெளிநாட்டு பறவைகளான நாரை, ஊசிவால் வாத்து, உள்ளான் வகைகள் , சோவலர் வாத்து இனங்கள், ரெட் சேன், கிரீன் சேன் உள்ளிட்டவையும் இந்தியாவின் வட மாநிலங்களில் உள்ள கூழைக் கடா, பல்வேறு நாரை மற்றும் கொக்கு இனங்கள் உள்ளிட்டவையும் நாகர்கோவில் அருகே உள்ள மணக்குடி, சுசீந்தரம், தேரூர் , சாமிதோப்பு ,புத்தளம் உள்ளிட்ட 7 இடங்களில் பறவைகள் சரணாலயத்தில் முகாமிட்டுள்ளன.
இந்நிலையில்,பறவைகளின் கணக்கெடுக்கும் பணி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளான மணக்குடி, புத்தளம், ராஜக்கமங்கலம் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில், வனத்துறையினர், தன்னார்வலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டு பல்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பு நடைபெற்று வருகிறது.