You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.

Take me to the main website

இந்தியா - மத்திய ஆசியா உச்சி மாநாடு: நாளை நடத்தும் பிரதமர் மோதி

இந்தியா - மத்திய ஆசிய நாடுகள் இடையிலான முதல் உச்சி மாநாடு நாளை வியாழக்கிழமை நடக்கவுள்ளது.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஜோ மகேஸ்வரன்

  1. சென்னையில் 20 நிமிடங்கள் நடைபெற்ற குடியரசு தின விழா

    சென்னையில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய குடியரசு தின விழா, முப்படையினர், மத்திய துணை ராணுவ படையினர், மாநில காவல்துறையினர் ஆகியோரின் அணிவகுப்பு மற்றும் அலங்கார வாகன அணிவகுப்பு நடைபெற்றது.

    இதையொட்டி தேசிய மூவர்ண கொடியை ஏற்றி அணிவகுப்பை மாநில ஆளுநர் ஆர்.என். ரவி பார்வையிட்டார்.

    தேசிய கொடி ஏற்றிய நிகழ்வு முதல் சரியாக 20 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்ச்சி 8.20 மணிக்கு முடிந்ததும் ஆளுநர் ரவி விழா பகுதியில் இருந்து விடைபெற்றுப் புறப்பட்டார்.

    அவரை வழியனுப்பி வைத்ததும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பதக்கம் பெற்ற அதிகாரிகளை சந்தித்து வாழ்த்து தெரிவித்து விட்டுப் புறப்பட்டார்.

  2. சென்னையில் தொடங்கியது குடியரசு தின அணிவகுப்பு

    இந்திய குடியரசு தின கொண்ட்டாட்டம் தமிழகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காலை 8 மணியளவில் சென்னை கடற்கரை சாலையில் நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் தேசிய மூவர்ண கொடியை மாநில ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்றி முப்படையினர், காவல்துறையின் அணிவகுப்பை பார்வையிட்டு வருகிறார்.

    முன்னதாக, விழா பகுதிக்கு வந்த மாநில ஆளுநரை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வரவேற்று நிகழ்ச்சிப் பகுதிக்கு அழைத்துச் சென்றார்.

  3. யுக்ரேன் நெருக்கடி: ரஷ்யா தாக்கினால் புதின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்கலாம் - ஜோ பைடன்

    யுக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதின் மீது தனிப்பட்ட தடைகளை விதிக்க அமெரிக்கா பரிசீலிக்கும் என்று அதன் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

    ரஷ்யாவின் செயல்பாடு உலக நாடுகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.

    அதே சமயம், யுக்ரேன் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் தனக்கு இல்லை என ரஷ்யா கூறி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் பிற மேற்கு நாடுகள் பதற்றத்தை அதிகரித்து வருவதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது.

    இதேவேளை, யுக்ரேனுடனான ரஷ்ய எல்லையில் சுமார் ஒரு லட்சம் ரஷ்ய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    வாஷிங்டனில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபரிடம் ரஷ்ய அதிபர் மீது தனிப்பட்ட தடைகளை விதிக்க முடியுமா என்று கேட்கப்பட்டது.

    அதற்கு பைடன், 'ஆம்' என்று பதிலளித்தார், மேலும் புதின் அப்படி தாக்குதல் நடத்தினால் அதை செய்வதைப் பரிசீலிப்போம் என்று பைடன் தெரிவித்தார்.

    அதேசமயம், யுக்ரேனுக்கு அமெரிக்க துருப்புக்களை அனுப்பும் திட்டம் குறித்து தற்போதைக்கு எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

  4. இலங்கை: ஒமிர்கான் பரவலுக்கு இடையே மருத்துவமனையில் சேரும் நோயாளிகள், ஆக்சிஜன் தேவை உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

    இலங்கையில் ஓமிக்ரான் திரிபு பரவல் காரணமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அங்கு மருத்துவமனையில் சேரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், ஆக்ஸிஜன் தேவைப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

    கோவிட்-19 ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அன்வர் ஹம்தானியின் கூற்றுப்படி, 5,300-5,400 பேர் தற்போது மருத்துவமனைகளில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    "இது மொத்த படுக்கை திறனில் 40 சதவீதத்தை உள்ளடக்கியது. தற்போது மருத்துவமனைகளில் நெரிசல் இல்லை என்றாலும், சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் பூஸ்டர் ஷாட்களை மக்கள் புறக்கணித்தால், கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகள் எதிர்காலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் உயரக்கூடும்,”என்று அவர் தெரிவித்துள்ளார்.

  5. குடியரசு தினம்: ஸ்வராஜ் கனவை நனவாக்கிய தியாகிகளை நினைவுகூர்வோம் - ராம்நாத் கோவிந்த்

    இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் இந்திய மக்கள் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

    இது தொடர்பாக வழக்கமான நடைமுறையின்படி குடியரசு தினத்துக்கு முந்தைய நாள் அவர் தொலைக்காட்சியில் தோன்று உரையாற்றினார்.

    அப்போது அவர், நமது இந்தியத்தன்மையைக் கொண்டாட இது ஒரு சந்தர்ப்பம்,ஸ்வராஜ்யக் கனவை நனவாக்குவதில் ஈடு இணையற்ற துணிச்சலைக் காட்டி, அதற்காகப் போராடி மக்களைத் தூண்டிவிட்ட மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர்களையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூர்வோம் என்று தெரிவித்தார்.

    இரண்டு நாட்களுக்கு முன்பு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 வது பிறந்தநாளை நாங்கள் அனைவரும் கடைப்பிடித்தோம். சுதந்திரத்திற்கான அவரது வேட்கை மற்றும் இந்தியாவை பெருமைப்படுத்த வேண்டும் என்ற அவரது லட்சியம் நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது என்று குடியரசுத் தலைவர் கூறினார்.

    தேச சேவை செய்ய வேண்டும் என்ற அடிப்படை கடமையை நிறைவேற்றுவதன் மூலம், கோடிக்கணக்கான நமது மக்கள் ஸ்வச் பாரத் அபியான் மற்றும் கோவிட் தடுப்பூசி இயக்கத்தை வெகுஜன இயக்கங்களாக மாற்றியுள்ளனர் என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

    தங்களுடைய கடின உழைப்பு மற்றும் திறமையால் வாழ்க்கையில் வெற்றி பெறும் இந்தியர்கள், தங்கள் வேர்கள், கிராமம், நகரம் அல்லது சொந்த மண்ணை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள் என்றும் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டார்.

  6. இந்திய குடியரசு தினம்: அடர் பனிக்கு இடையே கொண்டாட்டத்துக்கு தயாராகும் டெல்லி

    இந்திய தலைநகர் டெல்லியில் குடியரசு தினத்துக்கான கொண்ட்டாட்டம் இன்னும் சில மணி நேரத்தில் தொடங்கவுள்ளது. அடர் பனி காரணமாக இந்த ஆண்டு காலை 9 மணியளவில் இந்த கொண்டாட்டங்கள் தொடங்கவுள்ளன.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்த ஆண்டு குடியரசு தின விழாவை பார்வையிட வெளிநாட்டு தலைவர்கள் அழைக்கப்படவில்லை.

    இன்றைய விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மத்திய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், அரசுத்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

    தமிழ்நாட்டில் குடியரசு தின விழா காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதில் மாநில ஆளுநர் ஆர்.என். ரவி தேசிய மூவர்ண கொடியை ஏற்றி வைத்து அணிவகுப்பை பார்வையிடுகிறார்.

    தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், மாநில அமைச்சர்கள், ராணுவம், கடற்படை, விமானப்படை பிராந்திய தளபதிகள், காவல்துறை அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

    புதுச்சேரியிலும் குடியரசு தினத்தை கொண்டாட சிறப்பான ஏற்பாடுகளை யூனியன் பிரதேச அரசு செய்துள்ளது.

  7. பிபிசி தமிழ் நேரலைக்கு வரவேற்கிறோம்!

    பிபிசி தமிழ் நேயர்களுக்கு வணக்கம்.

    தமிழ்நாடு, இந்தியா, இலங்கை உள்ளிட்ட உலக நாடுகளில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை நேரலைப் பக்கத்தில் தொகுத்து வழங்குகிறோம்.

    இன்றைய நேரலைப் பக்கத்தில் முக்கிய நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குபவர் ஜோ மகேஸ்வரன்.

    தொடர்ந்து இணைந்திருங்கள்.. நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காணஇங்கே சொடுக்கவும்.