நரேந்திர மோதி மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை காணொளி மூலம் ஆலோசனை

மாவட்டங்களில் அரசு திட்டங்கள் மற்றும் திட்டங்களின் செயல்பாட்டின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலை குறித்து பிரதமர் நேரடியாக கருத்து கேட்பார் என அவரது அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நேரடி செய்தி/ ஒலி/ஒளிபரப்பு

ஆ. லட்சுமி காந்த் பாரதி

  1. "பிப்ரவரி 1 முதல் ஆன்லைனில் பருவத் ‌தேர்வுகள் நடைபெறும்” – அமைச்சர் க.பொன்முடி அறிவிப்பு

    Ponnumdy

    பட மூலாதாரம், Twitter Dr.K.Ponmudy

    தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா நோய் தோற்று காரணமாக கல்லூரி மாணவர்களுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கல்லூரிகளில் பருவத் தேர்வுகள் நடத்துவது தொடர்பாக மாணவர், பேராசிரியர், மற்றும் உயர் கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் க. பொன்முடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்கள் மூலம் ‌அனைத்து பொறியியல், தனியார் மற்றும் அரசு கல்லூரிகளிலும் ஒரே மாதிரியாக ஆன்லைனில் பருவத் தேர்வை நடத்துவது என்றும் இந்தத் தேர்வு வருகின்ற பிப்ரவரி 1 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா நோய் தொற்றின் பரவலைப் பொருத்து பிப்ரவரி 20-ஆம் தேதிக்கு மேல் ஆன்லைனிலோ நேரடியாகவோ தேர்வு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.

  2. மருந்து எதிர்ப்புத் திறன் காரணமாக லட்சக்கணக்கில் ஏற்படும் உயிரிழப்புகள் - அதிர்ச்சி அறிக்கை

    Tablet

    பட மூலாதாரம், Getty Images

    ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்கொள்ளும் திறன் கொண்ட பாக்டீரியா (நுண்ணுயிரி எதிர்ப்பு) தொற்று காரணமாக, கடந்த 2019ஆம் ஆண்டு உலகம் முழுக்க 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என ஓர் ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    மலேரியா அல்லது எய்ட்ஸ் ஆகிய நோய்களினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை விட ஆன்டிபயாடிக் மருந்துக்கு எதிராக நோய்களுக்கு எதிர்ப்பாற்றல் கிடைப்பதால் இறந்தவர்கள் எண்ணிக்கை அதிகம்.

    உலகில் ஏழை நாடுகள் இந்த பிரச்சனையால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன என்றாலும், அனைவரின் உடல் நலத்திற்கும் இது அச்சுறுத்தலை ஏற்படுத்திக் கொண்டிருப்பதாக அவ்வறிக்கை கூறுகிறது.

    புதிய மருந்துகளை கண்டுபிடிப்பதற்கு முதலீடு செய்வது, தற்போது இருக்கும் மருந்துகளை கவனமாக பயன்படுத்துவது ஆகிய நடவடிக்கைகள் இந்த பிரச்சினைக்கு தீர்வாகப் பரிந்துரைக்கப்படுகின்றன.

    சாதாரண நோய்த் தொற்றுகளுக்கு கூட அதிகப்படியாக ஆன்டிபயாடிக் மருந்துகளை பயன்படுத்துவது சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. எனவே தீவிர நோய் தொற்றின்போது ஆன்டிபயாட்டிக் மருந்துகளின் செயல் திறன் குறைகிறது.

  3. பாகிஸ்தானில் இறால் குழம்பு: கராச்சியில் கோவா ஸ்டைல் உணவுக் கடை நடத்தும் பெண்

    கோவா மாநிலத்தைப் பூர்வீகமாக கொண்ட லூசியானா பெர்னாண்டஸ் என்பவர், பாகிஸ்தானில், கராச்சி நகரில் கோவா ஸ்டைல் உணவகம் திறந்திருக்கிறார்.

    காணொளிக் குறிப்பு, கராச்சியில் இறால் குழம்பு - கோவா ஸ்டைல் உணவுக் கடை நடத்தும் பெண்
  4. பெரிய திரைப்படங்கள் வெளியாகாத பொங்கல்: திரையரங்குகளின் நிலை என்ன?

    Ajith Kumar

    பட மூலாதாரம், BONEY KAPOOR

    பொங்கல் திருநாளுக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிடப்பட்டிருந்த வலிமை, ஆர்ஆர்ஆர் போன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்கள் கொரோனாவின் மூன்றாவது அலையின் காரணமாக தள்ளிப்போடப்பட்டுள்ளது தமிழ் திரையுலகில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது?

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, திரைப்படங்களை வெளியிட தீபாவளி, பொங்கல், ஆயுத பூஜை, கோடை விடுமுறைக் காலம் போன்ற பல தருணங்கள் மிக முக்கியமானதாக இருந்தாலும் பொங்கல் திருநாளை ஒட்டி திரைப்படங்களை வெளியிடுவதையே பெரிய படங்களின் தயாரிப்பாளர்கள் விரும்புவார்கள்.

    பொங்கலை ஒட்டி ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக வரும் விடுமுறையே இதற்கு மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தீபாவளியைவிட பொங்கல் தருணத்திலேயே அதிக அளவில் திரையரங்கில் கலெக்ஷன் கிடைக்கும் வாய்ப்புகள் இருக்கும்.

  5. UK

    பட மூலாதாரம், Getty Images

    உக்ரைன் மீது போர் தொடுப்பதாக வெளியாகும் தகவலை ரஷ்யா தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும் எல்லையோரத்தில் தொடர்ந்து படைகளைக் குவித்து வருகிறது.

    யுக்ரைனை நேட்டோவில் சேர்த்துக் கொள்ளக்கூடாது, போலந்து உள்ளிட்ட நாடுகளில் நேட்டோ நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

    இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் ,"உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யா சிறிய அளவில் ஊடுருவினால் அதற்கேற்றவாறு சிறிய அளவில் நடவடிக்கை எடுப்போம்" என்று கூறினார்.

    இதற்கு பதிலடியாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கொடுத்த பதிலில், "ஒரு நாட்டிற்குள் அத்துமீறி நுழைவதில் சின்ன அளவு என்று ஒன்றுமில்லை. எவ்வாறு சிறிய துன்பம் சிறிய இறப்பு என்று இல்லையோ, அதே மாதிரி"‌ என்று கூறியுள்ளார்.

  6. கிளப் ஹவுஸ் செயலியில் பெண்களைத் தவறாக பேசியவர்கள் கைது

    Phone App

    பட மூலாதாரம், Getty Images

    கிளப் ஹவுஸ் செயலியில் பெண்களை தவறுதலாக பேசியதாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் புகாரின் அடிப்படையில் மும்பை சைபர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கைது நடவடிக்கை செய்யப்பட்டுள்ளது, . கைது செய்யப்பட்ட குற்றவாளிகளின் பெயர் ஆகாஷ், ஜெஷ்னவ் மற்றும் யாஷ் பராஷர் என்று மும்பை போலீஸார் தெரிவித்துள்ளனர்.

    கைது செய்யப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவுகள் 153 (ஏ), 295 (ஏ), 354 (ஏ), 354 (டி) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2000 பிரிவு 67 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    கிளப் ஹவுஸ் செயலியில் பெண்கள் ஏலம் விடப்படுவது மற்றும் அவர்கள் புகைப்படங்களை தவறாக பயன்படுத்துவது போன்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் தற்போது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  7. கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

    Jallikattu

    கோவை மாவட்டம் செட்டிப்பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. முன்னதாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழக மின்சாரத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

    காலை ஏழு மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு போட்டி மாலை ஆறு மணி வரையில் நடைபெற இருக்கிறது. கொரோனா நோய் பரவலை கருத்தில் கொண்டு இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு 700 காளைகளும், 300 மாடுபிடி வீரர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    இந்த ஜல்லிக்கட்டு போட்டிக்கு மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகளும் மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

  8. குமரி மாவட்ட முதியவர் பைக் மோதி பலி: சிசிடிவி காட்சி வெளியானது

    Accident

    குமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் இருசக்கர வாகனம் மோதி சாலையில் நடந்து சென்ற முதியவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இப்போது இந்த விபத்து நடந்ததைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.

    குமரி மாவட்டம் கருங்கல் சந்திப்பு பகுதியில் நகைக் கடையில் பணிபுரிந்து வரும் பத்மநாபன் என்பவர் நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்க்காக கடையில் இருந்து நடந்து சென்றபோது சாலையை கடக்க முயன்றுள்ளார்.

    அப்போது சாலையில் அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் பத்மநாபன் மீது மோதி அவர் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில் பத்மநாபனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

    உடனடியாக அக்கம்பக்கத்தினர் போலீசுக்குத் தகவல் அளித்து பத்மநாபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது இந்த விபத்து நடந்த விதத்தைக் காட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

  9. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 3.47 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு

    Corona

    பட மூலாதாரம், Getty Images

    இந்தியாவில் நேற்று 24 மணி நேரத்தில் 3,47,254 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இது முந்தைய நாள் பாதிப்பை விட 29,722 அதிகமாக உள்ளது என்றும் நோய் தொற்றால் இறந்தவர்களின் எண்ணிக்கை 703 ஆக பதிவாகியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல 24 மணி நேரத்தில் 2,51,777 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    மேலும், நாடு முழுவதும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டோர் எண்ணிக்கை 9,692 ஆக உயர்ந்துள்ளது.

    X பதிவை கடந்து செல்ல
    X பதிவை அனுமதிக்கலாமா?

    இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

    எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

    X பதிவின் முடிவு

  10. இப்போதிருந்து இந்த நேரலைப்பக்கத்தை தொகுத்து வழங்குவது ஆ.லட்சுமி காந்த் பாரதி.

  11. பழமையான ராட்சத பவளப்பாறை: ஒளி மங்கிய ஆழக்கடலில் கண்டுபிடிக்கப்பட்டதில் என்ன சிறப்பு?

    SEA

    பட மூலாதாரம், ALEXIS ROSENFELD

    பிரெஞ்சு பொலினீசியாவின் தஹிதி கடற்கரையில் 100 அடி ஆழத்தில் 3 கிலோ மீட்டர் பரப்பில் "பழமையான" பவளப்பாறையை கடல்சார் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இத்தகைய ஆழத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய பவளப்பாறைகளில் இது ஒன்று என்று இந்த பணியை வழிநடத்திய ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பு கூறுகிறது.

    இந்த சுற்றுச்சூழல் அமைப்புகளில் இதுபோன்று இன்னும் பல இருக்கலாம் என்றும், நமக்கு அதுகுறித்து தெரியவில்லை எனவும் யுனெஸ்கோவைச் சேர்ந்த டாக்டர் ஜூலியன் பார்பியர் கூறியுள்ளார்.

  12. இந்தியா கேட் அமர் ஜவான் ஜோதியை அணைக்கும் முடிவுக்கு சமூக ஊடகத்தில் எதிர்வினைகள்

    அமர் ஜவான் ஜோதி

    பட மூலாதாரம், Getty Images

    டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள பணியில் உயிர்த்தியாகம் செய்த முப்படையினரின் நினைவாக எழுப்பப்பட்ட அமர்ஜவான் ஜோதி நினைவிடத்தில் இடைவிடாமல் எரியூட்டப்பட்டு வந்த நெருப்பு, வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) அணைக்கப்படுகிறது.

    இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூக ஊடகங்களில் விவாதங்கள் நடந்து வருகின்றன.

    India Gate என்ற பெயரில் டிவிட்டரில் ஒரு ஹேஷ் டேக் டிரெண்டாகி வருகிறது.

    அந்த நெருப்பு அணைக்கப்படும் அதேவேளை, அந்த நினைவிடம் அருகே உயிர்த்தியாகம் செய்த முப்படையினர், துணை ராணுவப்படையினரின் நினைவாக கட்டப்பட்ட தேசிய போர் நினைவுச்சின்னத்தில் நிறுவப்பட்டுள்ள ஜோதி எரியூட்டப்படும்.

    இந்த நிகழ்வு ஜனவரி 21ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

    அமர்ஜவான் ஜோதி நினைவிடம், 1972ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி அப்போதைய இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தியால் திறக்கப்பட்டது.

    அப்போது முதல் தொடர்ச்சியாக 50 வருடங்களாக இந்த நினைவு ஜோதி அணையாமல் பராமரிக்கப்பட்டு வருகிறது. அங்கு இந்திய ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர்.

    நாட்டின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளான சுதந்திர தினம், குடியரசு தினம், முப்படைகளின் தினம் , வெளிநாட்டுத் தலைவர்களின் வருகை போன்றவற்றின்போது இந்தியா கேட் பகுதியில் உள்ள அமர்ஜவான் ஜோதி நினைவிடத்துக்கு தலைவர்களும் அதிகாரிகளும் வந்து இங்கே முதல் மரியாதை செலுத்தி வருவது மரபாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

    இந்த அமர் ஜவான் ஜோதியில் இருந்து 400 மீட்டர் தூரத்தில் தேசிய போர் நினைவுச்சின்னம் உள்ளது. 2019ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி அந்த இடம் பிரதமர் நரேந்திர மோதியால் திறக்கப்பட்டது.

    அங்கு இதுவரை 25 ஆயிரத்து 942 வீரர்களின் பெயர்கள் கிரானைட் கற்களில் பொன்னிறத்தால் பொறிக்கப்பட்டுள்ளன.

  13. தங்க சுரங்கத்துக்கு வெடிபொருள் ஏற்றிச் சென்ற லாரி மோதி விபத்து - 500 கட்டடங்கள் தூள்

    தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருள் ஏற்றிச் சென்ற லாரி பைக் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளானதில் பலர் உயிரிழந்தனர்.

    மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவின் ஊரகப் பகுதியில் நடந்த இந்த விபத்தில் சுமார் 500 கட்டடங்கள் நொறுங்கியதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனத்தின் தலைமை இயக்குநர் செஜி சாஜி அமெடோனு கூறியதாகத் தெரிவித்துள்ளது ராய்டர்ஸ் செய்தி முகமை. 10 சடலங்களைப் பார்த்ததாக வட்டார அவசரகால அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாகவும் கூறுகிறது ராய்டர்ஸ்.

    பொகோசோ - பாடி நகரங்களுக்கு இடையே உள்ள அபியேட் என்ற இடத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. சிரானோ பகுதியில் உள்ள மக்சாம் நிறுவனத்துக்கு சொந்தமான தங்கச் சுரங்கத்துக்கு வெடிபொருள்களை ஏற்றிச் சென்றபோது இந்த லாரி ஒரு மோட்டார் பைக் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

  14. வணக்கம் நேயர்களே!

    தமிழ்நாடு, இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட உலக நாடுகள், சினிமா, விளையாட்டு உள்ளிட்ட துறைகள் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்வுகளை இந்தப் பக்கத்தில் தொகுத்து வழங்குவது அ.தா.பாலசுப்ரமணியன்.நேற்றைய நேரலைப் பக்கத்தைக் காண இங்கே சொடுக்கவும். இந்த நாள் இனியதாகட்டும்.